பாரத மாதாவுக்கு ஜே!
பாரத மாதாவுக்கு ஜே!
பாரத மாதாவுக்கு ஜே!
ஆந்திரப் பிரதேச ஆளுநர் அப்துல் நசீர் அவர்களே, கோவா ஆளுநர் அசோக் கஜபதி ராஜு அவர்களே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களே, துணை முதல்வர் சகோதரர் பவன் கல்யாண் அவர்களே, மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு அவர்களே, சந்திரசேகர் பெம்மசானி அவர்களே, பூபதி ராஜு சீனிவாச வர்மா அவர்களே, மாநில அரசின் அமைச்சர் சகோதரர் நாரா லோகேஷ் அவர்களே, இங்கு வருகை தந்துள்ள மக்கள் பிரதிநிதிகளே, பெரியோர்களே, தாய்மார்களே!
அனைவருக்கும் வணக்கம்!
நண்பர்களே,
ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கும், பொற்கால ஆந்திரா எனும் தொலைநோக்குப் பார்வைக்கும் இன்றைய நாள் மிகவும் முக்கியமான ஒரு நாளாகும். இந்த நன்னாளில், இந்தப் புனிதமான மாதத்தில், வட ஆந்திராவின் இந்தத் திருத்தலத்திற்கு வர எனக்கு நல்வாய்ப்பு கிடைத்துள்ளது.
முதலாவதாக, ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமியின் திருவடிகளை வணங்குகிறேன். ஸ்ரீ கூர்மநாத சுவாமி மற்றும் தாய் பைடித்தல்லி அம்மவாரையும் வணங்கி எனது மரியாதையைச் செலுத்துகிறேன்.
இன்று இங்குச் சுமார் 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன, பல புதிய திட்டங்கள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. மேலும் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. விமான நிலையத்துடன் சேர்த்து, இந்தத் திட்டங்கள் ஆந்திராவின் சாலைப் போக்குவரத்து இணைப்புடனும் தொடர்புடையவை ஆகும். மேலும், ஆற்றல் பாதுகாப்புச் சார்ந்த திட்டங்களும் இதில் அடங்கும். ஆந்திரா தற்போது எந்தெந்தத் துறைகளில் வேகமான வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது என்பதற்கான அடையாளமாகவே இந்த வளர்ச்சிப் பணிகள் அமைந்துள்ளன. இத்திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,
இன்றைய நிகழ்வு என்பது ஒரு புதிய வரலாற்றையும், புதிய சாதனைகளையும் படைக்கும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது. இன்று ஒருபுறம் வளர்ச்சியின் புதிய சாதனைகள் படைக்கப்படும் வேளையில், மறுபுறம் 'திம்சா' நடனத்தின் மூலம் ஒரு கலாச்சார உலகச் சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. இப்படி இரு வேறு எல்லைகளைத் தொடுவதுதான் நண்பர் சந்திரபாபுவின் சிறப்பு!
ஒருபுறம் விண்ணைத் தொடும் நவீன அமைப்பான விமான நிலையக் கட்டுமானம்; மறுபுறம் இங்குள்ள எனது பழங்குடியினச் சகோதரிகள் திம்சா நடனத்தின் மூலம் படைத்த உலகச் சாதனை. சந்திரபாபு அவர்களின் இந்தத் தொலைநோக்குப் பார்வையை நான் சிறப்பாகப் பாராட்டுகிறேன்.
மிக்க நன்றி.
13ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த சகோதரிகளின் இந்த நடன நிகழ்ச்சி, அவர்களின் உற்சாகம், அவர்களின் கட்டுப்பாடு மற்றும் பழங்குடியினக் கலாச்சாரத்தின் பெருமையை பறைசாட்டுகிறது. இந்தக் காட்சி உண்மையிலேயே மிகவும் அற்புதமாக இருந்தது. இதில் நாட்டின் பன்முகத்தன்மையோடு, தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வரப்படும் பழங்குடியினப் பாரம்பரியத்தின் ஒரு துளியையும் காண முடிந்தது. இந்த சிறப்பான ஆற்றல் வெளிப்பாட்டிற்காக உங்கள் அனைவருக்கும், குறிப்பாக எனது பழங்குடியினச் சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்தப் பூமி அல்லூரி சீதாராம ராஜு அவர்களின் பூமியாகும். பழங்குடியின மக்களின் நலனுக்காக அல்லூரி சீதாராம ராஜு அவர்கள் தன் வாழ்வையே அர்ப்பணித்த அதே மண்ணில், இன்று ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு புதிய விமான நிலையம் தன் பயணத்தைத் தொடங்குகிறது. இந்த விமான நிலையம், ஆந்திரா மற்றும் வட ஆந்திராவின் வளர்ச்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமையும். இது ஆந்திர இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான ஒரு தொடக்கப்புள்ளியாகும். ஆந்திரப் பிரதேச மக்களுக்கும், நம் நாட்டு மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,
முன்பெல்லாம், விமான நிலையங்கள் கட்டப்பட்டபோது அவற்றின் பெயர்கள் ஒரே ஒரு குடும்பத்தைக் குறிப்பதாகவே அமைந்திருந்தன. அந்தப் பாரம்பரியத்தை நாம் மாற்றினோம். அயோத்தியில் உள்ள விமான நிலையத்திற்கு வால்மீகியின் பெயரைச் சூட்டினோம்; பஞ்சாபில் உள்ள விமான நிலையத்திற்குச் சாந்த் ரவிதாஸ் அவர்களின் பெயரைச் சூட்டினோம்.
நண்பர்களே,
மத்திய என்.டி.ஏ கூட்டணி அரசு, இந்த புதிய விமான நிலையத்திற்கு ஸ்ரீ அல்லூரி சீதாராம ராஜு அவர்களின் பெயரைச் சூட்ட முடிவு செய்துள்ளது. இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்திப் பயணம் செய்யும் ஆந்திரப் பிரதேச குடிமக்களாக இருந்தாலும் சரி, நாட்டின் மற்றும் உலகத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்த குடிமக்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அல்லூரி சீதாராம ராஜு அவர்களின் பெயரைக் கேட்கும் போது பொதுச்சேவைக்கும் தேசியச் சேவைக்குமான நல் ஊக்கத்தைப் பெறுவார்கள்.
நண்பர்களே,
கடந்த 12 ஆண்டுகளில், நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அசாதாரணமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. 2014ம் ஆண்டு வரை நாட்டில் வெறும் 74 விமான நிலையங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தன. இன்றோ, இந்த எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது. ஒரு காலத்தில் விமானப் பயணம் என்பது பெரிய நகரங்களுக்கு மட்டுமே உரிய ஒன்றாக இருந்தது. ஆனால், தற்போதைய என்.டி.ஏ ஆட்சியில், சிறிய நகரங்களைச் சேர்ந்த சாதாரண மக்களும்கூட விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர்.
12 ஆண்டுகளில், விமான நிலையங்களின் எண்ணிக்கை உயர்ந்தது மட்டுமன்றி, நமது 'உடான்' திட்டத்தின் காரணமாக ஏழை எளிய குடும்பங்களுக்கும் இன்று விமானத்தில் பறக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏழைகளிலும் ஏழை எளிய மக்களின் கனவை நனவாக்க இத்திட்டம் உதவியுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான், அரசாங்கம் உடான் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கியது. இதற்காகவும் ரூ. 29,000 கோடி செலவிடப்பட உள்ளது.

நண்பர்களே,
விமானப் போக்குவரத்துத் துறையில் நாடு மற்றொரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு காசியில் தொடங்கப்பட்ட 'ஸ்போக் விமானநிலைய மாதிரி', இன்று பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸை வந்தடைந்துள்ளது. இதன் மூலம் 25-க்கும் மேற்பட்ட சர்வதேச நகரங்களுடன் அமிர்தசரஸ் நேரடியாக இணைக்கப்படும். இந்த சாதனைக்காக ஆந்திர மண்ணில் இருந்து பஞ்சாப் மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
வளர்ச்சியடைந்த இந்தியாவின் வளர்ச்சி எஞ்சினாக நமது ஆந்திரப் பிரதேசம் எப்போதும் திகழ்ந்து வருகிறது. ஆந்திராவின் வளர்ச்சிக்கான நமது முயற்சிகள் இரட்டை எஞ்சின் வேகத்தில் முன்னோக்கிச் செல்ல, ஆந்திர மக்களிடம் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க நான் கேட்டிருந்தேன்; இன்று சந்திரபாபு நாயுடு அவர்களின் தலைமையிலும், பவன் கல்யாண் அவர்களின் தலைமையிலும் முழு தேசிய ஜனநாயக கூட்டணி குழுவும் ஆந்திரப் பிரதேசத்திற்காக இரட்டை வேகத்தில் பணியாற்றி வருகிறது.
நண்பர்களே,
இன்று நாடு நீலப் பொருளாதாரத்தை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்த முழுப் பிராந்தியமும் ஒரு கடற்கரை பொருளாதார மண்டலமாக வளர வேண்டும் என்பதே நமது தொலைநோக்குப் பார்வையாகும். இந்த முக்கிய இலக்குடன் தான், விசாகப்பட்டினம் முதல் கிருஷ்ணபட்டினம் வரையிலான நமது பழமையான துறைமுகங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, மூலபேட்டை மற்றும் ராமயபட்டினத்தில் புதிய துறைமுகங்களையும் நாம் கட்டி வருகிறோம்.

நண்பர்களே,
துறைமுக மேம்பாட்டுடன் சேர்த்து, ஆந்திரா முழுவதும் நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவேகச் சாலைகளின் இணைப்பும் உருவாக்கப்பட்டு வருகிறது. விசாகப்பட்டினம்-ராய்பூர் விரைவுச் சாலை போன்ற திட்டங்கள் இந்த முழுப் பிராந்தியத்திற்கும் வேகத்தைக் கொடுத்து வருகின்றன.
இந்த முழுப் பிராந்தியமும் நாட்டின் முக்கியத் தொழில்மையங்களுடன் எளிதாக இணைய வேண்டும் என்பதற்காக, இன்று ஆந்திரப் பிரதேசத்தில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் உள்ள முழுமையான ரயில்வே இணைப்புகளின் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளன. இங்குள்ள 70-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களும் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.
நண்பர்களே,
இன்று கதி சக்தி' தேசியப் பெருந்திட்டமும் இந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறது. பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் மூலம் இந்தப் பகுதியில் ரயில்வே, துறைமுகம் மற்றும் விமான நிலையம் ஆகியவை ஒன்றாக இணைக்கப்படுகின்றன. இந்த நவீனச் சரக்குப் போக்குவரத்து கட்டமைப்பு இங்கு உருவாகும்போது, தொழில் துறையினருக்குச் சிறந்த போக்குவரத்து வசதி கிடைக்கும்; விவசாயிகளும் பயனடைவார்கள்; தொழில் தொடங்கும் சூழலும் அதிகரிக்கும்.
நண்பர்களே,
ஆந்திரப் பிரதேசம் எப்போதும் முன்னோக்கிச் சிந்திக்கும் ஒரு மாநிலமாகவே இருந்து வந்துள்ளது. மென்பொருள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஆந்திர இளைஞர்கள் உலகம் முழுவதும் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர். அதனால்தான், இங்குள்ள திறமையை ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சி ஆற்றலோடு இணைக்க அரசாங்கம் விரும்புகிறது. நமது திறமையான இளைஞர்களின் ஆற்றலால் ஆந்திரப் பிரதேசமும் இந்த நாடும் முடிந்தவரை பயன்பெற வேண்டும். இதற்காக, செமிகண்டக்டர் போன்ற எதிர்காலத் தொழில்நுட்பத் தொழில்களில் இப்போது நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.
விசாகப்பட்டினத்தில் ஒரு புதிய செமிகண்டக்டர் ஆலைக்கு அடிக்கல் நாட்டியிருப்பது அந்த இலக்கை நோக்கிய ஒரு மிகப்பெரிய அடியாகும். சந்திரபாபு அவர்களின் தலைமையில், நமது ஆந்திரா இனி மென்பொருளோடு சேர்த்து உற்பத்தித் துறையிலும் ஒரு மையமாக உருவெடுக்கும். இது ஆந்திராவில் எதிர்காலத்திற்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்; மேலும் தொழில்நுட்பத் தொழில்களுக்கான ஒரு புதிய சூழலையும் ஏற்படுத்தும்.
நண்பர்களே,
உலகப் பொருளாதாரத்தில், எந்த இடத்திலும் ஒரு தனி தொழிற்சாலையை வைத்து மட்டும் ஒரு வளர்ச்சி மையத்தை உருவாக்கிவிட முடியாது; அதற்கு ஒரு முழுமையான தொழில் சூழலமைப்பு தேவை. இன்று ஆந்திரப் பிரதேசத்தில், அந்த வளர்ச்சிக்கான சூழலமைப்பையே நாம் உருவாக்கி வருகிறோம். சந்திரபாபு நாயுடு அவர்கள் தனிப்பட்ட முறையில் இரவும் பகலும் உழைத்து வருகிறார்கள். இதன் விளைவாக, இன்று உலகின் பல பெரிய நிறுவனங்கள் இங்கு வந்து முதலீடு செய்ய விரும்புகின்றன.

நண்பர்களே,
செமிகண்டக்டர்களுடன் சேர்த்து, செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு மற்றும் தரவு மையங்களுக்கான பணிகளும் இங்கு நடைபெற்று வருகின்றன. கூகுள் நிறுவனமும் இங்கு 15 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏஐ மற்றும் மேகக் கணினியியல் வளாகத்தை அமைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலக அளவிலான பல நிறுவனங்கள் இங்குப் புதிய சாத்தியக்கூறுகளைக் காண்கின்றன. இதன் மூலம் ஆந்திரப் பிரதேச இளைஞர்களுடன் சேர்ந்து நாட்டு இளைஞர்களும் பெரும் பயன்பெற்று வருகின்றனர்.
நண்பர்களே,
ஆந்திராவின் தொழில்துறை வளர்ச்சி என்பது டிஜிட்டல் தொழில்நுட்பத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. நக்கப்பள்ளியில் ஒரு பெரிய மருந்து துறை தொழிற்பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு உதவி வழங்கி வருகிறது. இதன் காரணமாக, நாட்டின் ஒரு முக்கிய மருந்து உற்பத்தி மையமாகவும் ஆந்திரப் பிரதேசம் உருவெடுக்கும். பசுமை ஆற்றல் துறையில், ராயலசீமா பகுதியில் மட்டுமே 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆந்திரப் பிரதேச மக்களாகிய உங்கள் அனைவருக்கும் இன்று நான் மீண்டும் ஒருமுறை உறுதி அளிக்கிறேன் - நமது அரசு, இந்த இரட்டை எஞ்சின் அரசு, இதுபோன்ற ஒவ்வொரு சாத்தியக்கூறுகளையும் நனவாக்க இரவும் பகலும் தொடர்ந்து உழைக்கும்.
நண்பர்களே,
கடந்த 3 வருகைகளில் மட்டுமே இங்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நான் தொடங்கியுள்ளேன் என்பதிலிருந்தே, இன்று ஆந்திரப் பிரதேசத்தின் ஒவ்வொரு துறையிலும் பணிகள் எந்த அளவுக்கு வேகத்தில் நடைபெற்று வருகின்றன என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். ஆந்திராவின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் 'வட ஆந்திராவும்' அதிகாரம் பெற்று வருகிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். விசாகப்பட்டினம் பொருளாதார மண்டலத்தை நாட்டின் ஒரு முக்கியத் தொழில்மையமாக நாம் உருவாக்கி வருகிறோம். இந்த ஆசிய கண்டத்தின் ஒரு முக்கியப் பொருளாதார மையமாக இந்த மண்டலம் மாற வேண்டும் என்பதே நமது இலக்காகும். இந்த விமான நிலையம் முதல் செமிகண்டக்டர் அலகு வரையிலான அனைத்தும் இந்த இலக்கின் ஒரு பகுதியாகும்.
நண்பர்களே,
நமது அரசின் மந்திரம் - முதலீடு மூலம் வேலைவாய்ப்பு! எனவே, அரசாங்கம் தனது தரப்பிலிருந்து முதலீட்டை அதிகரித்துள்ளதுடன், தனியார் துறையினரையும் முதலீடு செய்ய ஊக்கப்படுத்தி வருகிறோம். முதலீடு அதிகரிக்கும் போது உற்பத்தி அதிகரிக்கும்; உற்பத்தி அதிகரிக்கும் போது ஏற்றுமதி அதிகரிக்கும்; ஏற்றுமதி அதிகரிக்கும் போது புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்; வேலைவாய்ப்பு அதிகரிக்கும் போது மக்களின் வருமானம் உயர்ந்து, குடும்பங்களின் வாழ்க்கை முறை சிறப்படையும் என்பதை நீங்கள் அறிவீர்கள்; இது ஆந்திரப் பிரதேசத்தில் நடப்பதை நாம் கண்டு வருகிறோம்.
நண்பர்களே,
இன்று இங்குத் தொடங்கி வைக்கப்பட்ட மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட அனைத்துத் திட்டங்களும் பொற்கால ஆந்திரா மற்றும் 'வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நிறைவேற்றுவதில் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். சந்திரபாபு அவர்களின் தலைமையில், வளர்ச்சியடைந்த பாரதம் எனும் கனவை நனவாக்குவதற்கான ஒரு மிகப்பெரிய ஆற்றல் மூலமாக ஆந்திரப் பிரதேசம் உருவெடுத்து வருகிறது. இத்திட்டங்கள் அனைத்திற்காகவும் ஆந்திரப் பிரதேச மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி!
பாரத மாதாவுக்கு ஜே!
பாரத மாதாவுக்கு ஜே!
பாரத மாதாவுக்கு ஜே!
மிக்க நன்றி!


