காந்தி ஆசிரம நினைவிடத்தின் பெருந்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது
"சபர்மதி ஆசிரமம் அண்ணலின் உண்மை மற்றும் அகிம்சை, தேசிய சேவை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதில் கடவுளின் சேவையைப் பார்த்தல் போன்ற மதிப்புகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது" ;
"அமிர்த பெருவிழா இந்தியா அமிர்த காலத்திற்குள் நுழைவதற்கான நுழைவாயிலை உருவாக்கியது"
"தனது பாரம்பரியத்தை பாதுகாக்க முடியாத ஒரு தேசம், அதன் எதிர்காலத்தையும் இழக்கிறது. அண்ணலின் சபர்மதி ஆசிரமம் நாடு மட்டுமல்ல, மனித குலத்தின் பாரம்பரியம்"
"குஜராத் முழு தேசத்திற்கும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வழியைக் காட்டியது"
"இன்று, இந்தியா வளர்ச்சியடைய வேண்டும் என்ற உறுதியுடன் முன்னேறி வரும் நிலையில், மகாத்மா காந்தியின் இந்த ஆலயம் நம் அனைவருக்கும் ஒரு பெரிய உத்வேகத்தை அளிக்கிறது"

குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத்  அவர்களே, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, ஏனைய பிரமுகர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!

பூஜ்ய பாபுவின் சபர்மதி ஆசிரமம் தொடர்ந்து இணையற்ற சக்தியை வெளிப்படுத்தி, ஒரு துடிப்பான மையமாக செயல்பட்டு வருகிறது. மற்ற பலரைப் போலவே, நாமும் அங்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும் போதெல்லாம், அண்ணலின் நீடித்த உத்வேகத்தை உணர்வோம். சபர்மதி ஆசிரமம், உண்மை, அகிம்சை, தேசத்தின் மீதான பக்தி, அண்ணலால் போற்றப்படும் ஏழைகளுக்கு சேவை செய்யும் உணர்வு ஆகியவற்றின் விழுமியங்களை இன்றும் உயர்த்திப் பிடித்து வருகிறது. சபர்மதி ஆசிரமத்தின் மறுமேம்பாடு மற்றும் விரிவாக்கத்திற்கு இன்று நான் அடிக்கல் நாட்டியிருப்பது உண்மையிலேயே புனிதமானது. மேலும், தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு அண்ணல் வசித்த கோச்ராப் ஆசிரமமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது; இன்று அதன் திறப்பு விழாவை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். கோச்ராப் ஆசிரமத்தில்தான் காந்திஜி முதன்முதலில் ராட்டை நூற்பதில் ஈடுபட்டு தச்சு வேலைகளைக் கற்றுக்கொண்டார். அங்கு இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்த பிறகு, காந்திஜி சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றார். அதன் புனரமைப்புடன், காந்திஜியின் ஆரம்ப நாட்களின் நினைவுகள் கோச்ராப் ஆசிரமத்தில் சிறப்பாக பாதுகாக்கப்படும். நான் வணக்கத்துக்குரிய அண்ணலுக்கு என் வணக்கத்தைக் காணிக்கையாக்குகிறேன். இந்த முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் ஊக்கமளிக்கும் இடங்களை உருவாக்கியதற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

இன்று, மார்ச் 12, குறிப்பிடத்தக்க வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்த நாளில், தண்டி யாத்திரை மூலம் மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்டத்தின் போக்கை மாற்றியமைத்து, வரலாற்றின் பக்கங்களில் இடம்பிடித்தார். சுதந்திர பாரதத்தில் கூட, இந்தத் தேதி மற்றொரு வரலாற்று நிகழ்வுக்கு சாட்சியாக உள்ளது, இது ஒரு புதிய சகாப்தத்தின் விடியலைக் குறிக்கிறது. மார்ச் 12, 2022 அன்று, சபர்மதி ஆசிரமத்திலிருந்து நாடு 'விடுதலையின் அமிர்தப் பெருவிழா'வைத் தொடங்கியது. தண்டி யாத்திரை சுதந்திர பாரதத்தின் புனித நிலப்பரப்பை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தது, அதன் தொடக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கான பின்னணியை வழங்கியது. அமிர்தப் பெருவிழாவின் தொடக்கம் பாரதத்தின் 'அமிர்த காலத்தில்' நுழைவதை அறிவித்தது. சுதந்திரத்திற்கு முன்பு காணப்பட்டதைப் போலவே நாடு முழுவதும் பொதுமக்களின் பங்களிப்பு உணர்வை இது ஏற்படுத்தியது. 'விடுதலையின் அமிர்தப் பெருவிழா' பரவலாகக் கொண்டாடப்படுவதிலும், காந்தியின் கொள்கைகளைப் பிரதிபலிப்பதிலும் ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்வார்கள். விடுதலையின் அமிர்த காலம்' கொண்டாட்டத்தின் போது, 3 கோடிக்கும் அதிகமான மக்கள் ஐந்து  உறுதிமொழிகளை எடுத்தனர். நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அமிர்தப் பூங்காக்கள் நிறுவப்பட்டன, 2 கோடிக்கும் அதிகமான மரங்கள் மற்றும் செடிகளை நடவு செய்வதன் மூலம் அவற்றின் முழுமையான வளர்ச்சிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கூடுதலாக, 70,000 க்கும் மேற்பட்ட அமிர்த நீர்நிலைகள் கட்டப்பட்டதன் மூலம் நீர் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. 'வீடு தோறும் மூவண்ணக் கொடி' பிரச்சாரம் நாடு தழுவிய தேசபக்தியின் சக்திவாய்ந்த வெளிப்பாடாக உருவெடுத்தது. 'என் மண் என் தேசம்' என்ற முன்முயற்சியின் மூலம், கோடிக்கணக்கான நாட்டுமக்கள் தேசத்தின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அமிர்தப் பெருவிழாவின் போது 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நினைவு கல் தகடுகள் நிறுவப்பட்டன. இதன் விளைவாக, சபர்மதி ஆசிரமம் சுதந்திரப் போராட்டத்தின் அடையாளமாக மட்டுமல்லாமல், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான சான்றாகவும் மாறியுள்ளது.

 

நண்பர்களே,

தனது பாரம்பரியத்தை புறக்கணிக்கும் ஒரு தேசம் அதன் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது. அண்ணலுடன் தொடர்புடைய வரலாற்றுப் பாரம்பரியமான சபர்மதி ஆசிரமம், பாரதத்திற்கு மட்டுமல்ல, மனித குலம் முழுமைக்கும் மகத்துவம் வாய்ந்தது. இருப்பினும், சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த பாரம்பரியம் அதற்கு உரிய கவனத்தைப் பெறவில்லை. ஒரு காலத்தில் 120 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருந்த இந்த ஆசிரமம் இப்போது பல்வேறு காரணங்களால் வெறும் 5 ஏக்கர் நிலத்தை மட்டுமே ஆக்கிரமித்துள்ளது. ஒரு காலத்தில் 63 சிறிய குடியிருப்புகளுக்கு வீடாக இருந்த இடத்தில் இப்போது 36 வீடுகள் மட்டுமே உள்ளன, சுற்றுலாப் பயணிகள் இவற்றில் 3 வீடுகளுக்கு மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றை வடிவமைத்த, தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்கு வகித்த மற்றும் உலகெங்கிலும் இருந்து பார்வையாளர்களைத் தொடர்ந்து ஈர்த்து வரும் ஒரு நிறுவனமான சபர்மதி ஆசிரமத்தை பாதுகாக்க வேண்டியது அனைத்து 140 கோடி இந்தியர்களின் கடமையாகும்.

நண்பர்களே,

இங்கு வசிக்கும் குடும்பங்கள் இன்று இருக்கும் சபர்மதி ஆசிரமத்தின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. அவர்களின் ஒத்துழைப்பால்தான் ஆசிரமத்தின் 55 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கிய அந்தக் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரமத்தின் பழைய கட்டிடங்கள் அனைத்தையும் அவற்றின் அசல் நிலையில் பாதுகாப்பதே எங்கள் தற்போதைய நோக்கம். புனரமைப்பு தேவைப்படும் வீடுகளை அடிமட்டத்திலிருந்து அடையாளம் காண நான் முயற்சிகளை மேற்கொள்கிறேன், பாரம்பரிய கட்டுமானப் பாணிகளை நாங்கள் நிலைநிறுத்துவதை உறுதி செய்கிறோம். உடனடியாக தேவை ஏற்படாவிட்டாலும், தேவையானதை செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன். இந்தப் புனரமைப்பு முயற்சி எதிர்காலத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பார்வையாளர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை.

 

நண்பர்களே,

சுதந்திரத்திற்குப் பிறகு இருந்த அரசு நமது நாட்டின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான தொலைநோக்குப் பார்வையும் அரசியல் விருப்பமும் இல்லை. பாரதத்தை அந்நியக் கண்ணாடி மூலம் பார்க்கும் போக்கு இருந்தது. அதனுடன் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இருந்தது. இதன் விளைவாக நமது வளமான பாரம்பரியம் புறக்கணிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புகள், அசுத்தம் மற்றும் ஒழுங்கின்மை ஆகியவை நமது பாரம்பரியத் தளங்களை பாதித்துள்ளன. காசி எம்.பி., என்ற முறையில், காசி விஸ்வநாதரை உதாரணமாக என்னால் கூற முடியும். 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியின் நிலை மக்களுக்கு நன்கு தெரியும். இருப்பினும், அரசின் உறுதிப்பாடு மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன், காசி விஸ்வநாதர் தாமின் புனரமைப்புக்காக 12 ஏக்கர் நிலம் பாதுகாக்கப்பட்டது. இன்று, அருங்காட்சியகங்கள், உணவு அரங்குகள், விருந்தினர் மாளிகைகள், மந்திர் சௌக், எம்போரியங்கள், பயணிகள் உதவி மையங்கள் போன்ற பல்வேறு வசதிகள் இந்த நிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன, இரண்டே ஆண்டுகளில் 12 கோடிக்கும் அதிகமான பக்தர்களை ஈர்த்துள்ளது. இதேபோல், அயோத்தியில் முன்பு அடர்த்தியாகக் கட்டப்பட்ட ஸ்ரீ ராம பூமியின் விரிவாக்கத்திற்காக 200 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டது. இன்று, ராம பாதை, பக்திப் பாதை, ஜென்மபூமி பாதை போன்ற வசதிகள் இங்கு உருவாக்கப்படுகின்றன. அயோத்தியில் கடந்த 50 நாட்களில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் ஸ்ரீராமரைத் தரிசனம் செய்துள்ளனர். அண்மையில் துவாரகா நகரிலும் எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களை நான் தொடங்கி வைத்தேன்.

நண்பர்களே,

உண்மையில், நாட்டில் பாரம்பரிய பாதுகாப்புக்கு குஜராத் ஒரு முன்மாதிரியான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்தார் அவர்களின் தலைமையின் கீழ் சோமநாதர் ஆலயத்தின் புனரமைப்பு ஒரு வரலாற்று மைல்கல்லாக நிற்கிறது. குஜராத்தில் இதுபோன்ற பல பாரம்பரிய தளங்கள் உள்ளன, அகமதாபாத் உலக பாரம்பரிய நகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பண்டைய துறைமுக நகரமான லோத்தல் உலகளவில் ஒரு சூடான விவாதப் பொருளாக உள்ளது. கிர்னார், பவகாத், மோதேரா மற்றும் அம்பாஜி போன்ற குறிப்பிடத்தக்க பாரம்பரியத் தளங்களை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

நண்பர்களே,

சுதந்திரப் போராட்ட பாரம்பரியம் மற்றும் நமது தேசிய உத்வேகத்துடன் தொடர்புடைய இடங்களுக்கான மேம்பாட்டுப் பிரச்சாரத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். தில்லியில் உள்ள ராஜபாதை கடமைப் பாதையாக மாறியதை நீங்கள் கவனித்திருக்கலாம். கடமைப் பாதையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையை நிறுவினோம். கூடுதலாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சுதந்திரப் போராட்டம் மற்றும் நேதாஜி தொடர்பான இடங்களை மேம்படுத்தியுள்ளோம், அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளோம். பாபா சாஹேப் அம்பேத்கருடன் தொடர்புடைய இடங்களும் பஞ்ச தீர்த்தங்களாக மேம்படுத்தப்பட்டுள்ளன. ஒற்றுமை நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமைக்கான சிலை சர்தார் படேலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தும் வகையில் உலகளாவிய ஈர்ப்பாக மாறியுள்ளது. தண்டியும் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. சபர்மதி ஆசிரமத்தின் தற்போதைய வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் இந்தத் திசையில் மற்றொரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.

 

நண்பர்களே,

இந்த ஆசிரமத்திற்கு வரவிருக்கும் தலைமுறையினரும், பார்வையாளர்களும் சபர்மதி துறவி, ராட்டையின் சக்தியின் மூலம், தேசத்தின் இதயங்களையும் மனதையும் எவ்வாறு அசைத்தார் என்பதைப் பற்றிய நுண்ணறிவைப் பெறுவார்கள். மக்களின் உணர்வைத் தட்டியெழுப்பி, சுதந்திரப் போராட்டத்தின் பன்முக நீரோட்டங்களை முன்னெடுத்துச் சென்றவர். பல நூற்றாண்டுகளாக காலனி ஆதிக்கம் மற்றும் அடிமைத்தனத்தால் விரக்தியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நாட்டில், மகாத்மா காந்தி ஒரு மக்கள் இயக்கத்தைத் தூண்டியதன் மூலம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தினார். இன்றும் கூட, அவரது தொலைநோக்குப் பார்வை நமது நாட்டின் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்திற்கான தெளிவான திசையை வழங்குகிறது. கிராம சுயராஜ்யம், தற்சார்பு பாரதம் ஆகியவற்றை அண்ணல் தொலைநோக்குப் பார்வையில் கண்டார். இப்போதெல்லாம், "உள்ளூர் குரல்" என்ற கருத்து அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. இந்தச் சொல் சமகாலக் கண்ணோட்டத்தையும் பயன்பாட்டையும் வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட சொற்களைப் பொருட்படுத்தாமல், அடிப்படையில், இது காந்திஜியின் சுதேசி உணர்வையும், 'தன்னம்பிக்கை பாரதத்தையும்' உள்ளடக்கியது, அதற்கு மேல் எதுவும் இல்லை. இன்று ஆச்சார்யா அவர்கள் இயற்கை வேளாண்மையை நோக்கிய தனது இயக்கம் பற்றி என்னிடம் தெரிவித்தார். குஜராத்தில் மட்டும் 9 லட்சம் விவசாயக் குடும்பங்கள் உள்ளன என்று குறிப்பிட்ட அவர், இது உண்மையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாகும். இதில், 9 லட்சம் குடும்பங்கள் இயற்கை விவசாயத்திற்கு மாறி, ரசாயனம் இல்லாத விவசாயம் என்ற காந்திஜியின் கனவை நிறைவேற்றுகின்றன. இந்த மாற்றத்தின் விளைவாக குஜராத்தில் 3 லட்சம் மெட்ரிக் டன் யூரியா பயன்பாடு குறைந்துள்ளது என்றும் அவர் பகிர்ந்து கொண்டார். இது அன்னை பூமியைப் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சியைக் குறிக்கிறது. இது மகாத்மா காந்தியின் கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை என்றால், வேறு என்ன? ஆச்சார்யாவின் வழிகாட்டுதலின் கீழ், குஜராத் வித்யாபீடம் புத்துணர்ச்சியை அனுபவித்துள்ளது. இந்த மகத்தான ஆளுமைகள் நமக்கு வளமான பாரம்பரியத்தை வழங்கியுள்ளனர். அதை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியது நம் கடமை. இந்த முயற்சியில் எனது பங்களிப்பு, கதரின் மறுமலர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகும். கதரின் செல்வாக்கும் வீச்சும் கணிசமாக வளர்ந்துள்ளது. கதர் இந்த அளவுக்கு விரிவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது - முன்பு பெரும்பாலும் அரசியல்வாதிகளின் பயன்பாட்டிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த கதரின் வீச்சை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளோம். காந்தியின் மரபுகளை கௌரவிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது. காந்திஜியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எங்கள் அரசு, கிராமப்புற சமூகங்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, தற்சார்பு இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது. இன்று கிராமங்கள் செழித்து வளர்ந்து வருகின்றன, இது கிராம சுயராஜ்யம் குறித்த அண்ணலின் தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறது. சுய உதவிக் குழுக்கள் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தில் பெண்கள் தங்கள் முக்கியப் பங்கை மீட்டெடுத்து வருகின்றனர். கிராமங்களில் சுய உதவிக் குழுக்களில் ஈடுபட்டுள்ள 1 கோடிக்கும் மேற்பட்ட சகோதரிகள் லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர் என்பதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன், மூன்றாவது பதவிக்காலத்தில் 3 கோடி சகோதரிகளை இந்த நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பது எனது விருப்பமாகும். இன்று, கிராம சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த இந்தப் பெண்கள் நவீன விவசாய முறைகளை ஏற்றுக்கொண்டு, ட்ரோன் பைலட்டுகளாக மாறியுள்ளனர். இந்த முயற்சிகள் வலுவான பாரதத்திற்கு எடுத்துக்காட்டு. மேலும் அனைத்தையும் உள்ளடக்கிய பாரதத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. எங்கள் முயற்சிகள் மூலம், ஏழை மக்கள் வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான தன்னம்பிக்கையைப் பெற்றுள்ளனர். கடந்த பத்தாண்டுகளில், எங்கள் அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளனர். எங்கெல்லாம் பூஜ்ய பாபுவின் ஆன்மா வசித்தாலும், அது நம் மீது ஆசிகளைப் பொழிந்து கொண்டிருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இன்று, விடுதலையின் அமிர்த காலத்தில் பாரதம் முன்னெப்போதும் இல்லாத மைல்கற்களை எட்டியுள்ள நிலையில், நிலம், விண்வெளி மற்றும் வளர்ச்சி அபிலாஷைகளில் முன்னேறி வரும் நிலையில், மகாத்மா காந்தியின் இல்லத்தின் புனிதத்தன்மை நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. சபர்மதி ஆசிரமம், கோச்ரப் ஆசிரமம் மற்றும் குஜராத் வித்யாபீடம் ஆகியவை நவீன யுகத்தை நமது பாரம்பரியத்துடன் இணைக்கும் கலங்கரை விளக்கங்களாகச் செயல்படுகின்றன. அவை நமது உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதுடன், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஊக்கமளிக்கின்றன. சபர்மதி ஆசிரமத்தின் தொலைநோக்கு என் முன்னால் நிறைவேறிய பிறகு, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை அது ஈர்க்கும் என்றும், அவர்கள் அதன் வரலாற்றைப் புரிந்து கொள்ளவும், அண்ணலைப் பற்றி அறிந்து கொள்ளவும் விரும்புவார்கள் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். எனவே, குஜராத் அரசும், அகமதாபாத் மாநகராட்சியும் வழிகாட்டி போட்டியை நடத்தி, ஏராளமான தனிநபர்களை ஊக்குவித்து வழிகாட்டிகளாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பாரம்பரிய நகரம் யார் சிறந்த வழிகாட்டியாக இருக்க முடியும் என்பதில் குழந்தைகளிடையே ஆரோக்கியமான போட்டியை வளர்க்கிறது. சபர்மதி ஆசிரமத்தில் சிறந்த வழிகாட்டிகளாக பணியாற்றக்கூடிய நபர்களை நாம் அடையாளம் காண வேண்டும். குழந்தைகளிடையே போட்டி ஏற்பட்டால், அது ஒவ்வொரு பள்ளியிலும் பெருகி, ஒவ்வொரு குழந்தையும் சபர்மதி ஆசிரமத்தின் ஸ்தாபனம் மற்றும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதை உறுதி செய்யும். இரண்டாவதாக, ஆண்டுக்கு 365 நாட்கள், அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த குறைந்தது 1000 குழந்தைகள் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் அங்கு செலவிட வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது. தங்கள் பள்ளிகளில் வழிகாட்டிகளாகப் பணியாற்றும் குழந்தைகள் ஆசிரமத்தில் காந்திஜியின் செயல்பாடுகளைப் பற்றிய நிகழ்வுகளை விவரிப்பார்கள், வரலாற்றுடன் ஆழமான தொடர்பை வளர்ப்பார்கள். இந்த முயற்சிக்கு கூடுதல் பட்ஜெட் அல்லது முயற்சி தேவையில்லை; ஒரு புதிய கண்ணோட்டம் மட்டுமே தேவை. மகாத்மா காந்தியின் சிந்தனைகளும், அவரோடு தொடர்புடைய உத்வேகம் அளிக்கும் இடங்களும், நமது தேச நிர்மாணப் பயணத்தில் தொடர்ந்து வழிகாட்டி, நமக்கு புதிய பலத்தை அளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

 

என் சக நாட்டு மக்களுக்கு, இன்று இந்த புதிய திட்டத்தை நான் தாழ்மையுடன் அர்ப்பணிக்கிறேன். நான் முதலமைச்சராக பதவி வகித்த நாள் முதல் நீண்ட நாள் விருப்பமாக இருந்து வரும் இந்த முயற்சி எனது இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. மக்கள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்ததால் பல்வேறு சவால்கள் மற்றும் சட்டப் போராட்டங்களை எதிர்கொண்ட நான் இந்த காரணத்திற்காக கணிசமான நேரத்தையும் முயற்சியையும் அர்ப்பணித்தேன். அப்போது மத்திய அரசும் அதற்கு முட்டுக்கட்டைகளை போட்டது. தடைகள் இருந்தபோதிலும், தெய்வீக ஆசீர்வாதங்கள் மற்றும் பொதுமக்களின் தளராத ஆதரவின் மூலம், ஒவ்வொரு பிரச்சினையையும் சமாளித்து, இந்தக் கனவை நாங்கள் இப்போது நனவாக்கியுள்ளோம். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மரங்கள் மற்றும் தாவரங்களை நடவு செய்வதில் இந்தத் திட்டம் நிறைவடைவதை சார்ந்துள்ளதால், இந்தத் திட்டத்தை தாமதமின்றித் தொடங்கி விரைவுபடுத்த வேண்டும் என்பதே மாநில அரசுக்கு எனது ஒரே வேண்டுகோள். ஒரு காடு போன்ற பசுமையான சூழலை உருவாக்க வளர்ச்சிக்கு நேரம் தேவைப்படும், ஆனால் அதன் தாக்கம் பொதுமக்களுக்கு தெளிவாக இருக்கும்.

மிகவும் நன்றி.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
18% tariffs, boosts to exports, agriculture protected: How India benefits from trade deal with US? Explained

Media Coverage

18% tariffs, boosts to exports, agriculture protected: How India benefits from trade deal with US? Explained
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 8 பிப்ரவரி 2026
February 08, 2026

India Empowered: From Semiconductor Surge to Diaspora Pride Under PM Modi