இன்று, உலக விண்வெளி-விமான ஒருங்கிணைப்பில் இந்தியா ஒரு முன்னணி சக்தியாக வளர்ந்து வருகிறது: பிரதமர்
இந்தியா இன்று உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானச் சந்தையாக உள்ளது: பிரதமர்
உடான் திட்டத்தின் வெற்றி இந்திய சிவில் விமானப் போக்குவரத்தில் ஒரு பொற்கால அத்தியாயம்: பிரதமர்
உலகின் முன்னணி விமான நிறுவனங்களுக்கு, முதலீட்டிற்கான சிறந்த வாய்ப்பை இந்தியா வழங்குகிறது: பிரதமர்

எனது சகாக்களான மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு  மற்றும் முரளிதர் மொஹோல், ஐஏடிஏ ஆளுநர்கள் குழுவின் தலைவர் பீட்டர் எல்பர்ஸ் தலைமை  இயக்குநர்  வில்லி வால்ஷ், இண்டிகோவின் நிர்வாக இயக்குநர் ராகுல் பாட்டியா, மற்ற அனைத்து பிரமுகர்களே, பெண்களே மற்றும் தாய்மார்களே!


ஐஏடிஏ-வின் 81வது ஆண்டு பொதுக் கூட்டத்திற்கும் உலக விமானப் போக்குவரத்து உச்சிமாநாட்டிற்கும் பாரதத்திற்கு வருகை தரும் அனைத்து விருந்தினர்களையும் நான் வரவேற்கிறேன். உங்களை இங்கு சந்திப்பது ஒரு மகிழ்ச்சி. இந்த நிகழ்வு நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு பாரதத்தில் நடைபெறுகிறது. இந்த நான்கு தசாப்தங்களில், பாரதத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்றைய பாரதம் முன்பை விட அதிக தன்னம்பிக்கையால் நிரம்பியுள்ளது. உலகளாவிய விமானப் போக்குவரத்து சூழல் அமைப்பில் நாம் ஒரு பரந்த சந்தையாக மட்டுமல்லாமல், கொள்கைத் தலைமை, புதுமை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியின் சின்னமாகவும் இருக்கிறோம். இன்று, உலகளாவிய விண்வெளி-விமான ஒருங்கிணைப்பில் பாரதம் ஒரு தலையாய நாடாக  வளர்ந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சியை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.


நண்பர்களே,
இந்த உச்சிமாநாடும் இந்த உரையாடலும் விமானப் போக்குவரத்து பற்றியது மட்டுமல்ல - உலகளாவிய ஒத்துழைப்பு, பருவநிலை உறுதிப்பாடுகள் மற்றும் சமமான வளர்ச்சிக்கான நமது பகிரப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு ஊடகமாகவும் அவை உள்ளன. இந்த உச்சிமாநாட்டில் நடைபெறும் விவாதங்கள் உலகளாவிய விமானப் போக்குவரத்துக்கு புதிய திசையை வழங்கும். இந்தத் துறையின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை நாம் பயன்படுத்திக் கொள்ளவும், அவற்றை மிகவும் திறம்படப் பயன்படுத்தவும் முடியும் என்று நான் நம்புகிறேன்.

 

நண்பர்களே,
இன்று, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தையும் கண்டங்களுக்கு இடையேயான பயணங்களையும் ஒரு சில மணிநேரங்களில் கடந்துவிடுகிறோம். ஆனால் 21 ஆம் நூற்றாண்டின் உலகின் கனவுகளும் நமது எல்லையற்ற கற்பனைகளும் நிற்கவில்லை. இன்று, புதுமை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டின் வேகம் முன்பை விட அதிகமாக உள்ளது. நமது வேகம் அதிகரித்துள்ளதால், தொலைதூர இடங்களை நமது விதியின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளோம். நமது பயணத் திட்டங்கள் பூமியின் நகரங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாத ஒரு கட்டத்தில் நாம் இப்போது நிற்கிறோம். மனிதகுலம் இப்போது விண்வெளி விமானங்களையும் கிரகங்களுக்கு இடையேயான பயணத்தையும் வணிகமயமாக்குவதைக் கனவு காண்கிறது. இதற்கு இன்னும் காலம்  ஆகலாம் என்பது உண்மைதான் என்றாலும், விமானப் போக்குவரத்துத் துறை வருங்காலங்களில் பெரிய மாற்றம் மற்றும் புதுமைக்கான மையமாக மாறத் தயாராக உள்ளது என்பதை இது தெளிவாகக் குறிக்கிறது. இந்த அனைத்து சாத்தியக்கூறுகளுக்கும் பாரதம் முழுமையாகத் தயாராக உள்ளது. பாரதம் கொண்டிருக்கும் மூன்று வலுவான தூண்களின் அடிப்படையில் நான் இதைச் சொல்கிறேன்: முதலாவதாக, பாரதத்திற்கு சந்தை உள்ளது - மேலும் இந்த சந்தை வெறும் நுகர்வோர் குழு மட்டுமல்ல; இது பாரதத்தின் துடிப்பான மற்றும் லட்சிய சமூகத்தின் விருப்பங்களை பிரதிபலிக்கிறது. இரண்டாவதாக, தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான மக்கள்தொகை மற்றும் திறமை நம்மிடம் உள்ளது - நமது இளைஞர்கள் புதிய யுக கண்டுபிடிப்பாளர்கள், அவர்கள் செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் மற்றும் சுத்தமான ஆற்றல் போன்ற துறைகளில் முன்னேற்றங்களை இயக்குகிறார்கள். மூன்றாவதாக, தொழில்துறைக்கான திறந்த மற்றும் ஆதரவான கொள்கை சுற்றுச்சூழல் அமைப்பு எங்களிடம் உள்ளது. இந்த மூன்று திறன்களின் வலிமையுடன், பாரதத்தின் விமானப் போக்குவரத்துத் துறையை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்ல நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


நண்பர்களே,
சமீபத்திய ஆண்டுகளில், சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் பாரதம் முன்னெப்போதும் இல்லாத மாற்றத்தைக் கண்டுள்ளது. இன்று, பாரதம் உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தையாகும். நமது உடான் திட்டத்தின் வெற்றி இந்திய சிவில் விமானப் போக்குவரத்தில் ஒரு பொற்கால அத்தியாயமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், 15 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் குறைந்த கட்டணத்தில்  விமானப் பயணத்தைப் பெற்றுள்ளனர். மேலும் பலர் முதல் முறையாக விமானப் பயணத்தை மேற்கொள்ள முடிந்தது. நமது  விமான நிறுவனங்கள் தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன. இந்திய மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இணைந்து ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 240 மில்லியன் பயணிகளுக்கு விமானங்களை இயக்குகின்றன - இது உலகின் பெரும்பாலான நாடுகளின் மொத்த மக்கள்தொகையை விட அதிகமாகும். மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள், இந்த எண்ணிக்கை 500 மில்லியன் பயணிகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று, பாரதத்தில் 3.5 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன, மேலும் இந்த தசாப்தத்தின் இறுதியில், அந்த எண்ணிக்கை 10 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நண்பர்களே,
 2014 வரை பாரதத்தில் 74 செயல்பாட்டு விமான நிலையங்கள் இருந்தன. இன்று, அந்த எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. இந்திய விமான நிறுவனங்கள் 2,000 க்கும் மேற்பட்ட புதிய விமானங்களுக்கான ஆர்டர்களை வழங்கியுள்ளன. இது ஒரு ஆரம்பம் மட்டுமே. பாரதத்தின் விமானப் போக்குவரத்துத் துறை, அது உயர்ந்த சிகரங்களை எட்டத் தயாராக இருக்கும் நிலையில் இருந்து ஒரு தொடக்கப் புள்ளியில் நிற்கிறது. இந்தப் பயணம் புவியியல் எல்லைகளைக் கடப்பது மட்டுமல்லாமல், உலகை நிலைத்தன்மை, பசுமை இயக்கம் மற்றும் சமமான அணுகலை நோக்கி இட்டுச் செல்லும்.

 

நண்பர்களே,
இன்று, நமது விமான நிலையங்களின் கையாளும் திறன் ஆண்டுதோறும் 500 மில்லியன் பயணிகளை எட்டியுள்ளது. தொழில்நுட்பம் மூலம் பயனர் அனுபவத்தில் புதிய தரநிலைகளை அமைக்கும் உலகின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளில் பாரதம் இப்போது உள்ளது. பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் நாம் சமமாக கவனம் செலுத்துகிறோம். நிலையான விமான எரிபொருள்களை நோக்கி நாங்கள் நகர்கிறோம், பசுமை தொழில்நுட்பங்களில் முதலீடு செய்கிறோம், நமது கார்பன் தடத்தைக் குறைக்கிறோம், மேலும் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறோம். 


நண்பர்களே,
இங்குள்ள சர்வதேச விருந்தினர்களுக்கு, டிஜி யாத்ரா செயலியைப் பற்றி அறிந்து கொள்ள வலியுறுத்துகிறேன். டிஜி யாத்ரா விமானப் போக்குவரத்தில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு. முக சரிபார்ப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விமான நிலைய நுழைவாயிலில் இருந்து ஏறும் வாயில் வரை - இது ஒரு முழுமையான தடையற்ற பயண தீர்வை வழங்குகிறது. காகித ஆவணங்களை எடுத்துச் செல்லவோ அல்லது எந்த அடையாள அட்டையையும் காட்டவோ தேவையில்லை. இவ்வளவு பெரிய மக்கள்தொகைக்கு தரமான சேவைகளை வழங்குவதில் இந்தியாவின் அனுபவத்திலிருந்து பிறந்த இது போன்ற புதுமைகள், பல நாடுகளுக்கும் பயனளிக்கும் என்று நான் நம்புகிறேன். இது ஒரு பாதுகாப்பான மற்றும் புத்திசாலித்தனமான தீர்வாகும், மேலும் இது உலகளாவிய தெற்கிற்கு ஒரு மாதிரியாகவும் உத்வேகமாகவும் செயல்படும்.

 

நண்பர்களே,
புதிய இந்திய விமானச் சட்டம் நமது விமானச் சட்டங்களை உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் இணைக்கிறது. இதன் பொருள் பாரதத்தின் விமானச் சட்டங்கள் இப்போது எளிமையானவை, விதிமுறைகள் வணிகத்திற்கு ஏற்றவை, மற்றும் வரி அமைப்பு நெறிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, உலகின் முன்னணி விமான நிறுவனங்கள் பாரதத்தில் முதலீடு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.


நண்பர்களே,
விமானத் துறையில் வளர்ச்சி என்பது புதிய விமானங்கள், புதிய வேலைகள் மற்றும் புதிய வாய்ப்புகளைக் குறிக்கிறது. விமானத் துறை விமானிகள், பணியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தரை ஊழியர்களுக்கு புதிய வழிகளை உருவாக்குகிறது. 
உலகம் பாரதத்தை ஒரு விமானச் சந்தையாக மட்டுமல்லாமல், மதிப்புச் சங்கிலித் தலைவராகவும் பார்க்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வடிவமைப்பிலிருந்து விநியோகம் வரை, பாரதம் உலகளாவிய விமான விநியோகச் சங்கிலியின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறி வருகிறது. எங்கள் திசை சரியானது, எங்கள் வேகம் சரியானது, அது வேகமாக முன்னேற எங்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது. 


நண்பர்களே,
பாரதத்தின் விமானப் போக்குவரத்துத் துறையின் மற்றொரு வலுவான தூண் அதன் உள்ளடக்கிய மாதிரி. இன்று, பாரதத்தில் 15% க்கும் மேற்பட்ட விமானிகள் பெண்கள் - இது உலகளாவிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகம். உலகம் முழுவதும், கேபின் குழுப் பணிகளில் பெண்களின் சராசரி பங்கேற்பு சுமார் 70% ஆகும், அதே நேரத்தில் பாரதத்தின் எண்ணிக்கை 86% ஆக உள்ளது. 
இன்றைய விமானப் போக்குவரத்துத் துறையின் மற்றொரு முக்கிய அங்கம் ட்ரோன் தொழில்நுட்பம். தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு மட்டுமல்லாமல், நிதி மற்றும் சமூக உள்ளடக்கத்திற்கான ஒரு கருவியாகவும் பாரதம் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. ட்ரோன்கள் மூலம், நாங்கள் பெண்களின் சுயஉதவி குழுக்களை மேம்படுத்துகிறோம். இது விவசாயம், விநியோக சேவைகள் மற்றும் பிற அத்தியாவசியப் பகுதிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

 

 

நண்பர்களே,
விமானப் பயணத்தில் பாதுகாப்பை நாங்கள் எப்போதும் முதன்மையான முன்னுரிமையாகக் கொண்டுள்ளோம். பாரதம் அதன் விதிமுறைகளை உலகளாவிய தரநிலைகளுடன் இணைத்துள்ளது. சமீபத்தில், ஐசிஏஓ-வின் பாதுகாப்பு தணிக்கை எங்கள் முயற்சிகளைப் பாராட்டியது. ஆசிய-பசிபிக் அமைச்சர்கள் மாநாட்டில் தில்லி பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். பாரதம் எப்போதும் திறந்த வானம் மற்றும் உலகளாவிய இணைப்பை ஆதரித்து வருகிறது. சிகாகோ மாநாட்டின் கொள்கைகளை நாங்கள் நிலைநிறுத்துகிறோம். விமானப் பயணம் அனைவருக்கும் அணுகக்கூடிய வகையில், பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். விமானப் போக்குவரத்துத் துறையை இன்னும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல நீங்கள் அனைவரும் புதிய தீர்வுகளைக் கொண்டு வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


மிக்க நன்றி.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
IIT Madras incubates 112 startups, files 431 patents in FY26 milestone year

Media Coverage

IIT Madras incubates 112 startups, files 431 patents in FY26 milestone year
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister praises Sikkim’s extraordinary biodiversity during visit to Gangtok Orchidarium
April 28, 2026

Prime Minister Shri Narendra Modi visited the Orchidarium in Gangtok, Sikkim today and expressed his profound admiration for its beauty and the state's extraordinary biodiversity.

The Prime Minister described his visit to the Orchidarium as a mesmerizing experience. Shri Modi observed that such dedicated conservation efforts perfectly reflect our deep-rooted harmony with the natural world. He further noted that these initiatives serve as a vital inspiration for citizens to embrace conservation and sustainable living.

The Prime Minister wrote on X:

"Visited the Orchidarium in Gangtok and was mesmerised by its beauty. Sikkim’s rich biodiversity is truly extraordinary. Such efforts reflect our deep harmony with nature. They also inspire us towards conservation and sustainable living."