இந்தியாவிற்கு அரசுமுறை பயணமாக வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் திரு லாய்ட் ஜேம்ஸ் ஆஸ்டின் III, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.
அமெரிக்க அதிபர் திரு பைடனின் வாழ்த்துகளை செயலாளர் திரு ஆஸ்டின், பிரதமருக்குத் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ளும் ஜனநாயக மாண்புகள், பன்முகத்தன்மை, விதிகளின் அடிப்படையிலான ஆணைகளில் உறுதி போன்றவற்றில் வேரூன்றி இருக்கும் இரு நாடுகளின் நெருக்கமான உறவை பிரதமர் வரவேற்றார்.
இரு நாடுகளிடையே கேந்திர கூட்டமைப்பிற்கான தமது தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்த பிரதமர், இந்திய– அமெரிக்க உறவுகளில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அமெரிக்க அதிபர் திரு பைடனுக்கு தமது நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கும்படி செயலாளர் ஆஸ்டினை அவர் கேட்டுக்கொண்டார்.
இரு நாடுகளிடையே இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் அமெரிக்க அரசு தொடர்ந்து உறுதிபூண்டிருப்பதை செயலாளர் திரு ஆஸ்டின் மீண்டும் வலியுறுத்தினார். அமைதி, நிலைத்தன்மை, இந்திய–பசிபிக் பிராந்தியம் உள்ளிட்ட பகுதிகளை வளமிக்கதாக உயர்த்துவதற்கான கேந்திர கூட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதில் அமெரிக்கா ஆர்வமாக இருப்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.


