லோகமாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300-வது பிறந்தநாள் விழாவையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (மே 31) மத்தியப் பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கிறார். போபாலில் காலை 11.15 மணியளவில் லோகமாதா தேவி அஹில்யா பாய் மகளிர் அதிகாரமளித்தல் மகாசம்மேளனத்தில் அவர் பங்கேற்கிறார். போபாலில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து பொது நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.
லோகமாதா தேவி அஹில்யா பாய் நினைவு அஞ்சல் தலையையும், சிறப்பு நாணயத்தையும் பிரதமர் வெளியிடுகிறார். ரூ.300 மதிப்புள்ள அந்த நாணயம் அஹில்யா பாய் ஹோல்கரின் உருவப்படத்தைக் கொண்டிருக்கும். பழங்குடியினர், நாட்டுப்புறக் கலை, பாரம்பரிய கலைகள் ஆகியவற்றின் பங்களிப்புக்காக பெண் கலைஞர் ஒருவருக்கு தேவி அஹில்யா பாய் தேசிய விருதினையும் பிரதமர் வழங்குகிறார்.
தொலைதூரப் பகுதிகளுக்கு விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் தாத்தியா, சத்னா விமான நிலையங்களை பிரதமர் தொடங்கி வைப்பார். இது விந்தியப் பிராந்தியத்தில் தொழில் துறை, சுற்றுலா, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
நகரங்களில் பயண உள்கட்டமைப்பை மேம்படுத்துவது என்ற தமது உறுதிப்பாட்டின் அடிப்படையில், இந்தூர் மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தில் உயர் முன்னுரிமை சேவைகளை பிரதமர் தொடங்கி வைப்பார். இது பயணிகளுக்கு வசதியான போக்குவரத்தை வழங்குவதோடு போக்குவரத்து நெரிசலையும், மாசினையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.480 கோடி மதிப்பில் 1271 அடல் கிராம நல் ஆளுமை பவன்கள் கட்டுவதற்கான முதல் தவணைத் தொகையையும் பிரதமர் வழங்குவார் . இந்தக் கட்டடங்கள் கிராம பஞ்சாயத்துகளுக்கு நிரந்தர கட்டுமானங்களாக இருக்கும். இந்த வசதியானது நிர்வாக செயல்பாடுகள், கூட்டங்கள் நடத்துதல், ஆவணங்களைப் பாதுகாத்தல் போன்றவற்றுக்கு பஞ்சாயத்துகளுக்கு உதவியாக இருக்கும்.


