புதுச்சேரியில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்-இன்று, வாழ்க்கையை எளிமைப்படுத்தவும், பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் பல மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படுகின்றன: பிரதமர்
நான் முன்பு இங்கு வந்தபோது, சிறந்த புதுச்சேரி என்ற மந்திரத்தை கூறியிருந்தேன் - கடந்த நான்கரை ஆண்டுகளில் அந்த தொலைநோக்குப் பார்வை நனவாகியுள்ளது: பிரதமர்
புதுச்சேரி நல்லாட்சி மற்றும் வளர்ச்சியைக் கண்டுள்ளது: பிரதமர்
வலுவான மற்றும் அதிகாரம் பெற்ற இளைஞர்களே நமது வளர்ச்சியின் அடித்தளம் - அவர்களின் கனவுகளை நனவாக்க நாங்கள் பாடுபடுகிறோம்: பிரதமர்
காரைக்காலில் உள்ள என்ஐடி-யில், புதிய, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பொறியியல் வளாகம் மற்றும் நவீன விடுதி வசதிகள் பல மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வியை வலுப்படுத்தும்; புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன: பிரதமர்
சுகாதாரப் பராமரிப்பு அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும், கிடைக்கக்கூடியதாகவும், குறைந்த செலவிலும் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்; ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏற்கெனவே இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றி வருகிறது: பிரதமர்
புதுச்சேரி ஒரு மருத்துவ சுற்றுலா மையமாக மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். புதுச்சேரியில் ஏற்கனவே ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் உள்ளன; ஜிப்மரில் உள்ள பிராந்திய புற்றுநோய் மையத்தின் நவீனமயமாக்கல் சுகாதாரத் திறனை மேலும் விரிவுபடுத்தும்: பிரதமர்
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மூன்று தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு, பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது: பிரதமர்

புதுச்சேரி முதலமைச்சர் திரு என். ரங்கசாமி அவர்களே, எனது மத்திய அமைச்சரவை சகா திரு மன்சுக் மண்டவியா அவர்களே, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன் அவர்களே, சட்டப்பேரவைத் தலைவர் திரு ஆர். செல்வம் அவர்களே, உள்துறை அமைச்சர் திரு ஏ. நமசிவாயம் அவர்களே, பிற தலைவர்களே, புதுச்சேரியின் எனது அன்பான சகோதரிகளே, சகோதரர்களே, வணக்கம்!

நண்பர்களே,

புதுச்சேரியில் இருப்பது ஒரு பெருமை. இது சித்தர்கள், துறவிகள், கவிஞர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பூமி. இங்குதான் மகாகவி சுப்பிரமணிய பாரதி தேசியவாதத்தின் தீயை மூட்டினார். இங்கிருந்து, ஸ்ரீ அரவிந்தரும் அன்னையும் முழு உலகிற்கும் ஒரு புதிய ஆன்மீகப் பார்வையை வழங்கினர்.

நண்பர்களே,

நான் முன்பு இங்கு வந்தபோது, சிறந்த புதுச்சேரி என்ற மந்திரத்தை வழங்கினேன். இங்கு சிறந்து விளங்குவது வணிகம், கல்வி, ஆன்மீகம், சுற்றுலா ஆகியவையாகும். கடந்த நான்கரை ஆண்டுகளில், தொலைநோக்குப் பார்வை பலனளித்து வருகிறது. புதுச்சேரி நல்லாட்சி மற்றும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. மத்திய அரசும் யூனியன் பிரதேசமும் ஒரே தொலைநோக்குப் பார்வையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படும்போது, முடிவுகள் வேகமாகவும் சிறப்பாகவும் இருக்கும். புதுச்சேரி தனிநபர் வருமானத்தில் குறிப்பிடத்தக்க உயர்வை எட்டியுள்ளது. நாட்டிலேயே மிக உயர்ந்த சமூக முன்னேற்றக் குறியீட்டு மதிப்பெண்ணையும் அடைந்துள்ளது. இப்போது, இரட்டை இன்ஜின் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளிக்கும். இன்று, 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் மக்களின் வாழ்க்கையை மாற்றும்.

நண்பர்களே,

இந்தியா முழுவதும், உயர்தர உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்ப அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், உள்கட்டமைப்புக்கு சாதனை அளவாக 12 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளோம். இது புதுச்சேரி மக்களுக்கும் பயனளிக்கும். மாநிலங்களுக்கு மட்டுமே திறந்திருக்கும் மூலதன முதலீட்டுக்கான சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் புதுச்சேரியையும் சேர்த்துள்ளோம். உள்கட்டமைப்பிற்கு அதிக நிதி என்பது சிறந்த சாலைகள், நீர் வழங்கல், கடலோர உள்கட்டமைப்பு, பள்ளிகள், மருத்துவமனைகள் உட்படப் பல திட்டங்களைக் குறிக்கிறது. இந்த வசதிகள் நேரடியாக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துகின்றன.

 

நண்பர்களே,

எங்கள் வளர்ச்சியின் அடித்தளம் வலிமையான, அதிகாரம் பெற்ற இளைஞர்கள். அவர்களின் கனவுகளை நனவாக்க நாங்கள் பாடுபடுகிறோம். காரைக்காலில் உள்ள என்ஐடி-யில், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பொறியியல் வளாகம், நவீன விடுதி வசதிகள் ஆகியவை பல மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வியை வலுப்படுத்தும். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் புதிய விரிவுரை அரங்குகள், பெண்கள் விடுதிகள், பிற உள்கட்டமைப்புகள் மாணவர்களுக்கு உதவும். புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக எனக்குச் சொல்லப்பட்டது. இந்தப் பதவிகளில் பலவற்றிற்கு, பல ஆண்டுகளாக நேரடி ஆட்சேர்ப்புத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. ஆனால் இரட்டை இன்ஜின் அரசு அதைச் செய்து முடித்தது. மக்களுக்குச் சேவை செய்ய இணைந்த அனைத்து இளைஞர்களையும் நான் வாழ்த்துகிறேன்.

நண்பர்களே,

இன்று, உலகம் தூய்மையான, பசுமையான போக்குவரத்தில் கவனம் செலுத்துகிறது. மின்சார வாகனங்கள் நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன. புதுச்சேரி போன்ற சுற்றுலா மையத்தில், மாசுபாட்டைக் குறைப்பதில் மின்சார பேருந்துகள் ஒரு முக்கிய மாற்றமாக இருக்க முடியும். பிரதமரின் மின்சாரப் பேருந்து சேவைத் திட்டத்தின் கீழ், மின்சார பேருந்துகள் இன்று வழங்கப்படுகின்றன. இன்று தொடங்கப்படும் வீட்டுவசதித் திட்டங்கள் குடும்பங்களுக்கு ஸ்திரத்தன்மையையும் கண்ணியத்தையும் அளிக்கும். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யானம் முழுவதும் பல நூறு கோடி மதிப்புள்ள திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவை மக்களுக்கு உதவும். நீர் உப்புநீக்கும் நிலையங்கள் சுத்தமான குடிநீரை உறுதி செய்யும். புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கழிவு மேலாண்மையை மேம்படுத்தும். மழைக்காலங்களில் வெள்ளம், நீர் தேங்குவதைக் குறைக்கவும் அரசு செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி மக்களுக்கு வாழ்க்கையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு எங்கள் அனைத்து முயற்சிகளும் உள்ளன.

நண்பர்களே,

எந்தவொரு நாடும் அதன் மனித மூலதனம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே முன்னேற முடியும். அதனால்தான் சுகாதாரம் எங்கள் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது. சுகாதாரம் அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும், கிடைக்கக்கூடியதாகவும், குறைந்த செலவிலும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏற்கனவே இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களுக்கான இந்த தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றி வருகிறது. புதுச்சேரியின் எந்த நபரும் சிகிச்சைக்காக வெகுதூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடாது. அதற்கு பதிலாக, பிற பிராந்திய மக்கள் குணமடைய இங்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். புதுச்சேரி ஒரு மருத்துவ சுற்றுலா மையமாக மாற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். புதுச்சேரியில் ஏற்கனவே ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஜிப்மரில் உள்ள பிராந்திய புற்றுநோய் மையத்தின் நவீனமயமாக்கல் சுகாதாரத் திறனை மேலும் விரிவுபடுத்தும். மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மூன்று தீவிர சிகிச்சைத் தொகுதிகளுக்கு, பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள இந்த புதிய தீவிர சிகிச்சைத் தொகுதிகள் அவசரகாலத் திறனை கணிசமாக அதிகரிக்கும். புதுச்சேரி சித்த மருத்துவத்தில் முழுமையான சுகாதாரப் பராமரிப்புக்கு பெயர் பெற்றது. காரைக்காலில் உள்ள புதிய ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை மக்களுக்கு சேவை செய்யும்.

 

நண்பர்களே,

போக்குவரத்து இணைப்புதான் முன்னேற்றத்தின் முதுகெலும்பு. கிராமப்புற, நகர்ப்புற உள்கட்டமைப்பு இரண்டிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். ஒருபுறம், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் கிராமப்புற சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன. அவை மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகங்களுக்கான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துகின்றன. அதே நேரத்தில், புதுச்சேரியின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதை உறுதி செய்வதற்கும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். புதுச்சேரி நகரில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள திட்டங்களை அறிவித்துள்ளோம். இதில் 440 கோடி ரூபாய் மதிப்புள்ள மேம்பாலம் அடங்கும்.

நண்பர்களே,

கிழக்கு கடற்கரை சாலை, கிராண்ட் சதர்ன் டிரங்க் சாலையில் மேம்படுத்தல்கள் மூலம் சென்னைக்கான இணைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையிலான பயண நேரம் சுமார் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரமாகக் குறையும். புதுச்சேரியிலிருந்து கடலூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் பணி ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. மேலும் காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை மேம்படுத்தப்பட்டு வருகிறது. கிழக்கு கடற்கரை வழித்தடத்தில் கன்னியாகுமரி வரையிலான சாலைத் திட்டங்களில் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை முதலீடு செய்து வருகிறோம். இந்தத் திட்டங்கள் புதுச்சேரியின் சில பகுதிகளை சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர் போன்ற முக்கிய பொருளாதார மையங்களுடன் இணைக்கின்றன. இத்தகைய இணைப்பு சுற்றுலா, வர்த்தகம், தொழில்துறையை கணிசமாக வளர்க்கும்.

நண்பர்களே,

சுற்றுலா புதுச்சேரியின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாகும். வார இறுதி சுற்றுலா இடமாக, இது ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கிறது. ரயில்களும் விமானங்களும் எப்போதும் நிரம்பி வழிகின்றன. புதுச்சேரி மக்களின் அரவணைப்பால்தான் இது நடக்கிறது. ஆன்மீக சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, சுகாதார சுற்றுலாவில் முதலீடுகள் மூலம், இதை நாங்கள் புதிய உயரத்திற்கு கொண்டு செல்கிறோம். பிரசாத் திட்டத்தின் கீழ், பல்வேறு கோயில்களில் புனித யாத்திரை வசதிகள் மேம்பாடு செய்யப்பட்டு வருகின்றன. ஸ்ரீ அரவிந்தரும் அன்னையும் ஆரோவில்-லை உலகளாவிய உணர்வு நகரமாகக் கண்டனர். ஆரோவில்லில் இன்று ஒரு உலகளாவிய ஆன்மீக மஹோத்ஸவம் தொடங்குகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இத்தகைய கூட்டங்கள் பிராந்தியங்கள், மதங்களைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கின்றன.

 

நண்பர்களே,

இரட்டை இன்ஜின் அரசால் செய்யப்படும் நல்ல பணிகளைக் கொண்டாடுவது முக்கியம். ஆனால் முன்பு விஷயங்கள் எப்படி இருந்தன என்பதை நினைவில் கொள்வதும் முக்கியம். காங்கிரஸ்-திமுக ஆட்சியின் போது புதுச்சேரி மக்கள் மிகுந்த துன்பங்களை அனுபவித்தனர். அந்த ஆண்டுகள் அரசியல் ஸ்திரமின்மை, ஊழல், குற்றம், ஏழைகளின் துன்பம் ஆகியவை இருந்தன. ரேஷன் கடைகளில் அரிசி இல்லை. சம்பளம் தாமதமானது. குண்டர்களும் போதைப்பொருள் மாஃபியாக்களும் தெருக்களை ஆட்சி செய்தனர்.

நண்பர்களே,

காங்கிரஸ் புதுச்சேரியை தில்லியில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கான ஏடிஎம் ஆக்கியது. திமுகவைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் நடக்கும் ஊழல்களின் நீண்ட பட்டியலை நீங்கள் பார்க்கிறீர்கள். காங்கிரசும் திமுகவும் புதுச்சேரியின் வளர்ச்சிப் பயணத்தில் வேகத்தடையாக மாறிவிட்டன. இப்போது அதே சக்திகள் மீண்டும் அதிகாரத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றன. ஊழல், குற்றச் செயல்களின் சகாப்தத்திற்கு புதுச்சேரி திரும்ப வேண்டுமா? புதுச்சேரி மக்கள் அதை விரும்பவில்லை என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

நமது சுதந்திரப் போராட்டத்தில் புதுச்சேரி ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. பல தலைவர்கள் இங்கு பிறந்தனர். அவர்களில் சிலர் இங்கு வந்து இங்கிருந்து பணியாற்றினர். 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு இந்த நிலமும் முக்கியப் பங்காற்றியது. இப்போது, 2047-ம் ஆண்டுக்குள், நாம் ஒரு வளர்ச்சியடைந்த புதுச்சேரியையும் ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவையும் உருவாக்க வேண்டும். இந்த பணியில் புதுச்சேரியின் இரட்டை இன்ஜின் அரசு உங்களுடன் உள்ளது. சிறந்த புதுச்சேரிக்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்.

நன்றி!

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Infra spend up six-fold since 2014, crosses Rs 12 lakh crore: PM Modi

Media Coverage

Infra spend up six-fold since 2014, crosses Rs 12 lakh crore: PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 15, 2026
April 15, 2026

From Temples to Turbines: PM Modi’s Blueprint for a Culturally Rooted, Economically Explosive Viksit Bharat