





சிக்கிம் ஆளுநர் திரு. ஓ.பி. பிரகாஷ் மாத்தூர் அவர்களே; மாநிலத்தின் முதலமைச்சரும் எனது நண்பருமான பிரேம் சிங் தமாங் அவர்களே; நாடாளுமன்றத்தின் எனது சகாக்களான டோர்ஜி ஷெரிங் லெப்சா அவர்களே மற்றும் டாக்டர் இந்திரா ஹாங் சுப்பா அவர்களே; இதில் கலந்து கொண்டுள்ள மக்கள் பிரதிநிதிகளே; பெண்களே, தாய்மார்களே!
(உள்ளூர் மொழியில் வாழ்த்து தெரிவித்தார்)
இன்று சிக்கிமின் ஜனநாயகப் பயணத்தின் பொன் விழாவைக் குறிக்கும் ஒரு முக்கியமான நாள். இந்தக் கொண்டாட்டத்தையும், இந்த உணர்வையும், இந்த குறிப்பிடத்தக்க 50 ஆண்டு பயணத்தையும் காண, உங்கள் அனைவரின் மத்தியிலும் இருக்க நான் மிகவும் விரும்பினேன். இந்தக் கொண்டாட்டத்தில் உங்களுடன் தோளோடு தோள் நிற்க விரும்பினேன். நான் இன்று அதிகாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு பாக்டோக்ராவுக்கு வந்தேன், வானிலை என்னை உங்கள் வீட்டு வாசலுக்கு அழைத்து வந்தாலும், அது என்னை மேலும் முன்னேற விடாமல் தடுத்தது. இதன் விளைவாக, உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்க முடியவில்லை. இருப்பினும், இந்த மகத்தான நிகழ்வை நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். இது உண்மையிலேயே ஒரு அற்புதமான காட்சி. உங்கள் அனைவரின் மத்தியிலும் நான் இருந்திருந்தால் எவ்வளவு அற்புதமாக இருந்திருக்கும். துரதிர்ஷ்டவசமாக, உங்களைச் சந்திக்க முடியவில்லை, அதற்காக நான் மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இருப்பினும், முதலமைச்சர் என்னை அன்புடன் அழைத்ததால், மாநில அரசு தேதியை இறுதி செய்தவுடன், நான் நிச்சயமாக சிக்கிமுக்கு வருவேன் என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். உங்கள் அனைவரையும் சந்தித்து இந்த 50 ஆண்டுகாலப் பயணத்தின் ஒரு சாட்சியாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இன்று கடந்த 50 ஆண்டு சாதனைகளைக் கொண்டாடும் ஒரு நாள், இந்த நிகழ்வைக் குறிக்க நீங்கள் ஒரு அற்புதமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளீர்கள். நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன், கேட்டு வருகிறேன், மேலும் இந்த நிகழ்வை உண்மையிலேயே மறக்கமுடியாததாக மாற்றுவதில் முதலமைச்சர் மிகுந்த அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்க அவர் இரண்டு முறை டெல்லிக்கு வந்துள்ளார். சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு உங்கள் அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன்.
நண்பர்களே,
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, சிக்கிம் தனது எதிர்காலத்திற்காக ஒரு ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுத்தது. சிக்கிம் மக்கள் பாரதத்துடன் மட்டுமல்லாமல் அதன் ஆன்மாவுடனும் இணைவதற்கும் விரும்பினர். ஒவ்வொரு குரலும் கேட்கப்பட்டு, ஒவ்வொரு உரிமையும் பாதுகாக்கப்படும்போது, வளர்ச்சிக்கான சம வாய்ப்புகள் உறுதி செய்யப்படுகின்றன என்ற ஆழமான நம்பிக்கை இருந்தது. இன்று, ஒவ்வொரு சிக்கிம் குடும்பத்தினரின் நம்பிக்கையும் மேலும் மேலும் வலுவடைந்துள்ளது என்பதை நான் நம்பிக்கையுடன் கூற முடியும். சிக்கிமின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தின் மூலம் இந்த நம்பிக்கையின் விளைவுகளை நாடு கண்டுள்ளது.
நண்பர்களே,
2014 இல் பதவியேற்ற பிறகு, நான் அறிவித்தேன். வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கு நாடு முழுவதும் சமநிலையான வளர்ச்சி மிக முக்கியமானது. வளர்ச்சி ஒரு பிராந்தியத்தில் மட்டும் நின்றுவிடக்கூடாது, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் பிராந்தியமும் தனித்துவமான பலத்தைக் கொண்டுள்ளன. இந்த தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, கடந்த பத்தாண்டுகளாக, எங்கள் அரசு வடகிழக்கை வளர்ச்சியின் முன்னணிக்கு கொண்டு வந்துள்ளது. 'வேகமாகச் செயல்படுங்கள்' என்ற உணர்வுடனும் 'கிழக்கு நோக்கிச் செயல்படுங்கள்' என்ற உறுதியுடன் நாங்கள் முன்னேறி வருகிறோம். சமீபத்தில், வடகிழக்கு முதலீட்டிற்கான உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்றது. நாடு முழுவதிலுமிருந்து முக்கிய தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இதில் பங்கேற்றனர். சிக்கிம் உட்பட வடகிழக்கு பிராந்தியம் முழுவதும் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடுகளை அவர்கள் அறிவித்தனர். இது வரும் ஆண்டுகளில் சிக்கிம் உட்பட வடகிழக்கு பகுதி இளைஞர்களுக்கு கணிசமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
கல்வி, மருத்துவ சிகிச்சை மற்றும் வேலைவாய்ப்புக்காக பயணம் செய்வது ஒரு பெரிய சவாலான காலமாக முன்பு இருந்தது. இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில் நிலைமை வெகுவாக மாறிவிட்டது. இந்தக் காலகட்டத்தில், சிக்கிமில் சுமார் 400 கிலோமீட்டர் புதிய தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைக்கப்பட்டு உள்ளன. நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் கிராமப்புற சாலைகள் அமைக்கப்படுள்ளன. சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் இடையேயான இணைப்பை அடல் சேது திட்டம் மேம்படுத்தியுள்ளது. சிக்கிமை கலிம்போங்குடன் இணைக்கும் சாலை விரைவான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. மேலும், பாக்டோக்ரா - காங்டாக் விரைவுச் சாலை சிக்கிமுக்கான பயணத்தை மிகவும் வசதியானதாக மாற்றும். எதிர்காலத்தில், இந்தப் பாதை கோரக்பூர்-சிலிகுரி விரைவுச்சாலையுடன் இணைக்கப்படும்.
நண்பர்களே,
இன்று, ஒவ்வொரு வடகிழக்கு மாநிலத்தின் தலைநகரையும் தேசிய ரயில் பாதையுடன் இணைக்கும் நடவடிக்கை வேகமாக முன்னேறி வருகிறது. செவோக்-ராங்போ ரயில் பாதை விரைவில் சிக்கிமை இந்த திட்டத்தில் இணைக்கும். சாலைகள் அமைப்பது சாத்தியமில்லாத பகுதிகளில், கேபிள்கார் வசதியை அமைக்கவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். சிறிது நேரத்திற்கு முன்பு, இதுபோன்ற ஒரு கேபிள்கார் திட்டம் தொடங்கப்பட்டது, இது சிக்கிம் மக்களின் வசதியை கணிசமாக மேம்படுத்தும்.
நண்பர்களே,
கடந்த பத்தாண்டுகளில், பாரதம் புதுப்பிக்கப்பட்ட உறுதியுடனும் புதிய உத்வேகத்துடன் முன்னேறி வருகிறது. சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவதே நமது மிக உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்றாகும். கடந்த 10 முதல் 11 ஆண்டுகளில், நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கிய மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளன. எய்ம்ஸ் நிறுவனங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை எட்டியுள்ளன. இன்று, உங்கள் நலனுக்காக 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை இங்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை, ஏழ்மையான குடும்பங்களுக்குக் கூட தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும்.
நண்பர்களே,
வளர்ந்த இந்தியா ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள். என நான்கு வலுவான தூண்கள் மீது கட்டமைக்கப்படும்: இன்று, நாடு இந்த தூண்களைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில், சிக்கிம் விவசாயிகளை நான் மனதாரப் பாராட்டுகிறேன். இந்தியா விவசாயத்தில் ஒரு புதிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இதற்கு சிக்கிம் உறுதுணையாக உள்ளது. சிக்கிமில் இருந்து பாரம்பரிய விளைபொருட்களின் ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது. அண்மையில், பிரபலமான 'டல்லே குர்சானி' மிளகாய் முதன்முறையாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. மார்ச் மாதத்தில், முதல்முறையாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. எதிர்காலத்தில், சிக்கிமில் இருந்து இதுபோன்ற பல பொருட்கள் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதை சாத்தியமாக்குவதற்கு மத்திய அரசு மாநில அரசின் இணக்கமான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகிறது.
நண்பர்களே
சில நாட்களுக்கு முன்பு, நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஒவ்வொரு மாநிலமும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலத்தையாவது உருவாக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். சிக்கிம் ஒரு மலைவாசஸ்தலமாக மட்டுமல்ல, உலகளாவிய சுற்றுலா தலமாகவும் மாற வேண்டிய நேரம் இது. சிக்கிமின் ஆற்றல் ஈடு இணையற்றது. இது இயற்கை அழகையும் ஆன்மீக பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது. இங்குள்ள ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், மலைகள் மற்றும் அமைதியான புத்த மடாலயங்களுடன், உண்மையிலேயே முழுமையான அனுபவத்தை வழங்குகிறது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தளமான காஞ்சன்ஜங்கா தேசிய பூங்கா, பாரதத்தின் பொக்கிஷம் மட்டுமல்ல, முழு உலகிற்கும் பெருமை சேர்க்கிறது.
நண்பர்களே,
இன்று, உலகின் முன்னணி பொருளாதார சக்திகளில் ஒன்றாக பாரதம் உள்ளது. வரும் ஆண்டுகளில், பாரதம் விளையாட்டுத் துறையில் வல்லரசாக மாற உள்ளது. இந்த விருப்பத்தை நிறைவேற்றுவதில், வடகிழக்கு இளைஞர்கள். குறிப்பாக சிக்கிமின் இளைஞர்கள் - ஒரு முக்கிய பங்கை வகிப்பார்கள். பைச்சுங் பூட்டியா போன்ற கால்பந்து ஜாம்பவான்களை உருவாக்கிய பூமி இது. தருண்தீப் ராய் போன்ற ஒலிம்பிக் வீரர்கள் உருவானது சிக்கிமில் இருந்துதான். ஜஸ்லால் பிரதான் போன்ற விளையாட்டு வீரர்கள் பாரதத்திற்கு மகத்தான பெருமையை கொண்டு வந்துள்ளனர். இப்போது, சிக்கிமின் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஒவ்வொரு நகரத்திலிருந்தும் சாம்பியன்கள் வருவதைக் காண்பதே எங்கள் குறிக்கோள். விளையாட்டில் பங்கேற்பதைத் தாண்டி வெற்றிக்கான உறுதியான அர்ப்பணிப்பை நோக்கி நாம் செல்ல வேண்டும். தற்போது காங்டாக்கில் கட்டப்பட்டு வரும் புதிய விளையாட்டு வளாகம், வரும் ஆண்டுகளில், எதிர்கால சாம்பியன்களுக்கான வாய்ப்பாக இருக்கும். 'கேலோ இந்தியா' முயற்சியின் கீழ் சிக்கிமிற்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. திறமையை அடையாளம் காண்பது முதல் பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் போட்டி வாய்ப்புகளை வழங்குவது வரை ஒவ்வொரு மட்டத்திலும் ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. சிக்கிம் இளைஞர்களிடையே உள்ள இந்த துடிப்பான ஆற்றலும் உற்சாகமும், ஒலிம்பிக் அரங்கில் பாரதம் தனது இடத்தைப் பாதுகாக்க உதவும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
சிக்கிமில் உள்ள நீங்கள் அனைவரும் சுற்றுலாவின் சக்தியை முழுமையாக அறிந்திருக்கிறீர்கள். சுற்றுலா என்பது வெறும் பொழுதுபோக்குக்கான ஒரு வடிவம் மட்டுமல்ல; அது நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடும் ஒரு விழா. இருப்பினும், பஹல்காமில் பயங்கரவாதிகள் செய்த கொடூரமான செயல் இந்திய குடிமக்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, அது மனிதகுலத்தின் ஆன்மாவின் மீதான தாக்குதல், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வின் மீதான தாக்குதல்.
நண்பர்களே,
அதன் பயங்கரவாத தளங்கள் அழிக்கப்பட்டதால் கோபமடைந்த பாகிஸ்தான், நமது பொதுமக்களையும் வீரர்களையும் குறிவைத்து பதிலடி கொடுக்க முயன்றது. ஆனாலும், அதில் கூட, பாகிஸ்தானின் போலித்தனம் அம்பலமானது. பதிலுக்கு, அவர்களின் பல விமான தளங்களை நாங்கள் அழித்தோம், பாரதம் திறன் கொண்டது என்பதையும், எவ்வளவு விரைவாக, எவ்வளவு துல்லியமாக, எவ்வளவு தீர்க்கமாக நாம் செயல்பட முடியும் என்பதையும் உலகிற்கு நிரூபித்தோம்.
இந்த முக்கியமான தருணத்தில், 50 ஆண்டுகள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது. சிக்கிம் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை, பாரத மக்களின் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.