அசாமின் துடிப்பான பணியாளர்கள், விரைவான வளர்ச்சி ஆகியவை முன்னணி முதலீட்டு மையமாக அதை மாற்றுவதற்கு உந்துதலாக உள்ளன: பிரதமர்
உலகளாவிய நிச்சயமற்ற நிலையிலும் கூட, ஒன்று நிச்சயம் – அது இந்தியாவின் விரைவான வளர்ச்சி: பிரதமர்
தொழில்துறை, புதுமை கண்டுபிடிப்பு சார்ந்த கலாச்சாரம், வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான முழுமையான சூழலை நாங்கள் உருவாக்கியுள்ளோம்: பிரதமர்
இந்தியா தனது உற்பத்தித் துறையை விரைவான இயக்கத்தின் அடிப்படையில் முன்னெடுத்து வருகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ் குறைந்த செலவில் உற்பத்தியை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம்: பிரதமர்
மின்னணு புரட்சி, புதுமை கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி ஆகியவற்றை உலகளாவிய முன்னேற்றம் சார்ந்துள்ளது: பிரதமர்
இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியின் முக்கிய மையமாக அசாம் மாறி வருகிறது: பிரதமர்
நமது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இயக்கத்தை ஒரு முன்மாதிரி நடைமுறையாக உலக நாடுகள் கண்டறிந்து அதைப் பின்பற்றுகின்றன; கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா தனது சுற்றுச்சூழல் பொறுப்புடைமைகளைப் புரிந்துகொண்டு கொள்கை முடிவுகளை எடுத்துள்ளது: பிரதமர்

அசாம் மாநிலம் குவஹாத்தியில் அசாம் அனுகூலம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சிமாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைத்து பிரமுகர்களையும் வரவேற்ற திரு மோடி, "கிழக்கு இந்தியாவும், வடகிழக்கு இந்தியாவும் இன்று எதிர்காலத்திற்கான ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகின்றன என்று கூறினார். அசாமின் சிறப்பான திறன் மற்றும் முன்னேற்றத்தை உலக நாடுகளுடன் இணைக்கும் மாபெரும்  முன்முயற்சியாக அசாம் அனுகூலம் உள்ளது" என்று கூறினார். இந்தியாவின் வளத்தில் கிழக்கு இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது என்பதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது என்றும் அவர் கூறினார். "தற்போது நாம் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி முன்னேறிச் செல்லும் போது, கிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் தங்களது உண்மையான திறனை வெளிப்படுத்தும்" என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். அசாம் அனுகூலம் அமைப்பும் இதே உணர்வின் பிரதிநிதி என்று கூறிய அவர், இத்தகைய பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக அசாம் அரசுக்கும், முதலமைச்சருக்கும் பாராட்டு தெரிவித்தார். 2013-ம் ஆண்டு அகரவரிசையில் அ என்றால் அசாம் என்று சொல்லிக்கொடுக்கும்  காலம் வெகு தொலைவில் இல்லை என்று தான் கூறியிருந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

"உலகளாவிய நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், நிபுணர்கள் ஒருமனதாக ஒரு உறுதியை ஒப்புக்கொள்கிறார்கள்: அதுதான் இந்தியாவின் விரைவான வளர்ச்சி" என்று பிரதமர் கூறினார். இந்த நூற்றாண்டின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையுடன் இன்றைய இந்தியா செயல்பட்டு வருவதாக அவர் வலியுறுத்தினார். இந்தியாவின் இளைஞர்கள்மீது உலக நாடுகள் அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளன என்றும், அவர்கள் விரைவாக திறன் மிக்கவர்களாகவும், புதுமையானவர்களாக மாறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் புதிய நடுத்தர வகுப்பினர் மீதான நம்பிக்கை அதிகரித்து வருவதையும், புதிய விருப்பங்களுடன் வறுமையிலிருந்து மீண்டு வருவதையும் அவர் குறிப்பிட்டார். அரசியல் நிலைத்தன்மை மற்றும் கொள்கைத் தொடர்ச்சியை ஆதரிக்கும் இந்தியாவின் 140 கோடி மக்கள் மீது உலக நாடுகள் வைத்திருக்கும் நம்பிக்கையை சுட்டிக் காட்டிய திரு மோடி, சீர்திருத்தங்களை இந்தியா தொடர்ந்து செயல்படுத்தி வருவதை எடுத்துரைத்தார். மேலும், இந்தியா தனது உள்ளூர் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தி, பல்வேறு உலகளாவிய பிராந்தியங்களுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் இணைகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கிழக்கு ஆசியாவுடனான வலுவான இணைப்பு மற்றும் புதிய இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதாரப் பெருவழித்தடம் ஆகியவை புதிய வாய்ப்புகளைக் கொண்டு வந்திருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

 

இந்தியாவின் மீது வளர்ந்து வரும் உலகளாவிய நம்பிக்கையை எடுத்துரைத்த திரு மோடி, "இந்தியாவின் வளர்ச்சியில் அசாமின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது" என்று குறிப்பிட்டார். அசாம் அனுகூலம் உச்சி மாநாட்டின் முதலாவது பகுதி 2018-ல் நடைபெற்றது, அந்த நேரத்தில் அசாமின் பொருளாதாரம் ரூ. 2.75 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். தற்போது, அசாம் சுமார் ரூ.6 லட்சம் கோடி பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாறியுள்ளது. தங்கள் அரசின் கீழ், அசாமின் பொருளாதாரம் வெறும் ஆறு ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். மேலும், இது மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள தங்களுடைய அரசுகளின் இரட்டை விளைவு என்று அவர் கூறினார். அசாமில் ஏராளமான முதலீடுகள் அதை வரம்பற்ற சாத்தியக்கூறுகளின் மாநிலமாக மாற்றியுள்ளன என்று அவர் கூறினார். கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சிறந்த முதலீட்டுச் சூழலை உருவாக்குதல் ஆகியவற்றில் அசாம் அரசு கவனம் செலுத்தி வருவதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். சமீப ஆண்டுகளில் இணைப்பு தொடர்பான உள்கட்டமைப்பில் தங்கள் அரசு விரிவாக பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு, பிரம்மபுத்திரா ஆற்றின் மீது 70 ஆண்டுகளில் கட்டப்பட்ட மூன்று பாலங்கள் மட்டுமே இருந்தன என்று அவர் ஒரு உதாரணத்தை குறிப்பிட்டார். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில், நான்கு புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த பாலங்களில் ஒன்று பாரத ரத்னா பூபன் ஹசாரிகாவின் பெயரிடப்பட்டுள்ளது. 2009 மற்றும் 2014 க்கு இடையில், அசாமின் சராசரி ரயில்வே பட்ஜெட் ரூ .2,100 கோடியைப் பெற்றிருந்தது.  ஆனால் தங்களின் அரசு அசாமின் ரயில்வே பட்ஜெட்டை நான்கு மடங்கு அதிகரித்து ரூ.10,000 கோடியாக உயர்த்தியுள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார். அசாமில் 60-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், வடகிழக்கில் முதலாவது பகுதி அளவிலான அதிவேக ரயில் தற்போது குவஹாத்தி மற்றும் புதிய ஜல்பைகுரி இடையே இயக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

அசாமில் விமான போக்குவரத்து விரைவாக விரிவடைந்து வருவதை குறிப்பிட்ட பிரதமர், 2014-ம் ஆண்டு வரை 7 வழித்தடங்களில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வந்ததாகவும், தற்போது 30 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்பட்டுவதாகவும் தெரிவித்தார். இந்த விரிவாக்கம் உள்ளூர் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளித்துள்ளது மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று அவர் மேலும் கூறினார். இந்த மாற்றங்கள் உள்கட்டமைப்புடன் மட்டும் செயல்படுத்தப்படாமல், சட்டம் ஒழுங்கில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், கடந்த பத்தாண்டுகளில் கையெழுத்திடப்பட்ட ஏராளமான அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த எல்லைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்றும் திரு மோடி தெரிவித்தார். அசாமில் உள்ள ஒவ்வொரு பிராந்தியமும், ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு இளைஞரும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.

 

"இந்தியா பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும், நிலைகளிலும் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை சந்தித்து வருகிறது, மேலும், வணிகம் செய்வதை எளிதாக்கும் தெற்குத் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், தொழில்துறை மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள் கலாச்சாரத்தை மேம்படுத்த ஒரு விரிவான சூழல் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது" என்று திரு மோடி கூறினார். புத்தொழில் நிறுவனங்கள், உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டங்கள் மூலம் உற்பத்தி ஆகியவற்றுக்கு சிறப்பான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன மற்றும் புதிய உற்பத்தி நிறுவனங்கள்  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரி விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன  என்பதையும் அவர் எடுத்துரைத்தார். நாட்டின் உள்கட்டமைப்பில் அரசு கணிசமாக முதலீடு செய்து வருவதையும் அவர் குறிப்பிட்டார். நிறுவன சீர்திருத்தம், தொழில், உள்கட்டமைப்பு மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள்  ஆகியவற்றின் கலவைதான் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக அமைகிறது என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். இரட்டை என்ஜின் வேகத்தில் முன்னேறிச் செல்லும் அசாமிலும் இந்த முன்னேற்றம் காணப்படுகிறது. 2030-ம் ஆண்டுக்குள் 150 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய அசாம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த இலக்கை அசாம் அடைய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர், அசாமின் திறமை வாய்ந்த மக்கள் மற்றும் அவர்களது அரசின் அர்ப்பணிப்பே இதற்குக் காரணம் என்றார். தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவுக்கு இடையே நுழைவாயிலாக அசாம் வளர்ந்து வருகிறது என்று குறிப்பிட்ட திரு மோடி, இந்த  சக்தியை மேலும் வலுப்படுத்த அரசு வடகிழக்கு உருமாற்ற தொழில்மயமாக்கல் திட்டமான "உன்னதி" ஐ தொடங்கியுள்ளது என்று கூறினார். 'உன்னதி' திட்டம் அசாம் உட்பட முழு வடகிழக்கு பிராந்தியத்திலும் தொழில், முதலீடு மற்றும் சுற்றுலாவை விரைவுப்படுத்தும் என்று அவர் எடுத்துரைத்தார். தொழில்துறை கூட்டாண்மை நிறுவனங்கள் இந்தத் திட்டத்தையும், அசாமின் வரம்பற்ற திறனையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அசாமின் இயற்கை வளங்கள் மற்றும் உத்திசார்ந்த அமைவிடம் ஆகியவை முதலீட்டிற்கு உகந்த இடமாக அதை ஆக்கியுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். அசாம் தேயிலையானது அசாமின் திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் மேற்கோள் காட்டினார். கடந்த 200 ஆண்டுகளில் இது ஒரு உலகளாவிய பிராண்டாக மாறியுள்ளது, மற்ற துறைகளிலும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது என்று கூறினார்.

உலகெங்கிலும் நெகிழ்திறன் கொண்ட விநியோகச் சங்கிலிகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களை எடுத்துரைத்த பிரதமர், "இந்தியா தனது உற்பத்தித் துறையை முன்னேற்றுவதற்கான விரைவான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது" என்று தெரிவித்தார். இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ், மருந்துகள், மின்னணுவியல் மற்றும் வாகன உதிரி பாகங்கள் போன்ற துறைகளில் குறைந்த செலவில் உற்பத்தியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக அவர் கூறினார். இந்தியாவின் தொழில்துறை உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், சர்வதேச சந்தைகளில் உற்பத்தியில் சிறந்து விளங்குவதற்கான புதிய அளவுகோல்களை அமைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த உற்பத்தி புரட்சியில் அசாம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 

உலக வர்த்தகத்தில் அசாமுக்கு எப்போதும் ஒரு பங்களிப்பு உண்டு என்று குறிப்பிட்ட திரு மோடி, தற்போது, இந்தியாவின் கடற்கரை இயற்கை எரிவாயு உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் மேல் அசாமில் இருந்து வருகிறது என்றும், சமீபத்திய ஆண்டுகளில் அசாமின் சுத்திகரிப்பு நிலையங்களின் திறன் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். மின்னணுவியல், செமிகண்டக்டர்கள் மற்றும் பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் அசாம் விரைவாக வளர்ந்து வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அரசின் கொள்கைகள் காரணமாக, உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களின் மையமாக அசாம் மாறி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய பட்ஜெட்டில், நம்ரூப்-4 ஆலைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த யூரியா உற்பத்தி ஆலை எதிர்காலத்தில் ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியத்தின் தேவையையும் நாட்டின் தேவையையும் பூர்த்தி செய்யும் என்று குறிப்பிட்டார். "கிழக்கு இந்தியாவின் முக்கிய உற்பத்தி மையமாக அசாம் மாறும் தருணம் வெகு தொலைவில் இல்லை" என்று அவர் கூறினார். இந்த இலக்கை அடைவதற்கு அசாம் மாநில அரசுக்கு, மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

21-ம் நூற்றாண்டில் உலகின் முன்னேற்றம் என்பது மின்னணு புரட்சி, புதுமை கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றங்களைச் சார்ந்துள்ளது என்று கூறிய திரு மோடி, "நாம் எவ்வளவு சிறப்பாக தயாராக இருக்கிறோமோ, அவ்வளவு வலுவாக உலகளவில் இருப்போம்" என்று கூறினார். 21-ம் நூற்றாண்டின் கொள்கைகள் மற்றும் உத்திகளுடன் அரசு முன்னேறுவதாகவும் அவர் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் மின்னணு மற்றும் மொபைல் உற்பத்தியில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க  வளர்ச்சியை எடுத்துரைத்த அவர், இந்த வெற்றிக் கதையை செமிகண்டக்டர் உற்பத்தியில்  காணலாம் என்று தெரிவித்தார். இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்திக்கான முக்கிய மையமாக அசாம் வளர்ந்து வருகிறது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்ட பிரதமர், அசாம் மாநிலம் ஜாகிரோட்டில் அண்மையில் தொடங்கப்பட்ட டாடா செமிகண்டக்டர் அசெம்பிளி & ஆய்வக வசதியை குறிப்பிட்டு, இது வடகிழக்கில் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கூறினார். செமிகண்டக்டர் துறையில் புதுமைகண்டுபிடிப்புகளுக்காக ஐஐடியுடன் இணைந்து செயல்படுவதையும், நாட்டில் செமிகண்டக்டர் ஆராய்ச்சி மையத்தில் தற்போது நடைபெற்று வரும் பணிகளையும் அவர் எடுத்துரைத்தார். இந்தப் பத்தாண்டு கால இறுதியில், மின்னணுத் துறையின் மதிப்பு 500 பில்லியன் டாலரை எட்டும் என்று பிரதமர் கணித்துள்ளார். "இந்தியாவின் வேகம் மற்றும் அளவுடன், செமிகண்டக்டர் உற்பத்தியில் நாடு ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும், லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் மற்றும் அசாமின் பொருளாதாரத்திற்கு பயனளிக்கும்" என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

 

"இந்தியா தனது சுற்றுச்சூழல் பொறுப்புகளை புரிந்து கொண்டு கடந்த பத்தாண்டில் கொள்கை முடிவுகளை எடுத்துள்ளது மற்றும் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இயக்கத்தை ஒரு முன்மாதிரி நடைமுறையாக உலக நாடுகள் கருதுகின்றன" என்று பிரதமர் கூறினார். கடந்த பத்து ஆண்டுகளில் சூரியசக்தி, காற்று மற்றும் நிலையான எரிசக்தி வளங்களில் இந்தியா குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்துள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். இது சுற்றுச்சூழல் கடமைகளை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனை பல மடங்கு விரிவுபடுத்தியுள்ளது என்று அவர் கூறினார். 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை அதிகரிக்க நாடு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார். "2030-ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை அடையும் இலக்கில் அரசு செயல்பட்டு வருகிறது" என்று அவர் கூறினார். நாட்டில் வளர்ந்து வரும் எரிவாயு உள்கட்டமைப்பு தேவை அதிகரிக்க வழிவகுத்துள்ளது மற்றும் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத் துறை விரைவாக விரிவடைந்து வருகிறது என்று குறிப்பிட்ட திரு மோடி, இந்தப் பயணத்தில் அசாமுக்கு குறிப்பிடத்தக்க நன்மை உள்ளது என்று குறிப்பிட்டார். உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டங்கள் மற்றும் பசுமை முன்முயற்சிகளுக்கான கொள்கைகள் உட்பட தொழில்களுக்கு பல பாதைகளை அரசு உருவாக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் அசாம் முன்னணி மாநிலமாக உருவெடுக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்திய அவர், அசாமின் திறனை அதிகபட்சமாக பயன்படுத்துமாறு தொழில்துறை தலைவர்களை வலியுறுத்தினார்.

 

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதில் கிழக்கு இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறிய திரு மோடி, "தற்போது, வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்தியா பிராந்தியமானது உள்கட்டமைப்பு, சரக்கு போக்குவரத்து, வேளாண்மை, சுற்றுலா மற்றும் தொழில்துறை ஆகியவற்றில் விரைவாக முன்னேறி வருகிறது" என்று கூறினார். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இந்தப் பிராந்தியம் முன்னெடுத்துச் செல்வதை உலக நாடுகள் காணும் தருணம் வெகு தொலைவில் இல்லை என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அசாமுடனான இந்தப் பயணத்தில் அனைவரையும் கூட்டாளிகளாகவும், நண்பர்களாகவும் இருக்குமாறு அழைப்பு விடுத்த அவர், அசாமை உலகின் தெற்கில் இந்தியாவின் திறன்களை புதிய உயரங்களுக்கு உயர்த்தும் மாநிலமாக மாற்றுவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்து தனது உரையை நிறைவு செய்தார். முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களின் பங்களிப்பை முழுமையாக ஆதரிப்பதன் மூலம் வளர்ச்சியடைந்த இந்திய பயணத்தில் அவர்களுக்கு துணை நிற்பதாக பிரதமர் கூறியதன் மூலம் அவர்களின் நம்பிக்கையை அதிகரித்தார்.

அசாம் ஆளுநர் திரு. லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, அசாம் முதலமைச்சர் திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர்கள் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், திரு. சர்பானந்த சோனோவால், திரு. ஜோதிராதித்ய சிந்தியா, திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா, மத்திய இணை அமைச்சர் திரு. பபித்ரா மார்கெரிட்டா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

அசாம் அனுகூலம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சி மாநாடு 2025 குவஹாத்தியில் பிப்ரவரி 25 முதல் 26 வரை நடைபெறுகிறது. இது தொடக்க அமர்வு, ஏழு அமைச்சக அமர்வுகள் மற்றும் 14 கருப்பொருள் அமர்வுகளை உள்ளடக்கியதாகும். தொழில்துறை பரிணாமம், உலகளாவிய வர்த்தக கூட்டாண்மை, வளர்ந்து வரும் தொழில்கள் மற்றும் 240 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களைக் கொண்ட துடிப்பான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மாநிலத்தின் பொருளாதார நிலப்பரப்பை விளக்கும் ஒரு விரிவான கண்காட்சியும் இதில் அடங்கும்.

பல்வேறு சர்வதேச அமைப்புகள், உலகளாவிய தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை நிபுணர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கின்றனர்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Technical textiles critical to footwear sector

Media Coverage

Technical textiles critical to footwear sector
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 29, 2026
April 29, 2026

Leadership That Plays, Builds & Delivers: PM Modi’s Vision Igniting Youth, Women & Northeast India