“ஆறு ஆண்டுகளில் வேளாண்துறை பட்ஜெட் பலமடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் விவசாயிகளுக்கான வேளாண் கடனும் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது”
“2023 சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் பெருநிறுவன உலகம் இந்திய சிறுதானியங்களுக்கு குறியீடு அளித்து மேம்படுத்த முன்வர வேண்டும்”
“21-ம் நூற்றாண்டில் வேளாண்மை மற்றும் பண்ணைத் தொழில் தொடர்பான மனநிலையை செயற்கை நுண்ணறிவு முற்றிலுமாக மாற்றவிருக்கிறது”
“நாட்டில் கடந்த 3-4 ஆண்டுகளில் 700-க்கும் அதிகமான வேளாண்மை சார்ந்த புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன”
“கூட்டுறவு தொடர்பான புதிய அமைச்சகத்தை அரசு உருவாக்கி உள்ளது. உங்களின் இலக்கு கூட்டுறவை எவ்வாறு வெற்றிகரமான வணிக நிறுவனமாக மாற்றுவது என்பதாக இருக்க வேண்டும்”

வேளாண் துறையில் மத்திய பட்ஜெட் 2022-ன் ஆக்கப்பூர்வ தாக்கம் குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். வேளாண் துறையை வலுப்படுத்துவதற்கு பட்ஜெட்டின் பங்களிப்பு குறித்த வழிவகைகளை அவர் விவாதித்தார். ‘நவீன வேளாண்மை’- அமலாக்கத்திற்கான உத்திகள் என்பது இந்த இணையவழி கருத்தரங்கின் நோக்கமாக இருந்தது. சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்கள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள், தொழில்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள், கல்வியாளர்கள் பல்வேறு வேளாண் அறிவியல் மையங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

பிரதமரின் விவசாயி கௌரவிப்பு நிதி திட்டம் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைவதை பிரதமர் குறிப்பிட்டார். “நாட்டின் சிறு விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் பேருதவியாக இருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 11 கோடி விவசாயிகளுக்கு ஏறத்தாழ ரூ. 1.75 லட்சம் வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார். விதைகளிலிருந்து சந்தை வரையிலான பலபுதிய நடைமுறைகள் குறித்து பேசிய பிரதமர், வேளாண் துறையில் பழைய நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் பற்றியும் பேசினார். “ஆறு ஆண்டுகளில் வேளாண்துறை பட்ஜெட் பலமடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் விவசாயிகளுக்கான வேளாண் கடனும் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார். பெருந்தொற்றின் சிரமமான காலத்தில் சிறப்பு இயக்கத்தின் ஒருபகுதியாக 3 கோடி விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டைகள் (கேசிசி) வழங்கப்பட்டன என்பதையும் கேசிசியின் பயன்கள் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் நீடிக்கப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். சிறு விவசாயிகளின் மகத்தான பயனுக்கு சிறிய வகை நீர்ப்பாசன திட்டமும் வலுப்படுத்தப்பட்டது.

இந்த முயற்சிகள் காரணமாக விவசாயிகள் சாதனை அளவாக உற்பத்தியைத் தந்துள்ளனர் என்றும் எம்எஸ்பி கொள்முதலிலும் கூட சாதனைகள் படைக்கப்பட்டன என்றும் அவர் கூறினார். இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்பட்டதன் காரணமாக இயற்கை வேளாண்மை பொருட்களுக்கான சந்தை மதிப்பு ரூ.11,000 கோடியை எட்டியது என்று கூறிய பிரதமர், 6 ஆண்டுகளுக்கு முன் ரூ.2,000 கோடியாக இருந்த ஏற்றுமதி ரூ.7,000 கோடிக்கும் அதிகமாக உயர்ந்தது என்றார்.

வேளாண்துறையை நவீனமாகவும், திறன்மிக்கதாகவும் மாற்றுவதற்கான பட்ஜெட் ஆலோசனைகளின் ஏழு வழிவகைகள் பற்றி பிரதமர் விவரித்தார். முதலாவதாக கங்கை நதியின் இருகரைகளிலும், 5 கிலோ மீட்டருக்குள் இயக்கம் போல் இயற்கை வேளாண்மையை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக, விவசாயம் மற்றும் தோட்டக்கலை விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பம் கிடைக்கும். மூன்றாவதாக, சமையல் எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கு எண்ணெய்ப் பனை இயக்கம் வலுப்படுத்தப்படும். நான்காவதாக, வேளாண் உற்பத்தி பொருட்களின் போக்குவரத்திற்கு பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் மூலம் புதிய ஏற்பாடுகள் செய்யப்படும். பட்ஜெட்டில் ஐந்தாவது ஆலோசனையாக, வேளாண் கழிவுகளை நிர்வாகிக்க சிறந்த அமைப்புமுறை மற்றும் கழிவுகளை எரிசக்தி ஆதாரங்களாக மாற்றுவதன் மூலம் விவசாயிகளின் வருவாயை அதிகரித்தல். ஆறாவதாக, தற்போதுள்ள வங்கிமுறையைப்போல் 1.5 லட்சத்திற்கும் அதிகமான அஞ்சலகங்கள் சேவை வழங்குவதால் விவசாயிகளுக்கு சிரமங்கள் இருக்காது. ஏழாவதாக, திறன்மேம்பாடு மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவற்றை பயன்படுத்தி நவீனகால தேவைகளுக்கேற்ப வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விப் பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படும்.

2023 சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் பெருநிறுவன உலகம் இந்திய சிறுதானியங்களுக்கு குறியீடு அளித்து மேம்படுத்த முன்வர வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். இந்திய சிறுதானியங்களின் தரம் மற்றும் பயன்களைப் பிரபலப்படுத்த கருத்தரங்குகளுக்கும், இதர ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யுமாறு வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை அவர் கேட்டுக்கொண்டார். சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையில் விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் இயற்கை வேளாண் பொருட்கள் சந்தையை அதிகரிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த விவசாய அறிவியல் மையங்கள் ஒவ்வொன்றும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவில் மண்வளப் பரிசோதனை கலாச்சாரம் கலாச்சாரம் அதிகரிக்க வேண்டியதன் தேவையை திரு மோடி வலியுறுத்தினார். மண்வள அட்டைகள் மீதான அரசின் கவனத்தை எடுத்துரைத்த அவர், தொடர்ச்சியான இடைவெளியில் மண் பரிசோதனை செய்யும் நடைமுறைக்கு முன்வருமாறு புதிய தொழில்களுக்கு அழைப்புவிடுத்தார்.

பாசனத்துறையில் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி வலியுறுத்திய பிரதமர், ‘ஒவ்வொரு சொட்டுக்கும், அதிக சாகுபடி’ என்பதில் அரசின் கவனத்தைக் கோடிட்டுக்காட்டினார். இதிலும் கூட பெரு நிறுவன உலகத்திற்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார். புந்தேல்கண்ட் பகுதியில் கென்-பெட்வா உடன் இணைந்த திட்டத்தால் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்பதையும் அவர் குறிப்பிட்டார். நிலுவையில் உள்ள பாசனத் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டியதன் அவசியத்தையும் திரு மோடி வலியுறுத்தினார்.

21-ம் நூற்றாண்டில் வேளாண்மை மற்றும் பண்ணைத் தொழில் தொடர்பான மனநிலையை செயற்கை நுண்ணறிவு முற்றிலுமாக மாற்றவிருக்கிறது என்பதை பிரதமர் வலியுறுத்தினார். இந்த மாற்றத்தின் பகுதியாக வேளாண்மையில் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. “வேளாண்துறை சார்ந்த புதிய தொழில்களை நாம் அதிகரிக்கும் போதுதான் ட்ரோன் தொழில்நுட்பம் கிடைப்பதும் அதிகரிக்கும். நாட்டில் கடந்த 3-4 ஆண்டுகளில் 700-க்கும் அதிகமான வேளாண்மை சார்ந்த புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன” என்று அவர் மேலும் கூறினார்.

அறுவடைக்கு பிந்தைய நிர்வாகத் துறையில் பணியாற்றுவது குறித்து பேசிய பிரதமர், பதப்படுத்தப்பட்ட உணவுக்கான வாய்ப்பை அதிகரிக்கவும், சர்வதேச தரத்தை உறுதிசெய்யவும் அரசு முயற்சிக்கிறது என்றார். “இது சம்பந்தமாக விவசாய சம்படா திட்டம், பிஎல்ஐ திட்டம் ஆகியவை முக்கியமானவை. இதில் மதிப்பு தொடரும் பெரிய பங்கு வகிக்கிறது. எனவே ரூ 1 லட்சம் கோடியில் சிறப்பு வேளாண் அடிப்படை கட்டமைப்பு நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது” என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

வேளாண் கழிவுகள் நிர்வாகம் குறித்து பிரதமர் வலியுறுத்தினார். “இதற்காக இந்த பட்ஜெட்டில் சில புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, இதன் காரணமாக கரியமில வாயு வெளியேற்றம் குறையும் என்பதோடு விவசாயிகளின் வருவாயும் அதிகரிக்கும்” என்று அவர் கூறினார். பேக்கேஜ் செய்வதற்கு வேளாண் கழிவுகளை பயன்படுத்தும் வழிகளை கண்டறியுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலப்பதை அரசு இலக்காகக் கொண்டுள்ள நிலையில் எத்தனால் தயாரிப்பு திறன் பற்றியும் பிரதமர் பேசினார். 2014-ல் 1-2 சதவீதமாக இருந்ததோடு ஒப்பிடுகையில் தற்போது சுமார் 8 சதவீதத்தை எட்டியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

கூட்டுறவு துறையின் பங்குபற்றி பிரதமர் எடுத்துரைத்தார். “இந்தியாவின் கூட்டுறவுத்துறை மிகவும் துடிப்புமிக்கது. சர்க்கரை ஆலைகளாக இருந்தாலும், உரத்தொழிற்சாலைகளாக இருந்தாலும், பால்வளமாக இருப்பினும் கடன் ஏற்பாடாக இருந்தாலும், உணவு தானியங்கள் கொள்முதலாக இருந்தாலும், கூட்டுறவுத் துறையின் பங்கேற்பு மிகப்பெரியது. எங்கள் அரசு கூட்டுறவுத் தொடர்பாக புதிய அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது. கூட்டுறவை எவ்வாறு வெற்றிகரமான வணிக நிறுவனமாக்குவது என்பது உங்களின் இலக்காக இருக்க வேண்டும்.

Click here to read PM's speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India launches indigenous silicon photonics tech at IIT Madras in semiconductor self-reliance push

Media Coverage

India launches indigenous silicon photonics tech at IIT Madras in semiconductor self-reliance push
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 24, 2026
April 24, 2026

Made in India, Built for 2047: PM Modi’s Reforms Turning Rural Hope into National Strength