புனித நகரமான பிரயாக்ராஜில் மகா கும்பமேளா வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஒற்றுமையின் பிரம்மாண்டமான மகா யக்ஞம் நிறைவடைந்துள்ளது. ஒரு தேசத்தின் மனசாட்சி விழிப்படையும் போது, பல நூற்றாண்டு கால அடிமை மனோபாவ தழைகளை தகர்த்து சுதந்திரம் பெறும்போது அது புதுப்பிக்கப்பட்ட சக்தியின் தூய காற்றை சுதந்திரமாக சுவாசிக்கிறது. இதன் பயன் ஜனவரி 13 முதல் பிரயாக்ராஜில் நடைபெற்ற ஒற்றுமையின் மகா கும்பமேளா கண் கூடாக தெரிந்தது.

அயோத்தியில் 2024 ஜனவரி 22 அன்று ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை செய்தபோது, தெய்வ பக்தி மற்றும் தேசபக்தி பற்றி நான் பேசினேன். பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின்போது கடவுள்கள், பெண் தெய்வங்கள், துறவிகள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள் என வாழ்க்கையின் அனைத்துத் தரப்பினரும் ஒன்று கூடினர். இதில் தேசத்தின் மனசாட்சி விழிப்புற்றதை நாம் கண்டோம். இதுதான் ஒற்றுமையின் மகா கும்பமேளா. இந்த புனிதமான விழாவின் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 140 கோடி இந்தியர்களின் உணர்வுகள் ஒன்று சேர்ந்தன.

இந்தப் புனிதமான பிரயாக்ராஜ் அருகே உள்ளது ஒற்றுமை, நல்லிணக்கம், அன்பு ஆகியவற்றின் புனித பூமியான ஷ்ரிங்வெர்பூர். இது பிரபு ஸ்ரீராமரும், நிஷாத்ராஜூம் சந்தித்த இடமாகும். இவர்களின் சந்திப்பு பக்தி, நல்லெண்ணம் ஆகியவற்றின் சங்கமத்தை அடையாளப்படுத்துகிறது. இன்றும் கூட அதே உணர்வுடன் பிரயாக்ராஜ் நமக்கு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

45 நாட்களாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தை நோக்கி வருவதை நான் கண்ணுற்றேன். இந்த சங்கமத்தில் உணர்வலைகள் எழுந்தன. அனைத்து பக்தர்களும் திரிவேணி சங்கமத்தில் நீராடுவது என்ற ஒரே நோக்கத்துடன் வந்தனர். அனைத்து யாத்ரீகர்களின் ஆர்வம், சக்தி, நம்பிக்கை ஆகியவற்றில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியவற்றின் புனித சங்கமம் நிறைந்திருந்தது.

நவீன நிர்வாக தொழில்முறையாளர்கள், திட்டமிடுவோர், கொள்கை வகுக்கும் நிபுணர்கள் ஆகியோருக்கு ஆய்வுப் பொருளாக பிரயாக்ராஜின் மகா கும்பமேளா உள்ளது. இதற்கு நிகரானது அல்லது உதாரணம் உலகில் வேறெங்கும் இல்லை.

பிரயாக்ராஜில் உள்ள சங்கமித்த நதிகளின் கரைகளில் கோடிக்கணக்கான மக்கள் எவ்வாறு திரண்டனர் என்பதை உலகம் வியப்புடன் பார்த்தது. இவர்களுக்கு முறைபடியான அழைப்புகள் இல்லை, எப்போது செல்ல வேண்டும் என்பதற்கு முன்கூட்டிய தகவல் இல்லை. மேலும் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த விருப்பத்துடன் மகா கும்பமேளாவுக்கு புறப்பட்டனர். புனித நதிகளில் நீராடுவதில் பேரின்பத்தை உணர்ந்தனர்.

புனித நீராடலுக்குப் பின் அவர்களின் முகங்களில் வெளிப்பட்ட ஆனந்தத்தையும், திருப்தியையும் என்னால் மறக்க இயலாது. பெண்கள், முதியவர்கள், நமது மாற்றுத் திறனாளி சகோதர, சகோதரிகள் அனைவரும் திரிவேணி சங்கமத்தை அடைவதற்கான வழியை கண்டறிந்தனர்.

குறிப்பாக, இந்தியாவின் இளைஞர்கள் உற்சாகமாக பங்கேற்றதை காண்பது எனக்கு மனநெகிழ்வை ஏற்படுத்தியது. இந்தியாவின் இளைஞர்கள் நமது புகழ் பெற்ற கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற ஆழமான செய்தியை மகா கும்பமேளாவில் இளம் தலைமுறையினரின் பங்கேற்பு கொண்டு சென்றது. இதனை பாதுகாப்பது தங்களின் பொறுப்பு என புரிந்து கொண்டுள்ள அவர்கள், அதனை முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ளனர்.

மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜ் வருகை தந்த எண்ணற்ற மக்கள் ஐயத்திற்கு இடமின்றி புதிய சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். நேரடியாக வருகை தந்தவர்கள் தவிர பிரயாக்ராஜூக்கு வர இயலாத கோடிக்கணக்கான மக்களும் உணர்வுபூர்வமாக இதில் இணைந்துள்ளனர். யாத்ரீகர்களால் வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட புனித நீர் லட்சக்கணக்கானவர்களின் ஆன்மீக இன்பத்தின் ஆதாரமாக மாறியுள்ளது. மகா கும்பமேளாவிலிருந்து வீடு திரும்பிய பலர், அவர்களின் கிராமங்களில் பெருமதிப்பைப் பெற்றனர். சமூகத்தால் கௌரவிக்கப்பட்டனர்.

கடந்த சில வாரங்களாக நடைபெற்றவை முன்னெப்போதும் காணப்படாதவை என்பதோடு வரவிருக்கும் பல நூற்றாண்டுகளுக்கு அடித்தளம் அமைத்துள்ளன.

பிரயாக்ராஜூக்கு இவ்வளவு பக்தர்கள் வருவார்கள் என்பதை எவரும் கற்பனை செய்யவில்லை. கும்பமேளாவின் முந்தைய அனுபவங்கள் அடிப்படையில் பக்தர்கள் வருகையை நிர்வாகம் மதிப்பீடு செய்தது.

ஒற்றுமையின் மகா கும்பமேளாவில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை அமெரிக்க மக்கள் தொகையை விட சுமார் இரண்டு மடங்கு அதிகமாகும்.

கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆர்வமிக்க பங்களிப்பை ஆன்மீக அறிஞர்கள் பகுப்பாய்வு செய்தால், இந்தியா அதன் பாரம்பரியத்தில் பெருமிதம் கொண்டிருப்பதையும் புதிய சக்தியுடன் இப்போது முன்னேறி வருவதையும் அறிவார்கள். இது புதிய சகாப்தத்தின் விடியல் என்று நான் நம்புகிறேன். இது புதிய இந்தியாவின் எதிர்காலத்தை பதிவு செய்யும்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் தேசிய மனசாட்சியை மகா கும்பமேளா வலுப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு பூர்ண கும்பமேளாவும் சமூகத்தில் அவர்களின் காலகட்டத்தில் திரண்ட ஞானிகள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள் பற்றி அறிந்துள்ளனர். அவர்களின் கருத்துக்கள் தேசத்திற்கும், சமூகத்திற்கும் புதிய திசை வழியை காட்டியுள்ளது. ஒவ்வொரு ஆறு ஆண்டுகளிலும் அர்த் கும்பமேளாவின்போது இந்த சிந்தனைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 144 ஆண்டுகளில் 12 பூர்ண கும்பமேளாக்கள் வந்தபின் வழக்கொழிந்த பாரம்பரியங்கள் கைவிடப்படுகின்றன. புதிய சிந்தனைகள் ஏற்கப்படுகின்றன. காலத்திற்கு ஏற்ப புதிய பாரம்பரியங்கள் உருவாக்கப்படுகின்றன.

144 ஆண்டுகளுக்குப் பின் இந்த மகா கும்பமேளாவில் நமது ஞானிகள் மீண்டும் ஒருமுறை இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் என்ற புதிய செய்தியை நமக்கு தந்துள்ளனர். அந்த செய்தி வளர்ச்சியடைந்த இந்தியா – விக்சித் பாரத்.

இந்த ஒற்றுமையின் மகா கும்பமேளாவில், ஏழை அல்லது பணக்காரர், இளையோர் அல்லது முதியோர், கிராமத்தைச் சேர்ந்தவர் அல்லது நகரத்தைச் சேர்ந்தவர், இந்தியாவை சேர்ந்தவர் அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவர், கிழக்கை சேர்ந்தவர் அல்லது மேற்கை சேர்ந்தவர், வடக்கை சேர்ந்தவர் அல்லது தெற்கை சேர்ந்தவர் என்ற பாகுபாடும் சாதி, மதம், சித்தாந்தம் என்ற பாகுபாடும் இல்லாமல் அனைத்து யாத்ரீகர்களும் ஒன்று சேர்ந்தனர். கோடிக்கணக்கான மக்களிடம் நம்பிக்கையை நிறைத்துள்ள ஒரே இந்தியா உன்னத இந்தியா என்ற தொலைநோக்கின் உருவகமாக இது இருந்தது. இப்போது இதே உணர்வுடன் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்கும் இயக்கத்திற்காக நாம் ஒன்றுபட வேண்டும்.

ஒரு சம்பவத்தை நான் நினைவுகூர்கிறேன். ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு சிறுவனாக தனது தாய் யசோதாவுக்கு ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் தனது வாயில் காண்பித்தார். அதே போல் இந்த மகா கும்பமேளாவில் இந்தியாவின் கூட்டு பலத்தின் மொத்த ஆற்றலை இந்தியாவிலும், உலகத்திலும் உள்ள மக்கள் கண்டனர். இந்த தன்னம்பிக்கையுடனும், வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதை நோக்கிய அர்ப்பணிப்புடனும் இப்போது நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்.

முன்னதாக பக்தி இயக்கத்தின் ஞானிகள் நாடு முழுவதும் உள்ள நமது கூட்டு தீர்மானத்தின் பலத்தை கண்டறிந்து ஊக்கப்படுத்தினர். சுவாமி விவேகானந்தரில் இருந்து ஸ்ரீ அரவிந்தர் வரை ஒவ்வொரு மகா சிந்தனையாளரும் நமது கூட்டு தீர்மானத்தின் சக்தியை நமக்கு நினைவுபடுத்தியுள்ளனர். மகாத்மா காந்தியும் கூட, விடுதலை இயக்கத்தின் போது இதனை பரீட்சித்து பார்த்தார். சுதந்திரத்திற்குப் பின் இந்த கூட்டு பலம் சரியாக அங்கீகரிக்கப்பட்டு அனைவரின் நல்வாழ்வை அதிகரிப்பதை நோக்கி பயன்படுத்தப்பட்டிருந்தால் புதிய சுதந்திர தேசத்திற்கான மகத்தான சக்தியாக அது மாறியிருக்கும். துரதிருஷ்டவசமாக ஏற்கனவே இது செய்யப்படவில்லை. ஆனால் இப்போது வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு மக்களின் கூட்டு சக்தி ஒன்று திரண்டு வருவதைக் காண நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன்.

வேதங்கள் முதல் விவேகானந்தர் வரை, தொன்மையான நூல்கள் முதல் நவீன செயற்கைக்கோள்கள் வரை இந்தியாவின் மகத்தான பாரம்பரியங்கள் இந்த தேசத்தை வடிவமைத்துள்ளன. ஒரு குடிமகனாக, நமது மூதாதையர்கள் மற்றும் ஞானிகளின் நினைவுகளிலிருந்து புதிய ஊக்கம் பெற நான் பிரார்த்திக்கிறேன். இந்த ஒற்றுமையின் மகா கும்பமேளா புதிய தீர்மானங்களுடன் முன்னோக்கிச் செல்ல நமக்கு உதவட்டும். ஒற்றுமை என்பதை நமது வழிகாட்டும் கோட்பாடாக மாற்றுவோம். தேசத்திற்கான சேவை, தெய்வத்திற்கான சேவை என்ற புரிதலுடன் நாம் பணியாற்றுவோம்.

காசியில் எனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, “அன்னை கங்கை என்னை அழைத்தாள்” என்று நான் கூறியிருந்தேன். இது வெறும் உணர்ச்சிபூர்வமானதல்ல. நமது புனித நதிகளின் தூய்மையை நோக்கிய பொறுப்புக்கான அழைப்பாகும். பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமத்தில் நின்றபோது எனது தீர்மானம் மேலும் வலுவடைந்தது. நமது நதிகளின் தூய்மை, நமது சொந்த வாழ்க்கையோடு ஆழமான தொடர்புடையது. நமக்கு வாழ்க்கையை தரும் அன்னையர் என்ற முறையில் சிறியதோ, பெரியதோ நமது நதிகளை கொண்டாடுவது நமது பொறுப்பாகும். நமது நதிகளின் தூய்மைக்காக பணியாற்ற இந்த மகா கும்பமேளா நமக்கு ஊக்கமளித்துள்ளது.

இவ்வளவு பெரிய நிகழ்வுக்கு ஏற்பாடு செய்வது எளிதான பணியல்ல என்பதை நான் அறிவேன். எங்களின் பக்தியில் ஏதாவது குறைபாடு இருந்தால் எங்களை மன்னியுங்கள் என்று அன்னை கங்கை, அன்னை யமுனை, அன்னை சரஸ்வதியிடம் நான் பிரார்த்திக்கிறேன். தெய்வீகத்தின் உருவமாக மக்களை நான் காண்கிறேன். அவர்களுக்கு சேவை செய்யும் எங்களின் முயற்சிகளில் ஏதாவது குறைபாடு இருந்தால் மக்களின் மன்னிப்பையும் நான் கோருகிறேன்.

பக்தி உணர்வோடு கோடிக்கணக்கான மக்கள் மகா கும்பமேளாவிற்கு வருகை தந்தனர். அவர்களுக்கு சேவை செய்வதும் ஒரு பொறுப்பாகும் என்ற பக்தி உணர்வோடு அது மேற்கொள்ளப்பட்டது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் யோகி அவர்களின் தலைமையின் கீழ், ஒற்றுமையின் மகா கும்பமேளாவை வெற்றிகரமாக்க நிர்வாகமும், மக்களும் ஒருங்கிணைந்து பாடுபட்டனர் என்று நான் பெருமிதத்துடன் கூற முடியும். மாநில அரசாக இருப்பினும், மத்திய அரசாக இருப்பினும் ஆட்சியாளர்களோ, நிர்வாகிகளோ அவற்றில் இல்லை. மாறாக ஒவ்வொருவரும் அர்ப்பணிக்கப்பட்ட சேவகர்கள். துப்புரவு தொழிலாளர்கள், காவல் துறையினர், படகோட்டுநர், ஓட்டுநர், மக்களுக்கு உணவு வழங்குவோர் என அனைவரும் ஓய்வின்றி உழைத்தனர். பல சிரமங்களை எதிர்கொண்ட போதும் திறந்த மனதுடன் யாத்ரீகர்கள் பிரயாக்ராஜ் மக்களால் வரவேற்கப்பட்டது ஊக்கமளிப்பதாக இருந்தது. அவர்களுக்கும், உத்தரப்பிரதேச மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தின் ஊசலாட்டமில்லாத நம்பிக்கையை நான் எப்போதும் கொண்டிருக்கிறேன். மகா கும்பமேளாவை காணும் போது எனது நம்பிக்கை பலமடங்கு வலுப்பட்டுள்ளது.

140 கோடி இந்தியர்கள் ஒற்றுமையின் மகா கும்பமேளாவை உலகளாவிய நிகழ்வாக மாற்றியிருப்பது உண்மையில் பாராட்டத்தக்கது. நமது மக்களின் அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் முயற்சிகளால் நெகிழ்ந்துள்ள நான் விரைவில் 12 ஜோதிர் லிங்கங்களில் முதலாவதான ஸ்ரீ சோம்நாத் ஜோதிர் லிங்கத்தை தரிசிக்க உள்ளேன். அப்போது இந்த கூட்டான தேசிய முயற்சிகளின் பலன்களை அவருக்கு காணிக்கையாக்கி அனைத்து இந்தியர்களுக்கும் பிரார்த்தனை செய்ய உள்ளேன்.

நேரடி பங்கேற்பு வடிவத்தில் மகா கும்பமேளா மகா சிவராத்திரி அன்று வெற்றிகரமாக நிறைவடைந்த போதும், கங்கையின் நித்திய நீரோட்டம் போல் மகா கும்பமேளா ஏற்படுத்திய ஆன்மீக பலம், தேசிய மனசாட்சி, ஒற்றுமையின் விழிப்புணர்வு வரும் தலைமுறைகளுக்காக தொடர்ந்து நமக்கு ஊக்கமளிக்கும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi pitches India as stable investment destination amid global turbulence

Media Coverage

PM Modi pitches India as stable investment destination amid global turbulence
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சோம்நாத் சுயமரியாதை பெருவிழா – ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை (1026-2026)
January 05, 2026

சோம்நாத்... இந்தச் சொல்லைக் கேட்கும்போதே நம் இதயங்களில் ஒரு பெருமித உணர்வு ஏற்படுகிறது. இது இந்திய ஆன்மாவின் நிலைத்த பிரகடனம். இந்த கம்பீரமான ஆலயம், இந்தியாவின் மேற்கு கடற்கரையில், குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபாஸ் பட்டன் என்ற இடத்தில் அமைந்துள்ளது. துவாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம் இந்தியா முழுவதும் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதில் முதல் ஜோதிர்லிங்கமாக சோமநாத்தின் நாகரிக, ஆன்மீக முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது. சோம்நாத் சிவலிங்கத்தை தரிசித்தாலே ஒருவர் பாவங்களிலிருந்து விடுபட்டு, தனது நியாயமான விருப்பங்களைப் பெற்று, மரணத்திற்குப் பிறகு சொர்க்கத்தை அடையலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, லட்சக்கணக்கானோரின் பக்தியையும் பிரார்த்தனைகளையும் ஈர்த்த இந்த சோம்நாத், அழிவை நோக்கமாகக் கொண்ட வெளிநாட்டுப் படையெடுப்பாளர்களால் தாக்கப்பட்டது.

அது புத்துயிர் பெற்றுள்ள நிலையில், 2026-ம் ஆண்டு சோம்நாத் ஆலயத்திற்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக அமைகிறது. இந்த மாபெரும் புண்ணியத்தலத்தின் மீது முதல் தாக்குதல் நடத்தப்பட்டு 1,000 ஆண்டுகள் ஆகின்றன. 1026-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் கஜினி முகமது இந்த ஆலயத்தைத் தாக்கினார். ஒரு வன்முறை மிகுந்த, கொடூரமான படையெடுப்பின் மூலம், நம்பிக்கையையும் நாகரிகத்தையும் பறைசாற்றும் ஒரு மாபெரும் கலாச்சாரச் சின்னத்தை அழிக்க அவர் முயன்றார்.

ஆயினும் சோம்நாத்தை அதன் பழைய பெருமையோடு மீட்டெடுப்பதற்கான எண்ணற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் காரணமாக, இந்த ஆலயம் முன்பை விடவும் இப்போது பொலிவுடன் நிற்கிறது. அத்தகைய ஒரு மைல்கல் நிகழ்வு 2026-ம் ஆண்டில் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 1951-ம் ஆண்டு மே 11-ம் தேதி, அப்போதைய குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் நடைபெற்ற ஒரு விழாவில், புனரமைக்கப்பட்ட ஆலயம் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டது.

1026-ம் ஆண்டில் சோம்நாத்தின் மீது நடந்த முதல் படையெடுப்பு, அந்த நகரத்து மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரம், ஆலயத்தில் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு ஆகியவை பல்வேறு வரலாற்றுப் பதிவுகளில் மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைப் படிக்கும்போது இதயம் நடுங்குகிறது. ஒவ்வொரு வரியும் துயரம், கொடுமை ஆகியவற்றால் நிறைந்துள்ளன. அவை காலத்தால் மறைய மறுக்கும் ஒரு சோகச் சுமையைச் சுமந்து நிற்கின்றன. பாரதத்தின் மீதும், நாட்டு மக்களின் மன உறுதியின் மீதும் அது ஏற்படுத்திய தாக்கத்தைக் கற்பனை செய்து பாருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, சோம்நாத்துக்கு மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் உள்ளது. அது கடற்கரையில் அமைந்து, பெரும் பொருளாதார வலிமை கொண்ட ஒரு சமூகத்திற்கு பலம் சேர்த்தது. அந்தச் சமூகத்தின் கடல் வணிகர்களும் மாலுமிகளும் அதன் பெருமையின் கதைகளைத் தொலைதூர தேசங்களுக்குக் கொண்டு சென்றனர்.

ஆயினும், முதல் தாக்குதல் நடந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், சோம்நாத் அழிவின் அடையாளமாக இல்லை என்று நான் உறுதியாகக் கூறுவதில் பெருமை கொள்கிறேன். அது பாரத அன்னையின் கோடிக்கணக்கான குழந்தைகளின் அசைக்க முடியாத வீரத்தின் அடையாளமாகத்தான் உள்ளது.

1026-ல், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அந்த இடைக்கால கொடூரம், மற்ற படையெடுப்பாளர்களையும் சோம்நாத் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தத் தூண்டியது. அது நமது மக்களையும் கலாச்சாரத்தையும் அடிமைப்படுத்தும் ஒரு முயற்சியின் தொடக்கமாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு முறையும் ஆலயம் தாக்கப்பட்டபோது, அதைக் காக்க முன்வந்து, தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த மாபெரும் துணிச்சல் மிக்க ஆடவரும் மகளிரும் நம்மிடம் இருந்தனர். ஒவ்வொரு முறையும், தலைமுறை தலைமுறையாக, நமது மாபெரும் நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள், தாங்களாகவே ஆலயத்தை மீண்டும் கட்டிப் புத்துயிர் அளித்தனர். சோம்நாத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்வதை உறுதிசெய்ய உன்னதமான முயற்சி மேற்கொண்ட அகல்யாபாய் ஹோல்கர் போன்ற மாமனிதர்களை வளர்த்த அதே மண்ணில் நாமும் வளர்ந்திருப்பது நமது பாக்கியம்.

1890-ம் ஆண்டுகளில் சுவாமி விவேகானந்தர் சோம்நாத்துக்கு வருகை தந்தார். அந்த அனுபவம் அவரை மிகவும் நெகிழச் செய்தது. 1897-ல் சென்னையில் ஆற்றிய ஒரு சொற்பொழிவின் போது அவர் தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார். அப்போது அவர், “தென்னிந்தியாவின் இந்த பழமையான கோயில்களும், குஜராத்தின் சோம்நாத் போன்ற கோயில்களும் உங்களுக்குப் பெரும் ஞானத்தைக் கற்பிக்கும். எந்தவொரு புத்தகத்தையும் விட நமது இனத்தின் வரலாற்றைப் பற்றிய கூர்மையான பார்வையை அவை உங்களுக்கு வழங்கும். இந்தக் கோயில்கள் நூற்றுக்கணக்கான தாக்குதல்களின் அடையாளங்களையும், நூற்றுக்கணக்கான முறை புத்துயிர் பெற்ற அடையாளங்களையும் எவ்வாறு தாங்கி நிற்கின்றன என்பதைக் கவனியுங்கள். அவை தொடர்ந்து அழிக்கப்பட்டாலும், இடிபாடுகளில் இருந்து மீண்டும் மீண்டும் எழுந்து, முன்பை விடப் புத்துணர்ச்சியுடனும் வலிமையுடனும் நிற்கின்றன! அதுதான் தேசிய மனப்பான்மை. அதுதான் தேசிய உயிரோட்டம். அதைப் பின்பற்றுங்கள். அது உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அதை விட்டுவிட்டால் உயிர்வாழ முடியாது. அந்த உயிரோட்டத்திலிருந்து நீங்கள் விலகும் கணமே, மரணம் விளைவாக அமையும்.” என்றார்.

சுதந்திரத்திற்குப் பிறகு சோம்நாத் ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் புனிதமான கடமை சர்தார் வல்லபாய் படேலின் திறமையான கைகளுக்குச் சென்று சேர்ந்தது. 1947-ம் ஆண்டில் தீபாவளி நேரத்தில் அங்கு அவர் மேற்கொண்ட ஒரு பயணம் அவரை மிகவும் நெகிழச் செய்தது. அதன் விளைவாக, அந்த ஆலயம் அதே இடத்தில் மீண்டும் கட்டப்படும் என்று அவர் அறிவித்தார். இறுதியாக, 1951-ம் ஆண்டு மே 11-ம் தேதி, சோம்நாத்தில் பிரமாண்டமான கோயில் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டது. அதில் அப்போதைய குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் பங்கேற்றார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண சர்தார் படேல் உயிருடன் இல்லை. ஆனால் அவரது கனவு நிறைவேற்றப்பட்டு தேசத்தின் முன் கம்பீரமாக நின்றது. அப்போதைய பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு, இதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இந்த சிறப்பு நிகழ்வில், குடியரசுத்தலைவரும் அமைச்சர்களும் பங்கேற்பதை நேரு விரும்பவில்லை. இந்த நிகழ்வு இந்தியா பற்றி ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கும் என்று அவர் கூறினார். ஆனால் டாக்டர் ராஜேந்திர பிரசாத் உறுதியாக இருந்து இதில் பங்கேற்றார். அதன் பிறகு நடந்தவை வரலாறு. சர்தார் படேலுக்கு உறுதியுடன் ஆதரவு கொடுத்த கே.எம். முன்ஷியின் முயற்சிகளை நினைவுகூராமல் சோம்நாத்தைப் பற்றிய எந்தத் தகவலும் முழுமையடையாது. 'சோம்நாத்: தி ஷ்ரைன் எடர்னல்' (சோம்நாத் - என்றும் நிலைத்திருக்கும் ஒரு புனிதத் தலம்) என்ற நூல் உட்பட, சோம்நாத் குறித்த அவரது படைப்புகள், தகவல்கள் செறிந்தவையாகவும், பல விஷயங்களை தெரியப்படுத்துபவையாகவும் உள்ளன.

உண்மையில், முன்ஷி-யின் நூலின் தலைப்பு உணர்த்துவது போல, நிலைத்தன்மை குறித்த உறுதியான நம்பிக்கையைக் கொண்ட ஒரு நாகரிக சமுதாயமாக நாம் திகழ்கிறோம். பகவத் கீதையின் ஸ்லோகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளபடி, நிலையானதை என்றும் அழிக்க முடியாது என்று நாம் உறுதியாக நம்புகிறோம். தடைகளையும் போராட்டங்களையும் கடந்து, கம்பீரமாக நிற்கும் சோம்நாத்தை விட, நமது நாகரிகத்தின் அசைக்க முடியாத உணர்விற்குச் சிறந்த உதாரணம் வேறு எதுவும் இருக்க முடியாது.

பல நூற்றாண்டுகால படையெடுப்புகளையும் காலனித்துவ கொள்ளைகளையும் கடந்து, வளர்ச்சியில் பிரகாசமாகத் திகழும் நமது தேசத்தில் இதே உணர்வுதான் காணப்படுகிறது. நமது விழுமியங்களும் மக்களின் உறுதியும்தான் இந்தியாவை இன்று உலகத்தின் கவன ஈர்ப்பு மையமாக மாற்றியுள்ளன. உலகம் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கிறது. நமது இளைஞர்களின் திறன்களை நம்பி உலகம் முதலீடு செய்ய விரும்புகிறது. நமது கலை, கலாச்சாரம், இசை, திருவிழாக்கள் ஆகியவை உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று வருகின்றன. யோகாவும் ஆயுர்வேதமும் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, ஆரோக்கியமான வாழ்வை மேம்படுத்துகின்றன. மிகவும் அழுத்தமான சில உலகளாவிய சவால்களுக்கான தீர்வுகள் இந்தியாவிலிருந்து வருகின்றன.

பழங்காலம் தொட்டே, சோம்நாத் பல்வேறு தரப்பு மக்களை ஒன்றிணைத்து வருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய, மிகவும் மதிக்கப்பட்ட சமணத் துறவியான கலிகால சர்வக்ஞ ஹேமச்சந்திராச்சாரியார் சோம்நாத்துக்குச் சென்றார். அங்கு பிரார்த்தனை செய்த பிறகு, அவர் ஒரு ஸ்லோகத்தைச் சொன்னதாகக் கூறப்படுகிறது. அதன் பொருள் - "உலகப் பிறவிக்கான விதைகளை அழித்து, ஆசையையும் அனைத்து துன்பங்களையும் நீங்கியவருக்கு என் வணக்கங்கள்." என்பதாகும். இப்போதும், சோம்நாத் மனதிலும் ஆன்மாவிலும் ஆழமான உணர்வை எழுப்பும் அதே ஆற்றலைக் கொண்டுள்ளது.

1026-ம் ஆண்டில் நடந்த முதல் தாக்குதலுக்குப் பிறகு ஆயிரம் ஆண்டுகள் கடந்தும், சோம்நாத்தில் உள்ள கடல் அன்றைய அதே தீரத்துடன் இப்போதும் கர்ஜித்து அலைகளின் ஒலியை எழுப்புகிறது. சோம்நாத்தின் கரைகளைத் தழுவும் அலைகள் ஒரு கதையைச் சொல்கின்றன. என்ன நடந்தாலும், அந்த அலைகளைப் போலவே, சோம்நாத்தும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கிறது.

கடந்த காலத்தின் ஆக்கிரமிப்பாளர்கள் இப்போது காற்றில் கலந்த தூசியாகிவிட்டனர். அவர்களின் பெயர்கள் மறைந்துவிட்டன. அவர்கள் வரலாற்றின் ஏடுகளில் அடிக்குறிப்புகளாகிவிட்டனர். ஆனால் சோம்நாத் பிரகாசமாக நின்று, அடிவானத்தைத் தாண்டி ஒளி வீசுகிறது. 1026-ம் ஆண்டு தாக்குதலால் சிறிதும் குறையாத நிலையான ஆன்மாவை அது நமக்கு நினைவூட்டுகிறது. சோம்நாத் ஒரு நம்பிக்கையின் கீதம். வெறுப்புக்கும், மதவெறிக்கும் தற்காலிகமாக அழிக்கும் சக்தி இருக்கலாம். ஆனால் நன்மையின் மீதான நம்பிக்கையும் உறுதியும் அழியாத நிலைத் தன்மையை உருவாக்கும் சக்தி கொண்டவை என்பதை சோம்நாத் நமக்குச் சொல்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாக்கப்பட்டு, அதன் பிறகு தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொண்ட சோம்நாத் ஆலயம் மீண்டும் மீண்டும் எழ முடிகிறது. அதேபோல் படையெடுப்புகளுக்கு முன்பு நமது தேசம் கொண்டிருந்த அதே பெருமையை நம்மால் நிச்சயமாக மீட்டெடுக்க முடியும். ஸ்ரீ சோம்நாத் மகாதேவரின் ஆசீர்வாதங்களுடன், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான புதிய உறுதியுடன் நாம் முன்னோக்கிப் பயணிப்போம்.

ஜெய் சோம்நாத்!