It is only partnerships that will get us to our goals: PM Modi
The health of mothers will determine the health of the children and the health of children will determine the health of our tomorrow: PM Modi
The India story is one of hope: PM Narendra Modi at Partners' Forum
We are committed to increasing India’s health spending to 2.5 percent of GDP by 2025: Prime Minister

மேடையில் அமர்ந்திருக்கும் மதிப்புக்குரிய பிரமுகர்களே,

இந்தியாவிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வந்துள்ள பிரதிநிதிகளே,

பெரியோர்களே, தாய்மார்களே,

வணக்கம்.

2018-ன் பங்குதாரர்கள் அமைப்பின் சந்திப்பிற்கு உலகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள அனைத்துப் பிரதிநிதிகளையும் மிகுந்த அன்போடு வரவேற்கிறோம்.

பங்குதாரர்களாக இருப்பதால் மட்டுமே நமது இலக்குகளை நாம் அடைய முடியும். குடிமக்களிடையே ஒத்துழைப்பு, சமூகங்களிடையே ஒத்துழைப்பு, நாடுகளிடையே ஒத்துழைப்பு. நீடித்த வளர்ச்சி என்ற திட்டத்தின் பிரதிபலிப்பு இது.

தனித்து நிற்பது என்ற முயற்சிகளைக் கடந்து நாடுகள் வந்துவிட்டன. சமூகங்களுக்கு அதிகாரமளித்தல், சுகாதாரத்தையும், கல்வியையும் மேம்படுத்துதல், வறுமைக்கு முடிவு கட்டுதல், பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளித்தல் ஆகியவற்றுக்கு அவை உறுதிபூண்டுள்ளன. இதன் இறுதி நோக்கம் யாரையும் பின்தங்கிய நிலையில் விட்டுவிடாமல் இருப்பதாகும். தாய்மார்களின் ஆரோக்கியம், குழந்தைகளின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும்.  குழந்தைகளின் ஆரோக்கியம், நாளைய நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும், நலனையும் மேம்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து விவாதிப்பதற்காக நாம் கூடியிருக்கிறோம். இன்றைய நமது விவாதங்களின் பயன்பாடு, நாளைய எதிர்காலத்தில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.

இந்தியாவின் மிகத் தொன்மையான “வசுதைவ குடும்பகம்” அதாவது, “உலகமே ஒரு குடும்பம்” என்ற ஞானத்தை அடியொற்றியே பங்குதாரர்கள் அமைப்பின் பார்வை அமைந்துள்ளது. அத்துடன், எனது அரசின் சித்தாந்தமான “சப்கா ஸாத்  சப்கா விகாஸ்” அதாவது, “கூட்டு முயற்சிகள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பங்களிப்புகள்” என்பதையும் இது பின்பற்றியுள்ளது. 

தாய்-சேய் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கான பங்களிப்பு என்பது ஒப்பில்லாத மிக முக்கியமான களமாகும். சிறந்த ஆரோக்கியம் என்பதை உருவாக்குவது மட்டுமின்றி, விரைவான வளர்ச்சிகுரிய விவாதத்தையும் நாம் உருவாக்க வேண்டும்.

விரைவான வளர்ச்சியை உறுதி செய்ய புதிய வழிமுறைகளை உலகம் ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலையில் அவ்வாறு செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக இருப்பது, பெண்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்வதாகும். கடந்த சில ஆண்டுகளில், நாங்கள் பல முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறோம். செய்வதற்கு இன்னும் ஏராளமாக இருக்கின்றன. பெரிய பட்ஜெட்களிலிருந்து சிறந்த விளைவுகள், மனநிலை மாற்றத்திலிருந்து கண்காணிப்பு என செய்வதற்கு நிறைய இருக்கின்றன.

இந்தியாவின் செயல்பாடு நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. தடைகளைத் தாண்ட முடியும் என்ற நம்பிக்கை, நடத்தையில் மாற்றத்தை உறுதி செய்ய முடியும் என்ற நம்பிக்கை, விரைவான முன்னேற்றத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கை.

நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகள் ஏற்றுக் கொள்ளப்பட்டபோது, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பேறுகால இறப்பு விகிதத்தில் உலகின் மிக உயர்ந்த அளவுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது. தொடர்ச்சியான செயல்பாடுகளாலும், கடந்த சில ஆண்டுகளாக இந்த விகிதம் வெகுவேகமாகக் குறைந்து வருவதாலும், 2030 என்ற ஒப்புக்கொள்ளப்பட்ட காலம் நெருங்கி வரும் நிலையில், தாய்-சேய் ஆரோக்கியத்திற்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் இந்தியா முன்னேறி வருகிறது.

வளரிளம் பருவத்தினருக்கான கவனக் குவிப்பை முன்னெடுத்துச் செல்வதிலும் வளரிளம் பருவத்தினருக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய்த் தடுப்புக்கான திட்டங்களை அமலாக்குவதிலும், முதல்நிலை நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது.  2015-ல் ஏற்பளிக்கப்பட்ட பெண்களின், குழந்தைகளின், வளரிளம் பருவத்தினரின் சுகாதாரத்திற்கான உலக உத்திகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதை  எங்களது முயற்சிகள் உறுதி செய்துள்ளன.

இந்த அமைப்பின் கூட்டம் நடைபெறும் தருணத்தில் உலக உத்திகளை ஏற்றுக் கொண்டதற்கு லத்தீன் அமெரிக்கா, கரீபியப் பகுதி, இந்தியா ஆகியவை எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன என்பதை தெரிவிக்க நான் விரும்புகிறேன். இதேபோன்ற உத்திகளை மேம்படுத்த மற்ற நாடுகளும், பகுதிகளும் ஆர்வம் காட்டும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

यत्रनार्यस्तुपूजयन्तेरमन्तेतत्रदेवताஅதாவது “பெண்கள் எங்கே கௌரவப்படுத்தப்படுகிறார்களோ, அங்கே தெய்வீகம் மலரும்” என்று நமது வேதங்கள் சொல்கின்றன. ஒரு நாடு அதன் மக்களுக்கும் முக்கியமாகப் பெண்களுக்கு, குழந்தைகளுக்கும் கல்வி அளிக்கிறதோ அந்த நாடு சுதந்திரமாகவும் அதிகார பலத்தோடும், ஆரோக்கியத்தோடும் வாழ முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

எனது நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமான இந்தியாவின் நோய்த் தடுப்புத் திட்டம் இந்தக் கூட்டம் நடைபெறும்வேளையில், வெற்றிக் கதையாய் இங்கே இடம்பெற்றுள்ளது என்பதை நான் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறேன். இந்திர தனுஷ் இயக்கத்தின்கீழ், நாங்கள் கடந்த 3 ஆண்டுகளில், 32.8 மில்லியன் குழந்தைகளையும், 8.4 மில்லியன் கருவுற்ற தாய்மார்களையும் அணுகியிருக்கிறோம். அனைவருக்கும் நோய்த் தடுப்புத் திட்டம் என்பதன் மூலம், தடுப்பூசிகளின் எண்ணிக்கையையும் 7-லிருந்து, 12-ஆக நாங்கள் உயர்த்தியிருக்கிறோம். தடுப்பூசிகள் தற்போது, வாழ்க்கைக்கு அச்சுறுத்தலான நிமோனியா, வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

2014-ல் எனது அரசு பொறுப்பேற்றபோது, ஆண்டுதோறும் குழந்தைப் பேறின்போது, 44,000-க்கும் அதிகமான தாய்மார்களை நாங்கள் இழந்திருக்கிறோம். இதனால் பேறுகாலத்தில் தாய்மார்களுக்கு இயன்றவரை சிறப்பான கவனிப்பை அளிப்பதற்கு கருவுற்ற பெண்கள் பாதுகாப்புத் திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். இதற்கான முகாமில் மாதத்திற்கு ஒருநாள் சேவை செய்யுமாறு உறுதியேற்க மருத்துவர்களை நாங்கள் கேட்டுக் கொண்டோம். இந்த முகாம்களின் மூலம், பேறுகாலத்திற்கு முன்னதாக 16 மில்லியன் பெண்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

நாட்டில் 25 மில்லியன் பச்சிளங்குழந்தைகள் உள்ளன. பச்சிளங்குழந்தைகளை கவனிக்கும் நடைமுறை அடிப்படையில், பச்சிளங்குழந்தைகளுக்கான 794 சிறப்பு பிரிவுகள் மூலம், ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இது வெற்றியின் மாதிரியாக உள்ளது. எங்களின் இத்தகைய தலையீடுகளின் பயனாக நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய நிலையோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் இப்போது, கூடுதலாக ஒவ்வொரு நாளும் ஐந்து வயதுக்குட்பட்ட 840 குழந்தைகளின் உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன.

போஷான் அபியான் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து கவனிக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக் குறைவு இல்லாத இந்தியா என்ற பொது இலக்கினை நோக்கிய பணியில் இந்தத் திட்டம் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்திருப்பதோடு, தலையீடுகளையும் செய்திருக்கிறது. குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக தேசிய குழந்தைகள் சுகாதாரத் திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.  இதன்மூலம், கடந்த நான்காண்டுகளில் 800 மில்லியன் சுகாதாரச் சோதனைகளும், 20 மில்லியன் குழந்தைகளுக்குக் கட்டணமின்றி உயர் சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளன.

மருத்துவத்திற்காக குடும்பத்தினர் அதிக செலவு செய்யப்படுவது எங்களுக்குத் தொடர்ந்து கவலையளிக்கும் விஷயமாக இருந்தது. எனவே, நாங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைத் தொடங்கினோம். இந்தத் திட்டம் இருமுனை உத்தியைக் கொண்டது.

மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகேயுள்ள சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிகாட்டுதல், யோகா உள்ளிட்ட விரிவான ஆரம்ப கவனிப்பு வசதி என்பது முதலாவதாகும்.  சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்கான எங்களது உத்தியின் முக்கியப் பகுதியாக “தகுதி இந்தியா” “சரியானதை உண்போம்” என்ற இயக்கங்கள் உள்ளன. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் மார்பக, கருப்பை, வாய்ப் புற்றுநோய் உள்ளிட்ட பொதுவான நோய்களை மக்கள் கட்டணமின்றி பரிசோதனை செய்து கொள்ளவும், சிகிச்சை செய்து கொள்ளவும் முடியும்.

நோயாளிகள் தங்கள் வீடுகளின் அருகேயுள்ள நோய் கண்டறியும் சோதனைக் கூடத்தின் உதவியையும், மருந்துகளையும் இலவசமாகப் பெறலாம். 2022-க்குள் 1,50,000 சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களைத் தொடங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். 

ஆயுஷ்மான் பாரத்-ன் மற்றொரு பகுதியாக இருப்பது பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டமாகும். மிகவும் ஏழ்மையான, எளிதில் பாதிக்கக்கூடிய 500 மில்லியன் மக்களுக்கு ஆண்டொன்றுக்கு குடும்பத்திற்கு 5,00,000 ரூபாய் வரை பிரீமியப் பணம் செலுத்தாத சுகாதாரக் காப்பீடு திட்டத்தை இது வழங்குகிறது. கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மக்கள்தொகைக்கு இணையாக இந்த எண்ணிக்கை இருக்கும். இந்தத் திட்டம் தொடங்கிய பத்து வாரங்களுக்குள் ஐந்து லட்சம் குடும்பங்களுக்கு 700 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டணமில்லா சிகிச்சையை நாங்கள் வழங்கியிருக்கிறோம்.

பதிவு செய்யப்பட்ட ஒரு மில்லியன் சமூக-சுகாதார செயற்பாட்டாளர்கள் அல்லது ஆஷா பணியாளர்கள் 2.32 லட்சம் அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோரை பெண்களுக்கான முன்னணி சுகாதாரப் பணியாளர்களாக நாங்கள் கொண்டிருக்கிறோம். இவர்களே எங்கள் திட்டத்தின் பலமாகும்.

இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. சில மாநிலங்களும், மாவட்டங்களும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையாக செயல்பட்டுள்ளன. முன்னேற விரும்பும் 117 மாவட்டங்களை அடையாளம் காணுமாறு எங்கள் அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தினேன். சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்திற்கு மிக உயர்ந்த முன்னுரிமையுடன் கல்வி, குடிநீர், துப்புரவு, ஊரக வளர்ச்சி போன்றவற்றில் பணியாற்றும் குழுவிடம் ஒவ்வொரு மாவட்டமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பெண்களை மையப்படுத்திய திட்டங்களை மற்ற துறைகள் மூலமாகவும், நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.  2015-வரை இந்தியப் பெண்களில் சரிபாதிக்கும் கூடுதலானோர் சமையலுக்கு தூய்மையான எரிசக்தி கிடைக்காமல் இருந்தனர். இதனை உஜ்வாலா திட்டத்தின் மூலம் நாங்கள் மாற்றியமைத்தோம்.  58 மில்லியன் பெண்களுக்கு தூய்மையான சமையல் எரிவாயு கிடைத்துள்ளது.

2019-ஆம் ஆண்டுக்குள் திறந்தவெளி கழிப்பிடமில்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் போர்க்கால அடிப்படையில் “தூய்மை இந்தியா இயக்கத்தை” நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.  கடந்த நான்காண்டுகளில் ஊரகப் பகுதிகளில் துப்புரவு 39 சதவீதத்திலிருந்து 95 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஒர் ஆணுக்கு நீங்கள் கல்வி அளித்தால், ஒரு நபருக்குக் கல்வி அளிக்கிறீர்கள்; ஆனால், ஒரு பெண்ணிற்கு நீங்கள் கல்வி அளித்தால் ஒட்டுமொத்த குடும்பத்திற்கே கல்வி அளிக்கிறீர்கள் என்று சொல்லப்படுவதை நாம் அனைவரும் அறிவோம். இதனை நாங்கள் “பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம்” என மாற்றியமைத்தோம். இது பெண் குழந்தைகளுக்கான சிறப்புத் திட்டமாகும். பெண் குழந்தைகளுக்கு தரமான கல்வியும், வாழ்க்கையும் அளிப்பதாகும் இது. மேலும், பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம் ஒன்றையும் வகுத்துள்ளோம். இது “செல்வமகள் சேமிப்புத் திட்டம்” என்று அழைக்கப்படுகிறது. 12.6 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளுடன் இந்தத் திட்டம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கு உதவுகிறது.

பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தையும் நாங்கள் அறிமுகம் செய்திருக்கிறோம்.  இதன்மூலம்  50 மில்லியனுக்கும் அதிகமான கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊதிய இழப்பை ஈடுகட்டவும், நல்ல சத்துணவு கிடைக்கவும், மகப்பேறுக்கு முன்பும் பின்பும் போதிய ஓய்வு  கிடைக்கவும் பணப்பயனை அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றும் திட்டமாகும் இது.

ஏற்கனவே, 12 வாரங்களாக இருந்த பேறுகால விடுப்பை 26 வாரங்களாக நாங்கள் உயர்த்தியுள்ளோம். இந்தியாவின் சுகாதாரச் செலவை, 2025-க்குள் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 2.5 சதவீதம் அளவுக்கு உயர்த்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.  இது, 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையாகும். தற்போதைய பங்களிப்பு கடந்த எட்டு ஆண்டுகளுக்குள் 345 சதவீதம் உயர்ந்துள்ளது என்பதே இதன் பொருளாகும். மக்களின் நல்வாழ்விற்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். ஒவ்வொரு கொள்கையிலும், திட்டத்திலும் அல்லது முன்முயற்சியிலும் பெண்களும், குழந்தைகளும், இளைஞர்களும் இதயப் பகுதியாக இருப்பது நீடிக்கும்.

வெற்றியை எட்டுவதற்கு பலதரப்பினரும் பங்கேற்பாளர்களாக இருப்பது அவசியம் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். நமது அனைத்து முயற்சிகளிலும் சிறந்த ஆரோக்கியத்தில், குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆரோக்கியத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

நண்பர்களே,

அடுத்த இரண்டு நாட்களில் இந்த அமைப்பு உலகம் முழுவதிலுமிருந்து 12 வெற்றிக் கதைகள் குறித்து விவாதிக்கவிருப்பதாக நான் அறிகிறேன். நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தவும், ஒவ்வொருவரிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியதைப் பகிர்ந்து கொள்ளவும் உண்மையிலேயே இது நல்லதொரு வாய்ப்பாகும். திறன் மற்றும் பயிற்சித் திட்டங்கள், குறைந்த செலவில் மருந்துகளும், தடுப்பூசிகளும் கிடைத்தல், அறிவுப் பரிமாற்றம், திட்டங்கள் பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம் தங்களின் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு நடைபோடும் நாடுகளுக்கு ஆதரவாக நிற்க இந்தியா தயாராக உள்ளது.

 

இந்த விவாதங்களுக்குப் பங்களிப்பு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தின் முடிவுகளைத் தெரிந்து கொள்ள நான் ஆவலோடு இருக்கிறேன். துடிப்புமிக்க இந்த அமைப்பு சரியான தருணத்தை நமக்குத் தந்துள்ளது. “வாழ்வு – வளம் – மாற்றம்” என்ற நமது உறுதிப்பாட்டை ஊக்குவிப்பதாக இது இருக்க வேண்டும்.

நன்கு வடிவமைக்கப்பட்ட பணியை நாம் கொண்டிருக்கிறோம். அனைவருக்கும் ஆரோக்கிய வாழ்வு கிடைக்க அதிகபட்ச அர்ப்பணிப்போடும், ஈடுபாட்டோடும் தொடர்ந்து நாம் பணியாற்றுவோம். ஒருமைப்பாட்டில் அனைத்துப் பங்கேற்பாளர்களுடன் இந்தியா எப்போதும் இணைந்து நிற்கும்.

இங்கு கூடியுள்ள ஒவ்வொருவரும் நேரில் வராமல் நம்மோடு இணைந்துள்ளவர்களும் உண்மையான உணர்வோடு இதனைத் தழுவிக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் நமது உதவியை நம்மால் செய்ய முடியும்.

இந்த மேன்மையான நோக்கத்திற்கு நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக நாம் கைகோர்ப்போம்.

நன்றி.

 

 

 

 

 

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's electronics production rises 6-fold, exports jump 8-fold since 2014: Ashwini Vaishnaw

Media Coverage

India's electronics production rises 6-fold, exports jump 8-fold since 2014: Ashwini Vaishnaw
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister chairs the National Conference of Chief Secretaries
December 27, 2025

The Prime Minister, Shri Narendra Modi attended the National Conference of Chief Secretaries at New Delhi, today. "Had insightful discussions on various issues relating to governance and reforms during the National Conference of Chief Secretaries being held in Delhi", Shri Modi stated.

The Prime Minister posted on X:

"Had insightful discussions on various issues relating to governance and reforms during the National Conference of Chief Secretaries being held in Delhi."