ஜி-20 கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை இந்தியா ஏற்று இன்றுடன் 365 நாட்கள், அதாவது ஓராண்டு நிறைவடைகிறது. வசுதைவ குடும்பகம் எனப்படும் 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற  உணர்வைப் புத்துயிர் பெறச் செய்ய வேண்டிய தருணம் இதுவாகும்.

கடந்த ஆண்டு தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றபோது, உலக அளவில் பல்வேறு சவால்கள் தீவிரமாக இருந்தன.  கொவிட் – 19 பாதிப்பில் இருந்து மீள வேண்டியது தொடர்பான கவலைகள், பருவ நிலை மாற்ற அச்சுறுத்தல்கள், உலக அளவில் நிலையில்லாத நிதித்தன்மை, வளரும் நாடுகளில் கடன் நெருக்கடி போன்றவற்றின் தீவிரத் தன்மை அப்போது அதிகமாக இருந்தது.  முரண்பாடுகள் மற்றும் போட்டிகளுக்கு மத்தியில், வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தது. இது முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக இருந்தது.

இந்தச் சவாலான சூழலில் ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்ற இந்தியா,  மொத்த உள்நாட்டு உற்பத்தியை மையமாகக் கொண்ட  வளர்ச்சி என்ற தன்மையில் இருந்து மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி என்ற தத்துவத்திற்கு மாறுவதற்கான ஒரு மாற்று உத்தியை வழங்க முயன்றுள்ளது. நம்மைப் பிரிக்கும் அம்சங்களை விட, நம்மை இணைக்கும் அம்சங்களை உலகுக்கு நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டு இந்தியா செயல்பட்டு வருகிறது. முக்கியமாக, உலகளாவிய பேச்சுவார்த்தைகளும், ஆலோசனைகளும் அதிகரிக்க வேண்டும். ஒரு சிலரின் நலன்களைவிட பலரது தேவைகள் முக்கியமானவை. அதற்கு அந்த சிலர் வழிவிட வேண்டும். இதற்குப் பன்முகத்தன்மையில் அடிப்படை சீர்திருத்தம் தேவை என்பதை நாம் அறிந்து செயல்படுகிறோம்.

அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, லட்சியத்துடன் கூடிய செயல்பாடுகள், செயல் திட்டம் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் தீர்க்கமான நடைமுறைகள் என்ற  நான்கு அம்சங்கள் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவ அணுகுமுறையை வரையறுக்கும் முக்கிய அம்சங்களாகத் திகழ்ந்தன.  ஜி20 கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பு நாடுகளாலும் ஜி20 தலைவர்களின் புதுதில்லி தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது நமது அணுகுமுறைகள் மற்றும் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டிற்குச் சான்றாக அமைந்துள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய தன்மை என்பது இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் மையக் கருப்பொருளாக இருந்து வருகிறது. 55 ஆப்பிரிக்க நாடுகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பான ஆப்பிரிக்க ஒன்றியம், ஜி20 அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜி20, உலகின் 80 சதவீத மக்கள் தொகையை உள்ளடக்கிய நாடுகளின் அமைப்பாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.  இந்தியாவின் இந்த ஆக்கப்பூர்வமான நிலைப்பாடு, உலகளாவிய சவால்களை எதிர்கொள்வது மற்றும் வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்த விரிவான கலந்துரையாடலை ஊக்குவித்துள்ளது.

உலகளாவிய தெற்கு நாடுகள் எனப்படும் வளரும் நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, ‘உலகளாவிய தெற்கு நாடுகளின் குரல்’ என்ற  உச்சிமாநாட்டை இந்தியா இரண்டு கட்டங்களாக நடத்தியது. இது பன்முகத்தன்மைக்கு புதிய விடியலாக அமைந்தது. வளரும் நாடுகளின் கவலைகள் இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட்டன. இது வளரும் நாடுகள் தொடர்பான உலகளாவிய கருத்தியலை வடிவமைப்பதில் அவற்றுக்கு சரியான இடத்தைப் பெற்றுத் தந்துள்ளன.

அனைவரையும் உள்ளடக்கிய தன்மை என்பது, ஜி20 தொடர்பான  இந்தியாவின் உள்நாட்டு அணுகுமுறைகளிலும் எதிரொலித்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்குப்  பொருத்தமான வகையில் மக்களின் தலைமைத்துவமாக அது அமைந்தது. மக்கள் பங்கேற்பு நடவடிக்கைகளின் மூலம் ஜி20 நிகழ்வுகள் நாட்டின் 140 கோடி மக்களையும் சென்றடைந்தன. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஜி20 தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஜி20 தத்துவத்திற்கேற்ப முக்கியமான அம்சங்களில்  விரிவான வளர்ச்சி இலக்குகளின் மீது சர்வதேச கவனம் அமைவதை இந்தியா உறுதிசெய்தது.

2030-ம் ஆண்டினை மையமாகக் கொண்ட முக்கியமான ஜி20 2030-ம் ஆண்டு  செயல்திட்டத்தை இந்தியா வகுத்து அளித்துள்ளது. இதில் சுகாதாரம், கல்வி, பாலின சமத்துவம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை உள்ளிட்ட, ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய  சிக்கல்களுக்கு செயல் சார்ந்த அணுகுமுறையை இந்தியா எடுத்துரைத்துள்ளது. இதன் மூலம்  நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான ஜி20  செயல் திட்டத்தை இந்தியா வழங்கியுள்ளது.

இந்த முன்னேற்றங்களுக்கான ஒரு முக்கிய சக்தியாக, வலுவான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உள்ளது. ஆதார், யுபிஐ, டிஜிலாக்கர் போன்ற புரட்சிகரமான டிஜிட்டல் நடைமுறைகளின் பலன்களை இந்தியா  நேரடியாகக்  கண்டுள்ளது.  இதனை அடிப்படையாகக் கொண்டு இந்தியா தீர்க்கமான பரிந்துரைகளை வழங்கியுள்ளது. ஜி20 மூலம், உலகளாவிய தொழில்நுட்ப ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில்,  டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு களஞ்சியப் பணிகளை இந்தியா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 16 நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளைக் கொண்ட இந்தக் களஞ்சியம், உலகளாவிய தெற்கு நாடுகளுக்குப் பெரிதும் உதவும். இந்த நாடுகளில்  அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்தவும், அந்நாடுகள் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்கி, ஏற்று செயல்படவும் இது வகை செய்யும்.

நமது பூமியைப் பொறுத்தவரை, அவசரமான, நிலையான மற்றும் சமமான மாற்றத்தை உருவாக்க,  லட்சியத்துடன் கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய  நோக்கங்களை நாம் அறிமுகப்படுத்தினோம். ஜி20 பிரகடனத்தின் 'பசுமை மேம்பாட்டு ஒப்பந்தம்' பசியை எதிர்த்துப் போராடுவதிலும், பூமியைப் பாதுகாப்பதிலும் உள்ள சவால்களை எதிர்கொள்ள வழிகாட்டுகிறது. அது வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் தன்மைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, சூழலுக்கேற்ற உற்பத்தி நடைமுறைகளை  விரிவாக எடுத்துரைக்கிறது.  2030-ம் ஆண்டுக்குள் உலக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை மும்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று ஜி20 பிரகடனம் அழைப்பு விடுத்துள்ளது. உலகளாவிய உயிரி எரிபொருள்  கூட்டமைப்பை நிறுவுதல் மற்றும் பசுமை ஹைட்ரஜனுக்கான ஒருங்கிணைந்த செயல்திட்டம் ஆகியவற்றுடன், தூய்மையான, பசுமையான உலகை உருவாக்குவதற்கான ஜி20-ன் லட்சியங்கள்  மிக உறுதியானவையாக அமைந்துள்ளன. இது எப்போதுமே இந்தியாவின் நெறிமுறையாக உள்ளது. மேலும் சுற்றுச் சூழலுக்கேற்ற நிலையான வாழ்க்கை முறை இயக்கம் (லைஃப்-LiFE) மூலம், நமது பழமையான  மற்றும் நிலையான பாரம்பரியங்களிலிருந்து ஒட்டுமொத்த உலகமும் பயனடைய முடியும்.

இந்தப் பிரகடனம் பருவநிலை நீதி மற்றும் சமத்துவத்திற்கான நமது உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.  பருவநிலை மாற்றம் தொடர்பான சிக்கலில், உலகளாவிய வடக்கு நாடுகள் எனப்படும் வளர்ந்த நாடுகளிடமிருந்து கணிசமான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு தேவை என இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது. முதல் முறையாக, பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இருந்து டிரில்லியன் டாலர்கள் என்ற அளவுக்கு வளர்ச்சி நிதியின் உயர்வுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. வளரும் நாடுகள் 2030-ம் ஆண்டிற்குள் தங்களது தேசிய ரீதியான பங்களிப்புகளை நிறைவேற்ற 5.9 டிரில்லியன் டாலர் தேவை என்ற கோரிக்கையை ஜி20 ஏற்றுக்கொண்டது.

வளங்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சிறந்த, பெரிய மற்றும் மிகவும் பயனுள்ள பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் முக்கியத்துவத்தை ஜி20 வலியுறுத்துகிறது. அதே நேரத்தில், ஐநா சீர்திருத்தங்களில், குறிப்பாக ஐநா பாதுகாப்புக் கவுன்சில் போன்ற முக்கிய அமைப்புகளை மறுசீரமைப்பதில் இந்தியா ஒரு முன்னணிப்  பங்கை வகித்து வருகிறது. இது மிகவும் சமத்துவமான, உலகளாவிய ஒழுங்கை உறுதி செய்யும்.

இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டுப் பிரகடனத்தில் பாலின சமத்துவம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த ஆண்டு, மகளிருக்கு அதிகாரமளித்தல் குறித்த ஒரு சிறப்புப் பணிக்குழுவை உருவாக்குவது என  முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், நாடாளுமன்றத்திலும்  சட்டமன்றங்களிலும், மூன்றில் ஒரு பங்கு இடங்களை மகளிருக்கு ஒதுக்கும், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா-2023, நிறைவேற்றப்பட்டிருப்பது மகளிர் தலைமையிலான வளர்ச்சிக்கான அரசின் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.

 இணக்கமான கொள்கை, நம்பகமான வர்த்தகம், இலக்கை நோக்கிய பருவநிலை செயல்திட்ட நடவடிக்கைகள்  ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான முக்கிய அம்சங்களில் ஒத்துழைப்பை அதிகரிப்பதை ஜி20 புதுதில்லி பிரகடனம் உள்ளடக்கியுள்ளது. இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் போது 87 முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் 118 ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.  கடந்த கால எண்ணிக்கைகளை விட இது அதிகம் என்பது பெருமைக்குரிய அம்சமாகும்.

ஜி20 தலைமைத்துவத்தின் போது, புவிசார் அரசியல் பிரச்சனைகள், பொருளாதார மேம்பாடு, வளர்ச்சி ஆகியவை குறித்த விவாதங்களை இந்தியா நடத்தியது. பயங்கரவாதமும், அப்பாவிப் பொதுமக்களின் உயிரிழப்பும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும். சமரசமற்ற கொள்கையுடன் பயங்கரவாதத்தை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியது. பகைமையை  வளர்ப்பதைத் தவிர்த்து மனிதாபிமானத்தை உள்வாங்கி  செயல்படவேண்டும் எனவும், இது போருக்கான காலம் அல்ல என்பதையும் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

 ஜி20 தலைமைத்துவத்தின் போது இந்தியா அசாதாரணமான சாதனைகளை நிகழ்த்தியதில் நான்  மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பன்முகத்தன்மைக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளதுடன், உலகளாவிய தெற்கு நாடுகளின் குரல் வலுப்படுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சியை ஆதரிக்கும் செயல்பாடுகளுடன் மகளிருக்கு அதிகாரமளித்தலுக்காக எல்லா நிலைகளிலும் இந்தியா குரல் கொடுத்துள்ளது.

 மக்களையும், பூமியையும் மையமாகக் கொண்ட, அமைதி மற்றும் வளத்திற்கான கூட்டு நடவடிக்கைகள் வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்ற நம்பிக்கையுடன் ஜி20 தலைமைத்துவத்தை பிரேசிலிடம் இந்தியா ஒப்படைக்கிறது.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
A big deal: The India-EU partnership will open up new opportunities

Media Coverage

A big deal: The India-EU partnership will open up new opportunities
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
காசி-தமிழ் சங்கமம் மற்றும் 'ஏக் பாரத், ஸ்ரேஷ்ட பாரத்'-திற்கு (ஒரு பாரதம், வலுவான பாரதம்) அஞ்சலி
January 15, 2026

1026-ம் ஆண்டு நடத்தப்பட்ட சோம்நாத் மீதான முதல் தாக்குதலின் ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சோம்நாத் சுயமரியாதை விழாவில் பங்கேற்க நான் புனித பூமியான சோம்நாத் சென்றிருந்தேன். வரலாறு, கலாச்சாரம், இந்திய மக்களின் நீடித்த மனவுணர்வு ஆகியவற்றின் மீது பகிரப்பட்ட மரியாதையால் ஒன்றுகூடிய இந்த நினைவு நிகழ்வில் இந்தியா முழுவதிலுமிருந்து மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது, சௌராஷ்டிரா-தமிழ் சங்கமத்தின் போது சோம்நாத்துக்கு வந்திருந்த சிலரையும், காசி-தமிழ் சங்கமத்தின் போது காசிக்கு வந்திருந்த சிலரையும் நான் சந்தித்தேன். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அவர்கள் அளித்த பாராட்டு வார்த்தைகள் என்னை நெகிழச்செய்தன. எனவே, இந்த விஷயத்தில் சில எண்ணங்களை நான் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.

தமிழ் கற்காமல் இருப்பது என் வாழ்க்கையின் மிகப்பெரிய வருத்தம் என்று மனதின் குரல் நிகழ்ச்சியின் போது நான் கூறியிருந்தேன். அதிர்ஷ்டவசமாக, கடந்த சில ஆண்டுகளில், இந்தியா முழுவதும் தமிழ்க் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்தவும், 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை ஆழப்படுத்தவும் எங்கள் அரசுக்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அத்தகைய முயற்சிக்கு ஒரு சிறந்த உதாரணம் காசி-தமிழ் சங்கமம். நமது பண்பாட்டில், சங்கம் அல்லது சங்கமம் ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. இந்த வெளிச்சத்தில் பார்க்கும்போது, காசி-தமிழ் சங்கமம் உண்மையில் தனித்துவ முயற்சியாக விளங்குகிறது. இது இந்தியாவின் பல மரபுகளில் வாழும் ஒற்றுமையைக் கொண்டாடுகிறது. அதே நேரத்தில் அவற்றின் தனித்துவ அடையாளங்களை மதிக்கிறது.

அத்தகைய சங்கமத்தை நடத்துவதற்குக் காசியை விட சிறந்த இடம் எதுவாக இருக்க முடியும்? பழங்காலத்திலிருந்தே நாகரிகத்தின் நங்கூரமாகத் திகழ்ந்து வரும் அதே காசிக்கு... ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் அறிவையும், வாழ்க்கை அனுபவத்தையும், மோட்சத்தையும் தேடி வந்துள்ளனர்.

தமிழ் மக்களுடனும் கலாச்சாரத்துடனும் காசியின் தொடர்பு மிகவும் ஆழமானது. காசியில் உறைந்துள்ள பகவான் விஸ்வநாதர் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் உறைகிறார். தமிழ்நாட்டில் உள்ள தென்காசி, தெற்கின் காசி அல்லது தட்சிண காசி என்று அழைக்கப்படுகிறது. துறவி குமரகுருபர சுவாமிகள் தனது ஆன்மீகம், புலமை மற்றும் நிறுவனக் கட்டுமானம் மூலம் காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நீடித்த தொடர்பை உருவாக்கினார். தமிழ்நாட்டின் மிகச்சிறந்த புதல்வர்களில் ஒருவரான மகாகவி சுப்பிரமணிய பாரதி, காசியில் அறிவுசார் வளர்ச்சி மற்றும் ஆன்மீக விழிப்புணர்வுக்கான இடத்தைக் கண்டார். அவரது தேசியவாதம் ஆழமாகி, அவரது கவிதை கூர்மையானது. சுதந்திரமான, ஒன்றுபட்ட இந்தியா பற்றிய அவரது பார்வை தெளிவான வடிவம் பெற்றது இங்குதான். காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் நெருக்கமான பிணைப்பை எடுத்துக்காட்டும் இதுபோன்ற பல நிகழ்வுகள் உள்ளன.

காசி-தமிழ் சங்கமத்தின் முதல் நிகழ்வு 2022-ல் நடைபெற்றது. தொடக்க விழாவில் கலந்து கொண்டதை நான் நினைத்துப்பார்க்கிறேன். தமிழ்நாட்டிலிருந்து அறிஞர்கள், கைவினைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், எழுத்தாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பலர் காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு பயணம் செய்தனர்.

அடுத்தடுத்த நிகழ்வுகள் இந்த முயற்சியின் அளவையும் ஆழத்தையும் விரிவுபடுத்தின. புதிய கருப்பொருள்கள், புதுமையான வடிவங்கள் மற்றும் ஆழமான ஈடுபாட்டை அறிமுகம் செய்வதே இதன் நோக்கமாக இருந்தது. சங்கமம், அதன் முக்கிய உணர்வில் வேரூன்றி தொடர்ந்து மேம்படுவதை இது உறுதி செய்தது. 2023-ம் ஆண்டின் இரண்டாவது நிகழ்வில், மக்களுக்கு மொழி ஒரு தடையாக மாறாமல் இருப்பதை உறுதி செய்ய தொழில்நுட்பம் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது. மூன்றாவது நிகழ்வில், இந்திய அறிவுமுறைகள் மீது கவனம் செலுத்தப்பட்டது. அதே நேரத்தில், கல்வி சார்ந்த விவாதங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் அதிக அளவிலான பங்கேற்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கின. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது ஆண்டு நிகழ்வுகள் 2025 டிசம்பர் 2 அன்று தொடங்கியது. இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருள் மிகவும் சுவாரஸ்யமானது. தமிழ் கற்கலாம் என்ற அந்த கருப்பொருள் காசியிலும் அருகில் உள்ள பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு அழகான தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது. தமிழ்நாட்டிலிருந்து ஆசிரியர்கள் காசிக்கு வந்தனர். காசியைச் சேர்ந்த மாணவர்கள் மிகவும் மறக்கமுடியாத அனுபவத்தைப் பெற்றனர்! இந்த முறை பல சிறப்பு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தொல்காப்பியம், 4 இந்திய மொழிகளிலும் 6 வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

தென்காசியில் இருந்து காசிக்கு ஒரு தனித்துவமான நிகழ்வாக அகத்திய முனிவர் வாகனப் பேரணி மேற்கொள்ளப்பட்டது. வழியில், கண் மருத்துவ முகாம்கள், சுகாதார விழிப்புணர்வு முகாம்கள், டிஜிட்டல் எழுத்தறிவு முகாம்கள் போன்ற பல்வேறு இயக்கங்கள் நடத்தப்பட்டன. கலாச்சார ஒற்றுமையின் செய்தியைப் பரப்பிய பாண்டிய மன்னர் அதி வீர பராக்கிரம பாண்டியனுக்கு இந்தப் பேரணி அஞ்சலி செலுத்தியது. நமோ படித்துறையில் கண்காட்சிகள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கல்வி அமர்வுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவையும் நடைபெற்றன.

காசி தமிழ் சங்கமத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களில் ஒன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பதாகும். நமது வேர்களுடன் தங்கள் தொடர்பை ஆழப்படுத்த வேண்டும் என்ற நமது இளைஞர் சக்தியின் ஆர்வத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இதில் நடைபெற்ற பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளின் போது தங்கள் திறமையையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்த இது ஒரு சிறந்த தளமாகவும் அமைந்தது.

காசி தமிழ் சங்கமத்தின்போது மேற்கொண்ட காசி பயணத்தை மறக்கமுடியாத சிறப்பான பயணமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து உத்தரபிரதேசத்திற்கு மக்களை அழைத்துச் செல்ல இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கியது. பல ரயில் நிலையங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில், அவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். ரயில் பயணத்தில் மெல்லிசைப் பாடல்கள் ஒலிக்கச் செய்ததுடன், உரையாடல்களும் நடைபெற்றன.

காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்றவர்களுக்குக் காட்டப்பட்ட அரவணைப்புக்காகவும் சிறந்த விருந்தோம்பலுக்காகவும் காசியையும் உத்தரபிரதேசத்தையும் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளைப் நான் பாராட்ட விரும்புகிறேன். தமிழ்நாட்டிலிருந்து வந்த விருந்தினர்களுக்காக பலர் தங்கள் வீடுகளின் கதவுகளைத் திறந்து வரவேற்றனர். விருந்தினர்கள் தடையற்ற சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய உள்ளூர் நிர்வாகம் 24 மணி நேரமும் உழைத்தது. வாரணாசி மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான நான் இதில் பெருமைப்படாமல் இருக்க முடியாது!

இந்த முறை, காசி-தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. அதில் குடியரசுத் துணைத்தலைவரும் தமிழ்நாட்டின் பெருமைமிகு மைந்தருமான திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்தியாவின் ஆன்மீக மகத்துவத்தையும், தேசிய ஒருங்கிணைப்பையும் இத்தகைய தளங்கள் எவ்வாறு ஆழப்படுத்துகின்றன என்பதை எடுத்துரைத்து, மிகவும் ஊக்கமளிக்கும் உரையை அவர் நிகழ்த்தினார்.

காசி - தமிழ் சங்கமம் கலாச்சார புரிதலை வலுப்படுத்தி, மக்களிடையே பரிமாற்றங்களை வளர்க்கிறது. அத்துடன் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே நிலையான பிணைப்புகளை உருவாக்கி ஆரோக்கியமான விளைவுகளை இது ஏற்படுத்துகிறது. வரும் காலங்களில், இதை இன்னும் துடிப்பானதாக மாற்ற விரும்புகிறோம். மிக முக்கியமாக, இது 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை வலுவாக வளர்த்துள்ளது. இந்த உணர்வு பல நூற்றாண்டுகளாக நமது பண்டிகைகள், இலக்கியம், இசை, கலை, உணவு வகைகள், கட்டடக்கலை, அறிவுசார் அமைப்புகள் என பலவற்றின் மூலம் செழித்து வளர்ந்துள்ளது.

இந்த ஆண்டு இந்தக் காலகட்டம் இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு மிகவும் புனிதமான பண்டிகைக் காலமாகும். சூரியன், இயற்கை, விவசாயம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சங்கராந்தி, உத்தராயண், பொங்கல், மஹா பிஹு போன்ற பல்வேறு பண்டிகைகளை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர். இந்தப் பண்டிகைகள் மக்களை ஒருங்கிணைத்து, நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை வலுப்படுத்துகின்றன. இந்தப் பண்டிகைகளையொட்டி மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற பண்டிகைகள், நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தையும், கூட்டுப் பங்கேற்பையும், தேசிய ஒற்றுமையையும் வலுப்படுத்தி, தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.