பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு ஆராய்ச்சித் திறனை ஊக்குவிக்கும் விதமாக, டிஆர்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) அமைப்பின் இளம் விஞ்ஞானிகளுக்கான 5 ஆய்வுக் கூடங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி, 2020 ஜனவரி 2 வியாழக்கிழமை அன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
பெங்களுருவில் உள்ள டிஆர்டிஓ-வின் ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியை குறிக்கும் விதமாக, கல்வெட்டு ஒன்றை திறந்து வைக்கும் பிரதமர், அங்கு திரண்டிருக்கும் விஞ்ஞானிகளிடையேயும் உரையாற்றவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில், டிஆர்டிஓ அமைப்பால் கண்டுபிடிக்கப்பட்ட சில புதுமையான பொருட்கள் பிரதமரின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.
முதலமைச்சர் திரு பி எஸ் எடியூரப்பா மற்றும் டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி சதீஷ்ரெட்டி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறையின் மூத்த மற்றும் பிரபல விஞ்ஞானிகளுக்கும், ஆயுதப்படைகளின் மூத்த அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு விருதுகளை வழங்கிப் பேசிய பிரதமர், 35 வயது வரையிலான இளம் விஞ்ஞானிகள் புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள ஏதுவாக, 5 பிரத்யேக ஆய்வுக் கூடங்களை அமைக்குமாறு டிஆர்டிஓ அமைப்பை கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பாதுகாப்பு ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் இளைஞர்களை பெருமளவில் ஈடுபடுத்துவதோடு, இந்த துறையில் உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றங்களில் இந்தியா மார்த்தட்டிக் கொள்ளும் அளவுக்கு தொடர்ந்து திகழ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார்.


