முதலீடு மற்றும் வணிக வாய்ப்புகளுக்கான மாநிலத்தின் மகத்தான திறனை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது: பிரதமர்
நாட்டின் வளர்ச்சியில் கிழக்கு இந்தியா வளர்ச்சி எந்திரமாக உள்ளது; இதில் ஒடிசா முக்கியப் பங்கு வகிக்கிறது: பிரதமர்
கோடிக்கணக்கான மக்களின் விருப்பங்களால் உந்தப்படும் வளர்ச்சிப் பாதையில் இந்தியா இன்று சென்று கொண்டிருக்கிறது: பிரதமர்
ஒடிசா உண்மையிலேயே தனிச்சிறப்பு வாய்ந்தது, ஒடிசா புதிய இந்தியாவின் நேர்மறை மற்றும் அசல் தன்மையின் அடையாளமாகும், ஒடிசா வாய்ப்புகளின் நிலமாகும், இங்குள்ள மக்கள் சிறப்பாக செயல்பட எப்போதும் ஆர்வம் காட்டியுள்ளனர்: பிரதமர்
பசுமை எதிர்காலத்திலும் பசுமை தொழில்நுட்பத்திலும் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது: பிரதமர்
21-ம் நூற்றாண்டு இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த சகாப்தம் இணைக்கப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் பல்முனை இணைப்பு பற்றியது: பிரதமர்
ஒடிசாவில் சுற்றுலாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன: பிரதமர்
ஏராளமான இளம் திறமைசாலிகள் மற்றும் கூட்டு முயற்சிகளுக்கு ஏராளமான ஆர்வலர்கள் இருப்பதால், செழிப்பான பொருளாதாரத்திற்கு இந்தியாவில் பெரும் வாய்ப்புகள் உள்ளன:

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் "செழிப்பான ஒடிசா-ஒடிசாவில் தயாரிங்கள்" (உத்கர்ஷ் ஒடிசா – மேக் இன் ஒடிசா) மாநாடு 2025 மற்றும்  ஒடிசாவில் தயாரியுங்கள் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், 2025 ஜனவரி மாதத்தில் ஒடிசாவுக்கு தாம் மேற்கொண்ட இரண்டாவது பயணம் இது என்று கூறியதுடன், வெளிநாடுவாழ் இந்தியர் தினம் 2025 நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க தாம் வருகை புரிந்ததை நினைவுகூர்ந்தார். இதுவரை ஒடிசாவில் நடைபெற்ற மிகப்பெரிய வணிக உச்சி மாநாடு இது என்று குறிப்பிட்ட திரு மோடி,  ஒடிசாவில் தயாரியுங்கள் மாநாடு 2025-ல் 5-6 மடங்கு அதிகமான முதலீட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர் என்றார். இந்த பிரம்மாண்டமான நிகழ்வை ஏற்பாடு செய்த ஒடிசா மக்களையும் அரசையும் அவர் பாராட்டினார்.

"கிழக்கு இந்தியா நாட்டின் முன்னேற்றத்தில் ஒரு வளர்ச்சி எந்திரமாக உள்ளது. இதில் ஒடிசா முக்கிய பங்கு வகிக்கிறது" என்று பிரதமர் பெருமையுடன் கூறினார். உலக வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்காற்றியபோது, கிழக்கு இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது என்பதை வரலாற்றுத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார். கிழக்கு இந்தியாவில் மிகப்பெரிய தொழில் மையங்கள், துறைமுகங்கள், வர்த்தக மையங்கள் உள்ளன என்றும் இதில் ஒடிசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும் திரு மோடி கூறினார். "தென்கிழக்கு ஆசிய வர்த்தகத்தில் ஒடிசா ஒரு முக்கிய மையமாக இருந்தது என்றும், இம்மாநிலத் துறைமுகங்கள் இந்தியாவின் நுழைவாயிலாக இருந்தன" என்றும் பிரதமர் கூறினார். ஒடிசாவில் இன்றும் கூட பாலி யாத்திரை கொண்டாடப்படுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தோனேசிய அதிபர் அண்மையில் இந்தியாவிற்கு வருகை தந்ததை நினைவுகூர்ந்த பிரதமர், ஒடிசாவின் மரபணுவில் தமது தடயங்கள் இருக்கலாம் என்று இந்தோனேசிய அதிபர் கூறியதாகத் தெரிவித்தார்.

 

தென்கிழக்கு ஆசியாவுடன் இணைந்துள்ள பாரம்பரியத்தை ஒடிசா கொண்டாடுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். 21-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை ஒடிசா தற்போது புதுப்பிக்கத் தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார். சிங்கப்பூர் அதிபர் அண்மையில் ஒடிசாவுக்கு வருகை தந்ததாகவும், ஒடிசாவுடனான உறவு குறித்து சிங்கப்பூர் மிகவும் உற்சாகத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார். ஆசியான் நாடுகளும் ஒடிசாவுடன் வர்த்தகம் மற்றும் பாரம்பரிய தொடர்புகளை வலுப்படுத்த ஆர்வம் காட்டுகின்றன என்று அவர் எடுத்துரைத்தார். நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து முன்னெப்போதையும் விட இந்தப் பிராந்தியத்தில் ஏராளமான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் தெரிவித்தார். வந்திருந்த அனைத்து முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்த அவர், ஒடிசாவின் வளர்ச்சிப் பயணத்தில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம் என்று கூறியதோடு, அவர்களின் முதலீடு வெற்றியின் புதிய உச்சங்களுக்கு வழிவகுக்கும் என்று உறுதியளித்தார்.

"கோடிக்கணக்கான மக்களின் விருப்பங்களால் உந்தப்படும் வளர்ச்சிப் பாதையில் இந்தியா செல்கிறது" என்று குறிப்பிட்ட திரு மோடி, செயற்கை நுண்ணறிவு என்பது இந்தியாவின் விருப்பத்தைக் குறிக்கிறது என்றும், இது நாட்டின் பலம் என்றும் கூறினார். மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் போது விருப்பங்கள் வளரும் என்று கூறிய அவர், கடந்த பத்தாண்டுகள் கோடிக்கணக்கான மக்களுக்கு அதிகாரம் அளித்து, நாட்டிற்கு பயனளித்துள்ளது என்றார். இந்த விருப்பத்தை ஒடிசா பிரதிபலிக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். ஒடிசா மாநிலம் சிறப்பானது என்றும், புதிய இந்தியாவின் நேர்மறை மற்றும் தனித்தன்மையின் அடையாளமாக இது திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஒடிசாவில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன என்றும், இங்குள்ள மக்கள் சிறப்பாக செயல்படுவதில் எப்போதும் ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் கூறினார். குஜராத்தில் உள்ள ஒடிசா மக்களின் திறன்கள், கடின உழைப்பு, நேர்மை ஆகியவற்றைக் கண்ட தமது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட பிரதமர், ஒடிசாவில் உருவாகி வரும் புதிய வாய்ப்புகளுடன், வளர்ச்சியில் முன்னெப்போதும் இல்லாத உயரத்தை இம்மாநிலம் விரைவில் எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஒடிசாவின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்காக முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஞ்சி மற்றும் அவரது குழுவினரைப் பிரதமர் பாராட்டினார். உணவு பதப்படுத்துதல், பெட்ரோ ரசாயனம், துறைமுகம் சார்ந்த வளர்ச்சி, மீன்வளம், தகவல் தொழில்நுட்பம், கல்வி, ஜவுளி, சுற்றுலா, சுரங்கம், பசுமை எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஒடிசா இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மாறி வருகிறது என்று பிரதமர் கூறினார்.

 

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற மைல்கல் வெகு தொலைவில் இல்லை என்று கூறினார். கடந்த பத்தாண்டுகளில் உற்பத்தித் துறையில் இந்தியாவின் வலிமை தெளிவாகத் தெரிகிறது என்று அவர் தெரிவித்தார். இந்தியப் பொருளாதாரத்தின் விரிவாக்கமானது புதுமையான சேவைத் துறை, தரமான தயாரிப்புகள் என்ற இரண்டு முக்கிய தூண்களைச் சார்ந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் விரைவான முன்னேற்றம் மூலப்பொருட்களின் ஏற்றுமதியை மட்டுமே சார்ந்திருக்க முடியாது என்பதால் முழு  சூழல் அமைப்பும் ஒரு புதிய பார்வையுடன் மாற்றியமைக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். கனிமங்களை பிரித்தெடுத்து அவற்றை உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டுதலுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பும் போக்கை இந்தியா மாற்றி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இதேபோல், பதப்படுத்துவதற்காக கடல் உணவுகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போக்கும் மாற்றப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார். ஒடிசாவில் உள்ள வளங்கள் தொடர்பான தொழிற்சாலைகள் மாநிலத்திலேயே நிறுவப்படுவதை உறுதி செய்ய அரசு செயல்பட்டு வருவதாக திரு மோடி தெரிவித்தார். உத்கர்ஷ் ஒடிசா மாநாடு 2025 இந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு வழியாகும் என்று அவர் எடுத்துரைத்தார்.

நீடித்த வாழ்க்கை முறை மீது உலகம் அதிக அளவில் கவனம் செலுத்தி வருவதாகவும், பசுமையான எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் குறிப்பிட்ட திரு மோடி, பசுமை பணிகளுக்கான வாய்ப்புகளும் கணிசமாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். வளர்ச்சியடைந்த இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு ஊக்கமளிக்கும் பசுமை தொழில்நுட்பம், சூரிய மின்சக்தி, காற்று, ஹைட்ரோ மற்றும் பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட பசுமை எதிர்காலம் ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்தி வருவதை அவர் எடுத்துரைத்தார். இந்த விஷயத்தில் ஒடிசாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர், தேசிய அளவிலான பசுமை ஹைட்ரஜன் மற்றும் சூரிய மின்சக்தி இயக்கங்களை நாடு தொடங்கியிருப்பதாகக் கூறினார். ஒடிசாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்களை ஊக்குவிக்க குறிப்பிடத்தக்க கொள்கை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு ஹைட்ரஜன் எரிசக்தி உற்பத்திக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக திரு மோடி குறிப்பிட்டார்.

 

பசுமை எரிசக்தியுடன், ஒடிசாவில் பெட்ரோ மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். பாரதீப் மற்றும் கோபால்பூரில் பிரத்யேக தொழில்துறை பூங்காக்கள் மற்றும் முதலீட்டு மண்டலங்கள் உருவாக்கப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார். இது இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க முதலீட்டு வாய்ப்புகளைக் குறிக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளின் திறனைக் கருத்தில் கொண்டு, விரைவான முடிவுகளை எடுத்து, புதிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியதற்காக ஒடிசா அரசை திரு மோடி பாராட்டினார்.

"21-ம் நூற்றாண்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் பல்முனை இணைப்பின் சகாப்தமாகும்" என்று கூறிய திரு மோடி, இந்தியாவில் சிறப்பு உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வரும் அளவு மற்றும் வேகம் நாட்டை சிறந்த முதலீட்டு இடமாக மாற்றியுள்ளது என்று எடுத்துரைத்தார். பிரத்யேக சரக்கு வழித்தடங்கள், கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளை இணைக்கின்றன. கடலுக்கு விரைவான அணுகலை வழங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் பிளக்-அண்ட்-ப்ளே வசதிகளுடன் ஏராளமான தொழில்துறை நகரங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இதே போன்ற வாய்ப்புகள் ஒடிசாவிலும் மேம்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்ட திரு மோடி, மாநிலத்தில் ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை கட்டமைப்புகள் தொடர்பான ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். ஒடிசாவில் தொழிற்சாலைகளுக்கான போக்குவரத்து செலவுகளைக் குறைக்க, அரசு துறைமுகங்களை தொழில்துறை தொகுப்புகளுடன் இணைத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதுள்ள துறைமுகங்களின் விரிவாக்கம் மற்றும் புதிய துறைமுகங்களின் கட்டுமானம் ஆகிய இரண்டும் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார். நீலப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை நாட்டின் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக ஒடிசா மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வேகமாக மாறிவரும் உலகில், உலகளாவிய விநியோகச் சங்கிலியின் சவால்களை ஒவ்வொருவரும் அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், துண்டு துண்டான மற்றும் இறக்குமதி அடிப்படையிலான விநியோகச் சங்கிலிகளை இந்தியா நம்பியிருக்க முடியாது என்று வலியுறுத்தினார். அதற்குப் பதிலாக, உலகளாவிய ஏற்ற இறக்கங்களின் தாக்கத்தைக் குறைக்க இந்தியாவிற்குள் ஒரு வலுவான விநியோகம் மற்றும் மதிப்புக் கூட்டு சங்கிலித் தொடர் கட்டமைக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். இந்தப் பொறுப்பு அரசிடமும், தொழில்துறையிடமும் உள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் இளம் புத்தொழில் நிறுவனங்களுக்கு தொழில்துறை ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட திரு மோடி, வளர்ச்சிக்கு ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சிறப்பு நிதி மற்றும் உள்ளகப் பயிற்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான தொகுப்பு ஆகியவற்றுடன் நாட்டில் ஒரு துடிப்பான ஆராய்ச்சி சூழலை அரசு உருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார். தொழில்துறையினர் அரசுடன் தீவிரமாகப் பங்கேற்கவும், ஒத்துழைக்கவும் வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். வலுவான ஆராய்ச்சி சூழல் அமைப்பும், திறமையான இளம் பணியாளர்களும் தொழில்துறைக்கு நேரடியாக பயனளிக்கும்  அம்சங்கள் என்று குறிப்பிட்ட திரு மோடி, இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கி, ஒடிசாவின் விருப்பங்களுக்கு ஏற்ப நவீன சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க தொழில்துறை கூட்டாளர்களும், ஒடிசா அரசும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இது ஒடிசாவுக்குள் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி, மாநிலத்தின் வளம், வலிமை மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

 

 

உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்தியாவைப் பற்றி அறிந்து கொள்ளவும், கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக உள்ளனர் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் மற்றும் வரலாற்றைக் கொண்ட இந்தியாவைப் புரிந்துகொள்வதற்கு ஒடிசா ஒரு சிறந்த இடமாகத் திகழ்கிறது என்று அவர் எடுத்துரைத்தார். நம்பிக்கை, ஆன்மீகம், காடுகள், மலைகள் மற்றும் கடல் ஆகியவற்றின் தனித்துவமான கலவையை இந்த மாநிலம் வழங்குகிறது என்று அவர் கூறினார். வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தின் முன்மாதிரி ஒடிசா மாநிலம் என்று வர்ணித்த திரு மோடி, ஒடிசாவில் ஜி-20 கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றதாகவும், கொனார்க் சூரியக் கோயிலின் சக்கரம் முக்கிய நிகழ்வின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டார். 500 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை, 33 சதவீதத்திற்கும் அதிகமான வனப்பகுதி, சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் சாகச சுற்றுலாவுக்கான முடிவற்ற வாய்ப்புகள் ஆகியவற்றைக் கொண்ட ஒடிசாவின் சுற்றுலா வாய்ப்புகளை ஆராய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். "இந்தியாவில் திருமணம் புரிதல்" மற்றும் "இந்தியாவில் குணமடைதல்" ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்தி வருவதாகவும், ஒடிசாவின் இயற்கை அழகும், சுற்றுச்சூழலும் இந்த முயற்சிகளுக்கு மிகவும் ஆதரவாக இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

மாநாட்டு சுற்றுலாவுக்கு இந்தியாவில் குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளன என்று சுட்டிக்காட்டிய பிரதமர், தில்லியில் உள்ள பாரத் மண்டபம் மற்றும் யசோபூமி போன்ற இடங்கள் இவ்வாறான மாநாட்டு சுற்றுலாப் பிரிவின் முக்கிய மையங்களாக மாறி வருகின்றன என்று கூறினார். இசைக் கச்சேரி பொருளாதாரத்தின் வளர்ந்து வரும் துறையையும் அவர் குறிப்பிட்டார். இசை, நடனம் மற்றும் கதை சொல்லல் ஆகியவற்றின் வளமான பாரம்பரியம் மற்றும் கச்சேரிக்கு பெரும் எண்ணிக்கையில் வரும் இளம் பார்வையாளர்களைக் கொண்ட இந்தியா, கச்சேரி பொருளாதாரத்திற்கு மகத்தான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். கடந்த தசாப்தத்தில், நேரடி நிகழ்வுகளுக்கான போக்கு மற்றும் தேவை அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். மும்பை மற்றும் அகமதாபாத்தில் அண்மையில் நடைபெற்ற கோல்ட்ப்ளே இசை நிகழ்ச்சிகள், இந்தியாவில் நேரடி இசை நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புகள் உள்ளன என்பதற்கான சான்றுகள் என்று குறிப்பிட்ட திரு மோடி, உலகக் கலைஞர்கள் இந்தியாவை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளனர் என்றும், கச்சேரிப் பொருளாதாரம் சுற்றுலாவை மேம்படுத்தி ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது என்றும் வலியுறுத்தினார். கச்சேரிப் பொருளாதாரத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் திறன்களில் மாநிலங்களும், தனியார் துறையும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நிகழ்ச்சி மேலாண்மை, கலைஞர்கள் நலம் பேணுதல், பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடுகள் இதில் அடங்கும், அங்கு புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

அடுத்த மாதம் முதல் முறையாக உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை (WAVES) இந்தியா நடத்துகிறது என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இந்தியாவின் படைப்பாற்றல் சக்தியை உலகிற்கு வெளிப்படுத்தும் என்று அவர் எடுத்துரைத்தார். இதுபோன்ற நிகழ்வுகள் வருவாயை உருவாக்கி, பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன என்று அவர் வலியுறுத்தினார். இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஒடிசாவில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

 

வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் ஒடிசா முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் பிரதமர் கூறினார். வளமான மாநிலத்தை உருவாக்க ஒடிசா மக்கள் தீர்மானித்துள்ளதாகவும், இந்த இலக்கை அடைய மத்திய அரசு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒடிசா மாநிலத்தின் மீதான தமது அன்பை வெளிப்படுத்திய பிரதமர், பிரதமராக கிட்டத்தட்ட 30 முறை மாநிலத்திற்கு வந்துள்ளதாகவும், அதன் பெரும்பாலான மாவட்டங்களுக்கு சென்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். ஒடிசாவின் வளங்கள் மீதும், அதன் மக்கள் மீதும் தமக்குள்ள நம்பிக்கையை அவர் வலியுறுத்தினார். தனது உரையை நிறைவு செய்த பிரதமர், அனைத்து பங்குதாரர்களும் செய்துள்ள முதலீடுகள் தங்களது வர்த்தகம் மற்றும் ஒடிசாவின் முன்னேற்றத்தை புதிய உயரத்திற்கு உயர்த்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஒடிசா ஆளுநர் டாக்டர் ஹரிபாபு கம்பம்பதி, ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மஞ்சி, மத்திய அமைச்சர்கள் திரு தர்மேந்திர பிரதான், திரு அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

வளமான ஒடிசா – ஒடிசாவில்  தயாரிப்போம் -2025 மாநாடு என்பது ஒரு முதன்மை உலகளாவிய முதலீட்டு உச்சி மாநாடு ஆகும். இது ஒடிசா அரசால் நடத்தப்படுகிறது. இது கிழக்குப் பிராந்தியத் தொலைநோக்கில், இந்தியாவின் முன்னணி முதலீட்டு இலக்கு மற்றும் தொழில்துறை மையமாக மாநிலத்தை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

துடிப்பான தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் மாநிலத்தின் சாதனைகளை எடுத்துரைக்கும் ஒடிசாவில் தயாரிப்போம் கண்காட்சியையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த மாநாடு ஜனவரி 28 முதல் 29 வரை இரண்டு நாட்கள் நடைபெறும். தொழில்துறை தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒடிசா ஒரு விருப்பமான முதலீட்டு இடமாக வழங்கும் வாய்ப்புகளை ஒன்றிணைத்து விவாதிக்க இது ஒரு தளமாக செயல்படும். இந்த மாநாட்டில் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் தலைவர்களின் வட்டமேசை அமர்வுகள், துறைசார் அமர்வுகள், பி 2 பி கூட்டங்கள் மற்றும் கொள்கை விவாதங்கள் நடைபெறும். இது உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களுடன் இலக்கு வைக்கப்பட்ட ஈடுபாட்டை உறுதி செய்யும்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

 

 

 

 

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi becomes first world leader to cross 100 million Instagram followers

Media Coverage

PM Modi becomes first world leader to cross 100 million Instagram followers
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Condoles the Passing of Shri Maroof Raza Ji
February 26, 2026

Prime Minister Narendra Modi has expressed grief over the passing of Shri Maroof Raza Ji, honoring his legacy in the fields of journalism.

The Prime Minister stated that Shri Maroof Raza Ji made a rich contribution to the world of journalism. He noted that Shri Raza enriched public discourse through his nuanced understanding of defence, national security, and strategic affairs.

Expressing his sorrow, the Prime Minister said he is pained by his passing and extended his condolences to his family and friends.
The Prime Minister shared on X:

“Shri Maroof Raza Ji made a rich contribution to the world of journalism. He enriched public discourse with his nuanced understanding of defence, national security as well as strategic affairs. Pained by his passing. Condolences to his family and friends”