அர்ஜுன் பீரங்கி(எம்கே-1ஏ)-யை ராணுவத்திடம் ஒப்படைத்தார்
புல்வாமாக தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்
பாதுகாப்புத்துறையில் இந்தியாவை சுயசார்பு நாடாக மாற்றுவதில் கவனம் செலுத்தப்படுகிறது
இதுபோன்ற திட்டங்கள் புதுமை மற்றும் உள்நாட்டு கண்டுபிடிப்புகளின் அடையாளம். இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும் : பிரதமர்
இந்தியாவின் கடலோரப் பகுதிகளின் மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது
தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம், இனி அவர்களது பாரம்பரிய பெயரில் அழைக்கப்படும், நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது
இலங்கையில் வசிக்கும் தமிழ் சகோதர, சகோதரிகளின் நலன் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதிலும் அரசு எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது : பிரதமர்
தமிழ்நாட்டின் கலாச்சாரத்தைப் பேணிப் பாதுகாத்து, கொண்டாட பாடுபடுவது எங்களுக்கு கிடைத்த கவுரவம். தமிழ்நாட்டின் கலாச்சாரம் உலகெங்கும் பிரசித்திபெற்றது: பிரதமர்

பிரதமர் திரு.நரேந்திரமோடி, சென்னையில் இன்று, பல்வேறு முக்கியத் திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், அர்ஜுன் பீரங்கி(எம்கே-1ஏ)யை ராணுவத்திடம் ஒப்படைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “இந்தத் திட்டங்கள் அனைத்தும், புதுமை மற்றும் உள்நாட்டுக் கண்டுபிடிப்புகளின் அடையாளமாகத் திகழ்கின்றன“ என்றார். இன்று அடிக்கல் நாட்டப்பட்ட 636 கிலோமீட்டர் நீள கல்லணைக் கால்வாய் நவீனப்படுத்தும் திட்டத்தின் மூலம், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் பெரிதும் பயனடையும் என்றும் அவர் கூறினார். இதன் விளைவு, பெரிய அளவில் இருக்கும். இது, 2.27லட்சம் ஏக்கர் நிலங்களின் பாசன வசதியை மேம்படுத்தும். நீர்வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி, உணவுதானிய உற்பத்தியில் சாதனை படைத்துள்ள தமிழக விவசாயிகளுக்கு திரு.மோடி பாராட்டுத் தெரிவித்தார். "வளமிக்க நமது கடந்தகாலத்திற்கு கல்லணை ஒரு வாழும் அத்தாட்சி ஆகும். நம் நாட்டின் 'சுயசார்பு இந்தியா'-விற்கான குறிக்கோள்களை அடைவதற்கு, இது ஊக்கமளிக்கும்" என்றார். தமிழ் மூதாட்டி அவ்வையாரின் பாடல் வரிகளை சுட்டிக்காட்டி தண்ணீரை சேமிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், இது தேசிய அளவிலான பிரச்சினை மட்டுமல்ல, உலகளாவிய ஒரு பிரச்சினை என்றும் தெரிவித்தார். ஒரு சொட்டு தண்ணீரில் அதிக பயிர் விளைச்சல் என்ற தாரக மந்திரத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். 

இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 9 கிலோமீட்டர் தொலைவுக்கான முதற்கட்ட விரிவாக்கம் பற்றியும் அவர் குறிப்பிட்டார். பெருந்தொற்று பாதிப்புக்கிடையேயும் இந்தத் திட்டம், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இந்தத் திட்டத்திற்காக, உள்நாட்டில் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டதோடு, கட்டுமானப் பணிகளும், இந்திய ஒப்பந்ததாரர்களால் மேற்கொள்ளப்பட்டிருப்பதன் மூலம், இது, சுயசார்பு இந்தியாவிற்கு ஊக்கமளிக்கக் கூடியதாக உள்ளது என்றார். 119 கிலோமீட்டர் தூரமுள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்காக, இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.63ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் திரு.மோடி குறிப்பிட்டார். எந்தவொரு நகரத்திற்கும், ஒரே நேரத்தில், இவ்வளவு பெரிய திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதில்லை. நகர்ப்புற போக்குவரத்தில் கவனம் செலுத்துவது, இங்குள்ள மக்களின் 'வாழ்க்கையை எளிதாக்கும்' என்றும் திரு.மோடி சுட்டிக்காட்டினார். மேம்பட்ட போக்குவரத்து வசதிகள், மக்களுக்கு சவுகரியத்தை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் தெரிவித்தார். அத்துடன், வர்த்தகத்திற்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று அவர் கூறினார். சென்னை கடற்கரை – எண்ணூர் – அத்திப்பட்டு தங்க நாற்கரப் வழித்தடம், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள வழித்தடம் ஆகும் என்றும் சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் (எண்ணூர்) துறைமுகத்தில் சரக்குப் போக்குவரத்தை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியம் என்றும் கூறிய அவர், சென்னை கடற்கரை – அத்திப்பட்டு இடையிலான 4-வது பாதை, இந்த நோக்கத்தை நிறைவேற்ற உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார். விழுப்புரம் – தஞ்சாவூர் – திருவாரூர் ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டிருப்பது, டெல்டா மாவட்டங்களுக்கு பெரும் வரப்பிரசாதம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

புல்வாமா தாக்குதல் தினமான இன்று, இந்தத் தாக்குதலில் உயிர்நீத்த தியாகிகளுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார். "இந்தத் தாக்குதலில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளுக்கும் நாம் அஞ்சலி செலுத்துவோம். நமது பாதுகாப்புப் படையினரின் தியாகத்தால் பெருமிதம் கொள்வோம். அவர்களது வீரம், பல தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்" என்றும் அவர் கூறினார்.

பாதுகாப்புத் துறையில் தற்சார்பு அடைவதற்கான பெரும் முயற்சியை இந்தியா மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். உலகின் மிகத் தொன்மையான மொழியான தமிழ் மொழியில் மகாகவி சுப்ரமணிய பாரதி எழுதிய,

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்

ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்

நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்

ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்

என்ற பாடல் வரிகள் அளித்த ஊக்கம் தான் இதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார். பாதுகாப்பு தொழில் வழித் தடங்களில் ஒன்று தமிழ்நாட்டில் அமைந்திருப்பதையும் திரு.மோடி சுட்டிக்காடினார். இந்த தொழில் வழித்தடத்தில், எட்டாயிரத்து நூறு கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஏற்கனவே வரப்பெற்றுள்ளன என்றும் அவர் எடுத்துரைத்தார்.

தமிழகம், ஏற்கனவே, இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி மையமாகத் திகழ்வதாக பிரதமர் தெரிவித்தார். தற்போது, இந்தியாவின் பீரங்கி உற்பத்தி மையமாகவும் தமிழகம் உருவெடுத்துள்ளதைக் காண முடிகிறது எனவும் பிரதமர் கூறினார். அர்ஜுன் மார்க் 1ஏ ரக பீரங்கி பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், "உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட 'அர்ஜுன் மார்க்1ஏ ரக பீரங்கி'-யை ஒப்படைப்பதில் பெருமிதம் அடைகிறேன்" என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த பீரங்கியில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெடிப்பொருட்கள் தான் பயன்படுத்தப்படுகிறது என்றார் அவர். தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட பீரங்கி, வடமாநில எல்லைகளில், நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது என்றும் இது, இந்தியாவின் ஒருமைப்பாட்டு உணர்வை - ஒன்றுபட்ட பாரதம் என்பதை பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் கூறினார். பாதுகாப்புத் துறையில், தற்சார்பு உடைய நாடாக இந்தியாவை மாற்றுவது, தொடர்ந்து முழுவேகத்தில் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

நமது பாதுகாப்புப் படைகள், இந்தியாவின் துணிச்சல் பண்பை வெளிப்படுத்துகின்றன என்றும் தாய்நாட்டைக் காப்பதில் முழு வல்லமை உண்டு என்பதை, அவர்கள் மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளையில், இந்தியா அமைதியில் நம்பிக்கை கொண்டுள்ளது என்பதையும் நிரூபித்துள்ளனர் என்றும் அவர் எடுத்துரைத்தார். எனினும், இந்தியா தனது இறையாண்மையை எப்பாடுபட்டாவது பாதுகாக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

மெட்ராஸ் ஐ.ஐ.டி.யின் டிஸ்கவரி வளாகம், 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவிலான கட்டமைப்பு வசதிகளுடன், உலகத்தரம் வாய்ந்த ஆராயச்ச்சி மையங்களைக் கொண்டதாக இருக்கும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த மையம், புதிய கண்டுபிடிப்புகளுக்கான முன்னணி மையமாகத் திகழ்வதோடு, இந்தியா முழுவதிலுமிருந்து தலைசிறந்த நபர்களை ஈர்ப்பதாக அமையும்.

இந்த ஆண்டிற்கான பட்ஜெட், சீர்திருத்தங்கள் மீது அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை மீண்டும் பிரதிபிலித்துள்ளது. இந்தியாவின் கடலோரப் பகுதிகளின் மேம்பாட்டிலும், பட்ஜெட் சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளது. மீனவர்களுக்குக் கூடுதல் கடனுதவி, மீன்பிடித்தல் தொடர்பான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, சென்னை உள்ளிட்ட ஐந்து இடங்களில் நவீன மீன்பிடித் துறைமுகங்கள் அமைத்தல், கடல்பாசி உற்பத்தி போன்றவற்றிற்கும் கவனம் செலுத்தப்பட்டிருப்பது, கடலோரப் பகுதி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். கடல்பாசி உற்பத்திக்காக, தமிழ்நாட்டில், பன்னோக்கு கடற்பாசி பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேவேந்திரகுல வேளாளர்களை, அந்தப் பெயரிலேயே அழைக்கப்பட வேண்டும் என்ற தேவேந்திரகுல வேளாளர்களின் நீண்டகால கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் அறிவித்தார். இனி அவர்கள், தங்களது பாரம்பரிய பெயரிலேயே அழைக்கப்படுவார்கள் என்றும், அரசியல் சாசனத்தில் உள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள, ஆறு, ஏழு பெயர்களில் அழைக்கப்பட மாட்டார்கள். இதற்காக, அரசியல் சாசன அட்டவணையில், அவர்களது பெயரை தேவேந்திரகுல வேளாளர் என்று திருத்தம் செய்வதற்கான வரைவு அரசாணைக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது, நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரின் தொடக்கத்திலேயே தாக்கல் செய்யப்படும். இந்த விஷயம் குறித்து, விரிவான ஆய்வு மேற்கொண்டதற்காக, தமிழக அரசுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல, அதற்கும் அப்பாற்பட்டது. இது நீதி, கவுரவம் மற்றும் வாய்ப்புகள் பற்றியது என்றும் திரு.மோடி குறிப்பிட்டார். "தமிழ்நாட்டின் கலாச்சாரத்தைப் பேணிப் பாதுகாத்து, கொண்டாடுவது, எங்களுக்குக் கிடைத்த கவுரவம். தமிழ்நாட்டின் கலாச்சாரம் உலகப் பிரசித்திபெற்றது" என்றும் திரு.மோடி தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள தமிழ் சகோதர, சகோதரிகளின் நலன் மற்றும் அவர்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதிலும், மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஒரே இந்தியப் பிரதமர் திரு.மோடி தான். இந்த அரசு வழங்கிய நிதி ஆதாரங்களால், தமிழர்கள் முன்பைவிட தற்போது சிறப்பாக உள்ளனர். இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகள் போன்ற திட்டங்கள் இதில் அடங்கும். தோட்டப்பகுதிகளில் நாற்பதாயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்தைப் பொறுத்தவரை, தமிழ் சமுதாயத்தால் பெருமளவிற்கு பயன்படுத்தப்படும் இலவச ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு நாங்கள் நிதியுதவி அளித்துள்ளோம். டிக்கோயா-வில் மருத்துவமனை ஒன்று கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் விதமாக, யாழ்ப்பாணம் – மன்னார் இடையேயான ரயில்பாதை மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு விமானப் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவால் கட்டப்பட்டுவரும் யாழ்ப்பாணம் கலாச்சார மையம் விரைவில் திறக்கப்படும். "தமிழர்களின் உரிமைகளுக்காகவும், இலங்கை தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அவர்கள், சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்யவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மீனவர்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும் அரசு எப்போதும் பாடுபடும் என்று உறுதிபட தெரிவித்த பிரதமர், மீனவர்கள் இலங்கைப் படையினரால் பிடித்துச் செல்லப்படும்போதெல்லாம் அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவதை உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு, ஆயிரத்து அறுநூறு மீனவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதுடன், தற்போது, இலங்கை அரசின் பிடியில் மீனவர்கள் யாரும் இல்லை. அதேபோன்று, முன்னூற்று பதிமூன்று படகுகளும் விடுவிக்கப்பட்டிருப்பதாக, பிரதமர் தெரிவித்தார்.

சென்னை மெட்ரோ ரயில் முதற்கட்ட விரிவாக்கத் திட்டம், சென்னை கடற்கரை – அத்திப்பட்டு இடையேயான நான்காவது ரயில் பாதை, விழுப்புரம் – கடலூர் – மயிலாடுதுறை – தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை-திருவாரூர் இடையே, மின்மயமாக்கப்பட்ட ஒருவழி ரயில் பாதையையும் பிரதமர் தொடங்கிவைத்தார். கல்லணைக் கால்வாய் விரிவாக்கம், புனரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் திட்டம், மெட்ராஸ் ஐஐடி டிஸ்கவரி வளாகத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

தமிழக ஆளுனர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர், தொழில்துறை அமைச்சர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Jan Dhan accounts hold Rs 2.75 lakh crore in banks: Official

Media Coverage

Jan Dhan accounts hold Rs 2.75 lakh crore in banks: Official
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister expresses gratitude to the Armed Forces on Armed Forces Flag Day
December 07, 2025

The Prime Minister today conveyed his deepest gratitude to the brave men and women of the Armed Forces on the occasion of Armed Forces Flag Day.

He said that the discipline, resolve and indomitable spirit of the Armed Forces personnel protect the nation and strengthen its people. Their commitment, he noted, stands as a shining example of duty, discipline and devotion to the nation.

The Prime Minister also urged everyone to contribute to the Armed Forces Flag Day Fund in honour of the valour and service of the Armed Forces.

The Prime Minister wrote on X;

“On Armed Forces Flag Day, we express our deepest gratitude to the brave men and women who protect our nation with unwavering courage. Their discipline, resolve and spirit shield our people and strengthen our nation. Their commitment stands as a powerful example of duty, discipline and devotion to our nation. Let us also contribute to the Armed Forces Flag Day fund.”