பகிர்ந்து
 
Comments
ஜல் ஜீவன் இயக்க செயலி மற்றும் தேசிய ஜல் ஜீவன் நிதியம் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார்
இது கிராம மக்களால் மற்றும் பெண்களால் முன்னெடுக்கப்படும் இயக்கம் ஆகும்.
”குஜராத் மாநிலத்தில் இருந்து வந்திருப்பதால் வறட்சி போன்ற நிலைமைகளை நான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நீர் துளியின் முக்கியத்துவம் குறித்தும் நான் புரிந்து கொண்டுள்ளேன். அதனால்தான் குஜராத்தின் முதலமைச்சராக நான் இருந்த போது நீர் கிடைத்தல் மற்றும் நீர் பாதுகாப்பு ஆகியவை எனது முக்கியமான முன்னுரிமைகளாக இருந்தன”
”இன்று நாட்டின் 80 மாவட்டங்களில் உள்ள 1.25 லட்சம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கப்படுகிறது”
”ஆஸ்பைரேஷனல் மாவட்டங்களில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு எண்ணிக்கை 31 லட்சத்தில் இருந்து 1.16 கோடியாக அத
கடந்த 70 ஆண்டுகளாக நடைபெற்றதைவிட வெறும் இரண்டே ஆண்டுகளில் மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் கூடுதல் பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி கிராம பஞ்சாயத்துகள் மற்றும் குடிநீர் சமிதிகள் / கிராம குடிநீர் மற்றும் தூய்மையாக்கல் குழுக்கள் (VWSC) ஆகியவற்றுடன் இன்று ஜல் ஜீவன் இயக்கம் குறித்து காணொலி கருத்தரங்கு வழியாக கலந்துரையாடினார். இயக்கத்தில் பங்கேற்றுள்ள அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்த இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை அதிகரிக்கவும் ஜல் ஜீவன் இயக்க செயலியை அவர் இன்று தொடங்கி வைத்தார்.  மேலும் அவர் தேசிய ஜல் ஜீவன் நிதியத்தையும் தொடங்கி வைத்தார்.  ஒவ்வொரு கிராம வீடுகள், பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், ஆஸ்ரமங்கள் மற்றும் ஏனைய அரசு நிலையங்கள் ஆகியவற்றுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க உதவி செய்யும் வகையில் இந்தியாவில் இருக்கும் அல்லது வெளிநாட்டில் இருக்கும் எந்த ஒரு தனிநபர், நிறுவனம், கார்ப்பரேஷன் அல்லது தயாள குணம் கொண்டோர் இந்த நிதியத்திற்கு நன்கொடை வழங்கலாம். கிராம பஞ்சாயத்துகள் மற்றும் குடிநீர் சமிதிகளின் உறுப்பினர்களுடன் மத்திய அமைச்சர்கள் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், திரு பிரகலாத் சிங் படேல், திரு பிஷ்வேஸ்வர் துடு மற்றும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

 சமிதிகளுடன் கலந்துரையாடிய போது பிரதம மந்திரி உத்திரப்பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தின் உமரி கிராமத்தைச் சேர்ந்த திரு கிரிஜகந்த் திவாரியிடம் அவருடைய கிராமத்தில் ஜல் ஜீவன் இயக்கம் எத்தகைய பலனை ஏற்படுத்தி உள்ளது என்று விசாரித்தார். தற்போது பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீர் கிடைப்பதாகவும் கிராம பெண்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறி இருப்பதாகவும் திரு திவாரி தெரிவித்தார். கிராம மக்கள் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு தங்களுக்கு கிடைக்கும் என்று நம்பினார்களா என்று திரு திவாரியிடம் கேட்ட பிரதம மந்திரி தற்போது அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் கேட்டறிந்தார். திரு திவாரி இந்த இயக்கத்திற்காக தனது கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு முயற்சிகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தார்.  கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை உள்ளது என்றும் ஒவ்வொருவரும் அவற்றை பயன்படுத்துகின்றனர் என்றும் திரு திவாரி கூறினார். புன்தல்கந்த் கிராம மக்களை பாராட்டிய பிரதமர் பிஎம் வீடு கட்டும் திட்டம், உஜ்வாலா மற்றும் ஜல் ஜீவன் இயக்கம் போன்ற திட்டங்களின் மூலம் பெண்கள் அதிகாரம் பெறுவதாகவும் தங்களுக்குரிய கண்ணியத்தை பெறுவதாகவும் தெரிவித்தார்.

குஜராத்தின் பிப்லியைச் சேர்ந்த திரு ரமேஷ் பாய் படேலிடம் அவரது கிராமத்தில் குடிநீர் கிடைக்கிறதா என்றும் குடிநீரின் தரத்தை அடிக்கடி பரிசோதிக்கிறீர்களா என்றும் பிரதமர் கேட்டார். குடிநீரின் தரம் சிறப்பாக இருப்பதாகவும் கிராமத்தில் உள்ள பெண்களுக்கு குடிநீர் தரத்தை பரிசோதிக்கும் பயற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் திரு ரமேஷ் பாய் தெரிவித்தார். குடிநீருக்காக மக்கள் கட்டணம் ஏதும் செலுத்துகிறார்களா என்றும் பிரதமர் விசாரித்தார். கிராம மக்களுக்கு குடிநீரின் மதிப்பு தெரியும் என்றும் அதனால் அவர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்த விருப்பமுடன் இருப்பதாகவும் திரு ரமேஷ் பாய் கூறினார். தண்ணீரைச் சேமிக்க வேண்டும் என்பதற்காக தெளிப்பான்கள் மற்றும் சொட்டுநீர் பாசன முறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்றும் பிரதமர் கேட்டார்.  கிராமத்தில் புதிய நீர்ப்பாசன உத்திகள் கடைபிடிக்கப்படுவதாக பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது. தூய்மை இந்தியா இயக்கம் 2.0 என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் தூய்மைக்கான இயக்கத்திற்கு மக்கள் பெருந்திரளாக ஆதரவு அளித்தனர் என்றும் ஜல் ஜீவன் இயக்கத்தின் வெற்றிக்கு அதே போன்று ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும்  தெரிவித்தார்.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த திருமதி கௌசல்யா ரவத்திடம் ஜல் ஜீவன் இயக்கத்திற்கு முன்னும் அதற்கு பிறகும் குடிநீர் கிடைப்பது குறித்து பிரதமர் விசாரித்தார். ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் குடிநீர் கிடைக்கத் தொடங்கியப் பிறகு தனது கிராமத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர் என்றும் அவர்கள் ஹோம் ஸ்டே முறையில் தங்கத் தொடங்கி உள்ளனர் என்று தெரிவித்த திருமதி ரவத் தனது கிராமத்தில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். காடு வளர்ப்பு, சுற்றுலா மேம்பாடு மற்றும் ஹோம் ஸ்டே ஆகிய நீடித்த நிலையான வழிமுறைகளை கடைபிடிப்பதற்காக அவரையும் கிராம மக்களையும் பிரதமர் பாராட்டினார்.

தமிழ்நாட்டின் வெள்ளேரியைச் சேர்ந்த திருமதி சுதாவிடம்  ஜல் ஜீவன் இயக்கத்தின் பலன்கள் குறித்து பிரதமர் விசாரித்தார். இயக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டப் பிறகு அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளதாக திருமதி சுதா தெரிவித்தார். அவரது கிராமத்தில் தயாரிக்கப்படும் உலகப் புகழ் பெற்ற ஆரணி பட்டு புடவை குறித்தும் பிரதமர் விசாரித்தார். குழாய் வழியாக குடிநீர் கிடைப்பதால் நேரம் மிச்சமாகிறதா என்றும் பிற வீட்டு வேலைகளுக்கு கூடுதல் நேரம் கிடைக்கிறதா என்றும் பிரதமர் விசாரித்தார். குடிநீர் கிடைப்பது தங்களது வாழ்க்கைத் தரத்தை அதிகரித்து இருப்பதாகவும் உற்பத்தி சார்ந்த பிற நடவடிக்கைகளுக்கு நேரம் கிடைப்பதாகவும் திருமதி சுதா கூறினார். தடுப்பணை கட்டுதல், குளங்கள் வெட்டுதல் போன்ற மழைநீர் சேமிப்புக்காக தனது கிராமம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார். குடிநீர் இயக்கத்தை மக்கள் ஏற்றுக் கொண்டது என்பது மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் திசையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப் பெரும் படிகல்லாகும் என்று பிரதமர் தெரிவித்தார்.

மணிப்பூரைச் சேர்ந்த திருமதி லைதந்தெம் சரோஜினி தேவிஜியுடன் கலந்துரையாடிய திரு மோடியிடம் இதற்கு முன்பு குடிநீர் எடுத்து வருவதற்காக நெடுந்தொலைவு செல்ல வேண்டியது இருந்ததாகவும் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இப்பொழுது அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் கிடைப்பதால் தங்களின் நிலைமை மேம்பட்டு உள்ளது. திறந்த வெளியில் மலம் கழிக்காத கிராமமாக மாறியதால் கிராம மக்கள் சிறப்பான ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர் என்று தெரிவித்த திருமதி சரோஜினி தேவி தனது கிராமத்தில் தொடர்ச்சியாக நீரின் தரத்தை பரிசோதிப்பது என்பது கட்டாயமான நடவடிக்கையாக உள்ளது என்றும் இதற்காக 5 பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மக்களின் வாழ்வை சௌகரியமானதாக மாற்றுவதற்காக அரசு தொடர்ச்சியாக பணி செய்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.  வட கிழக்கில் உண்மையான மாற்றம் ஏற்பட்டு வருவது குறித்த தனது திருப்தியையும் அவர் தெரிவித்தார்.

பாபு மற்றும் பகதூர் சாஸ்திரி ஜி ஆகியோரின் இதயங்களின் அங்கமாக கிராமங்களே இருந்தன என்று நிகழ்ச்சியில் உரையாற்றிய போது பிரதமர் குறிப்பிட்டார். இன்றைய நாளில் கிராம சபை என்ற பெயரில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிராமங்களின் மக்கள் ஜல் ஜீவன் கலந்துரையாடலை ஏற்பாடு செய்து நிகழ்த்துவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

ஜல் ஜீவன் இயக்கத்தின் தொலைநோக்கு பார்வை என்பது குடிநீர் கிடைக்கச் செய்வது மட்டும் அல்ல என்று குறிப்பிட்ட பிரதமர் இது ஒரு அதிகாரப் பரவலின் மிகப்பெரும் இயக்கமாகவும் உள்ளது என்றும் குறிப்பிட்டார். இது கிராம மக்களால் மற்றும் பெண்களால் முன்னெடுக்கப்படும் இயக்கம் ஆகும்.  இதன் முக்கியமான அஸ்திவாரமாக பெருந்திரள் இயக்கமும் மக்கள் பங்கேற்பும் உள்ளது என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.  கிராம சுயராஜ்ஜியம் என்பதன் உண்மையான அர்த்தம் முழுமையான தன்னம்பிக்கையே என்று காந்திஜி கூறியதை பிரதமர் நினைவுகூர்ந்தார்.  அதனால்தான் கிராம சுயராஜ்ஜியம் என்ற சிந்தனை சாதனைகளாக செயல் வடிவம் பெற வேண்டும் என்று தொடர்ந்து நான் முயற்சித்து வருகிறேன் என்று பிரதமர் கூறினார். குஜராத்தின் முதல்வராக இருந்த போது கிராம சுயராஜ்ஜியத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரு மோடி நினைவுகூர்ந்து தெரிவித்தார். திறந்த வெளியில் மலம் கழிக்காத கிராமங்களுக்கான நிர்மல் கவோன் விருது, கிராமங்களில் உள்ள பழைய படிக்கட்டு கிணறுகள் மற்றும் சாதாரண கிணறுகளை புதுப்பிப்பதற்கான ஜல் மந்திர் திட்டம், கிராமங்களில் அகல அலைவரிசைக்கான இ-கிராம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை பிரதமர் நினைவு கூர்ந்தார். இப்போது பிரதம மந்திரியாக இருக்கும் நிலையிலும் திட்டங்களை வகுப்பதிலும் நிர்வகிப்பதிலும் உள்ளூர் மக்களை ஈடுபடுத்தச் செய்வதாக பிரதமர் தெரிவித்தார். இதற்காக அதிலும் குறிப்பாக குடிநீர் மற்றும் தூய்மைக்காக கிராம பஞ்சாயத்துகளுக்கு நேரிடையாக 2.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான தொகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களோடு பஞ்சாயத்துகள் வெளிப்படையாக பணி புரிந்து வருவது தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.  கிராம சுயராஜ்ஜியத்துக்கு மத்திய அரசின் அர்ப்பணிப்புகளாக ஜல் ஜீவன் இயக்கமும் குடிநீர் சமிதிகளும் உதாரணங்களாக உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குடிநீர் பிரச்சினை குறித்த பொதுவான கருத்துகளைச் சுட்டிக்காட்டிய பிரதம மந்திரி கிராமத்தின் பெண்களும் குழந்தைகளும் குடிநீர் எடுத்து வர பல மைல்கள் நடந்து திரும்புவதை விரிவாக சொல்லுகின்ற திரைப்படங்கள், கதைகள் மற்றும் கவிதைகள் குறித்து எடுத்துரைத்தார்.  சிலரின் நினைவுகளில் கிராமத்தின் பெயரைக் கூறிய உடனே இத்தகையச் சித்திரமே மேலெழும். ஏன் ஒரு சிலர் மட்டுமே இந்தக் கேள்வி குறித்து சிந்திக்கின்றனர் என்று பிரதமர் கேட்டார்: ஒவ்வொரு நாளும் இத்தகையோர் ஏதாவது ஒரு நதிக்கோ அல்லது குளத்திற்கோ ஏன் செல்லக் கூடாது.  இந்த நீர் மக்களை சென்று ஏன் சேரவில்லை என்று கேட்கக் கூடாது? நீண்டகாலம் கொள்கை வகுக்கும் பொறுப்பில் இருந்தவர்கள் தங்களுக்குத் தாங்களே இந்தக் கேள்வியை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று பிரதமர் குறிப்பிட்டார். முந்தைய காலத்தின் கொள்கை வகுத்தவர்கள் குடிநீரின் முக்கியத்துவம் குறித்து உணர்ந்திருக்கவில்லை. அவர்கள் ஒரு வேளை குடிநீர் அதிக அளவில் கிடைக்கக் கூடிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்ட பிரதமர் குஜராத் போன்ற வறண்ட மாநிலத்தில் இருந்து வந்திருப்பதால் வறட்சியின் நிலைமை குறித்து தனக்குத் தெரியும் என்றும் ஒவ்வொரு நீரின் முக்கியத்துவம் குறித்தும் தனக்குப் புரியும் என்றும் குறிப்பிட்டார்.  குஜராத்தின் முதல்வராக இருந்த போது மக்களுக்கு குடிநீர் வழங்குவதும் நீர் சேமிப்பும் தனது முன்னுரிமைகளாக இருந்தன என்று குறிப்பிட்டார்.

சுதந்திரம் பெற்றதில் இருந்து 2019 வரை நம் நாட்டின் மூன்று கோடி வீடுகளில் மட்டுமே குழாய் வழி குடிநீர் கிடைத்திருந்தது.  2019ல் ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கியப் பிறகு 5 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு தரப்பட்டு உள்ளது. இன்று நாட்டின் 80 மாவட்டங்களில் உள்ள சுமார் 1.25 லட்சம் கிராமங்களில் ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் சென்று சேர்கிறது. ஆஸ்பரேஷனல் மாவட்டங்களில் குழாய் வழி குடிநீர் இணைப்பு எண்ணிக்கை 31 லட்சத்தில் இருந்து 1.16 கோடியாக அதிகரித்து உள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்

கடந்த 70 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளைவிட கூடுதலான பணிகள் வெறும் 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன என்று குறிப்பிட்ட பிரதமர் நீர் அபரிதமான பகுதிகளில் வசிக்கின்ற ஒவ்வொரு குடிமகனும் நீரைச் சேமிப்பதற்கான கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர்கள் தங்களின் பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

நாட்டில் உள்ள புதல்விகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் பிரதமர் ஆய்வு செய்தார். ஒவ்வொரு வீடு மற்றும் பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகள் கட்டுதல், குறைந்த செலவில் சானிட்டரி பேட்கள் வழங்குதல் , கர்ப்பக்காலத்தில் ஊட்டச்சத்து உணவுகள் தருதல் மற்றும் தடுப்பு மருந்துகள் அளித்தல் ஆகியன ”மாத்ர சக்தி”யை (தாய்மையின்  ஆற்றல்) வலுப்படுத்தி உள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்.  கிராமங்களில் கட்டப்பட்டுள்ள 2.5 கோடிக்கும் அதிகமான வீடுகள் பெண்களின் பெயரில் உள்ளன என்று அவர் தெரிவித்தார். புகையால் சூழப்பட்ட வாழ்க்கையில் இருந்து பெண்களை உஜ்வாலா திட்டம் விடுவித்து உள்ளது.  சுயஉதவிக் குழுக்கள் மூலமாக சுயசார்பு இந்தியா திட்டத்துடன் பெண்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளனர்.  கடந்த 7 ஆண்டுகளில் இத்தகைய குழுக்களின் எண்ணிக்கையானது மூன்று மடங்காக அதிகரித்து உள்ளது. 2014 வரை இருந்த முந்தைய 5 ஆண்டுகளோடு ஒப்பிட கடந்த 7 ஆண்டுகளில் தேசிய வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பெண்களுக்கு அளிக்கப்படும் உதவிகள் 13 மடங்கு அதிகரித்து இருப்பதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

 

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
Bhupender Yadav writes: What the Sengol represents

Media Coverage

Bhupender Yadav writes: What the Sengol represents
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM condoles loss of lives due to train accident in Odisha
June 02, 2023
பகிர்ந்து
 
Comments

The Prime Minister, Shri Narendra Modi has expressed deep grief over the loss of lives due to train accident in Odisha.

In a tweet, the Prime Minister said;

"Distressed by the train accident in Odisha. In this hour of grief, my thoughts are with the bereaved families. May the injured recover soon. Spoke to Railway Minister @AshwiniVaishnaw and took stock of the situation. Rescue ops are underway at the site of the mishap and all possible assistance is being given to those affected."