பேராசிரியர் எம் எஸ் சுவாமிநாதனை ஒரு சில நாட்களுக்கு முன் இழந்துவிட்டோம். புரட்சிகரமான தொலைநோக்குப் பார்வை கொண்ட வேளாண் விஞ்ஞானியை நமது நாடு இழந்துவிட்டது. இந்தியாவுக்கு மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கிய அவரது நினைவுகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். இந்தியாவை நேசித்த பேராசிரியர் எம் எஸ் சுவாமிநாதன் நமது நாடு, குறிப்பாக நமது விவசாயிகள் வளமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். கற்பதில் சிறந்து விளங்கிய அவர், எந்தத் துறையையும் தேர்வு செய்திருக்க முடியும், ஆனால், 1948-ம் ஆண்டின் வங்கப் பஞ்சத்தால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக ஏதாவது ஒன்றை நாம் செய்ய வேண்டும் என்றால் அது வேளாண் துறை படிப்பாகத்தான் இருக்க முடியும் என்பதில் தெளிவாக இருந்தார்.

இளம் வயதில் டாக்டர் நார்மன் போர்லாவுடன் தொடர்பு கொண்டு அவரது பணிகளைப் பெருமளவு பின்பற்றிய அவருக்கு 1950-ஆம் ஆண்டு அமெரிக்காவில் பேராசிரியர் பதவி தேடிவந்தது. ஆனால், அவர் அதை நிராகரித்தார். இந்தியாவில் பணியாற்ற இந்தியாவுக்காக பணியாற்றவே அவர் விரும்பினார்.

சவாலான சூழ்நிலைகளில் நமது தேசத்திற்கு சுயசார்பான, தன்னம்பிக்கை கொண்ட பாதைக்கு வழிகாட்டுவதில் மிகப்பெரும் ஆளுமையாக அவர் விளங்கினார். சுதந்திரம் அடைந்தபின், முதல் 20 ஆண்டுகளில் நாம் எதிர்கொண்ட பல சவால்களில் உணவுப் பற்றாக்குறை முதன்மையானதாக இருந்தது. 1960-களின் முற்பகுதிகளில் பஞ்சத்தின் அச்சுறுத்தல் இருந்தது. பேராசிரியர் சுவாமிநாதனின் சமரசமற்ற உறுதிப்பாடும் தொலைநோக்குப் பார்வையும் வேளாண் வளத்திற்கான புதிய சகாப்தம் பற்றி சிந்திக்க வைத்தது. வேளாண் துறையில் குறிப்பாக கோதுமை உற்பத்தியில் முன்மாதிரியான அவரின் பணிகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து இந்தியா உணவுப்பற்றாக்குறை நாடு என்ற நிலையில் இருந்து உணவில் தற்சார்புள்ள நாடு என மாறியது. இந்த மகத்தான சாதனையால் “இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை” என்ற பட்டம் அவருக்கு மிகவும் பொருத்தமாக அமைந்தது.

இந்தியாவால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு பசுமைப் புரட்சி எடுத்துக்காட்டாக இருந்தது. கோடிக்கணக்கான சவால்களை நாம் எதிர்கொண்ட போதிலும் அவற்றை வெல்வதற்கு புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்ட கோடிக்கணக்கான சிந்தனையாளர்களையும் நாம் கொண்டிருக்கிறோம். பசுமைப் புரட்சி தொடங்கிய 50 ஆண்டுகளுக்குப் பின் தற்போது இந்திய வேளாண் துறை, அதிநவீனமாகவும், முற்போக்கானதாகவும் மாறியிருக்கிறது. ஆனால், இதற்கு அடித்தளமிட்ட பேராசிரியர் சுவாமிநாதனை ஒரு போதும் மறக்கவியலாது.

உருளைக் கிழங்கு பயிர்களை தாக்கிய பாரசைட்ஸ் பற்றிய ஆய்வை அவர் பல ஆண்டுகள் மேற்கொண்டார். இதன் பயனாக உருளைக் கிழங்கு பயிர் குளிர்ச்சியான காலநிலையையும் தாங்கவல்லதாக மாறியது. தற்போது மிகச் சிறந்த உணவாக சிறுதானியங்கள் பற்றி உலகமே பேசுகிறது. ஆனால், பேராசிரியர் சுவாமிநாதன் 1990-களில் தொடங்கி சிறுதானியங்கள் பற்றிய கருத்தை ஊக்கப்படுத்தினார்.

பேராசிரியர் சுவாமிநாதனுடன் எனது தனிப்பட்ட உரையாடல்கள் மிகவும் பரந்து விரிந்த தன்மை கொண்டது. 2001-ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக நான் பொறுப்பேற்ற பின் இந்த கலந்துரையாடல்கள் தொடங்கின. இந்த நாட்களில் வேளாண்மையின் வலிமையை குஜராத் அறிந்திருக்கவில்லை. தொடர்ச்சியான வறட்சி, கடுமையான புயல், நிலநடுக்கம் போன்றவற்றால் இம்மாநிலத்தின் வளர்ச்சிப் பயணம் தடைபட்டது. நாங்கள் தொடங்கிய பல முன்முயற்சிகளில் ஒன்றாக மண்வள அட்டைத் திட்டம் இருந்தது. நிலத்தைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ளவும் பிரச்னைகளை சரி செய்யவும் இது எங்களுக்கு உதவியது. இந்தத் திட்டம் தொடர்பாக பேராசிரியர் சுவாமிநாதனை நான் சந்தித்தேன். இந்தத் திட்டத்தைப் பாராட்டிய அவர், தமது மதிப்புமிகு கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டார். இந்தத் திட்டம் குறித்து அவநம்பிக்கை கொண்டிருந்தவர்களையும் சமாதானம் செய்ய அவரது ஒப்புதல் பயனுடையதாக இருந்தது, இதன் பயனாக குஜராத் வேளாண் துறையின் வெற்றி சாத்தியமானது.

நான் முதலமைச்சராக இருந்தபோதும் பின்னர் பிரதமராக பொறுப்பேற்ற போதும் எங்களின் உரையாடல்கள் தொடர்ந்தன. 2016-ஆம் ஆண்டு சர்வதேச வேளாண் பல்லுயிர் பெருக்க மாநாட்டில் நான் அவரை சந்தித்தேன். அடுத்த ஆண்டு 2017-ல் அவரால் எழுதப்பட்ட நூலின் 2 தொகுதிகள் அடங்கிய தொகுப்பை நான் வெளியிட்டேன்.

உழவர்கள் உலகத்திற்கு அச்சாணி போன்றவர்கள் ஏனெனில் அவர்கள்தான் அனைத்தையும் பாதுகாக்கின்றவர்கள் என்று திருக்குறள் வர்ணிக்கிறது. பேராசிரியர் சுவாமிநாதன் இந்தக் கோட்பாட்டை மிக நன்றாக உணர்ந்திருந்தார். ஏராளமான மக்கள் அவரை “வேளாண் விஞ்ஞானி” என்கிறார்கள். ஆனால், அவர் அதைவிடவும் மேலானவர் என்று நான் எப்போதும் நம்புகிறேன். உண்மையில் அவர், “விவசாயிகளின் விஞ்ஞானி”யாக இருந்தார். அவரது இதயத்தில், எப்போதும் ஒரு விவசாயி இடம் பெற்றிருந்தார். அவரது பணிகளின் வெற்றி கற்ற கல்வியால் மட்டுமே சிறந்தது என்பதாக இருக்கவில்லை. அது சோதனைச் சாலைகளுக்கு வெளியே வயல்களிலும், பண்ணைகளிலும் பெற்ற அனுபவமாக இருந்தது. அறிவியல் சிந்தனைக்கும் அதன் நடைமுறைப் பயன்பாட்டிற்கும் இடையேயான இடைவெளியை குறைப்பதாக அவரது பணி அமைந்தது. நீண்ட காலம் நிலைத்து நிற்கக்கூடிய வேளாண்மைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கிய அவர், மனிதகுல முன்னேற்றத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயான சமச்சீர் நிலையை வலியுறுத்தினார். சிறு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தி கண்டுபிடிப்புகளின் பயன்கள் அவர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் பேராசிரியர் சுவாமிநாதன் சிறப்பு கவனம் செலுத்தினார் என்பதை நான் குறிப்பிடவேண்டும். விவசாயத்தில் ஈடுபடும் பெண்களின் வாழ்க்கை மேம்பாடு குறித்தும் அவர் தனிப்பட்ட ஆர்வம் கொண்டிருந்தார்.

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் வழிகாட்டுதலில் மிகச் சிறந்த முன்னோடியாக பேராசிரியர் எம் எஸ் சுவாமிநாதன் விளங்கினார். 1987-ஆம் ஆண்டு கௌரவம் மிக்க உலக உணவுப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இதனைப் பெற்ற முதலாவது விஞ்ஞானியாக இருந்த அவர், இதற்கான தொகையை லாப நோக்கம் இல்லாத ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவுவதற்குப் பயன்படுத்தினார். இன்று வரை இந்த அறக்கட்டளை பல துறைகளில் விரிவான பணிகளை மேற்கொண்டு வருகிறது. எண்ணற்ற சிந்தனையாளர்களை உருவாக்கி கற்றல் மற்றும் புதிய கண்டுபிடிப்பு ஆர்வத்தைத் தூண்டுகிறது. விரைவாக மாறிவரும் உலகத்தில் அறிவின் ஆற்றல், வழிகாட்டுதல் மற்றும் புதிய கண்டுபிடிப்பை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது. மணிலாவில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக பதவி வகித்தது இவரது மிகச் சிறந்த பணிகளில் ஒன்றாகும். இதன் தெற்காசிய பிராந்திய மையம் 2018-ல் வாரணாசியில் திறக்கப்பட்டது.

டாக்டர் சுவாமிநாதனுக்கு புகழாரம் சூட்டும் திருக்குறளை மீண்டும் ஒருமுறை நான் குறிப்பிடுகிறேன். “எண்ணிய, எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியராகப் பெறின்” தமது இளமைக் காலத்தில் வேளாண்மையை வலுப்படுத்தி விவசாயிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்த அவர், அந்த பாதையிலேயே உறுதியுடன் செயல்பட்டார். அந்தப் பணியை அவர் வெகு சிறப்பாகவும் புதுமைச் சிந்தனையோடும், ஆர்வத்தோடும் மேற்கொண்டார். வேளாண் துறையில் புதிய கண்டுபிடிப்பையும், நிலைத்தன்மையையும் நாம் முன்னெடுக்கும் போது டாக்டர் சுவாமிநாதனின் பங்களிப்பு தொடர்ந்து நமக்கு ஊக்கமளிக்கும், வழிகாட்டும். விவசாயிகளின் நலன், வேளாண் விரிவாக்கம், வளர்ச்சிக்கு ஊக்கமளித்தல், நிலைத்தன்மை, அடுத்தத் தலைமுறைகளுக்கான வளம் ஆகியவற்றை உறுதி செய்தல் ஆகிய அவர் நேசித்த கோட்பாடுகளுக்கு நமது உறுதிப்பாட்டை நாம் உறுதி செய்ய வேண்டும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Govt disburses Rs 28,748 crore under 14 PLI schemes till December 2025

Media Coverage

Govt disburses Rs 28,748 crore under 14 PLI schemes till December 2025
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
காசி-தமிழ் சங்கமம் மற்றும் 'ஏக் பாரத், ஸ்ரேஷ்ட பாரத்'-திற்கு (ஒரு பாரதம், வலுவான பாரதம்) அஞ்சலி
January 15, 2026

1026-ம் ஆண்டு நடத்தப்பட்ட சோம்நாத் மீதான முதல் தாக்குதலின் ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சோம்நாத் சுயமரியாதை விழாவில் பங்கேற்க நான் புனித பூமியான சோம்நாத் சென்றிருந்தேன். வரலாறு, கலாச்சாரம், இந்திய மக்களின் நீடித்த மனவுணர்வு ஆகியவற்றின் மீது பகிரப்பட்ட மரியாதையால் ஒன்றுகூடிய இந்த நினைவு நிகழ்வில் இந்தியா முழுவதிலுமிருந்து மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது, சௌராஷ்டிரா-தமிழ் சங்கமத்தின் போது சோம்நாத்துக்கு வந்திருந்த சிலரையும், காசி-தமிழ் சங்கமத்தின் போது காசிக்கு வந்திருந்த சிலரையும் நான் சந்தித்தேன். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அவர்கள் அளித்த பாராட்டு வார்த்தைகள் என்னை நெகிழச்செய்தன. எனவே, இந்த விஷயத்தில் சில எண்ணங்களை நான் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.

தமிழ் கற்காமல் இருப்பது என் வாழ்க்கையின் மிகப்பெரிய வருத்தம் என்று மனதின் குரல் நிகழ்ச்சியின் போது நான் கூறியிருந்தேன். அதிர்ஷ்டவசமாக, கடந்த சில ஆண்டுகளில், இந்தியா முழுவதும் தமிழ்க் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்தவும், 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை ஆழப்படுத்தவும் எங்கள் அரசுக்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அத்தகைய முயற்சிக்கு ஒரு சிறந்த உதாரணம் காசி-தமிழ் சங்கமம். நமது பண்பாட்டில், சங்கம் அல்லது சங்கமம் ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. இந்த வெளிச்சத்தில் பார்க்கும்போது, காசி-தமிழ் சங்கமம் உண்மையில் தனித்துவ முயற்சியாக விளங்குகிறது. இது இந்தியாவின் பல மரபுகளில் வாழும் ஒற்றுமையைக் கொண்டாடுகிறது. அதே நேரத்தில் அவற்றின் தனித்துவ அடையாளங்களை மதிக்கிறது.

அத்தகைய சங்கமத்தை நடத்துவதற்குக் காசியை விட சிறந்த இடம் எதுவாக இருக்க முடியும்? பழங்காலத்திலிருந்தே நாகரிகத்தின் நங்கூரமாகத் திகழ்ந்து வரும் அதே காசிக்கு... ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் அறிவையும், வாழ்க்கை அனுபவத்தையும், மோட்சத்தையும் தேடி வந்துள்ளனர்.

தமிழ் மக்களுடனும் கலாச்சாரத்துடனும் காசியின் தொடர்பு மிகவும் ஆழமானது. காசியில் உறைந்துள்ள பகவான் விஸ்வநாதர் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் உறைகிறார். தமிழ்நாட்டில் உள்ள தென்காசி, தெற்கின் காசி அல்லது தட்சிண காசி என்று அழைக்கப்படுகிறது. துறவி குமரகுருபர சுவாமிகள் தனது ஆன்மீகம், புலமை மற்றும் நிறுவனக் கட்டுமானம் மூலம் காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நீடித்த தொடர்பை உருவாக்கினார். தமிழ்நாட்டின் மிகச்சிறந்த புதல்வர்களில் ஒருவரான மகாகவி சுப்பிரமணிய பாரதி, காசியில் அறிவுசார் வளர்ச்சி மற்றும் ஆன்மீக விழிப்புணர்வுக்கான இடத்தைக் கண்டார். அவரது தேசியவாதம் ஆழமாகி, அவரது கவிதை கூர்மையானது. சுதந்திரமான, ஒன்றுபட்ட இந்தியா பற்றிய அவரது பார்வை தெளிவான வடிவம் பெற்றது இங்குதான். காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் நெருக்கமான பிணைப்பை எடுத்துக்காட்டும் இதுபோன்ற பல நிகழ்வுகள் உள்ளன.

காசி-தமிழ் சங்கமத்தின் முதல் நிகழ்வு 2022-ல் நடைபெற்றது. தொடக்க விழாவில் கலந்து கொண்டதை நான் நினைத்துப்பார்க்கிறேன். தமிழ்நாட்டிலிருந்து அறிஞர்கள், கைவினைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், எழுத்தாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பலர் காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு பயணம் செய்தனர்.

அடுத்தடுத்த நிகழ்வுகள் இந்த முயற்சியின் அளவையும் ஆழத்தையும் விரிவுபடுத்தின. புதிய கருப்பொருள்கள், புதுமையான வடிவங்கள் மற்றும் ஆழமான ஈடுபாட்டை அறிமுகம் செய்வதே இதன் நோக்கமாக இருந்தது. சங்கமம், அதன் முக்கிய உணர்வில் வேரூன்றி தொடர்ந்து மேம்படுவதை இது உறுதி செய்தது. 2023-ம் ஆண்டின் இரண்டாவது நிகழ்வில், மக்களுக்கு மொழி ஒரு தடையாக மாறாமல் இருப்பதை உறுதி செய்ய தொழில்நுட்பம் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது. மூன்றாவது நிகழ்வில், இந்திய அறிவுமுறைகள் மீது கவனம் செலுத்தப்பட்டது. அதே நேரத்தில், கல்வி சார்ந்த விவாதங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் அதிக அளவிலான பங்கேற்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கின. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது ஆண்டு நிகழ்வுகள் 2025 டிசம்பர் 2 அன்று தொடங்கியது. இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருள் மிகவும் சுவாரஸ்யமானது. தமிழ் கற்கலாம் என்ற அந்த கருப்பொருள் காசியிலும் அருகில் உள்ள பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு அழகான தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது. தமிழ்நாட்டிலிருந்து ஆசிரியர்கள் காசிக்கு வந்தனர். காசியைச் சேர்ந்த மாணவர்கள் மிகவும் மறக்கமுடியாத அனுபவத்தைப் பெற்றனர்! இந்த முறை பல சிறப்பு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தொல்காப்பியம், 4 இந்திய மொழிகளிலும் 6 வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

தென்காசியில் இருந்து காசிக்கு ஒரு தனித்துவமான நிகழ்வாக அகத்திய முனிவர் வாகனப் பேரணி மேற்கொள்ளப்பட்டது. வழியில், கண் மருத்துவ முகாம்கள், சுகாதார விழிப்புணர்வு முகாம்கள், டிஜிட்டல் எழுத்தறிவு முகாம்கள் போன்ற பல்வேறு இயக்கங்கள் நடத்தப்பட்டன. கலாச்சார ஒற்றுமையின் செய்தியைப் பரப்பிய பாண்டிய மன்னர் அதி வீர பராக்கிரம பாண்டியனுக்கு இந்தப் பேரணி அஞ்சலி செலுத்தியது. நமோ படித்துறையில் கண்காட்சிகள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கல்வி அமர்வுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவையும் நடைபெற்றன.

காசி தமிழ் சங்கமத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களில் ஒன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பதாகும். நமது வேர்களுடன் தங்கள் தொடர்பை ஆழப்படுத்த வேண்டும் என்ற நமது இளைஞர் சக்தியின் ஆர்வத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இதில் நடைபெற்ற பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளின் போது தங்கள் திறமையையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்த இது ஒரு சிறந்த தளமாகவும் அமைந்தது.

காசி தமிழ் சங்கமத்தின்போது மேற்கொண்ட காசி பயணத்தை மறக்கமுடியாத சிறப்பான பயணமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து உத்தரபிரதேசத்திற்கு மக்களை அழைத்துச் செல்ல இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கியது. பல ரயில் நிலையங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில், அவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். ரயில் பயணத்தில் மெல்லிசைப் பாடல்கள் ஒலிக்கச் செய்ததுடன், உரையாடல்களும் நடைபெற்றன.

காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்றவர்களுக்குக் காட்டப்பட்ட அரவணைப்புக்காகவும் சிறந்த விருந்தோம்பலுக்காகவும் காசியையும் உத்தரபிரதேசத்தையும் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளைப் நான் பாராட்ட விரும்புகிறேன். தமிழ்நாட்டிலிருந்து வந்த விருந்தினர்களுக்காக பலர் தங்கள் வீடுகளின் கதவுகளைத் திறந்து வரவேற்றனர். விருந்தினர்கள் தடையற்ற சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய உள்ளூர் நிர்வாகம் 24 மணி நேரமும் உழைத்தது. வாரணாசி மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான நான் இதில் பெருமைப்படாமல் இருக்க முடியாது!

இந்த முறை, காசி-தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. அதில் குடியரசுத் துணைத்தலைவரும் தமிழ்நாட்டின் பெருமைமிகு மைந்தருமான திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்தியாவின் ஆன்மீக மகத்துவத்தையும், தேசிய ஒருங்கிணைப்பையும் இத்தகைய தளங்கள் எவ்வாறு ஆழப்படுத்துகின்றன என்பதை எடுத்துரைத்து, மிகவும் ஊக்கமளிக்கும் உரையை அவர் நிகழ்த்தினார்.

காசி - தமிழ் சங்கமம் கலாச்சார புரிதலை வலுப்படுத்தி, மக்களிடையே பரிமாற்றங்களை வளர்க்கிறது. அத்துடன் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே நிலையான பிணைப்புகளை உருவாக்கி ஆரோக்கியமான விளைவுகளை இது ஏற்படுத்துகிறது. வரும் காலங்களில், இதை இன்னும் துடிப்பானதாக மாற்ற விரும்புகிறோம். மிக முக்கியமாக, இது 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை வலுவாக வளர்த்துள்ளது. இந்த உணர்வு பல நூற்றாண்டுகளாக நமது பண்டிகைகள், இலக்கியம், இசை, கலை, உணவு வகைகள், கட்டடக்கலை, அறிவுசார் அமைப்புகள் என பலவற்றின் மூலம் செழித்து வளர்ந்துள்ளது.

இந்த ஆண்டு இந்தக் காலகட்டம் இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு மிகவும் புனிதமான பண்டிகைக் காலமாகும். சூரியன், இயற்கை, விவசாயம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சங்கராந்தி, உத்தராயண், பொங்கல், மஹா பிஹு போன்ற பல்வேறு பண்டிகைகளை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர். இந்தப் பண்டிகைகள் மக்களை ஒருங்கிணைத்து, நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை வலுப்படுத்துகின்றன. இந்தப் பண்டிகைகளையொட்டி மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற பண்டிகைகள், நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தையும், கூட்டுப் பங்கேற்பையும், தேசிய ஒற்றுமையையும் வலுப்படுத்தி, தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.