உலகின் நவீன பொருளாதார நாடுகளில் எஃகு உற்பத்தி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு வெற்றிக் கதைக்குப் பின்னும் எஃகின் சக்தி இருக்கிறது:பிரதமர்
இன்று உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது பெருமிதம் அளிப்பதாக உள்ளது: பிரதமர்
தேசிய எஃகுக் கொள்கையின் கீழ், 2030-ம் ஆண்டுக்குள் 300 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: பிரதமர்
எஃகுத் தொழிலுக்கான அரசின் கொள்கைகள், பிற இந்தியத் தொழில்களை உலக அளவில் போட்டியிட வைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன: பிரதமர்
நமது அனைத்து உள்கட்டமைப்புத் திட்டங்களின் நோக்கம் "ஏற்றுமதி இல்லை" மற்றும் "நிகர ஏற்றுமதி" என்பதாகும் : பிரதமர்
நாட்டின் எஃகுத் துறையானது புதிய செயல்முறைகள், தரங்கள், அளவுருக்களுக்கு தயாராக இருக்க வேண்டும்: பிரதமர்
எதிர்காலத்தை மனதில் கொண்டு எஃகு உற்பத்தியை விரிவுபடுத்தி மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் மற்றும் எதிர்காலத்துக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்: பிரதமர்
கடந்த 10 ஆண்டுகளில், சுரங்க நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதன் வாயிலாக இரும்புத் தாது கிடைப்பது எளிதாகியுள்ளது: பிரதமர்
ஒதுக்கீடு செய்யப்பட்ட சுரங்கங்களையும், நாட்டின் வளங்களையும் முறையாகப் பயன்படுத்த வேண்டிய தருணம் இது. பசுமை வயல் சுரங்கப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: பிரதமர்
நாம் ஒருங்கிணைந்து நெகிழ்த்திறன் கொண்ட, புரட்சிகரமான, எஃகு போன்ற வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்: பிரதமர்

மதிப்பிற்குரிய விருந்தினர்களே, எனது அமைச்சரவை சகாக்களே, தொழில்துறை தலைவர்களே, சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் எனது நண்பர்களே, வணக்கம். இன்றும், அடுத்த இரண்டு நாட்களிலும், பாரதத்தின் வளர்ந்து வரும் துறையான எஃகுத் துறையின் திறன்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விரிவான விவாதங்களில் ஈடுபட உள்ளோம். இந்தத் துறை, பாரதத்தின் முன்னேற்றத்தின் முதுகெலும்பாக விளங்குவதுடன், 'வளர்ந்த இந்தியா’ என்பதற்கான வலுவான அடித்தளமாகவும், நாட்டில் மாற்றத்திற்கான புதிய அத்தியாயத்தை எழுதும் துறையாகவும் திகழ்கிறது. இந்தியா ஸ்டீல் 2025-க்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சி, புதிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய கூட்டாண்மைகளை உருவாக்கவும், புதுமையை ஊக்குவிக்கவும் ஒரு புதிய தொடக்க தளமாக அமையும் என்று நான் நம்புகிறேன். இது எஃகுத் துறையில் புதிய அத்தியாயத்திற்கான அடித்தளத்தை அமைக்கும்.

 

நண்பர்களே,

உலகின் நவீன பொருளாதாரங்களில் எஃகு ஒரு சட்டகம் போன்ற பங்கை வகித்துள்ளது. வானளாவிய கட்டிடங்கள் அல்லது கப்பல் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அல்லது அதிவேக ரயில்கள், பொலிவுறு நகரங்கள் அல்லது தொழில்துறை தாழ்வாரங்கள் என ஒவ்வொரு வெற்றிக் கதையின் பின்னாலும் எஃகின் வலிமை உள்ளது.

 

இன்று, 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான இலக்கை நிறைவேற்ற பாரதம் பாடுபட்டு வருகிறது. இந்த இலக்கை அடைவதில் எஃகுத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளராக பாரதம் மாறியுள்ளது குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். தேசிய எஃகு கொள்கையின் கீழ், 2030 ஆம் ஆண்டுக்குள் 300 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்ய நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். தற்போது, நமது தனிநபர் எஃகு நுகர்வு தோராயமாக 98 கிலோகிராமாக உள்ளது, மேலும் இது 2030 க்குள் 160 கிலோகிராமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ந்து வரும் எஃகு நுகர்வு, நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு ஒரு பொன்னான தரமாக செயல்படுகிறது. இது நாட்டின் திசை மற்றும் அரசின் செயல்திறனுக்கான அளவுகோலாகும்.

 

நண்பர்களே,

இன்று, நமது எஃகு தொழில், அதன் எதிர்காலம் குறித்து புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையால் நிரப்பப்பட்டுள்ளது – ஏனென்றால் நாடு இப்போது பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின்  வடிவத்தில் ஒரு உறுதியான அடித்தளத்தைக் கொண்டுள்ளது. பிரதமரின் விரைவு சக்தி திட்டம் மூலம், பல்வேறு பயன்பாட்டு சேவைகள் மற்றும் தளவாட முறைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. நாட்டின் சுரங்கப் பகுதிகள் மற்றும் எஃகு ஆலைகளுக்கு இடையே பல்வகை இணைப்பை மேம்படுத்த வரைபடம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. எஃகுத் துறையின் பெரும்பகுதி அமைந்துள்ள நாட்டின் கிழக்குப் பிராந்தியங்களில், முக்கியமான உள்கட்டமைப்பை மேம்படுத்த புதிய திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. 1.3 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான தேசிய உள்கட்டமைப்பு திட்டத்தையும் நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். நமது நகரங்களை பொலிவுறு நகரங்களாக மாற்றுவதற்கான பணிகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலைகள், ரயில்வேக்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், குழாய்கள் ஆகியவற்றின் முன்னெப்போதும் இல்லாத வேகம் எஃகுத் துறைக்கு புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது. பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதேபோல், ஜல் ஜீவன் இயக்கம் நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் மிகப்பெரிய உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. பெரும்பாலும், இதுபோன்ற திட்டங்கள் நம் நாட்டில் ஒரு நலன் சார்ந்த நோக்கத்துடன்மட்டுமே பார்க்கப்படுகின்றன. ஆனால் ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த நலத்திட்டங்கள் எஃகு தொழிலையும் வலுப்படுத்துகின்றன. அரசின் திட்டங்களில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எஃகு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்த முயற்சிகளின் விளைவாக, கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பில் எஃகு நுகர்வில் கணிசமான பங்கு இப்போது அரசு தலைமையிலான முயற்சிகளிலிருந்து வருகிறது.

 

நண்பர்களே,

பல துறைகளின் வளர்ச்சியில் எஃகு ஒரு முதன்மை அங்கமாக உள்ளது. அதனால்தான் எஃகு தொழிலுக்கான அரசின் கொள்கைகளும், பல இந்திய தொழில்களை உலகளவில் போட்டியிடச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நமது உற்பத்தித் துறை, கட்டுமானம், இயந்திரங்கள், வாகனத் துறை என இவை அனைத்தும் இந்திய எஃகுத் தொழிலின் வலிமையைப் பெற்று வருகின்றன. இந்த ஆண்டு பட்ஜெட்டில், 'இந்தியாவில் உற்பத்தி செய்வோம்' திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான தேசிய உற்பத்தி இயக்கத்தை எங்கள் அரசு அறிவித்தது. இந்த பணி சிறிய, நடுத்தர மற்றும் பெரிய தொழில்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய உற்பத்தி இயக்கம் நமது எஃகுத் தொழிலுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும்.

 

நண்பர்களே,

நீண்ட காலமாக, பாரதம் உயர்தர எஃகுக்கு இறக்குமதியையே சார்ந்திருந்தது. இந்த நிலைமையை, குறிப்பாக பாதுகாப்பு மற்றும் உத்திசார் துறைகளில் மாற்றுவது மிகவும் முக்கியமானது. பாரதத்தின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலை உருவாக்க பயன்படுத்தப்பட்ட எஃகு, இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். சந்திரயான் திட்டத்தின் வரலாற்று வெற்றிக்கு இந்திய எஃகின் வலிமையும் பங்களித்துள்ளது. இன்று, நம்மிடம் திறமை மற்றும் நம்பிக்கை இரண்டும் உள்ளன - இது தற்செயலாக நடக்கவில்லை. பிஎல்ஐ (உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை) திட்டத்தின் கீழ், உயர்தர எஃகு உற்பத்தியை அதிகரிக்க ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே - நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. நாடு முழுவதும் பல மெகா திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் உயர்தர எஃகுக்கான தேவை மேலும் அதிகரிக்கப் போகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், உள்கட்டமைப்பில்  கவனம் செலுத்துவதன் ஒரு பகுதியாக, கப்பல் கட்டும் பணியை சேர்த்துள்ளோம். பாரதத்தில் தயாரிக்கப்பட்ட கப்பல்களை மற்ற நாடுகள் வாங்க வேண்டும் என்ற தொலைநோக்குடன் பாரதத்தில் நவீன மற்றும் பெரிய கப்பல்களை உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதேபோல், குழாய் அமைப்பதற்கான தரமான எஃகு மற்றும் அரிப்பைத் தாங்கும் வகையிலான உலோகக் கலவைகளுக்கான தேவையும் நாட்டிற்குள் அதிகரித்து வருகிறது.

 

நாட்டின் ரயில் உள்கட்டமைப்பு முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் விரிவடைந்து வருகிறது. இந்த அனைத்து தேவைகளுக்கும், நமது இலக்கு 'பூஜ்ஜிய இறக்குமதி' மற்றும் 'நிகர ஏற்றுமதி' என்பதாக இருக்க வேண்டும்! தற்போது, 25 மில்லியன் டன் எஃகு ஏற்றுமதியை இலக்காகக் கொண்டுள்ளோம். 2047 ஆம் ஆண்டுக்குள் நமது உற்பத்தித் திறனை 500 மில்லியன் டன்களாக விரிவுபடுத்தவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஆனால் இது நிகழ, நமது எஃகுத் துறை புதிய செயல்முறைகள், புதிய தரங்கள் மற்றும் ஒரு புதிய அளவுகளுக்குத் தயாராக இருக்க வேண்டும். எதிர்காலத்தை மையமாகக் கொண்ட மனநிலையுடன் தொழில்துறையை நாம் விரிவுபடுத்தி, மேம்படுத்த வேண்டும். நாம் இப்போதே எதிர்காலத்திற்குத் தயாராக இருக்க வேண்டும். எஃகுத் தொழிலின் வளர்ச்சித் திறன் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான எல்லையற்ற வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. புதிய சிந்தனைகளை வளர்த்து, பகிர்ந்து கொள்ள பொது மற்றும் தனியார் துறைகளுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றில் நாம் இணைந்து முன்னேறி, நமது நாட்டின் இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

 

நண்பர்களே,

 

எஃகு தொழில்துறையின் வளர்ச்சிப் பயணத்தில் சில சவால்கள் உள்ளன, முன்னோக்கி செல்வதற்கு அவற்றை நிவர்த்தி செய்வது அவசியம். மூலப்பொருள் பாதுகாப்பு, ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. நாம் இன்னும் நிக்கல், கோக்கிங் நிலக்கரி மற்றும் மாங்கனீசு ஆகியவற்றிற்கான இறக்குமதியை நம்பியுள்ளோம். எனவே, நாம் உலகளாவிய கூட்டாண்மைகளை வலுப்படுத்த வேண்டும், பாதுகாப்பான விநியோகச் சங்கிலிகளை உருவாக்க வேண்டும், தொழில்நுட்ப மேம்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். எரிசக்தித் திறன், குறைந்த உமிழ்வு மற்றும் டிஜிட்டல் ரீதியாக மேம்பட்ட தொழில்நுட்பங்களை நோக்கி நாம் வேகமாக நகர வேண்டும். எஃகுத் துறையின் எதிர்காலம் செயற்கை நுண்ணறிவு, தானியங்கி முறை, மறுசுழற்சி, துணை தயாரிப்பு பயன்பாடு ஆகியவற்றால் வடிவமைக்கப்படும். எனவேதான் இந்தத் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான நமது முயற்சிகளை நாம் தீவிரப்படுத்த வேண்டும். நமது உலகளாவிய கூட்டாளிகளும், இந்திய நிறுவனங்களும் இந்த திசையில் இணைந்து செயல்பட்டால், இந்த சவால்களை நாம் விரைவாக சமாளிக்கலாம்.

 

நண்பர்களே,

நிலக்கரி இறக்குமதி, குறிப்பாக கோக்கிங் நிலக்கரி, செலவு மற்றும் பொருளாதாரம் இரண்டையும் பாதிக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நாம் மாற்று வழிகளைத் தேட வேண்டும். இன்று, டிஆர்ஐ (நேரடியாகக் குறைக்கப்பட்ட இரும்பு) பாதை மற்றும் பிற நவீன முறைகள் போன்ற தொழில்நுட்பங்கள் கிடைக்கின்றன, அவற்றை மேலும் ஊக்குவிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். நிலக்கரி வாயுமயமாக்கலையும் நாம் பயன்படுத்தலாம், இது நாட்டின் நிலக்கரி வளங்களை சிறப்பாகப் பயன்படுத்தவும், இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்கவும் அனுமதிக்கிறது. எஃகுத் தொழிலில் உள்ள அனைத்து நிறுவனங்களும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக மாறி, இந்த திசையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

மற்றொரு முக்கியமான பிரச்சினை, பயன்படுத்தப்படாத பசுமை சுரங்கங்கள் சார்ந்ததாகும். கடந்த 10 ஆண்டுகளில், நாடு பல சுரங்க சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது, இது இரும்புத் தாது மிகவும் எளிதாகக் கிடைக்கச் செய்துள்ளது. இப்போது, இந்த ஒதுக்கப்பட்ட சுரங்கங்களையும் நமது தேசிய வளங்களையும் முறையாகவும் சரியான நேரத்திலும் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. இதில் தாமதம் ஏற்பட்டால் அது நாட்டுக்கு மட்டுமல்ல, தொழில்துறைக்கும் இழப்பை ஏற்படுத்தும். அதனால்தான் பசுமை சுரங்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

 

நண்பர்களே,

இன்றைய பாரதம் உள்நாட்டு வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தவில்லை, உலகளாவிய தலைமையை ஏற்கவும் தயாராகி வருகிறது. உயர்தர எஃகின் நம்பகமான விநியோகஸ்தராக உலகம் இன்று நம்மைப் பார்க்கிறது. நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல, எஃகில் உலகத் தரத்தை நாம் பராமரிக்க வேண்டும், தொடர்ந்து நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துதல், பல்வகை போக்குவரத்து கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் செலவுகளைக் குறைத்தல் ஆகியவை அனைத்தும் இந்தியாவை உலகளாவிய எஃகு மையமாக மாற்ற உதவும்.

 

நண்பர்களே,

இந்த இந்தியா ஸ்டீல் மேடை நமது திறன்களை விரிவுபடுத்தவும், நமது யோசனைகளுக்கு உயிர் கொடுக்கவும் நமக்கு ஒரு வாய்ப்பாகும். இந்தத் தருணத்தில் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நெகிழ்ச்சியான, புரட்சிகரமான, எஃகு நிறைந்த வலுவான பாரதத்தை உருவாக்க நாம் ஒன்றிணைவோம்.

 

நன்றி.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Womaniya' initiative of GeM, sees 27.6% growth, Rs 28,000 crore contracts awarded to women MSEs

Media Coverage

Womaniya' initiative of GeM, sees 27.6% growth, Rs 28,000 crore contracts awarded to women MSEs
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles loss of lives in a mishap in Katihar, Bihar
April 11, 2026
PM announces ex-gratia from PMNRF

Prime Minister Shri Narendra Modi today expressed profound grief over the tragic mishap in Katihar, Bihar, describing the incident as extremely painful.

The Prime Minister extended his heartfelt condolences to the families who have lost their loved ones and prayed for the earliest recovery of those who sustained injuries. Shri Modi further announced an ex-gratia of Rs. 2 lakh from the Prime Minister’s National Relief Fund (PMNRF) for the next of kin of each deceased, noting that Rs. 50,000 would be provided to those injured in the accident.

The Prime Minister wrote on X:

"The mishap in Katihar, Bihar, is extremely painful. Condolences to those who have lost their loved ones. May the injured recover at the earliest.

An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000."