தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகியவை நமது பெருமை, நமது பாரம்பரியம்: பிரதமர்
தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகியவை பல்வேறு திட்டங்களின் செயல்பாட்டில் முழுமை நிலையை எட்டியுள்ளன: பிரதமர்
மக்கள் மருந்தகம் என்றால் மலிவான சிகிச்சைக்கான உத்தரவாதம்! மக்கள் மருந்தகத்தின் தாரக மந்திரம் - குறைந்த விலை, பயனுள்ள மருந்துகள்: பிரதமர்
நாம் அனைவரும் நம் உணவில் 10% சமையல் எண்ணெயைக் குறைக்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் 10% குறைவான எண்ணெயுடன் சமையலை நிர்வகிக்க வேண்டும், இது உடல் பருமனைக் குறைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக இருக்கும்: பிரதமர்

யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூவில் ரூ.2580 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சில்வாசாவில்  தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்னதாக சில்வாசாவில் நமோ மருத்துவமனையையும் அவர் தொடங்கி வைத்தார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், இந்தப் பிராந்தியத்துடன் தொடர்பு கொள்ள, வாய்ப்பளித்த தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அர்ப்பணிப்பு உணர்வுள்ள தொழிலாளர்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்தார். மக்களுடன் அவர் கொண்டிருந்த அரவணைப்பு மற்றும் நீண்டகாலத் தொடர்பை சுட்டிக் காட்டிய அவர், பிராந்தியத்துடனான தமது பிணைப்பு பல தசாப்தங்கள் பழமையானது என்று பகிர்ந்து கொண்டார். 2014-ல் தமது அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர் எடுத்துரைத்தார்.

"சில்வாசாவின் இயற்கை அழகு, அதன் மக்களின் அன்பு, அதே போல் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூவுடனான, எனது தொடர்பு எவ்வளவு நீண்டது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பல தசாப்தங்கள் பழமையான இந்தப் பிணைப்பு, நான் இங்கு வரும்போது நான் உணரும் மகிழ்ச்சி, அதை உங்களுக்கும் எனக்கும் மட்டுமே புரியும்" என்று திரு மோடி மேலும் கூறினார். தாம் முதன்முதலாக அங்கு சென்றபோது, அந்தப் பகுதி மிகவும் வித்தியாசமாக இருந்தது என்று குறிப்பிட்ட பிரதமர், ஒரு சிறிய கடலோரப் பகுதி என்றால் என்ன நடக்கும் என்று மக்கள் கேள்வி எழுப்பினர். இருப்பினும், இந்த இடத்தின் மக்கள் மீதும் அவர்களின் திறன்கள் மீதும் எப்போதும் நம்பிக்கை இருந்தது. தமது அரசின் தலைமையின் கீழ், இந்த நம்பிக்கை முன்னேற்றமாக மாற்றப்பட்டு, சில்வாசாவை ஒரு காஸ்மோபாலிட்டன் நகரமாக மாற்றி, அங்கு வசிக்கும் அனைவருக்கும் புதிய வாய்ப்புகள் வழங்கி செழித்து வளர்ந்துள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

 

ஆரம்ப காலத்தில் சிறிய மீனவ கிராமமாக இருந்த சிங்கப்பூரின் உதாரணத்தையும் திரு மோடி பகிர்ந்து கொண்டார். சிங்கப்பூரின் மாற்றம் அந்நாட்டு மக்களின் வலுவான மன உறுதியால் ஏற்பட்டது என்று அவர் வலியுறுத்தினார். யூனியன் பிரதேச குடிமக்கள் வளர்ச்சிக்காக இதேபோன்ற தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், அவர்களுடன் தான் துணையாக நிற்பதாக உறுதியளித்தார். ஆனால் அவர்களும் முன்னேறிச் செல்ல முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

"தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஒரு யூனியன் பிரதேசம் மட்டுமல்ல, பெருமை மற்றும் பாரம்பரியத்தின் ஆதாரமுமாகும். அதனால்தான் இப்பகுதியை முழுமையான வளர்ச்சிக்கு பெயர் பெற்ற முன்மாதிரி மாநிலமாக மாற்றி வருகிறோம்" என்று திரு மோடி கூறினார். உயர் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, நவீன சுகாதாரச் சேவைகள், உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள், சுற்றுலா, நீலப் பொருளாதாரம், தொழில்துறை முன்னேற்றம், இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சியில் பெண்களின் பங்கேற்பு ஆகியவற்றுக்காக இந்தப் பிராந்தியம்  அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தான் கருதுவதாகப் பிரதமர் தெரிவித்தார்.

திரு. பிரபுல் படேல் தலைமையின் கீழ், மத்திய அரசின் ஆதரவுடன், இந்த இலக்குகளை நோக்கி இந்த மண்டலம் வேகமாக முன்னேறி வருவதாக திரு மோடி குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில், வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிராந்தியம் இப்போது தேசிய வரைபடத்தில் வளர்ச்சியின் அடிப்படையில் ஒரு தனித்துவமான அடையாளத்துடன் உருவாகி வருகிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை, ஜல் ஜீவன் இயக்கம், பாரத்நெட், பிஎம் ஜன் தன் திட்டம், பிஎம் ஜீவன் ஜோதி பீமா மற்றும் பிஎம் சுரக்ஷா பீமா போன்ற பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு, குறிப்பாக பின்தங்கிய மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு கணிசமான நன்மைகளை அளித்துள்ளன.

 

பொலிவுறு நகரங்கள் இயக்கம், சமக்ரா கல்வி, பிரதமர் முத்ரா திட்டம் போன்ற முன்முயற்சிகளில் 100% நிறைவை அடைவதே அடுத்த இலக்கு என்று பிரதமர் அறிவித்தார். முதன்முறையாக, இந்த நலத்திட்டங்கள் மூலம் அரசு நேரடியாக மக்களைச் சென்றடைகிறது, அரசின் திட்டங்களிலிருந்து ஒவ்வொரு குடிமகனும் பயனடைவதை உறுதி செய்கிறது என்று அவர் எடுத்துரைத்தார்.

உள்கட்டமைப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகியவை அடைந்துள்ள மாற்றங்களை பிரதமர் எடுத்துரைத்தார். முன்னதாக, பிராந்தியத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உயர் கல்விக்காக வெளியே செல்ல வேண்டியிருந்தது, ஆனால் இன்று, இப்பகுதியில் ஆறு தேசிய அளவிலான நிறுவனங்கள் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார். நமோ மருத்துவக் கல்லூரி, குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழகம், ஐ.டி டையூ, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி, இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் டாமன் பொறியியல் கல்லூரி ஆகியவை இதில் அடங்கும். இந்த நிறுவனங்கள் சில்வாசாவையும் இப்பகுதியையும் ஒரு புதிய கல்வி மையமாக மாற்றியுள்ளன. "இளைஞர்கள் மேலும் பயனடையும் வகையில், இந்த நிறுவனங்களில் அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னதாக, இந்தப் பகுதி முழுவதும் இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, மராத்தி ஆகிய நான்கு மொழிகளில் கல்வி வழங்கப்படுகிறது என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது, இங்குள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் உள்ள குழந்தைகள் ஸ்மார்ட் வகுப்பறைகளில் படிக்கிறார்கள் என்று சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன்" என்று திரு மோடி மேலும் கூறினார்.

சமீபத்திய ஆண்டுகளில், நவீன சுகாதார சேவைகள் இந்த மண்டலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளன என்று திரு மோடி கூறினார். "2023 ஆம் ஆண்டில், இங்கு நமோ மருத்துவக் கல்லூரியைத் திறக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதனுடன், 450 படுக்கைகள்  கொண்ட புதிய மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளது, இது இன்று திறந்து வைக்கப்பட்டது. சில்வாசாவில் உள்ள சுகாதார வசதிகள் இப்பகுதியில் உள்ள பழங்குடியின சமூகத்தினருக்கு பெரிதும் பயனளிக்கும்" என்று திரு மோடி கோடிட்டுக் காட்டினார்.

 

இன்றைய சுகாதாரத் திட்டங்களின் முக்கியத்துவத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார். இவை மக்கள் மருந்தக தினத்தையொட்டி ஒரே நேரத்தில் நிறைவடைகின்றன. குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க மக்கள் மருந்தகம் உறுதி செய்கிறது என்று அவர் கூறினார். பல்வேறு முன்முயற்சியின் கீழ், தரமான மருத்துவமனைகள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை, மக்கள் மருந்தக மையங்கள் மூலம் மலிவு விலையில் மருந்துகள் ஆகியவற்றை அரசு வழங்கி வருகிறது. நாடு முழுவதும் 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தக மையங்கள் 80% வரை குறைந்த விலையில் மருந்துகளை வழங்குகின்றன. தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ பகுதிகளில் உள்ள மக்கள் சுமார் 40 மருந்தகங்கள் மூலம் பயனடைந்து வருகின்றனர். எதிர்காலத்தில் நாடு முழுவதும் 25,000 மக்கள் மருந்தக மையங்களைத் திறக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. "இந்த முயற்சி தொடங்கப்பட்டதிலிருந்து, கிட்டத்தட்ட 6,500 கோடி மதிப்புள்ள மலிவு விலை மருந்துகள் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன, இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு ரூ .30,000 கோடிக்கு மேல் சேமிக்க உதவியுள்ளது.இந்த முன்முயற்சி பல சிக்கலான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதை மிகவும் மலிவானதாக ஆக்கியுள்ளது, சாதாரண குடிமக்களின் தேவைகளை அரசு உணர்ந்துள்ளது என்பதை இது நிரூபிக்கிறது" என்று திரு மோடி வலியுறுத்தினார்.

வாழ்க்கை முறை நோய்கள், குறிப்பாக உடல் பருமன் ஆகியவை சுகாதார அச்சுறுத்தலாக அதிகரித்து வருவது குறித்து பிரதமர் பேசினார். 2050 ஆம் ஆண்டில், 440 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் உடல் பருமனால் பாதிக்கப்படுவார்கள் என்று கணித்துள்ள சமீபத்திய அறிக்கையை அவர் குறிப்பிட்டார். "இந்த ஆபத்தான எண்ணிக்கை, உடல் பருமன் காரணமாக ஒவ்வொரு மூன்று பேரில் ஒருவர் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும் என்பதைக் குறிக்கிறது, இது உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கக்கூடும்" என்று திரு மோடி கூறினார்.

இதை எதிர்த்துப் போராட, உடல் பருமனைக் குறைக்க ஒவ்வொருவரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். ஒவ்வொரு மாதமும் சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், மக்கள் தங்கள் அன்றாட சமையலில் 10% குறைவான எண்ணெயைப் பயன்படுத்த உறுதியெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிக்கவும், உடல் பருமனைத் தடுக்கவும் தினமும் சில கிலோமீட்டர் நடப்பது போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகளை மேற்கொள்வதையும் அவர் ஊக்குவித்தார். வளர்ந்த நாடு என்ற கனவை அடைய இந்தியா உறுதிபூண்டுள்ளது. ஆரோக்கியமான தேசத்தால் மட்டுமே இத்தகைய இலக்கை அடைய முடியும்" என்று திரு மோடி வலியுறுத்தினார்.

 

கடந்த பத்தாண்டுகளில் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ பகுதிகளில் ஏற்பட்டுள்ள விரைவான தொழில் வளர்ச்சியை திரு மோடி எடுத்துரைத்தார். சமீபத்திய பட்ஜெட்டில் மிஷன் உற்பத்தி முயற்சி தொடங்கப்பட்டதன் மூலம், இந்த பிராந்தியம் கணிசமாக பயனடைய தயாராக உள்ளது. நூற்றுக்கணக்கான புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன, ஏற்கனவே உள்ள பல தொழில்கள் விரிவடைந்துள்ளன, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளன. இந்த தொழில்கள் பெரிய அளவிலான வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன, குறிப்பாக பழங்குடி சமூகம், பெண்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களுக்கு. "தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக கிர் ஆதர்ஷ் ஜீவிகா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிறிய பால் பண்ணைகள் நிறுவப்பட்டதன் மூலம் புதிய சுய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன" என்று திரு மோடி மேலும் கூறினார்.

வேலைவாய்ப்புக்கான முக்கிய ஆதாரமாக சுற்றுலாவும் உருவெடுத்துள்ளது என்பதை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். இப்பகுதியின் கடற்கரைகள் மற்றும் வளமான பாரம்பரியம் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. ராம் சேது, நமோ பாத், டாமனில் உள்ள டென்ட் சிட்டி மற்றும் பிரபலமான இரவு சந்தை போன்ற முன்னேற்றங்கள் இப்பகுதியை மேம்படுத்துகின்றன. பெரிய பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது என்றும், துதானியில் சுற்றுச்சூழல் ரிசார்ட் அமைப்பதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திரு மோடி தெரிவித்தார். டையூவில் கடலோர நடைபாதை மற்றும் கடற்கரை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. "2024-ம் ஆண்டில் நடைபெற்ற டையூ கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் கடற்கரை விளையாட்டுகளின்மீது ஆர்வத்தை அதிகரித்தன, மேலும் நீலக் கொடி சான்றிதழானது டையூவில் உள்ள கோக்லா கடற்கரையை ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது. கூடுதலாக, அரபிக்கடலின் கண்கவர் காட்சிகளை வழங்கும் வகையில் டையூவில் கேபிள் கார் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது, இது இப்பகுதியை இந்தியாவின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாற்றுகிறது" என்று திரு மோடி மேலும் கூறினார்.

 

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய இடங்களில் குறிப்பிடத்தக்க இணைப்பு மேம்பாடுகள் குறித்து குறிப்பிட்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, தாத்ரா அருகே புல்லட் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருவதாகவும், சில்வாசா வழியாக மும்பை-தில்லி விரைவுச் சாலை செல்வதாகவும் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில், பல கிலோமீட்டர் புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன, தற்போது 500 கிலோமீட்டருக்கும் அதிகமான சாலை பணிகள் நடந்து வருகின்றன, இதில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் உள்ளன. "உதான் திட்டத்தின் மூலம் இப்பகுதியும் பயனடைகிறது, மேலும் இணைப்பை மேம்படுத்த உள்ளூர் விமான நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பிராந்தியத்தில் விரிவான வளர்ச்சியை உறுதி செய்யவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் அரசு உறுதிபூண்டுள்ளது" என்று திரு மோடி மேலும் கூறினார்.

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகியவை வளர்ச்சி, நல்ல ஆளுமை, எளிதான வாழ்க்கை ஆகியவற்றுக்கான முன்மாதிரிகளாக திகழ்வது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். கடந்த காலங்களில், மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க மீண்டும் மீண்டும் அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது, ஆனால் இப்போது அரசு தொடர்பான பெரும்பாலான பணிகளை தங்கள் மொபைல் போன்களில் ஒரே கிளிக்கில் முடிக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த புதிய அணுகுமுறை பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட பழங்குடிப் பகுதிகளுக்கு பெரிதும் பயனளித்துள்ளது. மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை அந்த இடத்திலேயே தீர்க்க கிராமங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த முயற்சிகளுக்காக திரு. பிரபுல் படேல் மற்றும் அவரது குழுவினரை பாராட்டிய பிரதமர், இப்பகுதியின் வளர்ச்சிக்கு அரசு தொடர்ந்து பாடுபடும் என்று மக்களுக்கு உறுதியளித்தார். இன்று தொடங்கி வைக்கப்பட்ட வெற்றிகரமான வளர்ச்சித் திட்டங்களுக்காக தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ மக்களை நான் பாராட்டுகிறேன். யூனியன் பிரதேச குடிமக்கள் காட்டிய அன்பான வரவேற்பு, பாசம் மற்றும் மரியாதைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

பின்னணி

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதில் பிரதமர் முதன்மையாக கவனம் செலுத்தி வருகிறார். இதையொட்டி, சில்வாசாவில் நமோ மருத்துவமனையை (முதல் கட்டம்) அவர் திறந்து வைத்தார். ரூ .460 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட இந்த 450 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, யூனியன் பிரதேசத்தில் சுகாதார சேவைகளை கணிசமாக வலுப்படுத்தும். இது பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு, குறிப்பாக பழங்குடியின சமூகங்களுக்கு அதிநவீன மருத்துவ சேவையை வழங்கும்.

 

சில்வாசாவில் யூனியன் பிரதேசத்திற்கான ரூ .2580 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இதில் பல்வேறு கிராம சாலைகள் மற்றும் பிற சாலை உள்கட்டமைப்பு, பள்ளிகள், சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள், பஞ்சாயத்து மற்றும் நிர்வாக கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள், நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும். இந்தத் திட்டங்கள் இணைப்பை மேம்படுத்துதல், தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவித்தல், சுற்றுலாவை ஊக்குவித்தல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் பிராந்தியத்தில் பொது நல முயற்சிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

கிர் ஆதர்ஷ் அத்ஜீவிகா திட்டம் சிறிய பால் பண்ணைகளை அமைப்பதன் மூலமும், அவர்களின் வாழ்க்கையில் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலமும் பிராந்தியத்தில் உள்ள பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் பொருளாதார அதிகாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சில்வன் தீதி திட்டம் என்பது பெண் தெருவோர வியாபாரிகளுக்கு பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் இணை நிதியுதவியுடன் அழகாக வடிவமைக்கப்பட்ட வண்டிகளை வழங்குவதன் மூலம் அவர்களை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi inaugurates Northeast’s first Emergency Landing Facility in Moran. Why it matters?

Media Coverage

PM Modi inaugurates Northeast’s first Emergency Landing Facility in Moran. Why it matters?
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 15 பிப்ரவரி 2026
February 15, 2026

Visionary Leadership in Action: From AI Global Leadership to Life-Saving Reforms Under PM Modi