பிரதமர் திரு நரேந்திர மோடி 2026, ஜனவரி 10 முதல் 12 வரை குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். ஜனவரி 10 அன்று மாலை பிரதமர் சோமநாதர் ஆலயத்திற்கு வந்து சேர்வார். இரவு சுமார் 8 மணியளவில் பிரதமர் ஓம்கார மந்திரம் பாராயணம் நிகழ்வில் பங்கேற்பார். அதன் பின் சோமநாதர் ஆலயத்தில் ட்ரோன் நிகழ்ச்சியைப் பார்வையிடுவார்.
ஜனவரி 11 அன்று காலை சுமார் 9:45 மணியளவில், சோமநாதர் ஆலயத்தைப் பாதுகாத்து உயிர்த் தியாகம் செய்த எண்ணற்ற வீரர்களை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரம்பரிய வீர யாத்திரையில் பிரதமர் பங்கேற்பார். அதன் பின் காலை சுமார் 10:15 மணியளவில், சோமநாதர் ஆலயத்தில் பிரதமர் தரிசனம் மற்றும் பூஜை செய்வார். காலை சுமார் 11 மணியளவில், சோமநாதர் சுயமரியாதை விழாவைக் குறிக்கும் பொது நிகழ்வில் பிரதமர் பங்கேற்பார்.
அன்று பிற்பகலில், கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பிராந்தியத்திற்கான துடிப்பு மிக்க குஜராத் மண்டல மாநாட்டில் பங்கேற்க பிரதமர் ராஜ்கோட் செல்வார். பிற்பகல் 1:30 மணியளவில், இம்மாநாட்டில் வர்த்தக கண்காட்சி மற்றும் பொருட்காட்சியை அவர் தொடங்கி வைப்பார். பிற்பகல் 2 மணியளவில், ராஜ்கோட்டில் உள்ள மார்வாடி பல்கலைக்கழகத்தில் கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பிராந்தியத்திற்கான துடிப்பு மிக்க குஜராத் மண்டல மாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.
ராஜ்கோட்டிலிருந்து அகமதாபாத் செல்லும் பிரதமர் மாலை சுமார் 5:15 மணியளவில் மகாத்மா மந்திர் மெட்ரோ நிலையத்தில், அகமதாபாத் மெட்ரோவின் 2-ம் கட்டத்தில் செக்டார் 10ஏ முதல் மகாத்மா மந்திர் வரை மீதமுள்ள பகுதியைத் திறந்து வைப்பார்.
ஜனவரி 12 அன்று, பிரதமர் அகமதாபாதில் ஜெர்மன் அதிபர் திரு ஃபிரெட்ரிக் மெர்ஸை சந்திப்பார். காலை 9:30 மணியளவில், இரு தலைவர்களும் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தருவார்கள். அதைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெறும் சர்வதேச பட்டம் விடும் விழாவில் பங்கேற்பார்கள்.
இதைத் தொடர்ந்து காலை 11:15 மணி முதல் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் இருதரப்பு சந்திப்புகள் நடைபெறும். அங்கு பிரதமரும் ஜெர்மன் அதிபரும் அண்மையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த இந்தியா-ஜெர்மனி உத்திசார் கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்வார்கள்.


