சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்தில் இருந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம சபைகளிலும் உரையாற்றினார்
ரூ 20,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி முன்முயற்சிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பகுதிகளை நெருக்கமாக கொண்டு வர உதவும் பனிஹால் காசிகுண்ட் சாலை சுரங்கப்பாதையை திறந்து வைத்தார்
தில்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச்சாலையின் மூன்று சாலை தொகுப்புகள் மற்றும் ரத்லே & க்வார் நீர்மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை மேம்படுத்தி புத்துயிர் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட அம்ரித் சரோவர் முன்முயற்சியைத் தொடங்கிவைத்தார்
"ஜம்மு-காஷ்மீரில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை கொண்டாடுவது ஒரு பெரிய மாற்றத்தை குறிக்கிறது"
ஜனநாயகமாக இருந்தாலும் சரி, வளர்ச்சிக்கான தீர்மானமாக இருந்தாலும் சரி, இன்று ஜம்மு-காஷ்மீர் ஒரு புதிய உதாரணத்தை முன்வைக்கிறது. கடந்த 2-3 ஆண்டுகளில், ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சியின் புதிய பரிமாணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன”
ஜம்மு காஷ்மீரில் பல ஆண்டுகளாக இடஒதுக்கீட்டின் பலனைப் பெறா
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர்கள் திரு கிரிராஜ் சிங், டாக்டர் ஜிதேந்திர சிங், திரு கபில் மோரேஷ்வர் பாட்டீல் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அம்ரித் சரோவர் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று ஒரு முக்கிய நாள் என்று கூறியதோடு ஜம்மு-காஷ்மீர் மக்களின் உற்சாகத்திற்கு நன்றி தெரிவித்தார்.
சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி முன்முயற்சிகளை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
மேடைக்கு வருவதற்கு முன், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகளை பிரதமர் சந்தித்தார்.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று ஜம்மு-காஷ்மீர் சென்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம சபைகளிலும் உரையாற்றினார். சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்துக்கு அவர் சென்றார். சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி முன்முயற்சிகளை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அம்ரித் சரோவர் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர்கள் திரு கிரிராஜ் சிங், டாக்டர் ஜிதேந்திர சிங், திரு கபில் மோரேஷ்வர் பாட்டீல் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று ஒரு முக்கிய நாள் என்று கூறியதோடு ஜம்மு-காஷ்மீர் மக்களின் உற்சாகத்திற்கு நன்றி தெரிவித்தார். மாநிலத்துடனான தமது நீண்ட தொடர்பின் காரணமாக, அங்குள்ள சிக்கல்களைப் புரிந்து கொண்டதாகக் கூறிய பிரதமர், இன்று அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களில் இணைப்புக்கு முக்கியத்துவம் அளித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். "இணைப்பு மற்றும் மின்சாரம் தொடர்பான 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையில், பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை இந்த முயற்சிகள் வழங்கும்”, என்றார் அவர். இன்று கிராமங்களில் பல குடும்பங்கள் தங்கள் வீடுகளின் சொத்து அட்டைகளைப் பெற்றுள்ளனர். இந்த உரிமை அட்டைகள் கிராமங்களில் புதிய வாய்ப்புகளை ஊக்குவிக்கும். ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை பொருட்கள்ளை 100 மக்கள் மருந்தகங்கள் வழங்கும் என்று அவர் கூறினார். மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் ஜம்மு-காஷ்மீரில் செயல்படுத்தப்பட்டு மக்கள் பயனடைந்து வருவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். சமையல் எரிவாயு, கழிவறை, மின்சாரம், நில உரிமை, தண்ணீர் இணைப்பு போன்ற திட்டங்களால் கிராமங்களில் உள்ள மக்கள் அதிக அளவில் பயனடைகின்றனர். மேடைக்கு வருவதற்கு முன், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகளை பிரதமர் சந்தித்தார். வளர்ச்சியின் புதிய சரித்திரம் எழுதப்பட்டு வருவதாகவும், பல தனியார் முதலீட்டாளர்கள் ஜம்மு-காஷ்மீர்  மீது ஆர்வம் காட்டுவதாகவும் பிரதமர் கூறினார். சுதந்திரம் அடைந்த 7 தசாப்தங்களுக்கு, ஜம்மு-காஷ்மீரில் ரூ 17 ஆயிரம் கோடி மட்டுமே தனியார் முதலீடு செய்ய முடிந்தது. ஆனால் தற்போது அது சுமார் ரூ 38,000 கோடியை எட்டியுள்ளது. சுற்றுலாத்துறையும் மீண்டும் செழித்து வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மூன்று வாரங்களில் நிறுவப்பட்டுள்ள 500 கிலோவாட் சூரிய மின்சக்தி ஆலையை உதாரணமாகக் காட்டி, ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். முன்னர் தில்லியில் இருந்து கோப்புகளை நகர்த்துவதற்கு கூட 2-3 வாரங்கள் ஆகும். பள்ளி பஞ்சாயத்தின் அனைத்து வீடுகளும் சூரிய மின்சக்தியைப் பெறுவது கிராம மின்சார தன்னாட்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும், மாற்றப்பட்டுள்ள வேலைமுறை ஜம்மு-காஷ்மீரை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றும் அவர் கூறினார். ஜம்மு இளைஞர்களுக்கு பிரதமர் உறுதிமொழி ஒன்றை அளித்தார். “நண்பர்களே, என் வார்த்தைகளை நம்புங்கள், பள்ளத்தாக்கின் இளைஞர்களே என் வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி எதிர்கொள்ளும் சிரமங்களை நீங்கள் எதிர்கொள்ள மாட்டீர்கள். இதை நான் நிறைவேற்றுவேன், அதை உங்களுக்கு உறுதியளிக்க வந்துள்ளேன்,” என்று அவர் கூறினார்

சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் தளங்களில் இந்தியாவின் தலைமைத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்ட திரு மோடி, பள்ளி பஞ்சாயத்து முதல் கரியமில உமிழ்வு இல்லா பஞ்சாயத்து ஆவதைப் பற்றி பெருமிதம் தெரிவித்தார். “நாட்டின் முதல் கரியமில உமிழ்வு இல்லா பஞ்சாயத்து என்ற நிலையை நோக்கி பள்ளி பஞ்சாயத்து முன்னேறி வருகிறது. இன்று, பள்ளி கிராமத்தில், நாட்டின் கிராமங்களின் மக்கள் பிரதிநிதிகளுடன் உரையாடும் வாய்ப்பும் எனக்கு கிடைத்துள்ளது. இந்த பெரிய சாதனை மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக ஜம்மு-காஷ்மீருக்கு வாழ்த்துகள்”, என்றார் அவர்.

 

“தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை ஜம்மு காஷ்மீர் கொண்டாடுவது ஒரு பெரிய மாற்றத்தை குறிக்கிறது” என்று பிரதமர் கூறினார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஜனநாயகம் அடிமட்டம் வரை வேர்களை பரப்பியுள்ளது என்று திரு மோடி ஆழ்ந்த திருப்தியையும் பெருமையையும் தெரிவித்தார். "ஜனநாயகமாக இருந்தாலும் சரி, வளர்ச்சிக்கான உறுதியானாலும் சரி, இன்று ஜம்மு-காஷ்மீர் ஒரு புதிய உதாரணத்தை முன்வைக்கிறது. கடந்த 2-3 ஆண்டுகளில், ஜம்மு-காஷ்மீரில் புதிய வளர்ச்சி பரிமாணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன" என்று பிரதமர் கூறினார். முதல் முறையாக, ஜம்மு மற்றும் காஷ்மீரில் மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்புக்கான தேர்தல்கள் - கிராம பஞ்சாயத்து, பஞ்சாயத்து சமிதி மற்றும் மாவட்ட வளர்ச்சிக் குழு - நடைபெற்றுள்ளன.

 

தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஜம்மு-காஷ்மீரைச் இணைக்கும் செயல்முறையைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், ஜம்மு-காஷ்மீரில் 175-க்கும் மேற்பட்ட மத்திய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். இப்பகுதியின் பெண்கள், ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினரே இதன் மூலம் பெரும் பயனடைந்துள்ளனர். இடஒதுக்கீடு விதிகளில் உள்ள முரண்பாடுகளை நீக்குவது குறித்தும் அவர் பேசினார். வால்மீகி சமுதாயங்கள் பல தசாப்தங்களாக காலில் கட்டப்பட்டிருந்த சங்கிலியிலிருந்து விடுபட்டுள்ளன. இன்று ஒவ்வொரு சமூகத்தின் மகன்களும் மகள்களும் தங்கள் கனவுகளை நனவாக்குகிறார்கள். ஜம்மு-காஷ்மீரில் பல ஆண்டுகளாக இடஒதுக்கீட்டின் பலனைப் பெறாதவர்களும் இப்போது இடஒதுக்கீட்டின் பலனை பெறுகிறார்கள்”, என்றார் அவர்.

 

‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற தமது தொலைநோக்குப் பார்வையைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இணைப்பு வசதிகள் மற்றும் தொலைவுகளை குறைத்தல் ஆகியவற்றில் அது கவனம் செலுத்துகிறது என்று விளக்கினார். "மனங்கள், மொழிகள், பழக்கவழக்கங்கள் அல்லது வளங்கள் ஆகியவற்றில் எதுவொன்றில் இடைவெளி இருந்தாலும், அதை நீக்குவதே இன்று நமது மிகப் பெரிய முன்னுரிமை" என்று அவர் மேலும் கூறினார்.

நாட்டின் வளர்ச்சியில் பஞ்சாயத்துகளின் பங்கு குறித்து எடுத்துரைத்த பிரதமர், “இந்திய சுதந்திரத்தின் பொற்காலமாக இந்த அமிர்த காலம் அமையப் போகிறது. இந்த உறுதிமொழியை அனைவரின் முயற்சியோடு நிறைவேற்றுவோம். இதில் கிராம பஞ்சாயத்து, ஜனநாயகத்தின் அடித்தட்டு பிரிவு மற்றும் சக ஊழியர்கள் ஆகிய உங்கள் அனைவரின் பங்கும் மிகவும் முக்கியமானது," என்று அவர் கூறினார். இது தொடர்பான கிராமத்தின் வளர்ச்சிக்கான ஒவ்வொரு திட்டத்தையும் திட்டமிட்டு செயல்படுத்துவதில் பஞ்சாயத்தின் பங்கு ஆழமாக இருக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். "இதன் மூலம், தேசிய தீர்மானங்களை நிறைவேற்றுவதில் பஞ்சாயத்து ஒரு முக்கிய இணைப்பாக வெளிப்படும்" என்று அவர் மேலும் கூறினார். 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 சரோவரங்கள் அமைக்கப்படும் என்று கூறிய பிரதமர், இந்த சரோவரங்களில் தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களைக் கொண்ட மரங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். கிராம பஞ்சாயத்துகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் அதிகாரமளிப்பதற்கான உந்துதல் குறித்தும் திரு மோடி விளக்கினார். இ-கிராம் ஸ்வராஜ் போன்ற நடவடிக்கைகள் திட்டமிடல் முதல் பணம் செலுத்துதல் வரையிலான செயல்முறைகளை இணைக்கின்றன. பஞ்சாயத்துகள் ஆன்லைன் முறையில் தணிக்கை செய்யப்படுவதோடு அனைத்து கிராம சபைகளுக்கான குடிமக்கள் சாசன அமைப்பு பல பணிகளை மேற்கொள்ள பஞ்சாயத்துகளை ஊக்குவிக்கிறது. இந்த அமைப்புகள் மற்றும் கிராம நிர்வாகத்தில், குறிப்பாக நீர் நிர்வாகத்தில், பெண்களின் பங்கை அவர் எடுத்துரைத்தார்.

 

இயற்கை விவசாயத்திற்கான தமது முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், ரசாயனங்கள் நிலம் மற்றும் நிலத்தடி நீரைப் பாதிப்பதால், அவற்றிலிருந்து தாய் பூமியை விடுவிப்பது மிகவும் அவசியம் என்று கூறினார். நமது கிராமங்கள் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்ந்தால் அது ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் பயனளிக்கும் என்றார் அவர். கிராம பஞ்சாயத்துகள் மட்டத்தில் இயற்கை விவசாயத்தை எப்படி ஊக்குவிக்கலாம் என்று ஆராய வேண்டும், இதற்கு கூட்டு முயற்சிகள் தேவை. இதேபோல், அனைவரின் உதவியுடன் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதில் கிராம பஞ்சாயத்துகள் முக்கிய பங்கு வகிக்கும். “ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையிலிருந்து நாட்டைக் காப்பாற்ற மத்திய அரசு எடுத்துள்ள முயற்சி குறித்து களத்தில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது அரசு திட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது,'' என்றார் அவர்.

 

ஆகஸ்ட் 2019-ல் ஜம்மு-காஷ்மீர் தொடர்பான அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ஆட்சி முறையை கணிசமாக மேம்படுத்துவதற்கும், முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் அப்பகுதி மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் பரந்த அளவிலான சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் அரசு கவனம் செலுத்துகிறது. துவக்கப்பட்ட மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள், அடிப்படை வசதிகளை எளிதாக்குவதற்கும், போக்குவரத்தை எளிதாக்குவதற்கும், பிராந்தியத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பெரிதும் பங்காற்றும்.

3100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பனிஹால் காசிகுண்ட் சாலை சுரங்கப்பாதையை பிரதமர் திறந்து வைத்தார். 8.45 கிமீ நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை பனிஹால் மற்றும் காசிகுண்ட் இடையே சாலை தூரத்தை 16 கிமீ குறைக்கும். மேலும், பயண நேரத்தை சுமார் ஒன்றரை மணி நேரம் குறைக்கும். இது ஒரு இரட்டைக் குழாய் சுரங்கப்பாதை (பயணத்தின் ஒவ்வொரு திசைக்கும் ஒன்று), பராமரிப்பு மற்றும் அவசரகால வெளியேற்றத்திற்காக ஒவ்வொரு 500 மீட்டருக்கும் இரட்டைக் குழாய்கள் குறுக்கு வழியில் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன. ஜம்மு மற்றும் காஷ்மீர் இடையே அனைத்து வானிலை காலங்களிலும் தொடர்பை ஏற்படுத்தவும், இரு பகுதிகளையும் நெருக்கமாக கொண்டு வரவும் இந்த சுரங்கப்பாதை உதவும்.

 

ரூ 7500 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டமைக்கப்படவுள்ள தில்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச்சாலையின் மூன்று சாலை தொகுப்புகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார் 4/6 வழி அணுகல் கட்டுப்பாடு கொண்ட தில்லி-கத்ரா-அமிர்தசரஸ் விரைவுச்சாலயில் தேசிய நெடுஞ்சாலை-44-ல் உள்ள பல்சுவாவிலிருந்து குர்ஹாபைல்தரன், ஹிராநகர் வரையும்; குர்ஹாபைல்தரன், ஹிராநகர் முதல் ஜாக் வரை மற்றும் விஜய்பூர் வரையும்; மற்றும் ஜாக், விஜய்பூர் முதல் குஞ்ச்வானி வரை ஜம்மு விமான நிலையத்துடனான இணைப்பை மேம்படுத்தும் வகையிலும் இவை அமையவுள்ளன.

 

ரத்லே மற்றும் க்வார் நீர்மின் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். கிஷ்த்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றில் சுமார் 5300 கோடி ரூபாய் செலவில் 850 மெகாவாட் திறன் கொண்ட ரத்லே நீர்மின் திட்டம் கட்டப்படும். 540 மெகாவாட் திறன் கொண்ட க்வார் நீர்மின் திட்டம் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றில் ரூ 4500 கோடி மதிப்பில் நிறுவப்படும். இரண்டு திட்டங்களும் பிராந்தியத்தின் மின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்.

 

ஜம்மு-காஷ்மீரில் மக்கள் மருந்தகங்களின் வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தவும், நல்ல தரமான பொது மருந்துகளை மலிவு விலையில் கிடைக்கச் செய்யவும், 100 மையங்கள் பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. யூனியன் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் இந்த மையங்கள் அமைந்துள்ளன. மேலும், பள்ளியில் 500 கிலோவாட் சூரிய சக்தி ஆலையையும் அவர் திறந்து வைத்தார். நாட்டின் முதல் கரியமில உமிழ்வு இல்லா பஞ்சாயத்து இது ஆகும்

 

பயனாளிகளுக்கு ஸ்வாமித்வா அட்டைகளை பிரதமர் வழங்கினார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தில் சாதனைகளுக்காக பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் விருதுகளை வென்ற பஞ்சாயத்துகளுக்கு விருதுத் தொகையை அவர் வழங்கினார். பிராந்தியத்தின் கிராமப்புற பாரம்பரியத்தை சித்தரிக்கும் இன்டாக் புகைப்படத் தொகுப்பு மற்றும் இந்தியாவில் சிறந்த ஸ்மார்ட் கிராமங்களை உருவாக்க வடிவமைக்கப்பட்ட கிராமப்புற தொழில்முனைவோர் அடிப்படையிலான மாதிரியான நோகியா ஸ்மார்ட்பூரையும் பிரதமர் பார்வையிட்டார்..

 

நீர்நிலைகள் புத்துயிர் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில், அம்ரித் சரோவர் என்ற புதிய முயற்சியையும் பிரதமர் தொடங்கி வைத்தார். விடுதலையின் அமிர்தப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை மேம்படுத்தி புத்துயிர் அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
One of the world’s first canal-top solar projects placed a 750-meter solar array above an Indian irrigation canal, generating clean power while saving an estimated 9 million liters of water each year

Media Coverage

One of the world’s first canal-top solar projects placed a 750-meter solar array above an Indian irrigation canal, generating clean power while saving an estimated 9 million liters of water each year
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 17, 2026
July 17, 2026

Green Trains, Private Rockets & Global Partnerships — PM Modi’s New India is Playing to Win