என் சக இந்தியன்,

வணக்கம்!

நவம்பர் 26, ஒவ்வொரு இந்தியருக்கும் மகத்தான பெருமிதத்தை அளிக்கும் நாளாகும். நாட்டின் முன்னேற்றத்தை தெளிவாகவும், உறுதியாகவும் தொடர்ந்து வழிநடத்தும் புனித ஆவணமான இந்திய அரசியல் சாசனத்தை அரசியல் நிர்ணய சபை கடந்த 1949-ம் ஆண்டில் இதே நாளில்தான் ஏற்றுக்கொண்டது. அதனால்தான் நவம்பர் 26-ம் தேதியை அரசியல் சாசன தினமாகக் கொண்டாட 10 ஆண்டுகளுக்கு முன்பு, 2015-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முடிவு செய்தது.

மிகவும் எளிய, பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த என்னைப்போன்ற ஒரு நபர், சுமார் 24 ஆண்டுகள் அரசின் தலைமைப் பதவியில் சேவையாற்ற அரசியல் சாசனத்தின் வலிமைதான் வழிவகை செய்தது. 2014-ம் ஆண்டு, முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு நான் வந்த போது, ஜனநாயகத்தின் தலைசிறந்த ஆலயத்தின் படிகளைத் தொட்டு வணங்கிய தருணத்தை இன்றும் நினைவில் கொண்டிருக்கிறேன். அதேபோல 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அரசியல் நிர்ணய சபையின் மைய அரங்கிற்கு சென்று அரசியல் சாசனத்தை எனது நெற்றியில் வைத்து வணங்கி, மரியாதை செலுத்தினேன். இந்த அரசியல் சாசனம், என்னைப் போன்று ஏராளமானவர்களுக்கு கனவு காண்பதற்கும், அதை நோக்கி பயணிப்பதற்குமான வலிமையையும் வழங்கியிருக்கிறது.

அரசியல் சாசன தினத்தன்று, அதன் உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான அரசியல் நிர்ணய சபையின் எழுச்சியூட்டும் உறுப்பினர்களை நாம் நினைவு கூர்கிறோம். போற்றத்தக்க தொலைநோக்குப் பார்வையுடன், அரசியல் சாசன வரைவுக் குழுவிற்கு தலைமைப் பொறுப்பேற்ற டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் முயற்சிகளை நாம் நினைத்துப் பார்க்கிறோம். அரசியல் நிர்ணய சபையின் பல குறிப்பிடத்தக்க பெண் உறுப்பினர்கள், தங்களது ஆலோசனைகளாலும், தொலைநோக்குப் பார்வை கொண்ட கண்ணோட்டத்தின் வாயிலாகவும் இந்திய அரசியல் சாசனத்தை மேலும் மெருகூட்டினர்.

என் நினைவுகள், 2010-ம் ஆண்டிற்கு பின்னோக்கிச் செல்கின்றன. அந்த ஆண்டில்தான் இந்திய அரசியல் சாசனம் 60 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தது. எனினும் இந்த குறிப்பிடத்தக்க நிகழ்விற்கு கிடைத்திருக்க வேண்டிய தேசிய முக்கியத்துவம் வழங்கப்படாதது, வேதனை அளித்தது. இருந்த போதும், அரசியல் சாசனத்திற்கு ஒன்றுபட்ட நமது நன்றியையும் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதற்காக, குஜராத்தில் ‘அரசியல் சாசன கௌரவ அணிவகுப்பை’ நாங்கள் நடத்தினோம். நமது அரசியல் சாசனம் ஒரு யானையின் மீது வைக்கப்பட்டிருந்தது. பலதரப்பட்ட மக்களுடன் சேர்ந்து நானும் அந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன்.

அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் 75-வது ஆண்டில் போது, இந்திய மக்களுக்கு இது ஒரு சிறப்பு வாய்ந்த மைல்கல்லாக இருக்கும் என்று நாங்கள் முடிவு செய்தோம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாடும் வகையில் சிறப்பு நாடாளுமன்ற அமர்வுக்கு ஏற்பாடு செய்து, தேசிய அளவிலான நிகழ்ச்சிகளைத் தொடங்கும் நல்வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருந்தது. இந்த நிகழ்ச்சிகளில் சாதனை அளவிலான பொதுமக்கள் பங்கேற்றனர்.
இந்த ஆண்டின் அரசியல் சாசன தினம், பல்வேறு காரணங்களுக்காக சிறப்பைப் பெறுகிறது.

சர்தார் வல்லபாய் படேல் மற்றும் பகவான் பிர்சா முண்டா ஆகிய இரண்டு தலைசிறந்த ஆளுமைகளின் 150-வது பிறந்தநாளை இது குறிக்கிறது. இருவருமே நமது தேசத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். தொலைநோக்குப் பார்வை கொண்ட சர்தார் படேலின் தலைமை, இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பை உறுதி செய்தது. அவரது எழுச்சியும் துணிச்சலும்தான் பிரிவு 370 மற்றும் 35 (ஏ)க்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள எங்களுக்கு வழிகாட்டியது. ஜம்மு காஷ்மீரில் தற்போது இந்திய அரசியல் சட்டம் முழுதும் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் பெண்கள் மற்றும் நலிவடைந்த சமூகங்கள் உள்ளிட்ட மக்களின் அரசியல் சட்ட உரிமைகள் உறுதி செய்யப்படுகின்றன. நமது பழங்குடி சமூக மக்களுக்கு நீதி, கண்ணியம் மற்றும் அதிகாரமளிக்க வேண்டும் என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு பகவான் பிர்சா முண்டாவின் வாழ்க்கை தொடர்ந்து நமக்கு ஊக்கம் அளிக்கிறது.

காலங்கள் கடந்தும் இந்தியர்களின் கூட்டு உறுதிப்பாட்டை எதிரொலிக்கும் ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டையும் இந்த ஆண்டு நாம் கொண்டாடுகிறோம். அதே வேளையில் ஸ்ரீ குரு தேக் பகதூர் அவர்களின் 350-வது தியாக தினத்தையும் நாம் அனுசரிக்கிறோம். அவரது வாழ்க்கையும், தியாகமும், நம்மை துணிச்சல், இரக்கம் மற்றும் வலிமையுடன் தொடர்ந்து வழிநடத்துகின்றன.

இது போன்ற ஆளுமைகளின் பங்களிப்பு மற்றும் முக்கிய மைல்கல் தருணங்கள், நமது அடிப்படை கடமைகளை நமக்கு நினைவூட்டுகின்றன. பிரிவு 51 ஏ-ல் உள்ள அடிப்படைக் கடமைகள் என்ற பிரத்தியேக அத்தியாயத்தில் இந்திய அரசியல் சாசனமும் இதையே வலியுறுத்துகிறது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை எவ்வாறு அடைவது என்பதை இந்தக் கடமைகள் நமக்கு உணர்த்துகின்றன. குடிமக்களின் கடமைகளை மகாத்மா காந்தி எப்போதுமே வலியுறுத்தி வந்தார். ஒரு கடமையை சரியாகச் செய்யும்போது அதற்கு இணையான உரிமை உருவாவதுடன், கடமையை நிறைவேற்றுவதன் பலனாகக் கிடைப்பதுவே உண்மையான உரிமைகள், என்பதில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.

இந்த நூற்றாண்டு தொடங்கி அதற்குள் 25 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதன் நூற்றாண்டை இன்னும் இரண்டு தசாப்தங்களில் நாம் கொண்டாடுவோம். 2049-ம் ஆண்டில், அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதன் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில் தற்போது நாம் கட்டமைக்கும் கொள்கைகள், நாம் எடுக்கும் முடிவுகள் மற்றும் நமது கூட்டு செயல்பாடுகள் முதலியவை, வருங்கால தலைமுறையின் வாழ்க்கையை வடிவமைக்கும்.

இதன்மூலம் எழுச்சி பெற்று, வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் கனவை நோக்கி நாம் முன்னேறும் போது, நாட்டிற்கான நமது கடமைகளை ஆற்ற நாம் எப்போதும் முன்னுரிமை வழங்க வேண்டும்.

நமது நாடு நமக்கு நிறைய செய்திருக்கிறது, அதனால் நம்மிடையே நாட்டிற்கான நன்றி உணர்வும் பெருகுகிறது. நாம் நமது கடமைகளை நிறைவேற்ற இயற்கையாகவே இந்த மனநிலை நம்முள் எழுகிறது. நமது கடமையை செய்வதற்கு முழு திறனையும் அர்ப்பணிப்பையும் ஒவ்வொரு பணியிலும் நாம் செலுத்துவது இன்றியமையாததாகிறது. நம் ஒவ்வொரு செயல்பாடும், அரசியல் சாசனத்தை வலுப்படுத்துவதுடன், தேசிய நலன்கள் மற்றும் இலக்குகளை மேம்படுத்த வேண்டும். நம் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களின் கனவை நிறைவேற்றுவது நமது கடமை. அவ்வாறு கடமை உணர்வுடன் பணியாற்றும்போது, நம் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி பன்மடங்கு அதிகரிக்கும்.

வாக்களிக்கும் உரிமையை நமது அரசியல் சாசனம் நமக்கு வழங்கி இருக்கிறது. தேசிய, மாநில மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் தவறாமல் வாக்களிப்பது நமது கடமை. பிறரையும் ஊக்குவிப்பதற்காக, 18 வயதைப் பூர்த்தி செய்யும் இளைஞர்களைக் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துவது பற்றி நாம் சிந்திக்கலாம். இதன் மூலம், தாங்கள் மாணவர்கள் என்பதைக் கடந்து, தேச கட்டமைப்பிலும் ஆக்கப்பூர்வமான பங்கேற்பாளர்களாக திகழ்வதை முதல் முறை வாக்களிப்பவர்கள் உணர்வார்கள்.

நமது இளைஞர்களை பொறுப்பு மற்றும் பெருமித உணர்வுடன் நாம் எழுச்சியூட்டும் போது, அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஜனநாயக மாண்புகளுக்கு மதிப்பளிப்பார்கள். இத்தகைய உறுதிப்பாட்டுக்கான உணர்வு தான், ஒரு வலிமையான தேசத்தின் அடித்தளம்.

அரசியல் சாசன தினத்தன்று, இந்த மாபெரும் தேசத்தின் குடிமக்களாக நமது கடமையை நிறைவேற்றும் உறுதிமொழியை நாம் மீண்டும் வலியுறுத்துவோம். இவ்வாறு செய்வதன் மூலம் வளர்ச்சியடைந்த மற்றும் அதிகாரம் பெற்ற நாட்டைக் கட்டமைப்பதில் நாம் அனைவரும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கலாம்.

உங்கள்,

நரேந்திர மோடி

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India-UK FTA comes into effect today, unlocking duty-free access for Indian exports

Media Coverage

India-UK FTA comes into effect today, unlocking duty-free access for Indian exports
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
இந்தியாவின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை
July 06, 2026

தேசிய உணர்வு மற்றும் சுயநலமற்ற சேவை ஆகிய கொள்கைகளைப் போற்றிப் பாதுகாக்கும் மக்களுக்கு ஜூலை 6-ம் தேதியான இன்று ஒரு சிறப்பு வாய்ந்த நாளாகும். டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளை நாம் இன்று கொண்டாடுகிறோம். பாரத அன்னை மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலுக்கு காலத்தால் அழியாத ஒரு முன்னுதாரணமாக அவரது வாழ்க்கை திகழ்கிறது. நவீன இந்தியாவில், அறிவுத்திறன், பொதுச் சேவை மற்றும் தார்மீக உறுதிப்பாடு ஆகியவற்றின் மிகச்சிறந்த சங்கமமாகத் திகழ்ந்த தலைவர்களில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு நிகரானவர்கள் மிகச் சிலரே.

இளம் வயது சியாமா பிரசாத், பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கையை உறுதிசெய்யக்கூடிய சூழலில் பிறந்தார். அவரது தந்தையான சர் அசுதோஷ் முகர்ஜி, அக்காலத்தின் மிகச்சிறந்த கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். விதி அவருக்குச் சலுகைகள் நிறைந்த ஒரு பாதையை அமைத்துத் தந்திருந்த போதிலும், அவரது மனசாட்சி, அவரை, தியாகம் மற்றும் தேச சேவையுடன் கூடிய பாதையை நோக்கி வழிநடத்தியது. காலனித்துவம், வகுப்புவாதம், மனிதாபிமானச் சவால்கள் போன்று அக்காலக்கட்டத்தில் நிலவிய கொந்தளிப்பான சூழலின் மௌன சாட்சியாக இருக்க முடியாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இத்தகைய வாழ்க்கைப் பயணத்தின்போது, ​​பச்சிளம் குழந்தையையும், பிற்காலத்தில் தனது மனைவியையும் இழந்தது போன்ற ஆழமான தனது தனிப்பட்ட துயரங்களையும் அவர் எதிர்கொண்டார். இருந்தபோதும், இந்தத் துயரங்கள் அவரது உறுதியை மேம்படுத்தியதுடன், சேவை செய்வதற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தின.

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பொதுவாழ்வை எல்லாவற்றிற்கும் மேலாக வரையறுத்த ஒரு கொள்கை உண்டென்றால், அது இந்தியாவின் பிரிக்க முடியாத தன்மையாகத்தான் இருக்க முடியும். இந்தியப் பிரிவினையின் சவாலான சூழலிலும், மேற்கு வங்கம், இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்தப் பகுதியாகத் தொடர்வதை உறுதி செய்வதில் அவர் உறுதியாக இருந்தார். சில ஆண்டுகளுக்குப் பின், அதே உறுதியான கொள்கைதான் அவரை ஜம்மு-காஷ்மீரை நோக்கி ஈர்த்தது. சிறைவாசம், அவரைத் தடுத்து நிறுத்தவில்லை; தனிமைப்படுத்தப்பட்ட சூழலும் அவரது மனவுறுதியை சீர்குலைக்கவில்லை. எண்ணற்ற மக்களின் நலனுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்த டாக்டர் முகர்ஜி, அவர்களிடமிருந்து வெகு தொலைவில், சிறைக்காவலில் இருந்தபோதே திடீரென உயிர்நீத்தார். வரலாற்றில் சில தருணங்களில், ஒரு தனிநபரின் உயிர்த் தியாகம், அரசியலைக் கடந்து தேசத்தின் கூட்டு நினைவில் நீங்கா இடம் பிடித்துவிடுகிறது. டாக்டர் முகர்ஜியின் இறுதிப் பயணமும் அத்தகைய ஒரு தருணமாகத் திகழ்கிறது. தாம் உறுதியாக நம்பிக்கை கொண்டிருந்த ஒரு லட்சியத்திற்காகவே டாக்டர் முகர்ஜி தம் உயிரைத் தியாகம் செய்தார் என்று ஆச்சார்ய வினோபா பாவே குறிப்பிட்டார். பல ஆண்டுகளுக்குப் பின், 2019-ல் அரசியலமைப்பின் 370 மற்றும் 35(ஏ) ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்பட்ட நிகழ்வு, அவரது தியாகத்திற்குச் செலுத்தப்பட்ட உன்னதமான மரியாதையாக அமைந்தது.

இந்தியாவிற்கும், இந்திய மாண்புகளுக்கும் டாக்டர் முகர்ஜி முன்னுரிமை அளித்தார். அக்காலகட்டத்தின் வழக்கமான சிந்தனைப் போக்குகளுக்கு மாற்றாக அமைந்த நிறுவனங்களை உருவாக்கியும், புதிய நடைமுறைகளை வளர்த்தெடுத்தும், அவர் இதனைச் செயல்படுத்தினார். கல்கத்தா பல்கலைக்கழகத்தின் இளம் துணைவேந்தராக அவர் பொறுப்பேற்றார். தேசப்பற்று மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட ஆக்கபூர்வமான மாற்றங்களை அவர் தனது தனித்துவமான பாணியில் முன்னெடுத்தார். கல்வியாளர்களின் மாநாடு ஒன்றில் காலந்துகொண்டுப் பேசிய டாக்டர் முகர்ஜி, “எழுத்தர்களையோ, குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்களையோ உருவாக்கும் தொழிற்சாலைகளாக மட்டுமே கல்வி நிறுவனங்களைக் கருதுவது தவறு. நகராட்சிகள், மாநில மற்றும் மத்திய சட்டமன்றங்கள் போன்ற சுயாட்சி அமைப்புகளுக்குத் தலைமை தாங்கும் திறனும், அதேவேளையில் நிதி, வணிகம் மற்றும் தொழில் போன்ற பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை வழிநடத்தும் திறனும் கொண்ட மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும்", என்று அற்புதமாக உரையாற்றினார்.

அவரது தலைமையின் கீழ், கல்கத்தா பல்கலைக்கழகம், நூலகக் கட்டமைப்பின் மேம்பாடு, அறிவியல் துறையில் ஆராய்ச்சிகளின் அதிகரிப்பு, தொல்பொருட்கள் குறித்த ஆய்வுகளின் ஊக்குவிப்பு மற்றும் வேளாண்மைப் பாடப்பிரிவுகளின் அறிமுகம் போன்ற தனித்துவமான முயற்சிகளை மேற்கொண்டது. விளையாட்டு, ஆசிரியர் பயிற்சி மற்றும் மாணவர் நலன் போன்ற துறைகளிலும் அவர் கவனம் செலுத்தினார். மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடையே பெருமித உணர்வை ஏற்படுத்தும் வகையில், ஜனவரி 24-ஐ பல்கலைக்கழகத்தின் நிறுவன நாளாகக் கொண்டாடும் வழக்கத்தை அவர் தொடங்கினார். பல்கலைக்கழகத்திற்காக ஒரு பாடலை இயற்றித் தருமாறு அவர் குருதேவ் தாகூரையே கேட்டுக்கொண்டார்.

அவரது வாழ்வின் பிற்பகுதியில், 'பாரதிய ஜன சங்கம்' என்ற கட்சியைத் தொடங்க அவர் எடுத்த முடிவை, இந்த மனப்பான்மைக்கு மற்றொரு சான்றாகக் கூறலாம். காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் எங்கும் நிறைந்திருந்த அக்காலக்கட்டத்தில், நமது கலாச்சார வேர்களுடன் இணைந்திருந்தவாறே இந்தியாவின் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுக்க ஒரு மாற்றுக்குரல் தேவை என்பதற்கான காரணங்கள் இன்னும் வலுவாக இருப்பதாக அவர் கருதினார். அந்தக் கட்சியின் சின்னமாக 'தியா' எனப்படும் அகல் விளக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது, மிகவும் பொருத்தமானதாக அமைந்தது. ஒரு சிறிய அகல் விளக்கு பார்ப்பதற்கு எளிமையானதாகத் தோன்றினாலும், தன்னைச் சுற்றியுள்ள இடத்தையும் தாண்டி இருளை அகற்றும் வல்லமை அதற்கு உண்டு. கட்சி இயங்கிய காலத்திலும், அதற்குப் பின்னரும் கூட ஜன சங்கம் அதைத்தான் செய்தது.

இந்தியாவின் முதல் தொழில் மற்றும் வழங்கல் துறை அமைச்சராக டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி வகித்த பதவிக்காலம், வளர்ச்சி பற்றிய அவரது கண்ணோட்டம் எவ்வளவு விரிவானதாகவும், மனிதத்தன்மை நிறைந்ததாகவும் இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. புதிதாகச் சுதந்திரம் பெற்ற ஒரு நாட்டிற்கு கண்ணியம், வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை மீட்டளிப்பதற்கான ஒரு வழியாகவே அவர் தொழில்துறையைக் கருதினார். செல்வம் உருவாக்குவதையும், மதிப்புக்கூட்டலையும் அவர் பெரிதும் மதித்தார். தாமோதர் பள்ளத்தாக்கு நிறுவனம், சிந்திரி உரத் தொழிற்சாலை மற்றும் வலுவான தொழில் கொள்கை போன்ற முன்னோடி முன்முயற்சிகள் மூலம் நவீன தொழில்சார் இந்தியாவின் அடித்தளத்தை அமைத்த அதே வேளையில், இந்தியாவின் பாரம்பரிய வலிமைகளும் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை அவர் உறுதி செய்தார். கைத்தறித் துறை, குடிசைத் தொழில்கள், கைவினைஞர்கள் மற்றும் ஜவுளித் துறைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு அவர் ஒரு உறுதியான ஆதரவாளராகத் திகழ்ந்தார்.

ஒரு தனிப்பட்ட அனுபவத்தை இங்கு நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சுயசார்பு என்ற தெளிவான தொலைநோக்குப் பார்வையுடன் டாக்டர் முகர்ஜி நிறுவிய சிந்திரி ஆலை, பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்தவர்களால் புறக்கணிக்கப்பட்டிருந்தது. அந்த ஆலைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் வாய்ப்பு எங்கள் அரசிற்குக் கிடைத்ததை நான் பெருமையாகக் கருதுகிறேன். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது உண்மையிலேயே மிகவும் சிறப்பான தருணங்களில் ஒன்றாகும்.

நீண்ட காலமாகவே இந்தியாவின் நாகரிக மரபு, உரையாடல்களையும் விவாதங்களையும் போற்றி வந்துள்ளது. டாக்டர் முகர்ஜி, இந்த ஜனநாயக உணர்வின் அடையாளமாகத் திகழ்ந்தார். தொடக்கக் காலங்களில், தேசத்தைக் கட்டமைக்கும் பணி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்று கருதி, அவர் பண்டித நேருவின் அமைச்சரவையில் இணைந்தார். அவர் நேர்மையுடனும் ஆக்கபூர்வமான மனப்பான்மையுடனும் பணியாற்றினார். ஆனால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் வேறுபட்ட அணுகுமுறை தேவை என்று உணர்ந்தபோது, ​​அவர் கண்ணியத்துடன் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், நாட்டிற்குத் தேவை என்று தான் நம்பிய அரசியல் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.
75 ஆண்டுகளுக்கு முன், பண்டித நேரு கொண்டுவந்த முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், பேச்சுரிமையின் மீதான நேரடித் தாக்குதலாக அமைந்தது. இது குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர்களில் டாக்டர் முகர்ஜியும் ஒருவர். காங்கிரஸ் கட்சியால் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதை அவர் முழுமையாக உணர்ந்திருந்தார். அவரது கணிப்பு சரியாகவே இருந்தது. 75 ஆண்டுகளுக்கு முன் அந்த முதல் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தவர்கள்தான், 1975-ல் அவசரநிலையை அமல்படுத்தினர். இதுமட்டுமின்றி, 50 ஆண்டுகளுக்கு முன் 42-வது சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து, தாராளவாத ஜனநாயக மாண்புகளின் அடிப்படையையே மீண்டும் தாக்கினர்.

தனது மனிதாபிமானப் பணிகளுக்காகவும் டாக்டர் முகர்ஜி தனித்து விளங்கினார். 1943-ல் வங்காளத்தில் மிகக் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது, ​​பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய்வதில் அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். மக்களுக்கு உணவளிப்பதற்கு, பல்வேறு உணவகங்களும், நிவாரண மையங்களும் திறக்கப்படுவதை அவர் உறுதிசெய்தார். ஒருபுறம் மக்களின் துயரநிலை அவரைக் கடும் வேதனைக்குள்ளாக்கியது. மறுபுறம், காலனித்துவ ஆட்சியாளர்களின் உணர்வற்ற செயல்பாடு அவரை மிகுந்த அதிருப்திக்குள்ளாக்கியது. தனது வேதனையை வெளிப்படுத்தும் வகையில் 'பஞ்சஷர் மான்வந்தர்' என்ற நூலையும் அவர் எழுதினார். 1942-ல் மெதினிப்பூரைத் தாக்கிய கடும் புயலுக்குப் பின், இயல்பு நிலையை மீட்டெடுக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் பரவலாகப் போற்றப்பட்டன.

கொல்கத்தாவில் உள்ள ஒரு கல்லூரியில் உரையாற்றிய டாக்டர் முகர்ஜி, "நீங்கள் எந்தப் பணியை மேற்கொண்டாலும், அதில் முழு ஈடுபாட்டுடனும், முழுமையாகவும், சிறப்பாகவும் செய்யுங்கள்; அப்பணியை அரைகுறையாகவோ மேற்கொள்ளமலோ விட்டுவிடாதீர்கள். உங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்திச் சிறப்பாகச் செய்து முடிக்கும் வரை மனநிறைவு கொள்ளாதீர்கள்", என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்தினார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறிவரும் வேளையில், அவர் ஆழமாக நம்பிய வலிமையான, ஒற்றுமையான, தன்னம்பிக்கை கொண்ட மற்றும் கருணைமிக்க இந்தியாவை உருவாக்க நாள்தோறும் பாடுபடுவதே அவருக்கு நாம் செலுத்தும் மிகச்சிறந்த அஞ்சலியாகும். இன்றைய இளைஞர்களைப் பற்றி நான் நன்கு அறிந்திருப்பதால், அவர்கள் இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு அதைச் சரியாகச் செய்து முடிப்பார்கள் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.