"புதிய ஆற்றல், உத்வேகம் மற்றும் தீர்மானங்களின் வெளிச்சத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது"
“இன்று உலக நாடுகளின் பார்வை இந்தியா மீது உள்ளது. இந்தியா மீதான உலக நாடுகளின் அணுகுமுறை மாறிவிட்டது”
"பல நிலையங்களை நவீனமயமாக்குவது, நாட்டின் வளர்ச்சிக்கான புதிய சூழலை உருவாக்கும்"
"இந்த அமிர்த ரயில் நிலையங்கள் ஒருவரின் பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்வதற்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமையை ஏற்படுத்துவதற்கும் அடையாளமாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
"இந்திய ரயில்வேயை நவீன மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்"
"இப்போது ரயிலை ஒரு சிறந்த அடையாளமாக, நவீன எதிர்காலத்துடன் இணைப்பது எங்கள் பொறுப்பு"
"புதிய இந்தியாவில், வளர்ச்சி, இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கிறது, மேலும் இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை வழங்குகிறார்கள்"
“ஆகஸ்ட் மாதம் புரட்சி, நன்றி மற்றும் கடமையின் மாதம். இந்திய வரலாற்றுக்கு புதிய திசையைக் கொடுத்த பல வரலாற்று நிகழ்வுகள் ஆகஸ்ட் மாதத்
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்காக ரயில்வே அமைச்சகத்தைப் பாராட்டிய பிரதமர், குடிமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள 508 ரயில் நிலையங்களை புனரமைக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55, பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 37, மத்தியப் பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத் மற்றும் தெலங்கானாவில் தலா 21, ஜார்க்கண்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் தலா 18, ஹரியானாவில் 15, கர்நாடகாவில் 13 உட்பட 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த 508 நிலையங்கள் உள்ளன.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் புதிய இந்தியா, அமிர்த காலத்தின் தொடக்கத்தில் உள்ளது என்று குறிப்பிட்டார். "புதிய ஆற்றல், புதிய உத்வேகம் மற்றும் புதிய தீர்மானங்கள் உள்ளன" என்று கூறிய பிரதமர், இது இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். நாட்டில் உள்ள சுமார் 1300 முக்கிய ரயில் நிலையங்கள் இனி 'அமிர்த இந்திய  நிலையங்கள்' என்று நவீனத்துவத்துடன் மறுவடிவமைக்கப்படும் என்றும், இது புத்துணர்வைப் பெறும் என்றும் அவர் தெரிவித்தார். 1300 ரயில் நிலையங்களில் சுமார் ரூ.25,000 கோடி செலவில் 508 அமிர்த இந்திய ரயில் நிலையங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது என்று பிரதமர் தெரிவித்தார். மறுசீரமைப்புத் திட்டம், ரயில்வே மற்றும் சாமானிய குடிமக்களுடன் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான ஒரு பெரிய பிரச்சாரமாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த ரயில் நிலையங்களின் பயன்கள் நாட்டில் உள்ள அனைத்து மாநிங்களுக்கும் பரவலாக சென்றடையும் என்று குறிப்பிட்ட பிரதமர், ரூ.4,000 கோடி மதிப்பீட்டில், உத்தரப் பிரதேசத்தில் தோராயமாக 55 அமிர்த நிலையங்களும், ராஜஸ்தானில் 55 நிலையங்களும் அமிர்த நிலையங்களாக மாறும் என்று கூறினார். மத்தியப் பிரதேசத்தில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 34 நிலையங்களும், மகாராஷ்டிராவில் ரூ. 1,500 கோடி மதிப்பீட்டில் 44 நிலையங்களும் மறுசீரமைக்கப்பட உள்ளன. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் முக்கிய ரயில் நிலையங்களும் மறுசீரமைக்கப்படவுள்ளன. என்றும் தெரிவித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்காக ரயில்வே அமைச்சகத்தைப் பாராட்டிய பிரதமர், குடிமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

உலகில் இந்தியாவின் வளர்ந்து வரும் மதிப்பை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், இந்தியா மீதான வளர்ந்து வரும் உலகளாவிய ஆர்வத்தை எடுத்துரைத்தார். இதற்கு இரண்டு முக்கிய காரணிகளை அவர் குறிப்பிட்டார். முதலாவதாக, இந்திய மக்கள் ஒரு நிலையான முழுப் பெரும்பான்மை அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தது, இரண்டாவதாக, அரசாங்கம் லட்சிய முடிவுகளை எடுத்து, மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப அவர்களின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தது. இந்திய ரயில்வேயும் இதைக் குறிக்கிறது என்று அவர் வலியுறுத்தினார். ரயில்வே துறையின் விரிவாக்கம் குறித்த தகவல்களை முன்வைத்து தனது கருத்துக்களை பிரதமர் விளக்கினார். கடந்த 9 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்கா, உக்ரைன், போலந்து, இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த  ரயில்வே இணைப்பை விட நாட்டில் அமைக்கப்பட்ட பாதையின் நீளம் அதிகம் என்று அவர் கூறினார். இந்திய ரயில்வேயின் விரிவாக்கத்தின் அளவைக் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டில் மட்டும், தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் ஒருங்கிணைந்த ரயில் வலையமைப்பை விட இந்தியா அதிக ரயில் பாதைகளை அமைத்துள்ளது என்று பிரதமர் மேலும் கூறினார்.  இன்று, ரயில் பயணத்தை அணுகக்கூடியதாகவும், இனிமையானதாகவும் மாற்ற அரசாங்கம் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார். "ரயில் முதல் ரயில் நிலையம் வரை சிறந்த அனுபவத்தை வழங்குவதே இந்த முயற்சி", என்று அவர் மேலும் கூறினார். நடைமேடைகளில் சிறந்த இருக்கைகள், மேம்படுத்தப்பட்ட காத்திருப்பு அறைகள் மற்றும் ஆயிரக்கணக்கான நிலையங்களில் இலவச வைஃபை ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.

இந்திய ரயில்வேயில் ஏற்பட்டுள்ள பரந்த முன்னேற்றங்களை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், எந்தவொரு பிரதமரும் செங்கோட்டையில் இருந்து இந்த சாதனைகளைப் பற்றி பேச விரும்புவார் என்று கூறினார். எவ்வாறாயினும், இன்றைய நிகழ்வின் பிரமாண்டமான ஏற்பாடு காரணமாகவே ரயில்வேயின் சாதனைகளை இன்றே விரிவாக பிரதிபலிப்பதாகவும் பிரதமர் வலியுறுத்தினார். 

ரயில்வேயின் அந்தஸ்தை நாட்டின் உயிர்நாடியாக குறிப்பிட்ட பிரதமர், இதனுடன் நகரங்களின் அடையாளமும், காலப்போக்கில் நகரத்தின் இதயமாக மாறியுள்ள ரயில் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றார். இதனால் ரயில் நிலையங்களுக்கு நவீன வடிவம் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

 

பல நிலையங்களை நவீனமயமாக்குவது நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு புதிய சூழலை உருவாக்கும், ஏனெனில் அவை பார்வையாளர்களிடையே ஒரு நல்ல அபிப்ராயத்தை உருவாக்கும் என்று பிரதமர் கூறினார். மேம்படுத்தப்பட்ட நிலையங்கள் சுற்றுலாவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அருகிலுள்ள பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் ஊக்கமளிக்கும். 'ஒரே நிலையம், ஒரு தயாரிப்பு' திட்டம் கைவினைஞர்களுக்கு உதவும் மற்றும் மாவட்டத்தின் பிராண்டிங்கிற்கு உதவும் என்று அவர் கூறினார்.

விடுதலையின் அமிர்த காலத்திலும் ஒருவரின் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த நாடு தீர்மானம் எடுத்துள்ளது என்று பிரதமர் வலியுறுத்தினார். "இந்த அமிர்த ரயில் நிலையங்கள் ஒருவரின் பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்வதற்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமிதத்தை ஏற்படுத்துவதற்கும் அடையாளமாக இருக்கும்" என்று திரு மோடி கூறினார். அமிர்த ரயில் நிலையங்கள், இந்தியாவின் கலாச்சார மற்றும் உள்ளூர் பாரம்பரியத்தின் கண்ணோட்டத்தை  வழங்கும் என்று பிரதமர் கூறினார். ஜெய்ப்பூர் ரயில் நிலையங்களில் ராஜஸ்தானின் ஹவா மஹால் மற்றும் அமர் கோட்டை காட்சிகள் இடம்பெறும் என்றும்,  ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஜம்மு தாவி ரயில் நிலையத்தின் புகழ்பெற்ற ரகுநாத் மந்திர் இடம்பெறும் என்றும், நாகாலாந்தின் திமாபூர் ரயில் நிலையம் இப்பகுதியைச் சேர்ந்த 16 வெவ்வேறு பழங்குடியினரின் உள்ளூர் கட்டிடக்கலையை வெளிப்படுத்தும் என்றும் பிரதமர்  குறிப்பிட்டார். ஒவ்வொரு ரயில் நிலையமும் நாட்டின் நவீன லட்சியங்கள் மற்றும் அதன் பண்டைய பாரம்பரியத்தின் அடையாளமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் புனித யாத்திரைகளை இணைக்கும் பாரத் கவுரவ் யாத்ரா ரயில்களை' வலுப்படுத்துவது குறித்து பிரதமர் குறிப்பிட்டார். 

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதில் ரயில்வேயின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், ரயில்வேயில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர். இந்த ஆண்டு, ரயில்வேக்கு ரூ .2.5 லட்சம் கோடிக்கு மேல் நிதி கிடைத்துள்ளது, இது 2014-ஆம் ஆண்டுடன்  உடன் ஒப்பிடும்போது ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இன்று, ரயில்வேயின் முழுமையான வளர்ச்சிக்கான பணிகள் ஒரு முழுமையான அணுகுமுறையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார். கடந்த 9 ஆண்டுகளில் ரயில் என்ஜின் உற்பத்தி 9 மடங்கு அதிகரித்துள்ளது. இன்று 13 மடங்கு அதிகமான எச்.எல்.பி பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

வடகிழக்கில் ரயில்வே விரிவாக்கம் குறித்து பேசிய பிரதமர், பாதைகளை இரட்டிப்பாக்குதல், அகல ரயில் பாதை மாற்றம், மின்மயமாக்கல் மற்றும் புதிய பாதைகள் குறித்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றார். "விரைவில், வடகிழக்கின் அனைத்து மாநில தலைநகரங்களும் ரயில் இணைப்பின் மூலம் இணைக்கப்படும்" என்று திரு மோடி கூறினார். நாகாலாந்து 100 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாவது நிலையத்தைப் பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார். "இப்பகுதியில் புதிய ரயில் பாதைகளை அமைப்பது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது", என்று அவர் கூறினார்.

கடந்த 9 ஆண்டுகளில் 2200 கி.மீ.க்கும் அதிகமான பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் கட்டப்பட்டுள்ளன, இதனால் சரக்கு ரயிலின் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். இப்போது தில்லி தலைநகர் பகுதியில் இருந்து மேற்கு துறைமுகங்களை 24 மணி நேரத்தில் சரக்குகள் அடைகின்றன, இதற்கு 72 மணி நேரம் தேவைப்பட்டது. மற்ற வழித்தடங்களிலும் 40 சதவீதம் நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் தொழில்முனைவோர், தொழிலதிபர்கள், விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

ரயில்வே பாலங்கள் இல்லாததால் ஏற்படும் சிரமங்களை சுட்டிக்காட்டிய பிரதமர், 2014-ஆம் ஆண்டுக்கு முன்னர் 6000 க்கும் குறைவான ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் இருந்தன, ஆனால் இன்று அந்த எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியுள்ளது என்று தெரிவித்தார். பெரிய வழித்தடங்களில் ஆளில்லா லெவல் கிராசிங்களின் எண்ணிக்கை இப்போது பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பயணிகளுக்கான வசதி குறித்து பேசிய பிரதமர், வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் தேவைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக அடிக்கோடிட்டுக் காட்டினார்.

"இந்திய ரயில்வேயை நவீன மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்" என்று கூறிய பிரதமர், 100 சதவீத ரயில் பாதை மின்மயமாக்கல் மிக விரைவில் எட்டப்படும் என்றும், இதன் விளைவாக இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களும் மின்சாரத்தில் மட்டுமே இயங்கும் என்றும் தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில் சூரிய ஒளி தகடுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களின் எண்ணிக்கை 1200-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலிருந்தும் பசுமை எரிசக்தியை உற்பத்தி செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். சுமார் 70,000 பெட்டிகளில் எல்.இ.டி விளக்குகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், ரயில்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிவறைகளின்  எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 28 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அனைத்து அமிர்த நிலையங்களும் பசுமை கட்டிடங்களின் தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் கட்டப்படும் என்று திரு  மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார். "2030-ஆம் ஆண்டில், ரயில்வே இணைப்புகள் நிகர பூஜ்ஜிய உமிழ்வுகளில் இயங்கும் நாடாக இந்தியா  இருக்கும்", என்று அவர் மேலும் கூறினார்.

"ரயில் பல தசாப்தங்களாக நமது அன்புக்குரியவர்களுடன் நம்மை இணைக்கும் வேலையை  செய்துள்ளது, இது நாட்டை இணைக்கும்  பணியை செய்துள்ளது. இப்போது ரயிலை சிறந்த அடையாளம் மற்றும் நவீன எதிர்காலத்துடன் இணைப்பது நமது பொறுப்பு”, என்று அவர் தெரிவித்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடம், கடமைப் பாதை, போர் நினைவுச்சின்னம் மற்றும் ஒற்றுமை சிலை போன்ற திட்டங்களுக்கு பலர் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார். "எதிர்மறை அரசியலுக்கு அப்பாற்பட்டு, நாட்டின் வளர்ச்சிப் பணியை ஒரு பணியாக எடுத்துக் கொண்டு, வாக்கு வங்கி மற்றும் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு அதற்கு முன்னுரிமை அளித்துள்ளோம்", என்று அவர் கூறினார்.

ரயில்வே மட்டும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், உள்கட்டமைப்பில் லட்சக்கணக்கான கோடிகளை முதலீடு செய்வதன் மூலம் வேலைவாய்ப்பும் உருவாக்கப்படுகிறது என்றார். தற்போது, மத்திய அரசு வேலை வாய்ப்பு திருவிழா மூலம் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்கான பிரச்சாரத்தையும் நடத்தி வருகிறது என்று பிரதமர் கூறினார். "இது மாறிவரும் இந்தியாவின் தோற்றம், அங்கு வளர்ச்சி, இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கிறது, மேலும் இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு புதிய சிறகுகளை கொடுக்கிறார்கள்", என்று அவர் மேலும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பல சுதந்திரப் போராட்ட வீரர்களும், பல பத்ம விருது பெற்றவர்களும் கலந்து கொண்டதை பிரதமர் குறிப்பிட்டார். ஒவ்வொரு இந்தியருக்கும் ஆகஸ்ட் மாதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், இது புரட்சி, நன்றி மற்றும் கடமையின் மாதம் என்றும், இந்தியாவின் வரலாற்றுக்கு ஒரு புதிய திசையை வழங்கிய பல வரலாற்று சந்தர்ப்பங்கள் நிறைந்தது என்றும் கூறினார். சுதேசி இயக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆகஸ்ட் 7-ஆம் தேதி,  தேசிய கைத்தறி தினமாகக் கொண்டாடப்படுவதை  பிரதமர் குறிப்பிட்டார். "ஆகஸ்ட் 7-ஆம் தேதி, ஒவ்வொரு இந்தியரும் உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுத்தல் என்ற தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்துவதற்கான நாளாகும்" என்று திரு  மோடி கூறினார். புனித பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை குறிப்பிட்ட அவர், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் சிலைகளை செய்ய முயற்சிக்க பிரதமர் பரிந்துரைத்தார். உள்ளூர் கலைஞர்கள், கைவினைஞர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர் தயாரித்த பொருட்களை வாங்கவும் அவர் பரிந்துரைத்தார்.

 

ஆகஸ்ட் 9-ஆம் தேதி குறித்துப் பேசிய பிரதமர், வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்றும், அது இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் புதிய ஆற்றலை உருவாக்கியதாகவும் கூறினார். இதனால் ஈர்க்கப்பட்டு, இன்று நாடு முழுவதும் ஒவ்வொரு தீமைக்கும், ஊழலுக்கும், வாரிசுரிமைக்கும், திருப்திப்படுத்தலுக்கும் இந்தியாவிலிருந்து வெளியேறு என்று கர்ஜிக்கிறது என்றார்.

வரவிருக்கும் பிரிவினை கொடுமைகள் தினத்தைக் குறிப்பிட்ட பிரதமர், பிரிவினைக்கு பெரும் விலை கொடுத்த எண்ணற்ற மக்களை நாம் நினைவில் கொள்கிறோம் என்றும், அதிர்ச்சிக்குப் பிறகு ஒன்றுகூடி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் மக்களின் பங்களிப்பை அங்கீகரித்துள்ளோம் என்றும் கூறினார். நமது ஒற்றுமையை நிலைநிறுத்தும் பொறுப்பை இந்த நாள் நமக்கு அளிக்கிறது என்று அவர் கூறினார். "நமது மூவர்ணக் கொடி மற்றும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதற்கான நேரம் நமது சுதந்திர தினம். கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும்”, என்று திரு மோடி தெரிவித்தார். சமூக வலைத்தளங்களிலும், கொடி அணிவகுப்புகளிலும் மக்களின் உற்சாகத்தை குறிப்பிட்ட அவர், அனைவரும் இந்த பிரச்சாரத்தில் இணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

குடிமக்கள் செலுத்தும் வரி, ஊழலில் வீணடிக்கப்படுகிறது என்ற கண்ணோட்டத்தை அரசாங்கம் மாற்றியுள்ளது என்றும், இன்று மக்கள் தங்கள் பணம் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பயன்படுத்தப்படுவதாக உணர்கிறார்கள் என்றும் பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். அதிகரித்து வரும் வசதிகள் மற்றும் எளிமையான வாழ்க்கை காரணமாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். நாட்டில் ரூ.2 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விதிக்கப்பட்ட காலத்தை பிரதமர் குறிப்பிட்டார், அதே நேரத்தில் ரூ .7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு இன்று வரி விதிக்கப்படவில்லை. இது ஒருபுறமிருக்க, நாட்டில் வசூலிக்கப்படும் வருமான வரியின் அளவு அதிகரித்து வருவதாகவும், நாட்டில் நடுத்தர வர்க்கத்தின் எல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும்  பிரதமர் கூறினார். இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 16% அதிகரித்துள்ளது, இது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையின் வளர்ச்சியையும் நாட்டில் நடக்கும் புதுமைகளையும் காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார். இன்று நாட்டில் ரயில்வே எவ்வாறு புத்துயிர் பெறுகிறது, மெட்ரோ எவ்வாறு விரிவடைகிறது என்பதை மக்கள் பார்க்கிறார்கள். புதிய விரைவுச் சாலைகள் மற்றும் விமான நிலையங்களின் வளர்ச்சியைக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற மாற்றங்கள் வரி செலுத்துவோரின் பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும் புதிய இந்தியாவின் உணர்வைத் தூண்டுவதாகக் கூறினார். "இந்த 508 ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதும் இந்த திசையில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். அமிர்த இந்திய நிலையங்கள், இந்திய ரயில்வேயின் இந்த மாற்றத்தை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்”, என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

பின்னணி

அதிநவீன பொதுப் போக்குவரத்தை ஏற்படுத்துவது குறித்து பிரதமர் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். நாடு முழுவதும் உள்ள மக்களின் விருப்பமான போக்குவரத்து முறை ரயில்வே என்று குறிப்பிட்ட அவர், ரயில் நிலையங்களில் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். இந்த தொலைநோக்குப் பார்வையால், நாடு முழுவதும் 1309 நிலையங்களை மறுவடிவமைக்க அமிர்த இந்திய ரயில் நிலையத் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, 508 ரயில் நிலையங்களை புனரமைக்க பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த நிலையங்கள் ரூ.24,470 கோடி செலவில் புனரமைக்கப்படும். இந்த நிலையங்களை நகரின் இருபுறமும் முறையாக ஒருங்கிணைத்து, 'சிட்டி சென்டர்'களாக மேம்படுத்த   பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை ரயில் நிலையத்தை மையமாகக் கொண்ட நகரத்தின் ஒட்டுமொத்த நகர்ப்புற வளர்ச்சியின் முழுமையான பார்வையால் இயக்கப்படுகிறது.

உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55, பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 37, மத்திய பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத் மற்றும் தெலுங்கானாவில் தலா 21, ஜார்கண்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18 ஹரியானாவில் 15, கர்நாடகாவில் 13 உட்பட 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த 508 நிலையங்கள் உள்ளன.

மறுசீரமைப்பு, நவீன பயணிகள் வசதிகளை வழங்குவதோடு, நன்கு வடிவமைக்கப்பட்ட போக்குவரத்து சுழற்சி, மாதிரி ஒருங்கிணைப்பு மற்றும் பயணிகளின் வழிகாட்டுதலுக்கான சிக்னல் ஆகியவற்றை உறுதி செய்யும். நிலைய கட்டிடங்களின் வடிவமைப்பு, உள்ளூர் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டதாக இருக்கும்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Startup India recognises 2.07 lakh ventures, 21.9 lakh jobs created

Media Coverage

Startup India recognises 2.07 lakh ventures, 21.9 lakh jobs created
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister remembers the brave heroes of Pulwama
February 14, 2026

The Prime Minister, Shri Narendra Modi remembered the brave heroes who laid down their lives in Pulwama on this day in 2019. Shri Modi stated that their devotion, resolve and service to the nation remain forever etched in our collective consciousness, and every Indian draws strength from their enduring courage.

Shri Modi posted on X:

"Remembering the brave heroes who laid down their lives in Pulwama on this day in 2019. Their devotion, resolve and service to the nation remain forever etched in our collective consciousness. Every Indian draws strength from their enduring courage."