உங்கள் அனைவருடனும் பேசும்போது, நம் நாட்டின் பொம்மை தொழிலில் மிகப்பெரிய ஆற்றல் மறைந்து கிடப்பது தென்படுகிறது. இந்தியாவில் பொம்மைத் தொழிலில் ஒளிந்து கிடக்கும் திறனை வெளிக்கொணரவும், சுயசார்பு இந்தியாவுக்கான இயக்கத்தின் ஒரு பெரும் பகுதியாக அது அடையாளம் பெற வகை செய்யவும் இந்த ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். நாட்டின் முதல் பொம்மை கண்காட்சியான இதில் கலந்து கொள்வது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும். என்னுடன் இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்டுள்ள எனது அமைச்சரவை தோழர்கள், பொம்மை தொழிலின் பிரதிநிதிகள், இக்கலையை தொழிலாகக் கொண்டுள்ள அனைத்து சகோதர, சகோதரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் வணக்கம்.

இந்த முதலாவது பொம்மை கண்காட்சி, வெறும் வர்த்தக நிகழ்வோ அல்லது பொருளாதார நிகழ்வோ அல்ல. இந்தக் கலை நாட்டின் பண்டைக்கால விளையாட்டு கலாச்சாரத்தையும், உற்சாகத்தையும் வலுப்படுத்துவதற்கான ஒரு இணைப்பாகும். இந்தக் கண்காட்சியில், 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த கலைஞர்கள், பள்ளிகள், பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்சியாளர்கள் கலந்து கொண்டிருப்பதாக என்னிடம் சொல்லப்பட்டது. பொம்மை வடிவமைப்பு, புதுமை, தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல், பொம்மைகளை பெட்டிகளில் அடைத்தல் ஆகியவை பற்றி விவாதிக்கவும், தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு தளமாகவும் இந்த பொம்மை கண்காட்சி திகழ்கிறது. இந்தப் பொம்மை கண்காட்சியில், நாட்டின் ஆன்லைன் விளையாட்டு தொழிலின் சூழல் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுகள் இங்கு உள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் பொம்மை கண்காட்சியில் முக்கிய பங்கை செலுத்தி வரும் தோழர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் பொம்மைகளுடனான படைப்பாற்றல் உறவு, நாட்டின் வரலாறு போல மிகவும் பழமையானது. சிந்து சமவெளி நாகரிகம், மொஹெஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிக காலத்தின் பொம்மைகள் பற்றி உலகம் முழுவதும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

பண்டையக் காலங்களில், உலகத்திலிருந்து பயணிகள் இந்தியாவிற்கு வந்தபோது, அவர்கள் இந்தியாவில் விளையாட்டுகளை கற்றுக் கொண்டனர். தாங்கள் கற்றுக் கொண்டவற்றை தங்களுடன் எடுத்துச் சென்றனர். இன்று உலகில் மிகவும் பிரபலமாக விளங்கும் செஸ் விளையாட்டு, பண்டைக்காலத்தில் இந்தியாவில் 'சதுரங்கா அல்லது சதுரங்கம்'' என்ற பெயரில் விளையாடப்பட்டது. நவீன லூடோ முற்காலத்தில் 'பச்சீசி' ஆக விளையாடப்பட்டுக் கொண்டிருந்தது.நமது இதிகாசங்களில் பலராமருக்கு நிறைய பொம்மைகள் இருந்ததாக விவரிக்கப்பட்டுள்ளது.

கோகுலத்தில், கோபால கிருஷ்ணன் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு வெளியே பந்து விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நமது பண்டைய கோவில்களிலும், விளையாட்டு, பொம்மைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் பற்றிய சிற்பங்களைக் காணலாம். குறிப்பாக, தமிழகத்தின் சென்னையில், பல்வேறு வகையான பொம்மைகள் மற்றும் விளையாட்டுக்கள் சுவரில் வரையப்பட்டிருப்பதைக் காணலாம்.

நண்பர்களே, எந்த கலாச்சாரத்திலும், விளையாட்டுக்களும், பொம்மைகளும் நம்பிக்கையின் மையங்களாக விளங்கும் போது, சமுதாயம் விளையாட்டு அறிவியலை நன்கு புரிந்து கொண்டுள்ளதாகப் பொருளாகும். குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பங்களிக்கும் பொம்மைகள் நம்மிடம் உள்ளன. இன்றைக்கும், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் எளிமையானவையாகவும், நவீனபொம்மைகளை விட விலை குறைவாகவும் உள்ளதைக் காணலாம். அவை, சமூக, புவியில் சூழலுடன் தொடர்பு கொண்டவையாகும்.

 

நண்பர்களே, மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்வது இந்திய வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது, இது நம் பொம்மைகளிலும் காணப்படுகிறது. பெரும்பாலான இந்திய பொம்மைகள், இயற்கையான பொருட்களிலிருந்தும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான பொருட்களிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் பயன்படுத்தப்படும் வண்ணங்களும் இயற்கையானவையாக, பாதுகாப்பானவையாக உள்ளன. இந்த பொம்மைகள் நம் மனதை, நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்துடன் இணைக்கின்றன, சமூக மன வளர்ச்சிக்கும், இந்தியக் கண்ணோட்டம் என்பதை வளர்ப்பதற்கும் இவை உதவுகின்றன. நாட்டின் பொம்மை உற்பத்தியாளர்கள், சூழலியல், உளவியல் ஆகிய இரண்டிற்கும் ஏற்ற வகையிலான சிறந்த பொம்மைகளை உருவாக்க வேண்டும். பொம்மைகளில் மிகக்குறைந்த அளவிலான நெகிழியைப் பயன்படுத்துவதுடன், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். திருவிழாக்களின் போது, தங்களிடம் உள்ள பொம்மைகளை மற்றவர்களுக்கு காட்டி மகிழ்வதை நமது மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்தப் பொம்மைகளின் மூலம் குழந்தைகள் நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் சிறு வயதில் இருந்தே கற்றுக் கொள்ளத் தொடங்குகின்றனர். இதுதான் நமது மண் வாசனையாகும்.

அன்பார்ந்த குழந்தைகளே, நண்பர்களே, குழந்தைகளுக்கு பொம்மைகளைக் கொடுக்கும் போது, அவற்றில் பல்வேறு வண்ணங்கள் இருப்பதைக் குறிப்பிட்டு, குருதேவ் தாகூர் எழுதிய ஒரு கவிதையில், வண்ணங்கள் குழந்தைகளின் கற்பனைத் திறனை ஊக்குவிப்பதாகக் குறிப்பிடுகிறார். இன்று உலகம் முழுவதும், ஒவ்வொரு துறையிலும், இந்தியக் கண்ணோட்டம் மற்றும் இந்தியக் கருத்துக்கள் பற்றிப் பேசப்படுகின்றன. அறிவு, அறிவியல், பொழுதுபோக்கு மற்றும் உளவியல் ஆகியவற்றைத் தம்முள் கொண்டவை என்பதே, இந்திய விளையாட்டுகள் மற்றும் பொம்மைகளின் சிறப்பாகும்.

குழந்தைகள் பம்பரம் சுற்றி விளையாடக் கற்றுக் கொள்ளும்போது, அவர்கள் ஈர்ப்பு விதி மற்றும் சமநிலை விதி குறித்து பாடம் பயின்று விடுகின்றனர். அதே போல், ஒரு குழந்தை கிட்டிப்புள் விளையாடும் போது, இயக்க ஆற்றல் திறனை அடிப்படையாகக் கொண்ட பாடங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்குகிறது. புதிர் பொம்மைகள் சிந்தனையையும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறமையையும் உருவாக்குகின்றன. இதேபோல், சிறு குழந்தைகளும் கைகளைச் சுழற்றுவதன் மூலம், தங்கள் கைகளால் வட்டம் போடுவது போலான அசைவுகளைச் செய்ய முடியும் என்று உணரத் தொடங்குகிறார்கள்.

நண்பர்களே, கற்பனையால் உருவாக்கப்படும் பொம்மைகள் குழந்தைகளின் உணர்வுகளை மேம்படுத்தி, அவர்களின் கற்பனைகளுக்கு சிறகுகளைத் தருகின்றன. அவர்களின் கற்பனைகளுக்கு எல்லையே இல்லை. அவர்களுக்கு தேவையானது ஒரு சிறிய பொம்மை, அது அவர்களின் ஆர்வத்தை பூர்த்திசெய்து, அவர்களின் படைப்பாற்றலைத் தட்டியெழுப்புகிறது.

குழந்தைகளின் கற்றல் முறையில், பொம்மைகள் முக்கிய பங்கு வகிப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் விளையாட வேண்டியது அவசியமாகும். பொம்மைகளின் அறிவியலையும், குழந்தைகளின் வளர்ச்சியில் அவை ஆற்றும் பங்கையும் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பித்தலுக்கு பொம்மைகளைப் பயன்படுத்த வேண்டும். இந்தத் திசையில், அரசாங்கம் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கை மூலம் இத்தகைய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

புதிய கல்விக் கொள்கை, பெருமளவில், விளையாட்டு அடிப்படையிலான மற்றும் செயல்பாட்டு அடிப்படையிலான கல்வியை ஒருங்கிணைக்கிறது. இந்தக் கல்வி முறையின் கீழ், குழந்தைகளின் தர்க்கரீதியான, ஆக்கபூர்வமான சிந்தனையின் வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். பொம்மைகள் துறையில் இந்தியா பாரம்பரியமும், தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இந்தியாவிடம் இதுகுறித்து பல்வேறு கருத்துக்களும், திறனும் உள்ளது.

நண்பர்களே, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலான பொம்மைகளை நோக்கி, உலகத்தை மீண்டும் பயணிக்க வைக்க நம்மால் முடியும், நம்முடைய மென்பொருள் பொறியாளர்கள் கணினி விளையாட்டுகள் மூலம் இந்தியாவின் கதைகளை உலகம் முழுதும் பரவச் செய்ய முடியும். இவை அனைத்தும் நம்மிடம் இருந்த போதிலும், இன்று 100 பில்லியன் டாலர் அளவிற்குள்ள உலக பொம்மை சந்தையில், இந்தியாவின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது. நாட்டில் 85% பொம்மைகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நிலைமையை மாற்ற வேண்டியது அவசியமாகும்.

நாடு இப்போது 24 முக்கிய துறைகளில் பொம்மைத் தொழிலை தரப்படுத்தியுள்ளது. தேசிய பொம்மை செயல் திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்களை போட்டித்தன்மை உடையனவாகச் செய்வதற்காகவும், பொம்மைகள் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடையவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பொம்மைகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்படுவதற்காக, 15 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இயக்கம் முழுமையிலும், பொம்மை தயாரிப்புக் கூட்டு முயற்சிகளில் மாநில அரசுகள் சம பங்கு உடையவையாக ஆக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், பொம்மை சுற்றுலாவிற்கான சாத்தியக் கூறுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விளையாட்டு அடிப்படையிலான இந்திய பொம்மைகள் தயாரிப்பை ஊக்குவிப்பதற்காக டாயாத்தான் 2021 ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து, ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட யோசனைகள், ஆலோசனைகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. இது, ஏற்கனவே, பன்னெடுங்காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த இந்தத் துறையில், இந்தியாவில் அசாதாரணமான திறன்களும், வாய்ப்புகளும் நிறைந்திருப்பதைக் காட்டுகின்றன.

இன்று, ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை’ என்பதற்கு ஒரு தேவை இருக்கிறது என்றால், ‘இந்தியாவில் கைகளால் தயாரிக்கப்பட்டவை’ என்பதற்கான தேவையும் சம அளவில் அதிகரித்து வருகிறது. இன்று மக்கள் பொம்மைகளை ஒரு விளையாட்டுப் பொருளாக மட்டும் வாங்காமல், அந்தப் பொம்மையுடன் தொடர்புடைய அனுபவத்துடன் இணைய விரும்புகிறார்கள். எனவே ‘இந்தியாவில் கைகளால் தயாரிக்கப்பட்டவை’ என்பதை நாம் ஊக்குவிக்க வேண்டும். நாம் ஒரு பொம்மையை உருவாக்கும் போது, அதில் குழந்தையின் மனதையும், அதன் உள்ளார்ந்த மகிழ்ச்சியையும், கனவுகளையும் உள்வாங்கிக் கொண்டு தயாரிப்பது அவசியம். இதில் தான் நமது வருங்காலம் அடங்கியுள்ளது.

இந்தப் பொறுப்புணர்வை நமது நாடு உணர்ந்துள்ளது பற்றி நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நமது சற்சார்பு இந்தியா இயக்கம், குழந்தைப் பிராயத்தில் புதிய உலகை உருவாக்கும். இந்த நம்பிக்கையுடன் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது இந்திய பொம்மைகளை உலகுக்கு புதிய அணுகுமுறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் எடுத்துச் செல்ல தொடர்ந்து முயற்சிகளை எடுப்பது நமது கடமையாகும். இந்தக் கண்காட்சி நம்மை இந்தத் திசையில் கொண்டு செல்வதற்கான வலுவான நடவடிக்கையாக அமையும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. மீண்டும் உங்களுக்கு வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Why The SHANTI Bill Makes Modi Government’s Nuclear Energy Push Truly Futuristic

Media Coverage

Why The SHANTI Bill Makes Modi Government’s Nuclear Energy Push Truly Futuristic
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chief Minister of Gujarat meets Prime Minister
December 19, 2025

The Chief Minister of Gujarat, Shri Bhupendra Patel met Prime Minister, Shri Narendra Modi today in New Delhi.

The Prime Minister’s Office posted on X;

“Chief Minister of Gujarat, Shri @Bhupendrapbjp met Prime Minister @narendramodi.

@CMOGuj”