வேளாண் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் துறையின் பங்களிப்பு அதிகளவில் தேவை என வலியுறுத்தினார்
அரசின் தொலை நோக்கில், சிறு விவசாயிகளின் மேம்பாடு முக்கியமானதாக உள்ளது: பிரதமர்
பதப்படுத்தப்பட்ட உணவுக்கான உலக சந்தைக்கு நமது நாட்டின் வேளாண்துறையை நாம் விரிவு படுத்த வேண்டும்: பிரதமர்

வணக்கம்!

உங்களது கருத்துக்கள் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மிக முக்கிய பங்கு வகித்துள்ளன. எங்களால் இயன்றவரை உங்கள் கருத்துகளையும், பார்வையையும் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.

வேளாண் துறையில் சீர்திருத்தங்கள் மற்றும் நிதி நிலை அறிக்கையில் விதிகளை அனைவரையும் உள்ளடக்கிய, உரிய காலத்திற்குள், கடைசி மைல் வரை கொண்டு செல்வதே இன்றைய நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

பொது- தனியார் கூட்டணி மற்றும் மத்திய- மாநில ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்பதே இன்றைய விவாதத்தின் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும்.

நீங்கள் அனைவரும் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்குத் தேவையான தற்சார்பு ஊரக பொருளாதாரத்தின் மிக முக்கிய பங்குதாரர்கள். நாட்டின் சிறு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த காலங்களில் அரசு எவ்வாறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதை சில காலம் முன்பு நாடாளுமன்றத்தில் நான் எடுத்துரைத்திருந்தேன்.

சிறு விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் 12 கோடி. அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதன் வாயிலாக பல்வேறு பிரச்சினைகளிலிருந்து இந்திய வேளாண்மைக்கு தீர்வு கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், ஊரக பொருளாதாரத்தின் உந்து சக்தியாகவும் சிறு விவசாயிகள் விளங்குவார்கள்.

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், வேளாண் கடன்களின் இலக்கை ரூ. 16.50 லட்சம் கோடியாக அரசு அதிகரித்துள்ளது. கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஊரக உள்கட்டமைப்பு நிதியும் ரூ. 40,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசனத்திற்கான நிதியும் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் பசுமை திட்டம் தற்போது 22 உண்ணும் தன்மையுடைய பொருட்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் 1000 மண்டிகளை இ-நாம் உடன் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் எண்ணம், நோக்கம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை இந்த அனைத்து முடிவுகளும் பிரதிபலிக்கின்றன.

இதுவரை இல்லாத அளவுக்கு வேளாண் உற்பத்தியின் அதிகரிப்புக்கு இடையே அறுவடைக்குப் பிந்தைய புரட்சி அல்லது உணவு பதப்படுத்துதல் புரட்சி மற்றும் 21-ஆம் நூற்றாண்டில் மதிப்பு கூட்டுதல் ஆகியவை இந்தியாவிற்குத் தேவை.

இது போன்ற பணிகள் இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களுக்கு முன்பே செய்யப்பட்டிருந்தால் நாடு பயனடைந்திருக்கும்.

தற்போது நாம் இழந்த காலங்களை ஈடு செய்ய வேண்டியிருப்பதால் வரும் காலங்களில் நமது பணியை நாம் துரிதப்படுத்த வேண்டும்.

நண்பர்களே,

நமது பால்வளத் துறையைப் பொறுத்தவரையில், கடந்த பல தசாப்தங்களாக இதன் பதப்படுத்துதல் திறன் விரிவுபடுத்தப்பட்டதால் இன்று இந்தத் துறை மிகவும் வலுவாக உள்ளது. உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், மீன்கள் போன்ற விவசாயம் தொடர்பான ஒவ்வொரு துறையிலும் பதப்படுத்துதலை மேம்படுத்துவதில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பதப்படுத்துதலை மேம்படுத்துவதற்கு தங்களது கிராமங்களுக்கு அருகிலேயே நவீன சேமிப்பு கிடங்கு வசதிகளை விவசாயிகள் பெற வேண்டும். பண்ணைகளிலிருந்தே இந்த கிடங்குகளை இயக்குவதற்கான முறையை நாம் மேம்படுத்த வேண்டும்.

விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் இந்த பதப்படுத்துதல் நிலையங்களை வழிநடத்த வேண்டும். உணவு பதப்படுத்துதல் புரட்சியை ஏற்படுத்துவதற்காக நாட்டின் விவசாயிகளும் பொது-தனியார்- ஒத்துழைப்புத் துறையும் தமது முழு ஆற்றலுடன், சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

நண்பர்களே,

விவசாயிகள் தங்களது விளை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ஏராளமான வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

கச்சாப் பொருட்கள் அல்லது வெறும் விளைச்சலுடன் மட்டுமே விவசாயிகளை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை நாடு காண்கிறது.

நாட்டின் விவசாய மற்றும் பதப்படுத்துதல் உணவுத் துறையை, சர்வதேச சந்தை அளவிற்கு நாம் விரிவுபடுத்த வேண்டும். கிராமங்களுக்கு அருகிலேயே வேளாண் தொழிற்சாலை தொகுப்புகளின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்க வேண்டும்.

இதன் மூலம் தங்களது கிராமத்திலேயே வேளாண் சம்பந்தமான வேலைவாய்ப்புகளை கிராமப்புற மக்கள் பெறுவார்கள். இயற்கை மற்றும் ஏற்றுமதி தொகுப்புகளும் முக்கிய பங்கு வகிக்கும்.

கிராமங்களின் வேளாண் சார்ந்த பொருட்கள் நகரத்தை நோக்கியும், நகரங்களின் தொழில்துறை பொருட்கள் கிராமங்களை நோக்கியும் பயணிக்கும் சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும்.

உணவுகளைப் பதப்படுத்தும் லட்சக்கணக்கான குறு நிறுவனங்கள் நாட்டில் இன்றும் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களை விரிவு படுத்துவதும், வலுப்படுத்துவதும் மிகவும் அவசியம். ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு என்ற திட்டம் மூலம் நமது தயாரிப்புகளை உலக சந்தைக்கு எடுத்துச் செல்லும் வழிகளை ஆராய வேண்டும்.

நண்பர்களே,

விவசாயம் மட்டுமல்லாமல் மீன்வளத் துறையிலும் பதப்படுவதற்கான வாய்ப்புகள் அபரிமிதமாக உள்ளன. மீன்பிடித் தொழில் மற்றும் ஏற்றுமதியில் உலகின் முக்கிய நாடுகளுள் ஒன்றாக இந்தியா விளங்கினாலும், பதப்படுத்தப்பட்ட மீன்களுக்கான சர்வதேச சந்தையில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது.

கிழக்கு ஆசியா வழியாக இந்தியாவின் பதப்படுத்தப்பட்ட மீன்கள் வெளிநாட்டுச் சந்தையை சென்றடைகின்றன. இந்த நிலையை நாம் மாற்றவேண்டும்.

நண்பர்களே,

தேவையான சீர்திருத்தங்களுடன் ரூ. 11,000 கோடி மதிப்பில் இந்த துறைக்கென உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையையும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது‌. தயார் நிலை உணவுகள், சமைப்பதற்குத் தயார் நிலையில் உள்ள காய்கறிகள், கடல் உணவுப் பொருட்கள், மோசரெல்லா சீஸ் முதலிய பொருட்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.

கொவிட் தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் இதுபோன்ற பொருட்களுக்கான தேவை நமது நாட்டிலும் உலகளவிலும் எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

நண்பர்களே,

ஆபரேஷன் கிரீன்ஸ் திட்டத்தின் கீழ் கிசான் ரயில் சேவையின் வாயிலாக காய்கறிகள் மற்றும் பழங்களின் போக்குவரத்துக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. சிறு விவசாயிகளையும், மீனவர்களையும் பெரும் சந்தைகள் மற்றும் அதிக தேவையுடைய சந்தைகளுடன் இணைப்பதில் கிசான் ரயில் வெற்றியடைந்துள்ளது.

 

 கடந்த 6 மாதங்களில்  சுமார் 275 கிசான் ரயில்கள் மூலமாக சுமார் ஒரு லட்சம் மெட்ரிக் டன் பழங்களும் காய்கறிகளும் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

நண்பர்களே,

நாடு முழுவதும் காய்கறிகள் மற்றும் பழங்களைப் பதப்படுத்துவதற்கான தொகுப்புகளை அமைப்பதற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

அதே போல் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான சிறு உணவு மற்றும் பதப்படுத்துதல் நிலையங்களுக்கு தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தின் கீழ் ஆதரவு வழங்கப்படுகின்றது.

நண்பர்களே,

உணவு பதப்படுத்துதலுடன் நவீன தொழில்நுட்பங்களால் சிறிய விவசாயிகள் எவ்வாறு பயனடையலாம் என்பது குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள், இதர இயந்திரங்களை சிறு விவசாயிகளால் வாங்க இயலாது. விவசாயிகள் டிராக்டர்கள் மற்றும் இதர இயந்திரங்களை குறைந்த செலவில் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஏதேனும் மாற்று வழி உள்ளதா? நேரத்தின் அடிப்படையில் விமான நிறுவனங்கள், விமானங்களை வாடகைக்குப் பெறும்போது அதுபோன்ற வசதிகள் நம் நாட்டு விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்படலாம்.

கொரோனா காலகட்டத்தில் விவசாயிகளின் பொருட்களை சந்தைகளுக்கு எடுத்துச் செல்வதற்கு ஒப்பந்த லாரிகளும் பயன்படுத்தப்பட்டன. மக்களிடையே இதற்கு வரவேற்பும் கிடைத்தது. இந்த சேவையை விவசாய நிலங்களிலிருந்து மண்டிகளுக்கு அல்லது ஆலைகளுக்கு அல்லது கிசான் ரயில் வரை எவ்வாறு நீட்டிப்பது என்பது தொடர்பாக நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

விவசாயத்தின் மற்றொரு முக்கிய அம்சம் மண் பரிசோதனை. கடந்த சில ஆண்டுகளில் கோடிக் கணக்கான விவசாயிகள் மண்வள அட்டைகளை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளனர். தற்போது மண்வள அட்டைகள் திட்டத்தை கிராமங்களுக்கு நாம் நீட்டிக்க வேண்டும். ரத்தப்பரிசோதனை ஆய்வகங்களைப் போல மண் பரிசோதனைக்கான இணைப்பையும் நாம் உருவாக்க வேண்டும்.

தனியார் நிறுவனங்கள் இதில் பெருமளவில் பங்கேற்கலாம். மண் பரிசோதனை இணைப்பு உருவாக்கப்பட்டு, விவசாயிகள் அதனை பயன்படுத்த தொடங்கியதும், தங்களது விளைநிலங்களின் வளம் பற்றிய விழிப்புணர்வு அதிக அளவில் விவசாயிகளிடம் ஏற்படுவதுடன், அவர்களது முடிவுகளிலும் பெரும் மாற்றும் நிகழும்.

 தமது மண்ணின் வளம் பற்றிய விழிப்புணர்வு நாட்டு விவசாயிகளிடையே அதிகரிக்கும் போது அவர்களது விளைச்சலும் மேம்படும்.

நண்பர்களே,

பெரும்பாலும் வேளாண் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் துறை பங்கேற்று வருகிறது. தனியாரின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான தருணம் வந்துவிட்டது. அரிசி மற்றும் கோதுமை மட்டுமல்லாமல் இதர பயிர்களையும் நமது விவசாயிகள் பயிரிடுவதற்கான  வாய்ப்புகளையும் நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும். அதேபோல் சிறு தானியங்களுக்கான புதிய சந்தைகளையும் நீங்கள் ஆராயுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 உலகளவில் சிறுதானியங்களின் தேவை ஏற்கனவே அதிகமாக இருந்த போதும், தற்போது கொரோனாவிற்குப் பிந்தைய காலத்தில் நோய் எதிர்ப்புத் திறனுடன் கூடுதல் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நண்பர்களே,

நம் நாட்டில் கடற்பாசி மற்றும் தேன் மெழுகு பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. தேன் வளர்ப்பிலும் நமது விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடற்பாசி, தேன் வளர்ப்பு, தேன் மெழுகுக்கான சந்தையை கண்டறிவதற்கும் தற்போது அவசியம் ஏற்பட்டுள்ளது.

 கடற்பாசியின் மூலம் நமது மீனவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.

தனியார் துறையின் பங்களிப்பு அதிகரிப்பதன் வாயிலாக விவசாயிகளின் தன்னம்பிக்கையும் உயரும். நம் நாட்டில் நீண்ட காலமாக ஒப்பந்த முறை விவசாயம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஒப்பந்த முறை விவசாயம், வர்த்தக நோக்கத்துடன் மட்டுமல்லாமல் நிலத்துக்கான நமது பொறுப்பையும் பூர்த்திசெய்ய வேண்டும்.

நண்பர்களே,

நீர் பாசனம் முதல் விதைத்தல், வருமானம், தொழில்நுட்பத்திலிருந்து ஒட்டுமொத்த தீர்வு ஏற்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். வேளாண் துறை தொடர்பான புதுமை நிறுவனங்களை ஊக்குவித்து இளைஞர்களை நாம் இணைக்க வேண்டும்.

கடன்கள், விதைகள், உரம், சந்தை போன்ற விவசாயிகளின் அத்தியாவசிய தேவைகள் உரிய நேரத்தில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

கடந்த ஓராண்டில் 1.80 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு கிஸான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 6-7 ஆண்டுகளுக்கு முன்பை விட இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கடன் தொகையும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

ரூ. 1 லட்சம் கோடி மதிப்பில் அமல்படுத்தப்பட்டுள்ள உள்கட்டமைப்பு நிதியும் பாராட்டத்தக்கது. நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள 10,000 விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் கூட்டுறவு முறையை மேலும் வலுப்படுத்தும்.

குறிப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கினார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
'History Created In Glasgow': PM Modi Hails Indian Athletes For CWG 2026 Glory

Media Coverage

'History Created In Glasgow': PM Modi Hails Indian Athletes For CWG 2026 Glory
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister extends greetings on Global Tiger Day, reaffirms commitment to tiger conservation
July 29, 2026

The Prime Minister, Shri Narendra Modi, has extended greetings to all wildlife enthusiasts on Global Tiger Day.

The Prime Minister said that the people of India are proud that the country is home to almost 70 per cent of the global tiger population.

He noted that India’s tiger conservation efforts are inspired by the country’s centuries-old culture of living in harmony with nature and powered by the collective will of its people.

Shri Modi reaffirmed the commitment to science-based conservation, community participation and sustainable development that strengthens tiger conservation.

Shri Modi also lauded the efforts and dedication of forest personnel, scientists and conservationists for their key role in tiger protection. The Prime Minister added that India remains committed to empowering local communities and reducing human-wildlife conflict.

In a thread posts on X, Shri Modi said;

“Greetings to all wildlife enthusiasts on Global Tiger Day. The people of India are proud of the fact that we are home to almost 70% of the global tiger population. India’s tiger conservation efforts are inspired by our centuries-old culture of living in harmony with nature and powered by the collective will of our people. We also reaffirm our commitment to science-based conservation, community participation and sustainable development that strengthens tiger conservation.”

“The efforts and dedication of our forest personnel, scientists and conservationists have also played a key role in tiger protection. In that spirit, India remains committed to empowering local communities and reducing human-wildlife conflict.”