பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் 19-வது தவணையை வெளியிடும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்தது. நாடு முழுவதும் உள்ள நமது சிறு விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்பதில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன்: பிரதமர்
தாமரை விதைகள் வாரியத்தை உருவாக்குவதற்கான எங்கள் நடவடிக்கை அதன் சாகுபடியில் ஈடுபட்டுள்ள பீகார் விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கும். இது தாமரை விதைகள் உற்பத்தி, செயல்முறை, மதிப்பு கூட்டுதல், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் பெரிதும் உதவும்: பிரதமர்
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இல்லாவிட்டால், பீகார் உட்பட நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் நிதி கிடைத்திருக்காது. கடந்த 6 ஆண்டுகளில், இதன் ஒவ்வொரு பைசாவும் நமது உணவு தானியம் வழங்குவோரின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் சென்றடைந்துள்ளது: பிரதமர்
சிறந்த உணவான தாமரை விதையோ அல்லது பாகல்பூரின் பட்டோ எதுவாக இருந்தாலும், பீகாரின் இதுபோன்ற சிறப்பு தயாரிப்புகளை உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்வதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்: பிரதமர்
பிரதமரின் தன - த
இவ்வேளையில், நாடு முழுவதிலும் உள்ள உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

இன்று இந்த நிகழ்ச்சியில் பீகார் மண்ணில் 10,000-வது  உழவர் உற்பத்தியாளர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வேளையில், நாடு முழுவதிலும் உள்ள உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

புதுதில்லி, பிப்ரவரி 24, 2025

விவசாயிகள் நலனை உறுதி செய்வதில் தான் கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் 19-வது தவணையை பீகார் மாநிலம் பாகல்பூரில்  இன்று விடுவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது பல வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். மெய்நிகர் முறையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்துப் பிரமுகர்களையும், மக்களையும் திரு மோடி வரவேற்றார். புனித மகா கும்பமேளா காலத்தில் மந்தராச்சல் மண்ணில் காலடி வைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று அவர் கூறினார். இந்த இடம் ஆன்மீகம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளதோடு வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சாத்தியக் கூறுகளையும் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். இது தியாகி தில்கா மஞ்சியின் பூமி என்றும், புகழ்பெற்ற பட்டு நகரம் என்றும் திரு மோடி குறிப்பிட்டார். பாபா அஜ்கைபிநாத்தின் புனித பூமியில் வரவிருக்கும் மகா சிவராத்திரிக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார். இதுபோன்ற ஒரு புனிதமான தருணத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் 19-வது தவணையை வெளியிடுவது தமக்கு அதிர்ஷ்டம் என்றும், நேரடி பணப் பரிமாற்றம் மூலம் சுமார் 22,000 கோடி ரூபாய் அளவிற்கு நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் 19-வது தவணையின் பயனாளிகளாக பீகாரைச் சேர்ந்த சுமார் 75 லட்சம் விவசாயக் குடும்பங்கள் உள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பீகார் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று சுமார் ரூ.1,600 கோடி நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. பீகார் மற்றும் நாட்டின் இதர பகுதிகளைச் சேர்ந்த அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும் அவர் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

செங்கோட்டையில் தனது உரை குறித்து மீண்டும் குறிப்பிட்ட திரு மோடி, "வளர்ச்சியடைந்த இந்தியாவின் நான்கு முக்கிய தூண்களாக  ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள்" ஆகியோர் உள்ளனர் என்று கூறினார்.  மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். "கடந்த பத்தாண்டுகளில் விவசாயிகளின் ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க தாங்கள் முழு சக்தியுடன் பணியாற்றியதாக" என்று திரு மோடி கூறினார். விவசாயிகளுக்கு நல்ல விதைகள், போதுமான மற்றும் விலை குறைவான உரங்கள், நீர்ப்பாசன வசதிகள், தங்கள் கால்நடைகளை நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவி மற்றும் பேரிடர் காலங்களில் ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாப்பு ஆகியவை தேவை என்று அவர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில், விவசாயிகள் இத்தகைய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இந்த நிலையை தங்கள் அரசு மாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார். சமீபத்திய ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான நவீன விதை ரகங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். முன்னர், விவசாயிகள் யூரியாவுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. கள்ளச்சந்தையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, ஆனால் தற்போது, விவசாயிகள் போதுமான உரங்களைப் பெறுகிறார்கள் என்று அவர் கூறினார். பெருந்தொற்றின் பெரும் நெருக்கடியின் போது கூட, விவசாயிகளுக்கு உரங்களுக்கு பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்தது என்று திரு மோடி எடுத்துரைத்தார். தங்கள் அரசு தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்திருந்தால், விவசாயிகள் இன்னும் உரத்திற்காகப் போராடிக் கொண்டிருந்திருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். பராவுனி உர ஆலை மூடப்படாமல் இருப்பதால், நாட்டின் விவசாயிகளுக்கு ஒரு மூட்டை உரம் ரூ.300-க்கும் குறைவாகக் கிடைப்பதாகவும், பல நாடுகளில் ஒரு மூட்டை ரூ.3,000-க்கு விற்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். ரூ.3,000 மதிப்புள்ள யூரியா பைகள் இன்று குறைந்த விலையில் கிடைப்பதைத் தங்கள் அரசு உறுதி செய்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். விவசாயிகளின் நலனுக்காக அரசு உறுதிபூண்டுள்ளது என்றும், அவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். விவசாயிகள் ஏற்க வேண்டிய யூரியா மற்றும் டிஏபிக்கான செலவை மத்திய அரசே ஏற்கிறது என்று அவர் மேலும் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில், மத்திய அரசு சுமார் ரூ.12 லட்சம் கோடியை வழங்கியுள்ளது. இல்லையெனில் விவசாயிகள் தங்கள் சொந்த நிதியைத்தான் இதற்காக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்று திரு மோடி கூறினார். இது நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு கணிசமான தொகையை சேமித்து தந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

 

தமது அரசு தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்திருந்தால், பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் பலன்களை அவர்கள் பெற்றிருக்க முடியாது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட ஆறு ஆண்டுகளில், சுமார் 3.7 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்தார். முன்பு அரசுத் திட்டங்களின் முழுப் பலன்களையும் பெறாத சிறு விவசாயிகள் தற்போது தங்களுக்கு உரிய பலன்களைப் பெறுகிறார்கள் என்று திரு மோடி திரு மோடி கூறினார். இடைத்தரகர்கள் சிறு விவசாயிகளின் உரிமைகளைச் சுரண்டுவது வழக்கம் என்று கூறிய அவர், தனது தலைமையின் கீழும் திரு நிதீஷ் குமாரின் தலைமையின் கீழும் இது நடக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று உறுதியளித்தார். முந்தைய அரசுகளிடமிருந்து இதை வேறுபடுத்திக் காட்டிய பிரதமர், முந்தைய அரசுகள் ஒதுக்கிய வேளாண் பட்ஜெட்டை விட தனது அரசு நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தியுள்ள தொகை மிகவும் அதிகமாக உள்ளது என்று தெரிவித்தார். இதுபோன்ற முயற்சிகளை விவசாயிகளின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அரசால் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும் ஊழல் நிறுவனங்களால் மேற்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

முந்தைய அரசுகள் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்று திரு மோடி கூறினார். கடந்த காலங்களில், வெள்ளம், வறட்சி அல்லது ஆலங்கட்டி மழை ஏற்பட்டபோது, விவசாயிகள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளுமாறு விடப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார். 2014-ம் ஆண்டில் தங்கள் அரசு மக்களின் வாழ்த்தைப் பெற்ற பின்னர், இந்த அணுகுமுறை தொடராது என்று அவர் அறிவித்து இருந்தார். தங்கள் அரசு பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்றும் இதன் மூலம் விவசாயிகள் பேரிடர் காலங்களில் ரூ.1.75 லட்சம் கோடி மதிப்புள்ள இழப்பீடுகளைப் பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

நிலமற்ற மற்றும் சிறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காகக் கால்நடை வளர்ப்பை தங்கள் அரசு ஊக்குவித்து வருவதாகப் பிரதமர் கூறினார். கிராமங்களில் "லட்சாதிபதி சகோதரிகளை" உருவாக்க கால்நடை வளர்ப்பு உதவுகிறது என்றும், இதுவரை, பீகாரில் ஆயிரக்கணக்கான சகோதரிகள் உள்பட நாடு முழுவதும் சுமார் 1.25 கோடி லட்சாதிபதி சகோதரிகள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் எடுத்துரைத்தார். "கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பால் உற்பத்தி 14 கோடி டன்னிலிருந்து 24 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது உலகின் முதன்மையான பால் உற்பத்தியாளர் என்ற இந்தியாவின் நிலையை வலுப்படுத்தியுள்ளது" என்று திரு மோடி கூறினார். இந்த சாதனையில் பீகாரின் குறிப்பிடத்தக்க பங்கைப் பாராட்டினார். பீகாரில் உள்ள கூட்டுறவு பால் சங்கங்கள் ஒரு நாளைக்கு 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கின்றன. இதன் விளைவாக பீகாரில் உள்ள கால்நடை வளர்ப்பு விவசாயிகள், தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கணக்குகளுக்கு ஆண்டுதோறும் ரூ .3,000 கோடிக்கு மேல் செலுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

 

பால்வளத் துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை திரு ராஜீவ் ரஞ்சன் திறமையாக முன்னெடுத்து வருவது குறித்து திருப்தி தெரிவித்த பிரதமர், அவர்களின் முயற்சிகள் காரணமாக பீகாரில் இரண்டு திட்டங்கள் விரைவாக முன்னேறி வருவதை சுட்டிக்காட்டினார். மோத்திஹரியில் அமையவுள்ள சிறப்பு மையமானது உயர்தர உள்நாட்டு கால்நடை இனங்களை உருவாக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டார். கூடுதலாக, பரவுனியில் உள்ள பால் தயாரிப்பு ஆலை இப்பகுதியில் உள்ள மூன்று லட்சம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

முந்தைய அரசுகள் மீனவர்கள் மற்றும் படகோட்டிகளுக்கு உதவவில்லை என்று விமர்சித்த திரு மோடி, முதன்முறையாக தங்களது அரசு மீனவர்களுக்கு வேளாண் கடன் அட்டைகளை வழங்கியதை எடுத்துரைத்தார். இதுபோன்ற முயற்சிகளின் காரணமாக, பீகார் மீன் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, பீகார் மாநிலம் நாட்டின் முதல் 10 மீன் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் ஒன்றாக இருந்தது என்றும், ஆனால் தற்போது, பீகார் நாட்டில் மீன் உற்பத்தி செய்யும் முதல் ஐந்து மாநிலங்களில் ஒன்றாக மாறியுள்ளது என்று அவர் தெரிவித்தார். மீன்பிடித் துறையில் கவனம் செலுத்துவது சிறு விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு குறிப்பிடத்தக்க பயனை அளித்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். பாகல்பூர் நகரம் கங்கை டால்பின்களுக்கும் பெயர் பெற்றது என்றும், இது நமாமி கங்கை இயக்கத்தின் குறிப்பிடத்தக்க வெற்றியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"சமீபத்திய ஆண்டுகளில் தங்கள் அரசு மேற்கொண்ட முயற்சிகள் நாட்டின் வேளாண் ஏற்றுமதியை கணிசமாக அதிகரித்துள்ளன" என்று பிரதமர் கூறினார். இதன் விளைவாக, விவசாயிகள் இப்போது தங்கள் விளைபொருட்களுக்கு அதிக விலையைப் பெறுகிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார். இதற்கு முன்பு ஏற்றுமதி செய்யப்படாத பல வேளாண் பொருட்கள் தற்போது சர்வதேச சந்தைகளை எட்டுகின்றன என்று அவர் கூறினார். பீகாரின் தாமரை விதைகள் உலகச் சந்தையை அடைய இதுவே சரியான தருணம் என்று திரு மோடி எடுத்துரைத்தார். இந்திய நகரங்களில் காலை உணவின் பிரபலமான ஒரு பகுதியாக தாமரை விதைகள் மாறியுள்ளன என்றும் அது ஒரு சிறந்த உணவாகக் கருதப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட  தாமரை விதை வாரியமானது தாமரை விதை விவசாயிகளுக்கு தாமரை விதை உற்பத்தி, பதனப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட ஒவ்வொரு அம்சத்திலும்  உதவும் என்று அவர் கூறினார்.

 

பட்ஜெட்டில் பீகார் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கான மற்றொரு குறிப்பிடத்தக்க முன்முயற்சி குறித்தும் தெரிவித்த திரு மோடி, கிழக்கு இந்தியாவில் உணவு பதனப்படுத்தும் தொழிலுக்கான முக்கிய மையமாக பீகார் மாற உள்ளது என்று குறிப்பிட்டார். பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் நிறுவனம் நிறுவப்படுவதாக அவர் அறிவித்தார். கூடுதலாக, மாநிலத்தில் மூன்று புதிய வேளாண் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்களில் ஒன்று பாகல்பூரில் ஜர்தலு வகை மாம்பழங்களை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்படும் மற்ற இரண்டு மையங்கள் முங்கர் மற்றும் பக்ஸரில் நிறுவப்பட்டு, தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு உதவி வழங்கப்படும். விவசாயிகளுக்கு பயனளிக்கும் முடிவுகளை எடுப்பதில் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று திரு மோடி குறிப்பிட்டார்.

"இந்தியா ஜவுளி ஏற்றுமதியில் முக்கிய நாடாக மாறி வருகிறது" என்று கூறிய திரு மோடி, நாட்டில் ஜவுளித் தொழிலை வலுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை எடுத்துரைத்தார். பாகல்பூரில், மரங்கள் கூட தங்கத்தை உற்பத்தி செய்கின்றன என்று அடிக்கடி கூறப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். பாகல்புரி பட்டு மற்றும் டஸ்ஸார் பட்டு ஆகியவை நாடு முழுவதும் புகழ் பெற்றவை என்றும், டஸ்ஸர் பட்டுக்கான தேவை மற்ற நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். துணி மற்றும் நூல் சாயமிடும் தொழிற்சாலைகள், துணி அச்சிடும் அலகுகள், துணி பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பட்டுத் தொழிலுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் கூறினார். இந்த முன்முயற்சிகள் பாகல்பூர் நெசவாளர்களுக்கு நவீன வசதிகளை வழங்குவதுடன், அவர்களின் தயாரிப்புகள் உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைய உதவும் என்று அவர் கூறினார்.

போக்குவரத்து சிரமங்களைத் தீர்ப்பதற்காக ஆறுகளின் மீது ஏராளமான பாலங்களைக் கட்டுவதன் மூலம் பீகாரின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றுக்கு அரசு தீர்வு காண்பதாக திரு மோடி குறிப்பிட்டார். போதிய பாலங்கள் இல்லாததால் மாநிலத்திற்கு பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்று அவர் எடுத்துரைத்தார். கங்கை ஆற்றின் குறுக்கே நான்கு வழிப் பாலம் கட்டும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும், இந்தத் திட்டத்திற்காக ரூ.1,100 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

வெள்ளத்தால் பீகார் குறிப்பிடத்தக்க இழப்பை சந்தித்துள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதை சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மேற்கு கோசி கால்வாய் ஈஆர்எம் திட்டத்திற்கான ஆதரவு மூலம், மித்திலாஞ்சல் பிராந்தியத்தில் 50,000 ஹெக்டர் நிலம் பாசனத்தின்  கீழ் கொண்டுவரப்பட்டு லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் பயனடைவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

"விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க தங்கள் அரசு பல நிலைகளில் பணியாற்றி வருகிறது" என்று கூறிய பிரதமர், உற்பத்தியை அதிகரிப்பது, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களில் தற்சார்பை அடைவது, அதிக உணவு பதனப்படுத்தும் தொழிற்சாலைகளை நிறுவுவது மற்றும் இந்திய விவசாயிகளின் உற்பத்திப் பொருட்கள் உலக சந்தைகளை அடைவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் ஆகியவற்றை எடுத்துரைத்தார். உலகில் உள்ள ஒவ்வொரு சமையலறையிலும் இந்திய விவசாயிகளால் வளர்க்கப்பட்ட குறைந்தபட்சம் ஒரு பொருளாவது இருக்க வேண்டும் என்ற தனது தொலைநோக்குப் பார்வையை அவர் பகிர்ந்து கொண்டார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் பிரதமரின் தன- தானிய திட்ட அறிவிப்பானது இந்தத் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிப்பதாக உள்ளது என அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின் கீழ், மிகக் குறைந்த பயிர் உற்பத்தி செய்யும் 100 மாவட்டங்கள் கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகளில் விவசாயத்தை மேம்படுத்த சிறப்பு பிரச்சாரங்கள் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். பருப்பு வகைகளில் தற்சார்பை அடைய இயக்கத்தின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், விவசாயிகள் அதிக பருப்பு வகைகளை உற்பத்தி செய்ய ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

இன்று மிகவும் சிறப்பான நாள் என்று குறிப்பிட்ட பிரதமர், நாட்டில் 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது என்றும், தற்போது அந்த இலக்கை அது எட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார். பீகாரில் 10,000-வது உழவர் உற்பத்தியாளர் அமைப்பு நிறுவப்படுவது குறித்து தனது மகிழ்ச்சியை அவர் பகிர்ந்து கொண்டார். ககாரியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மக்காச்சோளம், வாழை மற்றும் நெல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் வெறும் அமைப்புகளாக இல்லாமல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான முன்னெப்போதும் இல்லாத சக்தியாக திகழும் என்று அவர் தெரிவித்தார். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் சிறு விவசாயிகளுக்கு குறிப்பிடத்தக்க சந்தை ஆதாயங்களை நேரடியாக அணுக உதவுகின்றன என்று திரு மோடி குறிப்பிட்டார். முன்பு கிடைக்காத வாய்ப்புகள் இப்போது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் நமது விவசாய சகோதர சகோதரிகளுக்கு கிடைக்கின்றன என்று அவர் தெரிவித்தார். நாட்டில் சுமார் 30 லட்சம் விவசாயிகள் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இப்போது வேளாண் துறையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள வர்த்தகத்தை நடத்தி வருகின்றன என்று அவர் கூறினார். 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

 

பீகாரின் தொழில் வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்தி வருவதைத் சுட்டிக் காட்டிய திரு மோடி, பாகல்பூரில் பீகார் அரசு ஒரு பெரிய மின் உற்பத்தி ஆலையை அமைத்து வருவதாகவும், அதற்கு போதுமான நிலக்கரி கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார். இந்த நோக்கத்திற்காக நிலக்கரி கிடைக்கச் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பீகாரின் வளர்ச்சிக்கு புதிய சக்தியை வழங்கும் என்றும் பீகார் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

" வளர்ச்சியடைந்த இந்தியாவின் எழுச்சி பழமையிலிருந்து தொடங்கும்" என்று கூறிய திரு மோடி, பீகார் கிழக்கு இந்தியாவின் மிக முக்கியமான தூண் மற்றும் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் சின்னம் என்பதைக் குறிப்பிட்டார். முந்தைய ஆட்சியின் நீண்டகால தவறான போக்கை அவர் விமர்சித்தார். அது பீகாரை அழித்து அவதூறு செய்ததாகக் கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியாவில், பண்டைய வளமான பாடலிபுத்திரத்திற்கு இணையான இடத்தை பீகார் மீண்டும் பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த இலக்கை நோக்கி தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பிரதமர் எடுத்துரைத்தார். பீகாரில் நவீன போக்குவரத்து இணைப்பு, சாலை இணைப்புகள் மற்றும் பொது நலத் திட்டங்களுக்கு தங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். முங்கர் முதல் பாகல்பூர் வரை மிர்சா சௌகி வரை சுமார் 5,000 கோடி ரூபாய் செலவில் புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருவதாக அவர் அறிவித்தார். மேலும், பாகல்பூரில் இருந்து அன்ஷ்திவா வரை நான்கு வழி சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட உள்ளது. விக்ரம்ஷீலாவிலிருந்து கட்டாரியா வரை புதிய ரயில் பாதை மற்றும் ரயில் பாலத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

கலாச்சார ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் பாகல்பூர் முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்ட பிரதமர், விக்ரம்ஷீலா பல்கலைக்கழகம் இருந்தபோது, அது உலகளாவிய அறிவு மையமாக இருந்தது என்று குறிப்பிட்டார். நாளந்தா பல்கலைக்கழகத்தின் பண்டைய பெருமையை நவீன இந்தியாவுடன் இணைக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். நாளந்தாவைத் தொடர்ந்து, விக்ரம்ஷீலாவில் மத்திய பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு வருவதாகவும், இந்தத் திட்டத்திற்கான பணிகளை மத்திய அரசு விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார். இந்தத் திட்டத்தின் தேவைகளை நிறைவேற்ற துரித முயற்சிகளை மேற்கொண்ட திரு நிதீஷ் குமார் மற்றும் ஒட்டுமொத்த பீகார் அரசு குழுவினருக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்தியாவின் பெருமைமிகு பாரம்பரியத்தை பாதுகாக்கவும், வளமான எதிர்காலத்தை உருவாக்கவும் தங்கள் அரசு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக கூறினார். இந்தியாவின் நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் மிகப்பெரிய பண்டிகையான பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நடைபெற்று வருவதை அவர் எடுத்துரைத்தார். ஒற்றுமையின் மகா கும்பமேளாவில் ஐரோப்பாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட அதிகமான மக்கள் நீராடியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். பீகார் முழுவதிலும் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். மகா கும்பமேளா குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்த கட்சிகளை அவர் விமர்சித்தார். ராமர் கோயிலை எதிர்த்த அதே நபர்கள் இப்போது மகா கும்பமேளாவை விமர்சிக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். மகா கும்பமேளாவை அவமதிப்பவர்களை பீகார் ஒருபோதும் மன்னிக்காது என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். பீகாரை வளத்திற்கான புதிய பாதையில் இட்டுச் செல்ல அரசு தொடர்ந்து அயராது பாடுபடும் என்று தெரிவித்து அவர் தனது உரையை நிறைவு செய்தார். நாட்டின் விவசாயிகளுக்கும், பீகார் மக்களுக்கும் அவர் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பீகார் ஆளுநர் திரு ஆரிப் முகமது கான், பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார், மத்திய அமைச்சர்கள் திரு சிவராஜ் சிங் சவுகான், திரு. ஜிதன் ராம் மஞ்சி, திரு கிரிராஜ் சிங், திரு லாலன் சிங், திரு சிராக் பாஸ்வான், மத்திய இணையமைச்சர் திரு ராம் நாத் தாக்கூர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

விவசாயிகள் நலனை உறுதி செய்வதில் பிரதமர் உறுதியாக உள்ளார். இதையொட்டி பாகல்பூரில் பல்வேறு முக்கிய முயற்சிகளை அவர் மேற்கொள்கிறார். நாடு முழுவதும் 9.7 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் ரூ.21,500 கோடிக்கும் அதிகமான நேரடி நிதிப் பலன்களைப் பெறுகிறார்கள்.

 

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு சிறந்த ஊதியம் பெறுவதை உறுதி செய்வதில் பிரதமர் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தி வருகிறார். இதைக் கருத்தில் கொண்டு, 2020 பிப்ரவரி 29 அன்று, 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்கி ஊக்குவிப்பதற்கான மத்திய துறைத் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இந்த அமைப்புகள் விவசாயிகள் தங்களது வேளாண் விளைபொருட்களைக் கூட்டாகச் சந்தைப்படுத்தவும், உற்பத்தி செய்யவும் உதவுகின்றன. ஐந்து ஆண்டுகளுக்குள், விவசாயிகளுக்கான பிரதமரின் இந்த உறுதிப்பாடு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் போது நாட்டில் 10,000 வது உழவர் உற்பத்தியாளர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தேசிய பசு இயக்கத்தின் கீழ் மோத்திஹரியில் கட்டப்பட்ட உள்நாட்டு இனங்களுக்கான சிறப்பு மையத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். அதிநவீன ஐவிஎஃப் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், உள்நாட்டு இனங்களின் சிறந்த கால்நடைகளை உற்பத்தி செய்து இனப்பெருக்கம் செய்தல், விவசாயிகள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு நவீன இனப்பெருக்க தொழில்நுட்பத்தில் பயிற்சி அளித்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும். 3 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட சந்தையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பரோனியில் பால் உபபொருட்கள் ஆலையையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

போக்குவரத்து மற்றும் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, ரூ.526 கோடி மதிப்புள்ள வாரிசாலிகஞ்ச் – நவாடா – திலையா ரயில் பிரிவு மற்றும் இஸ்மாயில்பூர் – ரஃபிகஞ்ச் சாலை மேம்பாலம் ஆகியவற்றை இரட்டை ரயில்பாதையாக மாற்றும் திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

 

 

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
As Naxalism ends in Chhattisgarh, village gets tap water for first time

Media Coverage

As Naxalism ends in Chhattisgarh, village gets tap water for first time
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 13, 2026
April 13, 2026

Nari Shakti, 7% Growth & Global Respect: PM Modi Leadership Formula India is Celebrating