இந்தியாவின் வளர்ச்சிக்கும் வாலிபால் விளையாட்டுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன: பிரதமர்
ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை நிறைவேற்றும்போதுதான் வெற்றி பெற முடியும்: பிரதமர்
2014-ம் ஆண்டு முதல், பல்வேறு விளையாட்டுகளில் இந்தியாவின் செயல்திறன் மேம்பட்டுள்ளது: பிரதமர்
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன - 2036 ஒலிம்பிக்கையும் நடத்த நாடு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது: பிரதமர்

 

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்கிய (04.01.2025) 72-வது தேசிய வாலிபால் (கைப்பந்து) போட்டியை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, வாரணாசி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், அனைத்து வீரர்களையும் வரவேற்று வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார். தேசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் இன்று முதல் வாரணாசியில் தொடங்குகிறது என்று அவர் கூறினார். வீரர்கள் மிகுந்த கடின உழைப்புக்குப் பிறகு இந்த தேசிய போட்டிக்கு வந்துள்ளனர் என்றும், அவர்களின் முயற்சிகள் வரும் நாட்களில் வாரணாசி மைதானத்தில் வெளிப்படும் என்றும் பிரதமர் எடுத்துரைத்தார். நாட்டின் 28 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் ஒன்றுகூடி, 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற செய்தியை வழங்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து, சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் அனைவருக்கும் பிரதமர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

வீரர்கள் இப்போது வாரணாசி, நகரத்தைப் பற்றி அறிந்து கொள்வார்கள் என்று அவர் குறிப்பிட்டார். வாரணாசி விளையாட்டு ஆர்வலர்களின் நகரம் என்றும், இங்கு மல்யுத்தம், குத்துச்சண்டை, படகுப் பந்தயங்கள், கபடி ஆகியவை மிகவும் பிரபலமாக உள்ளன என்றும் அவர் கூறினார். வாரணாசி பல தேசிய அளவிலான வீரர்களை உருவாக்கியுள்ளது என்றும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், காசி வித்யாபீடம் போன்ற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த வீரர்கள் மாநில, தேசிய அளவில் சிறந்து விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.  தேசிய கைப்பந்து சாம்பியன்ஷிப்பின் போது, வாரணாசியில் உற்சாகம் அதிகமாக இருக்கும் என்றும், வாரணாசியின் விருந்தோம்பல் பாரம்பரியத்தை  வீரர்கள் அனுபவிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

 

கைப்பந்து ஒரு சாதாரண விளையாட்டு அல்ல என்றும், ஏனெனில் இது சமமான ஒத்துழைப்புத் தேவைப்படும் விளையாட்டு என்றும் அவர் கூறினார். பந்தை எப்போதும் உயர்த்தி வைத்திருக்கும் முயற்சியில் உறுதி பிரதிபலிக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். கைப்பந்து வீரர்கள் குழு மனப்பான்மையுடன் இணைவதாகவும், ஒவ்வொரு வீரரும் 'அணியே முதன்மையானது' என்ற மந்திரத்தால் வழிநடத்தப்படுகிறார்கள் என்றும் அவர் எடுத்துரைத்தார். ஒவ்வொரு வீரரும் வெவ்வேறு திறன்களைக் கொண்டிருக்கலாம் என்றாலும், அனைவரும் தங்கள் அணியின் வெற்றிக்காக விளையாடுகிறார்கள் என்றும் அவர் கூறினார். இந்தியாவின் வளர்ச்சிக் கதைக்கும் கைப்பந்துக்கும் உள்ள ஒற்றுமைகளை திரு நரேந்திர மோடி விளக்கினார். எந்த வெற்றியும் தனியாக அடையப்படுவதில்லை என்று அவர் கூறினார். ஒருங்கிணைப்பு, நம்பிக்கை, அணியின் தயார்நிலை ஆகியவற்றைச் சார்ந்தே வெற்றி உள்ளது என்பதை கைப்பந்து விளையாட்டு கற்பிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். ஒவ்வொருவருக்கும் அவரவர் பங்கும் பொறுப்பும் உள்ளது என்றும், ஒவ்வொருவரும் தங்கள் கடமையை நிறைவேற்றும்போதுதான் வெற்றி கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். அதேபோல் தூய்மை இந்தியா, டிஜிட்டல் பரிவர்த்தனை தொடங்கி வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இயக்கம் வரை, ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு மாநிலமும் கூட்டு உணர்வுடன் இந்தியாவே முதன்மையானது என்ற உணர்வோடு செயல்படும் வகையில் தேசமும் அந்த வழியில் முன்னேறி வருவதாக பிரதமர் கூறினார்.

இன்று உலகமே இந்தியாவின் வளர்ச்சியையும் பொருளாதாரத்தையும் பாராட்டி வருவதை சுட்டிக்காட்டிய திரு நரேந்திர மோடி, இந்த முன்னேற்றம் பொருளாதாரத் துறையில் மட்டுமல்லாமல், விளையாட்டுத் துறையிலும் பிரதிபலிக்கிறது என்றார். 2014-ம் ஆண்டு முதல் பல்வேறு விளையாட்டுகளில் இந்தியாவின் செயல்திறன் தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும், இளம் விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றுவதைக் காண்பதில் பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசும் சமூகமும் விளையாட்டு மீது அலட்சியமாக இருந்த ஒரு காலம் இருந்தது என்றும், இது வீரர்களிடையே அவர்களின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியது என்றும், மிகச் சில இளைஞர்களே விளையாட்டை ஒரு தொழில் முறை அம்சமாக ஏற்றுக்கொண்டனர் என்றும் பிரதமர் நினைவு கூர்ந்தார். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில், விளையாட்டு குறித்து அரசின் மனநிலையிலும் சமூகத்தின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார். விளையாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டை அரசு கணிசமாக அதிகரித்துள்ளது என்றும், ஒவ்வொரு நிலையிலும் வீரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

 

நாட்டில் பல்வேறு துறைகளில் தொடர்ந்து சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும்,  விளையாட்டுத் துறையும் அவற்றில் ஒன்றாகும் என்றும் பிரதமர் கூறினார். தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம், கேலோ பாரத் கொள்கை -2025 உள்ளிட்ட விளையாட்டுத் துறை சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். இது சரியான திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதுடன், விளையாட்டு அமைப்புகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

வலுவான உள்கட்டமைப்பை உருவாக்குதல், நிதி உதவி வழிமுறைகள், இளம் விளையாட்டு வீரர்களுக்கு உலகளாவிய பயிற்சியை வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் முயற்சிகளுடன், ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டம் போன்ற முன்முயற்சிகள் இந்தியாவின் விளையாட்டு சூழல் அமைப்பை மாற்றி வருவதாகக் பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த பத்தாண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட முக்கிய சர்வதேச போட்டிகளை இந்தியா நடத்தியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் எனவும், 2036 ஒலிம்பிக்கை நடத்த நாடு வலுவான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். கேலோ இந்தியா திட்டத்தின் மூலம், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தேசிய நிலைக்கு முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

 

முக்கிய நிகழ்வுகளுக்கு வாரணாசி தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த கைப்பந்து சாம்பியன்ஷிப்பிற்கு முன்பு, வாரணாசி நகரில் பல முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார். இதில் ஜி-20 கூட்டங்கள், காசி தமிழ் சங்கமம், காசி தெலுங்கு சங்கமம் போன்ற கலாச்சார விழாக்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு போன்றவை வாரணாசியில் நடத்தப்பட்டதை அவர் குறிப்பிட்டார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கலாச்சார தலைநகராக வாரணாசி அறிவிக்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார். இந்த கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி,  இந்த சாதனைகளுடன் மற்றொரு ரத்தினமாக இணைகிறது என்றும், இதுபோன்ற நிகழ்வுகள் வாரணாசியை பெரிய தளங்களுக்கான முக்கிய இடமாக நிலைநிறுத்துகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

போட்டிகளில் சிறப்பாக செயல்பட வீரர்களை ஊக்குவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்து தமது உரையை நிறைவு செய்தார்.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பின்னணி:

2026 ஜனவரி 4 முதல் ஜனவரி 11 வரை நடைபெறும் 72-வது தேசிய வாலிபால் (கைப்பந்து) போட்டியில், இந்தியா முழுவதிலுமிருந்து, பல்வேறு மாநிலங்கள், நிறுவனங்களைச் சேர்ந்த 58 அணிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டி இந்திய கைப்பந்து விளையாட்டின் மதிப்புமிக்க திறமையை வெளிக்கொணரும் போட்டியாகும்.

வாரணாசியில் 72வது தேசிய கைப்பந்து போட்டியை நடத்துவது, நகரத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் தடகள வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது முக்கிய தேசிய நிகழ்வுகளுக்கான மையமாக நகரத்தின் சுயவிவரத்தை மேலும் மேம்படுத்துகிறது, குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் விளையாட்டு முயற்சிகளை நடத்துவதில் அதன் விரிவடையும் பங்கோடு ஒத்துப்போகிறது..

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Standing for medical science, together with AIIMS

Media Coverage

Standing for medical science, together with AIIMS
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 8, 2026
April 08, 2026

Bold Vision, Tangible Wins: PM Modi’s India Leads in AI, EVs, Nuclear & Inclusive Entrepreneurship