இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதை நோக்கி சென்று கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டத்தில், வங்காளத்தின் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுவதுடன் அது அவசியமானதும் ஆகும்: பிரதமர்
இந்த நோக்கத்துடன், மத்திய அரசு உள்கட்டமைப்பு, புத்தாக்க கண்டுபிடிப்பு, முதலீடு ஆகியவற்றுக்கு தொடர்ந்து புதிய உத்வேகத்தை அளித்து வருகிறது: பிரதமர்
வங்காளத்தின் வளர்ச்சி இந்திய எதிர்காலத்தின் அடித்தளம்: பிரதமர்
இந்த நகர எரிவாயு விநியோகத் திட்டம் வெறும் குழாய் திட்டம் மட்டுமல்ல, அரசுத் திட்டங்களின் பலன்கள் வீட்டிலேயே வழங்கப்படுவதற்கான ஒரு எடுத்துக்காட்டு: பிரதமர்
குறைந்த கட்டணத்தில் தூய்மையான மற்றும் எளிதில் கிடைக்கும் எரிசக்தியை நோக்கி நாம் நகர்கிறோம்: பிரதமர்

மத்திய அமைச்சர் திரு சுகந்தோ மஜும்தார் அவர்களே, மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு சுவேந்து அதிகாரி அவர்களே, அலிப்பூர்துவாரின் பிரபல நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் மனோஜ் டிக்கா அவர்களே, பிற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வங்காளத்தின் சகோதர சகோதரிகளே!
அலிப்பூர்துவாரின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பூமியிலிருந்து மேற்குவங்க மாநில மக்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்!
அலிப்பூர்துவார் பகுதி எல்லைகளால் மட்டுமின்றி, கலாச்சார விழுமியங்களாலும் இணைக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் பூட்டான் நாட்டின் எல்லை, மறுபுறம் அசாம் மாநிலம், மற்றொரு பக்கம் ஜல்பைகுரியின் அழகு, மறுபுறம் கூச் பெஹாரின் பெருமை. இன்று இந்த வளமான பூமியில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது.
நண்பர்களே,
இன்று, இந்தியா ஒரு வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுப்பதை இலக்காகக் கொண்டு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும் வேளையில், மேற்குவங்க மாநிலத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, உள்கட்டமைப்பு மேம்பாடு, புதுமை மற்றும் முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து புதிய உத்வேகத்தை அளித்து வருகிறது. மேற்குவங்க மாநிலத்தின் வளர்ச்சி நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளமாகும். இதற்கு வலு சேர்க்கும் வகையில்  இன்று சிறிது நேரத்திற்கு முன்பு, அலிப்பூர்துவார் மற்றும் கூச் பெஹாரில் நகர்ப்புற எரிவாயு விநியோகத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் மூலம்  சுத்தமான, பாதுகாப்பான, மலிவான எரிவாயு இணைப்பு வழங்கப்படும். இது சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கும் சூழலை நீக்குவதுடன்,  குடும்பங்களுக்கு பாதுகாப்பான எரிவாயு விநியோகத்தை உறுதி செய்கிறது. இதனுடன், சிஎன்ஜி எரிவாயு நிலையங்களின் கட்டுமானம் பசுமை எரிபொருளின் வசதிகளையும் விரிவுபடுத்த உதவிடும். இது பணம், நேரத்தை சேமிக்க உதவுவதுடன், சுற்றுச்சூழலுக்கு நிவாரணமும் அளிக்கும். இந்தப் புதிய திட்டத்தின் தொடக்கத்திற்காக அலிப்பூர்துர்வார் மற்றும் கூச் பெஹார் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நகர்புற எரிவாயு விநியோகத் திட்டம் என்பது குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் மட்டுமின்றி, இது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் பலன்களை வீட்டு வாசலில் கொண்டு சென்று வழங்குவதற்கான சிறந்த உதாரணமாகும்.
 

நண்பர்களே,
கடந்த சில ஆண்டுகளில் எரிசக்தித் துறையில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்று, நமது நாடு எரிவாயு அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியை நோக்கி விரைவாக முன்னேறி  வருகிறது. 2014 - ம் ஆண்டிற்கு முன்பு, நாட்டின் 66 மாவட்டங்களில் மட்டுமே நகர்ப்புற எரிவாயு வசதிகள் இருந்தன. இன்று, நகர்ப்புற எரிவாயு விநியோகக் கட்டமைப்பு 550 - க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சென்றடைந்துள்ளது. இந்தக் கட்டமைப்பு தற்போது நாட்டில் உள்ள கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களையும் சென்றடைகிறது. லட்சக்கணக்கான வீடுகளுக்கு குழாய்கள் மூலம் எரிவாயு இணைப்பு கிடைக்கிறது. சிஎன்ஜி எரிவாயு காரணமாக பொதுப் போக்குவரத்திலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது காற்று மாசுபாட்டை வெகுவாகக் குறைக்க உதவுகிறது. அதாவது, நாட்டு மக்களின் ஆரோக்கியம் மேம்பட்டு வருவதுடன், மேலும் அவர்களின் பொருளாதார சுமையும் குறைகிறது.
நண்பர்களே,
பிரதமரின் உஜ்வாலா திட்டத்துடன் இந்த மாற்றம் மேலும் உத்வேகம் பெற்றுள்ளது. இந்த திட்டத்தை 2016 - ம் ஆண்டு மத்திய அரசு தொடங்கியது. இந்தத் திட்டம் கோடிக்கணக்கான ஏழை சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது. இது பெண்களை புகையிலிருந்து விடுவித்துள்ளது, அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தியுள்ளது. மேலும் மிக முக்கியமாக, வீட்டின் சமையலறையில் மரியாதைக்குரிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. 2014 - ம் ஆண்டில், நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான  இணைப்புகள் 14 கோடிக்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இருந்தன. இன்று இந்த எண்ணிக்கை 31 கோடிக்கும் கூடுதலாக உள்ளது. அதாவது, ஒவ்வொரு வீட்டிற்கும் எரிவாயு இணைப்பு வழங்கும் கனவு தற்போது நனவாகி வருகிறது. இதற்காக, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எரிவாயு விநியோக கட்டமைப்புக்களை மத்திய அரசு வலுப்படுத்தியுள்ளது. எனவே, நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் / முகமைகளின்  எண்ணிக்கையும் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. 2014 - ம் ஆண்டிற்கு முன்பு, நாட்டில் 14 ஆயிரத்துக்கும் குறைவான எல்பிஜி விநியோகஸ்தர்கள் இருந்தனர். தற்போது, எரிவாயு விநியோகம் செய்யும் முகமைகளின் எண்ணிக்கையும் 25 ஆயிரத்துக்கும் கூடுதலாக  அதிகரித்துள்ளது. தற்போது ஒவ்வொரு கிராமத்திலும் எரிவாயு சிலிண்டர்கள் எளிதாகக் கிடைக்கின்றன.
 

நண்பர்களே,
உர்ஜா கங்கா திட்டம் குறித்து நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த திட்டம் எரிவாயு அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியை நோக்கி எடுத்து வைக்கப்பட்டுள்ள புரட்சிகரமான படியாகும். இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்களுடன் எரிவாயு குழாய்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது மேற்கு வங்கம் உட்பட கிழக்கு இந்தியாவின் பல்வேறு  மாநிலங்களுக்கு குழாய்கள் மூலம் எரிவாயு சென்றடைகிறது. மத்திய  அரசின் இத்தகைய முயற்சிகள் அனைத்தும் நகரங்கள் அல்லது கிராமங்களில் புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன. குழாய்கள் அமைப்பதில் இருந்து எரிவாயு விநியோகம் செய்வது வரை ஒவ்வொரு நிலையிலும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. எரிவாயு சார்ந்த தொழில்களும் இதன் மூலம் உத்வேகம் பெற்றுள்ளன. தற்போது நாம் மலிவான, சுத்தமான, அனைவரும் அணுகக்கூடிய எரிசக்தி கொண்ட நாடாக உருவெடுத்து வருகிறோம்.
 

நண்பர்களே,
மேற்கு வங்கம் இந்தியக் கலாச்சாரம், அறிவு, அறிவியல் துறையின் முக்கிய மையமாக இருந்து வருகிறது. வளர்ச்சியடைந்த இந்தியாவின் கனவை மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சி இன்றி நிறைவேற்ற முடியாது. இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளை இங்கு தொடங்கியுள்ளது. பூர்வா விரைவுச் சாலை, துர்காபூர் விரைவுச் சாலை, ஷ்யாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தை நவீனமயமாக்கும் பணிகள், கொல்கத்தா மெட்ரோ ரயில் சேவையை  விரிவுபடுத்தும் பணிகள், புதிய ஜல்பைகுரி நிலையத்தைப் புதுப்பித்தல், தூயர்ஸ் பாதையில் புதிய ரயில்களை இயக்குவது,போன்ற மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டம் குழாய் மூலம் எரிவாயு இணைப்பை வழங்குவது மட்டுமின்றி, அது முன்னேற்றத்தின் உயிர்நாடியாகவும் உள்ளது. இத்திட்டம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முயற்சியாகும். மேற்குவங்க மாநிலத்தின் வளர்ச்சியை நோக்கி விரைவான முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மீண்டும் ஒருமுறை, முழு மனதுடன் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka

Media Coverage

Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 5, 2025
December 05, 2025

Unbreakable Bonds, Unstoppable Growth: PM Modi's Diplomacy Delivers Jobs, Rails, and Russian Billions