1.25 லட்சத்துக்கும் அதிகமான பிஎம் கிசான் சம்ரிதி மையங்களை அர்ப்பணித்தார்
பி.எம்-கிசான் திட்டத்தின் கீழ் சுமார் ரூ .17,000 கோடியின் 14 -வது தவணைத் தொகையை வெளியிட்டார்
டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலையமைப்பில் (ஓ.என்.டி.சி) 1600 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்
யூரியா கோல்டு - கந்தகம் பூசப்பட்ட யூரியா அறிமுகம் செய்தார்
5 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி வைத்தார், 7 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
"விவசாயிகளின் வலிகளையும் தேவைகளையும் மத்திய அரசு புரிந்து கொண்டுள்ளது"
“யூரியா விலை, விவசாயிகளை பாதிக்க அரசு அனுமதிக்காது. ஒரு விவசாயி யூரியா வாங்கச் செல்லும்போது, மோடியின் உத்தரவாதம் இருக்கிறது என்ற நம்பிக்கை அவருக்கு உள்ளது”
"வளர்ச்சியடைந்த கிராமங்கள் இருந்தால் மட்டுமே இந்தியா வளர்ச்சியடைந்ததாக இருக்க முடியும்"
"ராஜஸ்தானில் நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவது எங்கள் முன்னுரிமை"
" முழு உலகிலும் ராஜஸ்தானின் பெருமை மற்றும் பாரம்பரியத்திற்கு ஒரு புதிய அடையாளத்தை நாம்

ராஜஸ்தான் ஆளுநர் திரு. கல்ராஜ் மிஸ்ரா அவர்களே, மத்திய அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் அவர்களே, மற்ற அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்றத்தில் உள்ள எனது சகாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்ற அனைத்து பிரமுகர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கோடிக்கணக்கான விவசாயிகள் இந்த நிகழ்வில் எங்களுடன் இணைந்துள்ளனர்! நாட்டின் ராஜஸ்தான் மண்ணில் இருந்து வந்திருக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, ராஜஸ்தானைச் சேர்ந்த எனது அன்பான சகோதர சகோதரிகளும் இந்த முக்கியமான நிகழ்வின் பிரம்மாண்டத்திற்கு பெருமை சேர்க்கிறார்கள்.

கத்து ஷ்யாம் அவர்களின் பூமிக்கு நாடு முழுவதிலுமிருந்து வரும் பக்தர்களுக்கு தன்னம்பிக்கை, நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. வீரர்களின் பூமியான ஷெகாவதியில் இருந்து நாட்டிற்கான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்கான வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்ததை அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். இன்று, இங்கிருந்து பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்ட நிதியின் ஒரு பகுதியாக லட்சக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ஏறக்குறைய 18,000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

இன்று, நாட்டில் 1.25 லட்சம் பிரதமரின் கிசான் சம்ரிதி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கிராமம் மற்றும் வட்டார அளவில் நிறுவப்பட்ட இந்த பிரதமரின் கிசான் சம்ரிதி மையங்கள் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நேரடியாக பயனளிக்கும். இன்று, 1,500 க்கும் மேற்பட்ட விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் (எஃப்பிஓ) மற்றும் நமது விவசாயிகளுக்காக 'டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க்' (ஓஎன்டிசி) தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியிலும் இருக்கும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் சந்தைகளுக்கு விற்பது எளிதாகும்.

இன்று, நாட்டு விவசாயிகளுக்காக புதிய 'யூரியா கோல்டு' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, ராஜஸ்தானின் பல்வேறு நகரங்கள் புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஏகலைவா மாதிரி பள்ளிகளை பரிசாகப் பெற்றுள்ளன. நாட்டு மக்களுக்கும், ராஜஸ்தான் மக்களுக்கும், குறிப்பாக எனது விவசாய சகோதர, சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

ராஜஸ்தானில் உள்ள சிகார் மற்றும் ஷெகாவதி பகுதிகள் உண்மையில் விவசாயிகளின் கோட்டையாகும். தங்கள் கடின உழைப்புக்கு எந்தத் தடையும் தடையாக இல்லை என்பதை இங்குள்ள விவசாயிகள் எப்போதும் நிரூபித்துள்ளனர். தண்ணீர் பற்றாக்குறை இருந்தபோதிலும், இங்குள்ள விவசாயிகள் மண்ணிலிருந்து ஏராளமான பயிர்களை அறுவடை செய்துள்ளனர். விவசாயிகளின் திறமையினாலும் கடின உழைப்பினாலும் மண்ணிலிருந்து தங்கத்தை பிரித்தெடுக்க முடியும். அதனால்தான் எங்கள் அரசு நாட்டின் விவசாயிகளுடன் தோளோடு தோள் நிற்கிறது.

நண்பர்களே,

சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு, இன்று விவசாயிகளின் வலிகளையும் கவலைகளையும் புரிந்து கொள்ளும் ஒரு அரசு நாட்டில் உள்ளது. எனவே, கடந்த 9 ஆண்டுகளாக விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு தொடர்ந்து முடிவுகளை எடுத்து வருகிறது. விதைகள் முதல் சந்தைகள் வரை விவசாயிகளுக்காக புதிய அமைப்புகளை அரசு நிறுவியுள்ளது. 2015-ம் ஆண்டு ராஜஸ்தானின் சூரத்கர்கில் மண்வள அட்டை திட்டத்தைத் தொடங்கினோம். இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டைகளால்தான் விவசாயிகள் தங்கள் மண்ணின் வளத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப உரங்களைப் பயன்படுத்துகின்றனர்.

ராஜஸ்தானின் மண்ணிலிருந்து விவசாயிகளுக்காக மற்றொரு குறிப்பிடத்தக்க திட்டம் தொடங்கப்படுவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இன்று, 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதமரின் கிசான் சம்ரிதி மையங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் அனைத்தும் உண்மையிலேயே விவசாயிகளின் வளத்துக்கு வழிவகுக்கும். ஒருவகையில் அவை விவசாயிகளுக்கான ஒற்றை நிலைப்பாடு மையங்களாகும்.   

விவசாய சகோதர, சகோதரிகள் விவசாயம் தொடர்பான பொருட்களை கொள்முதல் செய்வதற்கும், பிற தேவைகளுக்கும் வெவ்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இனி இதுபோன்ற சிரமங்களை நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை. பிரதமரின் கிசான் சம்ரிதி மையங்கள் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உரங்களை வழங்கும். கூடுதலாக, இந்த மையங்களில் விவசாயம் தொடர்பான கருவிகள் மற்றும் பிற இயந்திரங்கள் வழங்கப்படும். இந்த மையங்கள் விவசாயிகளுக்கு விவசாயம் தொடர்பான நவீன தகவல்களை வழங்கும். அரசின் திட்டங்கள் குறித்த துல்லியமான தகவல்கள் இல்லாததால், எனது விவசாய சகோதர சகோதரிகள் கணிசமான இழப்பை சந்திப்பதை கண்டேன். பிரதமரின் கிசான் சம்ரிதி மையங்கள் தற்போது ஒவ்வொரு திட்டத்தையும் பற்றி சரியான நேரத்தில் தகவல்களின் நம்பகமான ஆதாரமாக செயல்படும்.

மற்றும் நண்பர்களே,

இது ஒரு ஆரம்பம் மட்டுமே, இந்த பழக்கத்தை எனது விவசாய நண்பர்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் விவசாயம் தொடர்பான எதையும் வாங்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், நீங்கள் சந்தைக்குச் சென்றிருந்தால், நகரத்தில் பிரதமரின் கிசான் சம்ரிதி மையம் இருந்தால், அதைப் பார்வையிடுங்கள். அங்கே என்ன நடக்கிறது என்று பாருங்கள். நம் அம்மாக்களும், சகோதரிகளும் காய்கறி வாங்கச் செல்லும்போது, புடவைக் கடையை கடக்க நேர்ந்தால், வாங்க வேண்டிய தேவையில்லை என்ற போதிலும், அங்கு செல்வார்கள். என்ன புதியது, என்ன வகை கிடைக்கிறது என்பதை அவர்கள் அறிய விரும்புகிறார்கள். எனது விவசாய சகோதர சகோதரிகளும் சிறிது நேரம் ஒதுக்கி இந்த பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் - நீங்கள் ஒரு நகரத்திற்குச் செல்லும் போதெல்லாம், விவசாய சம்ரிதி மையம் இருந்தால், அதைப் பார்வையிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வகையையும் பாருங்கள், புதியது என்ன என்பதைப் பாருங்கள். இதன் மூலம் நீங்கள் பெரிய அளவிலான நன்மைகளைப் பெறுவீர்கள். நண்பர்களே, இந்தாண்டு இறுதிக்குள் நாட்டில் 1.75 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதமரின் கிசான் சம்ரிதி மையங்கள் நிறுவப்படும்.

 

நண்பர்களே,

விவசாயிகளின் செலவுகளை பகிர்ந்து கொண்டு அவர்களின் செலவுகளை குறைக்க தற்போதைய மத்திய அரசு முழு நேர்மையுடன் செயல்பட்டு வருகிறது. பிரதமர் கிசான் சம்மன் நிதி என்பது விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடி பணத்தை மாற்றும் உலகின் மிகப்பெரிய திட்டமாகும். இன்றைய 14-வது தவணையையும் சேர்த்தால், 2.6 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த தொகை பல்வேறு சிறிய செலவுகளை நிர்வகிக்க விவசாயிகளுக்கு கணிசமாக உதவி உள்ளது.

நமது விவசாய சகோதரர்களின் பணத்தை அரசு எவ்வாறு சேமிக்கிறது என்பதற்கு யூரியா விலை ஒரு எடுத்துக்காட்டாகும். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தயவு செய்து நான் சொல்வதை கவனமாக கேளுங்கள். கொரோனாவின் பேரழிவு தொற்றுநோய் எவ்வாறு தாக்கியது என்பது உங்களுக்குத் தெரியும். அதைத் தொடர்ந்து ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர், சந்தைகளில் குறிப்பிடத்தக்க விலை உயர்வை ஏற்படுத்தியது. இது குறிப்பாக உரத் துறையில் கடுமையான சிரமங்களுக்கு வழிவகுத்தது. ஆனால் இவற்றின் தாக்கம் நம் விவசாயிகள் மீது விழ அரசு அனுமதிக்கவில்லை.

உரங்களின் விலைகள் குறித்த உண்மையை நாட்டில் உள்ள எனது விவசாய நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இன்று, இந்திய விவசாயிகளுக்கு ரூ.266-க்கு அரசு கொடுக்கும் அதே மூட்டை யூரியா நமது அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள விவசாயிகளுக்கு ஏறக்குறைய ரூ.800-க்கு கிடைக்கிறது. இதேபோல், இந்திய விவசாயிகளுக்கு அரசு கொடுக்கும் யூரியா மூட்டை ரூ.266-க்கும், அதே யூரியா மூட்டை வங்கதேச விவசாயிகளுக்கு சுமார் ரூ.720-க்கும் கிடைக்கிறது. இந்திய விவசாயிகளுக்கு அரசு கொடுக்கும் யூரியா மூட்டை ரூ.266-க்கும், அதே யூரியா மூட்டை சீனாவில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.2100-க்கும் விற்கப்படுகிறது. இந்த நாட்களில் அமெரிக்காவில் இந்த யூரியா மூட்டையின் விலை எவ்வளவு தெரியுமா? ரூ.300-க்கும் குறைவான யூரியா மூட்டை அமெரிக்க  விவசாயிகளுக்கு ரூ.3,000-க்கும் மேல் விற்கப்படுகிறது. ரூ.300 முதல் ரூ.3,000 வரையிலான வித்தியாசத்தை நீங்கள் காணலாம்.

யூரியா விலையால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவதை அரசு அனுமதிக்காது. இந்த உண்மையை நாட்டின் விவசாயிகள் ஒவ்வொரு நாளும் கண்டுணர்ந்து வருகின்றனர். யூரியா வாங்கச் செல்லும்போது, இது மோடியின் உத்தரவாதம் என்ற முழு நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது. என்ன உத்தரவாதம் என்று விவசாயிகளிடம் கேட்டால், அது தெரியவரும்.

நண்பர்களே,

ராஜஸ்தானில், விவசாயிகளாகிய நீங்கள் அனைவரும் உங்கள் கடின உழைப்பால் கம்பு (சிறுதானியம்) போன்ற பருவெட்டு தானியங்களை பயிரிடுகிறீர்கள். நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு வகையான பருவெட்டான தானியங்கள் பயிரிடப்படுகின்றன. தற்போது அரசு இந்த பருவெட்டான தானியங்களுக்கு 'ஸ்ரீ அன்னா' என்ற அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. அனைத்து பருவெட்டான தானியங்களும் 'ஸ்ரீ அன்னா' என்ற பெயரில் அடையாளம் காணப்படும். மேலும் நமது அரசு இந்தியாவின் பருவெட்டான தானியங்களை உலகின் மிகப்பெரிய சந்தைகளுக்கு கொண்டு செல்கிறது. அரசின் முயற்சியால், 'ஸ்ரீ அன்னா' பொருட்களின் உற்பத்தி, பதப்படுத்துதல், ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் அளித்த விருந்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அங்கேயும் உணவு வகைகளில் நமது பருவெட்டு தானியங்கள் பாத்திரத்தில் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.

 

நண்பர்களே,

நடந்து வரும் முயற்சிகள் நமது நாட்டிற்கும், பருவெட்டான தானியங்கள் மற்றும் 'ஸ்ரீ அன்னா ' பயிர்களை பயிரிடுவதில் ஈடுபட்டுள்ள நமது ராஜஸ்தானில் உள்ள சிறு விவசாயிகளுக்கும் மாபெரும் நன்மைகளைக் கொண்டு வருகின்றன. நாட்டில் எடுக்கப்பட்டு வரும் பல முயற்சிகள் விவசாயிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வருகின்றன.

விவசாயிகளே,

இந்தியாவின் கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே நாட்டில் வளர்ச்சி ஏற்படும். கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே இந்தியா வளர்ச்சி அடையும். அதனால்தான் இன்று நகரங்களில் கிடைப்பதைப் போலவே இந்தியாவின் கிராமங்களுக்கும் அனைத்து வசதிகளையும் கொண்டு வர அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் நாட்டின் கணிசமான மக்கள் சுகாதார சேவைகளை இழந்ததை அனைவரும் அறிவீர்கள். கோடிக்கணக்கான மக்கள் விதியை நம்பி வாழ்ந்து வந்தனர். டெல்லி, ஜெய்ப்பூர் அல்லது பிற பெரிய நகரங்களில் மட்டுமே நல்ல மருத்துவமனைகள் உள்ளன என்று கருதப்பட்டது. இந்த நிலையையும் அரசு மாற்றி வருகிறது. இன்று, நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் புதிய எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள்) மற்றும் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டு வருகின்றன.

இந்த முயற்சிகளின் விளைவாக, இன்று நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 700-ஐ தாண்டியுள்ளது. ராஜஸ்தானில் 8-9 ஆண்டுகளுக்கு முன்பு 10 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. தற்போது ராஜஸ்தானில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இது நமது சொந்த மாவட்டங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஏராளமான மருத்துவர்களையும் உருவாக்குகிறது. இந்த மருத்துவர்கள் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் மேம்பட்ட சுகாதார சேவைகளுக்கு அடித்தளமாக மாறி வருகின்றனர்.

எடுத்துக்காட்டாக, இன்று திறக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் பரன், பூண்டி, டோங்க், சவாய் மாதோபூர், கரௌலி, ஜுன்ஜுனு, ஜெய்சல்மார், தோல்பூர், சித்தோர்கர், சிரோஹி மற்றும் சிகார் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பயனளிக்கும். மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் இனி ஜெய்ப்பூர் அல்லது டெல்லிக்கு செல்ல வேண்டியதில்லை. இனி உங்கள் வீடுகளுக்கு அருகிலேயே நல்ல மருத்துவமனைகள் இருக்கும். ஏழைகளின் மகன்களும் மகள்களும் இந்த மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதன் மூலம் மருத்துவர்களாகும் வாய்ப்பைப் பெறுவார்கள். மேலும், மருத்துவக் கல்வியை தாய்மொழியில் கற்பிக்க அரசு வழிவகுத்துள்ளது. இனி, ஆங்கிலம் தெரியாததால் ஏழையின் மகனோ, மகளோ மருத்துவராவதற்கு எந்தத் தடையும் இருக்காது. இதுவும் மோடியின் உத்தரவாதம் தான்.

 

சகோதர சகோதரிகளே,

பல தசாப்தங்களாக, கிராமப்புறங்களில் நல்ல பள்ளிகள் இல்லாததால் நமது கிராமங்களும் பின்தங்கியவர்களும் கைவிடப்பட்டனர். பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் பெரிய கனவுகளைக் காண்பார்கள். ஆனால் அந்த கனவுகளை நிறைவேற்ற அவர்களுக்கு எந்த வழியும் இல்லை. கல்விக்கான வரவுசெலவுத் திட்டத்தை அரசு கணிசமாக அதிகரித்துள்ளது, வளங்களை மேம்படுத்தியுள்ளது. மேலும் பழங்குடியினருக்காக ஏகலைவா மாதிரி பள்ளிகளைத் திறந்துள்ளது. இது நமது பழங்குடி இளைஞர்களுக்கு மகத்தான நன்மைகளை அளித்துள்ளது.
நண்பர்களே,

கனவுகள் லட்சியமாக இருக்கும்போது வெற்றி முக்கியத்துவம் பெறுகிறது. பல நூற்றாண்டுகளாக தனது பிரம்மாண்டத்தால் உலகை வியக்க வைத்த மாநிலம் ராஜஸ்தான். அந்த பாரம்பரியத்தை பாதுகாத்து, ராஜஸ்தானை நவீன வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல வேண்டியது நமது பொறுப்பு. எனவே, ராஜஸ்தானில் நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவதே அரசின் முன்னுரிமை. சமீபத்தில், மாநிலத்தில் இரண்டு உயர் தொழில்நுட்ப விரைவுச்சாலைகள் திறக்கப்பட்டன - டெல்லி-மும்பை விரைவுச்சாலையின் ஒரு முக்கிய பகுதி மற்றும் அமிர்தசரஸ்-ஜாம்நகர் விரைவுச்சாலை. இவை இரண்டும் ராஜஸ்தானின் வளர்ச்சிக் கதையில் புதிய அத்தியாயங்களைச் சேர்க்கின்றன. ராஜஸ்தான் மக்களுக்கு வந்தே பாரத் ரயிலும் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய அரசு தற்போது உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா தொடர்பான வசதிகளை மேம்படுத்துவதில் முதலீடு செய்து வருகிறது. இது ராஜஸ்தானுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். 'பெரிய நாட்டிற்கு வாருங்கள்' என்ற முழக்கத்துடன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் போது, விரைவுச் சாலைகளும், நல்ல ரயில் வசதிகளும் அவர்களை வரவேற்கும்.

சுதேச தர்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் கத்துஷ்யாம் கோவிலில் உள்ள வசதிகளை அரசு விரிவுபடுத்தியுள்ளது. ஸ்ரீ கத்துஷ்யாமின் ஆசீர்வாதத்துடன் ராஜஸ்தானின் வளர்ச்சி இன்னும் வேகமெடுக்கும் என்று நம்புகிறேன். நாம் அனைவரும் ராஜஸ்தானின் பெருமை மற்றும் பாரம்பரியத்திற்கு உலகம் முழுவதும் ஒரு புதிய அடையாளத்தை வழங்குவோம்.

நண்பர்களே,

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இன்று, அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் அந்த பிரச்சினை காரணமாக அவரால் பங்கேற்க முடியவில்லை. அவர் நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறேன். இந்த முக்கியமான வளர்ச்சிகள் மற்றும் முன்முயற்சிகள் அனைத்தையும் விவசாயிகள் மற்றும் ராஜஸ்தான் மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கிறேன். மேலும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன் எனது உரையை நிறைவு செய்கிறேன்.

மிக்க நன்றி!

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
‘Paltano Dorkar!’ PM Modi Predicts TMC Rout In Bengal, Says ‘Goons Won’t Find Space To Hide After May 4’

Media Coverage

‘Paltano Dorkar!’ PM Modi Predicts TMC Rout In Bengal, Says ‘Goons Won’t Find Space To Hide After May 4’
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 24, 2026
April 24, 2026

Made in India, Built for 2047: PM Modi’s Reforms Turning Rural Hope into National Strength