ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி புதிய திட்டங்களைத் தொடங்கிவைத்தார்
திருத்துறைப்பூண்டி, அகஸ்தியம்பள்ளி இடையிலான 37 கிலோமீட்டர் அகலப்பாதைப் பிரிவைத் தொடங்கிவைத்தார்
தாம்பரம், செங்கோட்டை இடையே விரைவு ரயில் சேவை, திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்
“தமிழ்நாடு வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் தாயகமாகும், மொழி மற்றும் இலக்கியத்தின் பூமியாகும்”
“முன்பு உள்கட்டமைப்புத் திட்டங்கள் என்றால் தாமதம் ஆவது இயல்பாக இருந்தது, ஆனால் இப்போது அது பணி நிறைவு என்ற நிலையை எட்டியுள்ளது”
“வரி செலுத்துவோரின் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்குத் தேவை என அரசு உணர்கிறது”
“நாங்கள் உள்கட்டமைப்பை மனிதநேயத்துடன் அணுகுகிறோம், அது அபிலாஷையை சாதனையுடனும், மக்களை வாய்ப்புகளுடனும், கனவுகளை நனவுகளுடனும் இணைக்கிறது”
“தமிழ்நாட்டின் வளர்ச்சி அரசின் மிகப் பெரிய முன்னுரிமையாகும்”
“சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம் தமிழ் கலாச்சாரத்தின் அழகைப் பிரதிபலிக்கிறது”
“இந்தியாவின் வளர்ச்சி எந்திரங்களில் தமிழ்நாடும

பாரத் மாதா கீ ஜே

பாரத் மாதா கீ ஜே

பாரத் மாதா கீ ஜே

வணக்கம் தமிழ்நாடு

தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி அவர்களே, முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களே, மத்திய அமைச்சரவையின் எனது தோழர்கள் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, திரு ஜோதிராத்திய சிந்தியா அவர்களே, தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

நண்பர்களே,

தமிழ்நாட்டுக்கு வருவது எனக்கு எப்போதும்  சிறப்பானதாகும். இது வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் தாயகமாகும். இது மொழி மற்றும் இலக்கியத்தின் பூமியாகும். இது தேசப்பற்று மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் மையமாகவும் திகழ்கிறது. நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

 

நண்பர்களே,

பண்டிகை சமயத்தில் நான் இங்கு வந்திருக்கிறேன் என்பதை நான் அறிவேன். இன்னும் சில நாட்களில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. புதிய ஆற்றல், புதிய நம்பிக்கைகள், புதிய விருப்பங்கள், புதிய தொடங்கங்களுக்கான நேரம் இது. சில புதிய தலைமுறை உள்கட்டமைப்புத் திட்டங்கள் இன்று முதல் மக்களுக்கு பயனளிக்கத் தொடங்கும். இதர சில திட்டங்களுக்கான பணிகள் இப்போது தொடங்குகின்றன. ரயில்வே, சாலைகள், விமானப் போக்குவரத்து போன்ற இத்தகைய திட்டங்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு புதிய உற்சாகத்தைச் சேர்க்கும்.

 

நண்பர்களே,

கடந்த சில ஆண்டுகளாக உள்கட்டமைப்புப் புரட்சியை இந்தியா கண்டு வருகிறது. இது வேகத்தையும் அளவையும் கொண்டதாகும்.  அளவைப் பொறுத்தவரை இந்த ஆண்டு பட்ஜெட்டை நீங்கள் கவனிக்கலாம்.  உள்கட்டமைப்பு முதலீட்டுக்காக 10 லட்சம் கோடி ரூபாய் என்ற சாதனை அளவை நாம்  ஒதுக்கியுள்ளோம். இது 2014-ஆம் ஆண்டு இருந்ததைவிட அதிகமாகும். ரயில்வே உள்கட்டமைப்புக்கு ஒதுக்கிய  தொகையும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சாதனை அளவாகும்.

நண்பர்களே,

வேகத்தைப் பொறுத்தவரை, சில  உண்மையான தகவல்கள் உங்களுக்கு சரியான கண்ணோட்டத்தை வழங்கும். தேசிய நெடுஞ்சாலைகளில் ஓராண்டில் போடப்படும் சாலைகளின் அளவு 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததுடன் ஒப்பிடுகையில், சற்றேறக்குறைய இரு மடங்காக உயர்ந்துள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டது. இன்று அது ஆண்டுக்கு 4,000 கிலோ மீட்டர் என்ற அளவை எட்டியுள்ளது. 2014 வரை கட்டப்பட்ட விமான நிலையங்களின் எண்ணிக்கை 74, 2014-க்கு பின்பு நாங்கள் அதனை இருமடங்காக்கி சுமார் 150-ஆக உயர்த்தியுள்ளோம்.  தமிழ்நாட்டின் நீண்ட கடற்கரை வர்த்தகத்திற்கு முக்கியமானவையாக திகழ்கின்றன. நமது துறைமுகங்களில் சரக்கு கையாளும் திறன் 2014-க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், ஏறத்தாழ இருமடங்காக உயர்ந்துள்ளது.

வேகமும், அளவும் உள்கட்டமைப்புத் திட்டங்களில் மட்டுமல்லாமல், சமூக டிஜிட்டல் உள்கட்டமைப்புத் திட்டங்களிலும் காணப்படுகிறது. 2014 வரை இந்தியாவில் 380 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. இன்று அவை 660 ஆக உள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை நாட்டில் அநேகமாக மும்மடங்காக உயர்ந்துள்ளது. உலகின் முன்னணி டிஜிட்டல் பரிவர்த்தனை நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது. குறைந்த விலையில் இணைய சேவையைத் தரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 6 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு கண்ணாடி இழை கேபிள் பதிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 2 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களை இணைக்கிறது. இன்று இந்தியாவின் கிராமப்புறங்களின் இணையதள பயனாளிகளின் எண்ணிக்கை நகர்ப்புற பயனாளிகளைவிட அதிகமாக உள்ளது.

நண்பர்களே,

இத்தகைய அனைத்து சாதனைகளும் எப்படி சாத்தியமானது. பணிக்கலாச்சாரம் மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகிய இரண்டு விஷயங்களால் சாத்தியமானது. முதலாவதாக பணிக்கலாச்சாரம், முன்பெல்லாம் உள்கட்டமைப்புத் திட்டங்கள் என்றால் தாமதமாவது வழக்கமாக இருந்தது. ஆனால் இன்றோ அவை நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. தாமதத்திலிருந்து நிறைவு என்ற இந்த பயணம் நமது பணிக்கலாச்சாரத்தால் ஏற்பட்டுள்ளது. வரி செலுத்துவோரின் ஒவ்வொரு ரூபாய்க்கும் நாம் கணக்கு வைத்துள்ளோம் என்ற உணர்வு நமக்கு உள்ளது. குறிப்பிட்ட காலவரையறையை நிர்ணயித்து பணியாற்றி, அதற்கு முன்பாகவே அவற்றை நிறைவேற்றுகிறோம்.

 

பணிக்கலாச்சாரம் மற்றும் தொலைநோக்குப் பார்வையில் புகுத்திய மாற்றத்தின் பலனாக மாபெரும் மாற்றங்களை பரிசாக பெற்றுள்ளோம்.  உள்கட்டமைப்பு திட்டங்கள் என்பது காலதாமதம் என்றில்லாமல், விரைவான  நடைமுறையாக மாறியிருக்கிறது. இதற்கு பணிக் கலாச்சாரத்தில்  மேற்கொண்ட மாற்றமே  காரணம். வரி செலுத்துவோரின் ஒவ்வொரு ரூபாய்க்கும் பதில் சொல்ல வேண்டியதைக் கவனத்தில் கொண்டு, பணியாற்றினால் விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள்  இலக்கை அடைய முடியும். முந்தைய அரசுகளின் கண்ணோட்டங்களை ஒப்பிடும்போது, உள்கட்டமைப்பு வசதிகள் என்பதை வெறும் சிமெண்ட், செங்கல் என்ற கோணத்தில் பார்க்காமல், மனிதகுலத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதோடு, கனவுகளை நிறைவேற்றுவதாகக் கருதவேண்டும்.

நண்பர்களே,

மத்திய அரசை பொருத்தவரை தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கு பிரதான முக்கியத்தும் அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளுக்காக முன்னெப்போதும் இல்லாத வகையில், ரூ.6,000 கோடிக்கும் அதிகமான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் ரயில்வே உள்கட்டமைப்புக்கு ரூ.900 கோடிக்கும் குறைவான தொகையை சராசரியாக ஒதுக்கப்பட்டது. அதே நேரத்தில் 2004-ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை, தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளின் தூரம் 800  கிலோமீட்டராக இருந்தது. இந்த தூரம் 2014-ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 2 ஆயிரம் கிலோமீட்டராக மாற்றியமைக்கப்பட்டது. மேலும் கடந்த 2014-15-ம் நிதியாண்டு ரூ.1,200 கோடி அளவுக்கு செலவிடப்பட்ட தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான முதலீடு, 2022-23-ம் நிதியாண்டில் 6 மடங்காக அதிகரித்து ரூ.8,200 கோடியாக இருக்கிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வதற்கான பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக இன்றைக்கு சில முடிவுற்ற திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டு இருப்பதுடன், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

நண்பர்களே,

தமிழ்நாட்டின் மூன்று முக்கிய நகரங்களான சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகியவைகள் இன்று தொடங்கப்பட்ட மற்றும் முடிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் நேரடியாக பயனடையும். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் தொடங்கி வைக்கப்பட்டது. வளரும் பயணிகளின் தேவைக்கு இது பலனளிக்கும். இந்தப் புதிய முனையக் கட்டிடத்தின் வடிவமைப்பு தமிழ் கலாச்சார அழகைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது. நீங்கள் ஏற்கனவே, மிகச் சிறந்த புகைப்படங்களை கண்டுகளித்திருக்கிறீர்கள். மேற்கூரை வடிவமைப்பாகட்டும், தரைத்தளமாகட்டும், மேற்கூரை அல்லது சுவர் ஓவியமாகட்டும், அனைத்தும் தமிழ்நாட்டின் சில முக்கிய அம்சங்களை நினைவுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. விமான நிலையத்தில் கலாச்சாரம் சிறந்து விளங்கினாலும், நவீனத் தேவைகளை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு ஏதுவானப் பொருட்களைக் கொண்டே கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, பசுமைத் தொழில்நுட்பங்களான எல்இடி பல்புகள் மற்றும் சூரியசக்தி போன்றவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

நண்பர்களே,

சென்னைக்கு மற்றுமொரு வந்தே பாரத் இரயில் கிடைத்திருப்பதன் மூலம் கோயம்புத்தூரோடு இணைப்பு கிடைத்துள்ளது. சென்னைக்கு முதல் வந்தே பாரத் இரயில் சேவை கிடைத்த பொழுது தமிழ்நாட்டைச் சேர்ந்த என்னுடைய இளைய நண்பர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர். அப்பொழுது சமூக ஊடக தளங்களில் வந்தே பாரத் இரயில் சேவை தொடர்பான சில வீடியோ பதிவுகள் மிகவும் பிரபலமடைந்ததை நான் உணர்வேன். மிகச்சிறந்த வ.உ.சிதம்பரம்பிள்ளையின் மண்ணில் இந்திய தயாரிப்பு பெருமை இயல்பானதுதான்.

நண்பர்களே,

ஜவுளித்துறையாகட்டும், குறு, சிறு, நடுத்தர தொழில் துறை நிறுவனங்களாகட்டும் கோயம்புத்தூர் தொழில்துறையின் ஆற்றல் சக்தியாக விளங்குகிறது. தற்போதைய நவீன இணைப்பு வசதிகள் அப்பகுதி மக்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கிறது. வந்தே பாரத் விரைவு ரயில் சேவை சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையேயான பயண நேரம் ஆறு மணி நேரம் மட்டுமே. சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற தொழில்துறையின் மையங்களுக்கு மிகப்பெரிய அளவில் பயனளிக்கும்.

நண்பர்களே,

தமிழ்நாட்டில் கலாச்சார தலைநகராகவும், உலகின் மிகத் தொன்மையான நகரங்களில் ஒன்றாகவும் மதுரை திகழ்கிறது. இன்றையத் திட்டங்கள், தொன்மையான நகரத்தின் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவும். இதன் மூலம் மக்களின் வாழ்க்கை முறை எளிதாகி, எளிதாக மதுரைக்கு பயணிக்க முடியும். தென்மேற்கிலுள்ள பல மாவட்டங்களும், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளும், இன்றைய திட்டங்களின் மூலம் பயன்பெறும்.

நண்பர்களே,

இந்தியாவின் வளர்ச்சி இயந்திரத்திற்கு தமிழ்நாடும் முக்கியப் பங்காற்றுகிறது. இன்று தொடங்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மிகப்பெரிய அளவில் வலு சேர்க்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உயர்தர உள்கட்டமைப்பு வசதிகள் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, வருவாய் அதிகரிப்பதன் மூலம், தமிழ்நாடு வளர்கிறது. தமிழ்நாடு வளரும்போது இந்தியாவும் வளரும். உங்களின் பேரன்பிற்கு மிக்க நன்றி, வணக்கம்!

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games

Media Coverage

Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை செப்டெம்பர் 4, 2026
September 04, 2026

Make in India, Power India, Play for India: Multi-Sector Momentum Under PM Modi’s Leadership