இந்தியாவின் வலிமை மற்றும் உத்வேகத்தின் சின்னம் நேதாஜி ; பிரதமர்

ஜெய்ஹிந்த்!

ஜெய்ஹிந்த்!

ஜெய்ஹிந்த்!

மேற்கு வங்க ஆளுநர் திரு ஜெக்தீப் தன்க்கார் அவர்களே, மேற்கு வங்க முதலமைச்சர் சகோதரி மம்தா பானர்ஜி அவர்களே, அமைச்சரவையில் எனது சகாக்களான திரு பிரஹலாத் படேல் அவர்களே, திரு பாபுல் சுப்ரியோ அவர்களே, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நெருங்கிய உறவினர்களே, இந்தியாவின் பெருமிதத்தை விரிவாக்கிய ஆசாத் ஹிந்த் ராணுவத்தின் துணிச்சல்மிக்க உறுப்பினர்களே, அவர்களின் உறவினர்களே, இங்கே வருகை தந்துள்ள கலை மற்றும் இலக்கிய உலகின் ஆளுமைகளே, இந்த மகத்தான வங்க பூமியைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகளே,

இன்றைய எனது கொல்கத்தா வருகை எனக்கு மிகவும் உணர்ச்சிமயமான தருணமாகும். குழந்தைப்பருவத்திலிருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்ற பெயரை நான் கேட்ட போதெல்லாம், எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும், புதிய சக்தியை எனக்குள் அது பரவச்செய்தது. இவ்வளவு உயர்ந்த ஆளுமைபற்றி விவரித்துக்கூற வார்த்தைகள் போதாது! அவர் ஆழமான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தார், அதனை முழுமையாகப் புரிந்துகொள்ள ஒருவர் பல பிறப்புகள் எடுக்கவேண்டியிருக்கும். அறைகூவல் மிக்க சூழ்நிலையிலும் கூட அவர் பெருமளவு மன உறுதியையும் தைரியத்தையும் கொண்டிருந்தார், உலகின் மாபெரும் சவாலும் கூட அவரை அச்சப்படுத்த முடியவில்லை. நான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்குத் தலைவணங்குகிறேன், அவருக்கு வணக்கம் செலுத்துகிறேன். நேதாஜியை ஈன்றெடுத்த அன்னை பிரபாதேவி அவர்களையும் நான் வணங்குகிறேன். 125 ஆண்டுகள் நிறைவடையும் இன்றையதினம் புனிதமானது. 125 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில், சுதந்திர இந்தியாவின் கனவுக்குப் புதிய திசையை வழங்கிய அந்த வீரப்புதல்வர் பாரதத்தாயின் மடியில் பிறந்தார். நேதாஜியின் 125வது பிறந்த நாளான இன்று, அந்த மகத்தான மனிதரை இந்த மகத்தான தேசத்தின் சார்பாக நான் வணங்குகிறேன்.

நண்பர்களே,

குழந்தை சுபாஷை நேதாஜியாக மாற்றியதற்காகவும் அவரது வாழ்க்கையை மனவுறுதி, தியாகம், சுயகட்டுப்பாடு ஆகியவற்றுடன் செதுக்கியதற்காகவும் நீதி நேர்மை வாய்ந்த வங்கத்தை இன்று நான் மிகுந்த மதிப்புடன் வணங்குகிறேன். இந்தப் புனிதமான பூமிதான் நாட்டுக்கு தேசிய கீதத்தையும் தந்தது, தேசியப் பாடலையும் தந்தது. இதே பூமிதான் நமக்கு தேசபந்து சித்தரஞ்சன் தாசை, சியாமா பிரசாத் முகர்ஜியை, நமது அன்பிற்குரிய பாரதரத்னா பிரணாப் முகர்ஜியை அறிமுகம் செய்தது. இந்தப் புனித நாளில் இந்த பூமியின் இத்தகைய லட்சக்கணக்கான மாபெரும் ஆளுமைகளின் பாதங்களிலும் நான் வணங்குகிறேன்

நேதாஜியின் உந்துதலோடு இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கும்போது, அனைத்துத் தருணத்திலுமான அவரது பங்களிப்பை நாம் நினைவு கூர்வது நமது கடமையாகும். தலைமுறை தலைமுறையாக அது நினைவுகூரப்படவேண்டும். எனவே நேதாஜியின் 125-வது பிறந்தநாளை வரலாற்றுச் சிறப்புமிக்க, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மேன்மையான நிகழ்வுகளுடன் கொண்டாட நாடு முடிவுசெய்துள்ளது. இன்று காலையிலிருந்து நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக நேதாஜியின் நினைவாக இன்று நாணயம் மற்றும் தபால் தலை வெளியிடப்பட்டது. நேதாஜியின் கடிதங்கள் பற்றிய ஒரு புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது. நேதாஜியின் கர்மபூமியான வங்கத்தின் கொல்கத்தாவில் அவரது வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒரு கண்காட்சியும் திட்ட வரைபடக்காட்சியும் தொடங்கப்பட்டுள்ளது. ஹௌராவிலிருந்து இயக்கப்படும் 'ஹௌரா-கல்கா மெயில்' நேதாஜி எக்ஸ்பிரஸ் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நேதாஜியின் பிறந்த நாள், அதாவது ஜனவரி 23, 'பராக்கிரம திவஸ்' (வல்லமை தினம்) என்று கொண்டாடப்படும் என நாடு முடிவு செய்துள்ளது.

சுதந்திரத்திற்காக ஆசாத் ஹிந்த் ராணுவத்தை வலுப்படுத்த, நாட்டிற்கு வெளியே வாழ்ந்துகொண்டிருந்த இந்தியர்களின் மனசாட்சியை அசைப்பதற்காக அவர் வெளிநாடுகளுக்கு சென்றார். நாட்டின் அனைத்து சாதி, சமயம், பகுதியைச் சேர்ந்த மக்களை ராணுவ வீரர்களாக உருவாக்கினார். பெண்களின் பொதுவான உரிமைகள் பற்றி உலகம் விவாதித்துக் கொண்டிருந்த காலத்தில் நேதாஜி பெண்களை ராணுவத்தில் சேர்த்து ராணி ஜான்சி படைப்பிரிவை உருவாக்கினார். ராணுவ வீரர்களுக்கு நவீன போர்க்கலையில் பயிற்சி தந்தார், நாட்டுக்காக வாழும் உணர்வை அவர்களுக்குத் தந்தார், நாட்டுக்காக மடியும் எண்ணத்தை அவர்களுக்குத் தந்தார்.

சகோதர, சகோதரிகளே,

ஆசாத் ஹிந்த் ராணுவத்தின் தொப்பியை அணிந்து செங்கோட்டையில் நான் கொடியேற்றியபோது என் முன்நெற்றியில் அதனைப் பொருத்தினேன். அந்த நேரத்தில் ஏராளமானவை எனக்குள் சென்றன. அங்கே பல கேள்விகள், பல விஷயங்கள் இருந்தன, வித்தியாசமான உணர்வு இருந்தது. நான் நேதாஜியை நினைத்துக்கொண்டிருந்தேன், நாட்டு மக்களைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். வாழ்நாள் முழுவதும் யாருக்காக ஆபத்தான பணியை அவர் மேற்கொண்டார்?

நமக்காக, உங்களுக்காக என்பதுதான் இதற்கான பதில். நேதாஜி சுபாஷ் பாபுவுக்கு ஒவ்வொரு இந்தியரும் கடன்பட்டிருக்கிறார்கள். 130 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் உடலில் ஓடும் ஒவ்வொரு துளி ரத்தமும் நேதாஜி சுபாஷுக்குக் கடன்பட்டுள்ளது. இந்தக் கடனை நாம் எவ்வாறு திருப்பிச் செலுத்துவோம்? இந்தக் கடனை திருப்பிச் செலுத்த நம்மால் இயலுமா?

நண்பர்களே,

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நாட்டின் மிகப்பெரிய பிரச்சனைகளாக வறுமை, எழுத்தறிவின்மை, நோய் ஆகியவற்றை வரிசைப் படுத்தினார். இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண சமூகம் ஒன்றிணைய வேண்டும், ஒருங்கிணைந்த முயற்சிகள் செய்யவேண்டும். நாட்டில் நீதி மறுக்கப்பட்டவர்களுக்கு, சுரண்டப்பட்டவர்களுக்கு, ஏது மற்றவர்களுக்கு, விவசாயிகளுக்கு, பெண்களுக்கு அதிகாரமளிக்கக் கடுமையான முயற்சிகளை மேற்கொள்வதில் நான் திருப்தியடைந்திருக்கிறேன். இன்று ஒவ்வொரு ஏழையும் கட்டணமின்றி சிகிச்சை பெறுகிறார். நாட்டின் விவசாயிகளுக்கு விதைகளிலிருந்து சந்தைகள்வரை நவீன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயம் செய்பவர்களின் செலவைக் குறைக்க முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு இளைஞருக்கும் நவீனமான, தரமான கல்வியை உறுதிப்படுத்த நாட்டின் கல்விக் கட்டமைப்பு நவீனமாக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ், ஐஐடிகள், ஐஐஎம்கள் போன்று ஏராளமான கல்வி நிறுவனங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. 21ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப புதிய தேசிய கல்விக் கொள்கையும் நாட்டில் இன்று அமலாக்கப்படுகிறது.

நண்பர்களே,

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றங்களை, இந்தியா பெற்றிருக்கும் வளர்ச்சியைக் காணும்போது நேதாஜி எத்தகைய உணர்வைப் பெறுவார் என்று நான் அடிக்கடி நினைப்பேன். உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களில் சுயசார்பை அவரது நாடு பெற்றிருப்பதைக் காணும்போது எத்தகைய உணர்வை அவர் பெறுவார்? உலகம் முழுவதும் உள்ள பெரிய நிறுவனங்களில், கல்வியில், மருத்துவத் துறையில் இந்தியாவின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணும்போது அவர் எத்தகைய உணர்வைப் பெறுவார்? இன்று இந்திய ராணுவத்தில் ரஃபேல் போன்ற நவீன போர்விமானங்களும் இருக்கின்றன, தேஜாஸ் போன்ற நவீன போர்விமானங்களையும் இந்தியா தயாரிக்கிறது. இன்று மிகவும் சக்தி வாய்ந்ததாக அவரது நாட்டின் ராணுவம் இருப்பதையும்

அவர் விரும்பிய நவீன போர்த் தளவாடங்கள் பெறுவதையும் காணும் போது அவர் எத்தகைய உணர்வைப் பெறுவார்?

மிகப்பெரிய நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடுகின்ற, தடுப்பூசிகள் போன்ற அறிவியல் பூர்வமான தீர்வுகளை உருவாக்குகின்ற

இந்தியாவைக் காணும்போது அவர் எத்தகைய உணர்வைப் பெறுவார்? மருந்துகள் வழங்குவதன் மூலம் உலகின் மற்ற நாடுகளுக்கு இந்தியா உதவி செய்வதைக் காணும்போது அவர் எவ்வளவு பெருமித உணர்வைப் பெற்றிருப்பார்? ஏதோ ஒரு வடிவில் நம்மைக் காண்கிற நேதாஜி, நமக்கு அவரின் ஆசிகளையும், அவரின் அன்பையும் வழங்கிக்கொண்டிருக்கிறார். எல்ஏசி முதல் எல்ஓசிவரை அவர் கற்பனைசெய்த வலுவான இந்தியாவை உலகம் காண்கிறது. இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் ஏற்படுத்தும் எந்த முயற்சியாக இருந்தாலும் இன்று இந்தியா தக்க பதிலடி தருகிறது.

நண்பர்களே,

நேதாஜி பற்றி பேசுவதற்கு நிறைய இருக்கிறது, அவரைப் பற்றி பேசினால் பல இரவுகள் கடந்துபோகும். நாம் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், நேதாஜி போன்ற மகத்தான ஆளுமைகளின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. ஒரு சிந்தனை எளிதாக, சாதாரணமாக இல்லை என்றாலும் கூட , அது சிக்கல்கள் நிறைந்தவை என்றாலும்கூட, புதியவழியைக் கண்டறிவதற்கு அஞ்சக் கூடாது என்று நமக்கு அவர் கற்றுத்தந்துள்ளார். ஏதாவது ஒன்றில் நீங்கள் நம்பிக்கை கொண்டால், அதனைத் தொடங்குவதற்கான துணிவை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். தற்போதைய பார்வைக்கு அல்லது போக்கிற்கு எதிராக செயல்படுவது போல ஒருவேளை நீங்கள் உணரக்கூடும், ஆனால் உங்களின் இலக்கு புனிதமானதாக இருந்தால், அதனைத் தொடங்க நீங்கள் தயக்கம் காட்டக்கூடாது. உங்களின் தொலைநோக்கு இலக்குகளுக்கு நீங்கள் உங்களை அர்ப்பணித்துக்கொண்டால், வெற்றி பெறுவது உங்களின் கடமை என்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நண்பர்களே,

நேதாஜி சுபாஷ் சுயசார்பு இந்தியா கனவோடு தங்க வங்கம் என்பதற்கும் மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கிறார். நாட்டின் விடுதலைக்கு நேதாஜி அளித்த பங்களிப்பைப் போன்று சுயசார்பு இந்தியா இயக்கத்திற்கு மேற்கு வங்கம் இன்று பங்களிக்க வேண்டியுள்ளது. சுயசார்பு இந்தியா இயக்கம், சுயசார்பு வங்கம் மற்றும் தங்க வங்கத்திற்கும் வழிவகுக்கும். வங்கம் தனது பெருமிதத்தையும் நாட்டின் பெருமிதத்தையும் விரிவுபடுத்த முன்வரவேண்டும். நேதாஜியைப் போன்று, நமது இலக்குகளை எட்டும்வரை இடைநிறுத்தம் எதையும் நாம் பெற்றிருக்கக் கூடாது. உங்களின் முயற்சிகளிலும் தீர்மானங்களிலும்

நீங்கள் அனைவரும் வெற்றிபெற வேண்டும்! இந்தப் புனிதமான தருணத்தில் நேதாஜியின் கனவுகளை நனவாக்க, இந்தப் புனித பூமியிலிருந்து உங்களின் வாழ்த்துக்களோடு நாம் முன்னோக்கிச் செல்வோம். இந்த உணர்வோடு உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த்!

மிக மிக நன்றிகள்!

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Jan Dhan accounts hold Rs 2.75 lakh crore in banks: Official

Media Coverage

Jan Dhan accounts hold Rs 2.75 lakh crore in banks: Official
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 7, 2025
December 07, 2025

National Resolve in Action: PM Modi's Policies Driving Economic Dynamism and Inclusivity