“தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் உற்பத்தி என்பதற்கு பல முக்கிய அம்சங்களை பட்ஜெட் கொண்டிருக்கிறது”
“உறுதியுடன் இந்தியாவில் உற்பத்தி என்பதை நோக்கிய முன்னேற்றத்திற்கு இளைய மற்றும் திறன் வாய்ந்த மக்கள் தொகையின் பங்கு, ஜனநாயகக் கட்டமைப்பு இயற்கை வளங்கள் போன்ற ஆக்கப்பூர்வமான நிலைமைகள் நம்மை ஊக்கப்படுத்த வேண்டும்”
“தேசப் பாதுகாப்பு என்ற முப்பட்டகத்திலிருந்து நாம் பார்த்தால் தற்சார்பு இந்தியா என்பது அனைத்தையும்விட முக்கியமானது”
“பொருள் உற்பத்தித் துறையி்ல் ஆற்றல் மிக்க இடமாக இந்தியாவை உலகம் காண்கிறது”
“உங்களின் நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருள்கள் மீது பெருமிதம் கொள்ளுங்கள், அதே போல் இந்தப் பெருமித உணர்வை உங்களின் இந்திய வாடிக்கையாளர்களிடம் நிலை நிறுத்துங்கள்”
“உலகத்தரங்களை நீங்கள் பராமரிக்க வேண்டும் என்பதோடு உலகளாவிய போட்டியையும் நீங்கள் சந்திக்க வேண்டும்”

நமஸ்காரம்

‘சுயசார்பு இந்தியா’ மற்றும் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ போன்ற திட்டங்கள் தொடர்பாக இந்த ஆண்டு பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் நமது தொழில் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிற்கும் மிகவும் முக்கியமானவை. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ பிரச்சாரம் 21-ம் நூற்றாண்டின் நாட்டின் தேவையாகவும், உலகிற்கு நமது திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. எந்த நாடும் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்தாலும், அதே மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்தால், அது நஷ்டம்-நஷ்டம் என்ற சூழலாகவே இருக்கும். மறுபுறம், இந்தியா போன்ற ஒரு பரந்த விரிந்த பெரிய நாடு வெறும் சந்தையாக மட்டுமே இருந்தால், அது முன்னேறவும் முடியாது, அந்த  இளைய தலைமுறைக்கு வாய்ப்புகளை வழங்கவும் முடியாது. இந்த உலகளாவிய தொற்றுநோய்  பரவலில் பொது விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகளை நாங்கள்  கண்டோம். இந்த நாட்களில், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட பிரச்சினை எவ்வாறு உலகளவில், குறிப்பாக   பொருளாதாரத்தை உலுக்கியது என்பதை நாம் பார்க்கிறோம். இந்த எதிர்மறையான சிக்கல்களை நாம் பகுப்பாய்வு செய்யும்போது, மற்ற அம்சங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இத்தகைய சூழலில், பெரும் நெருக்கடி ஏற்பட்டு, நிலைமை திடீரென மோசமடையும் போது, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்பதன் தேவை அதிகரிப்பதை  வெளிப்படையாகக் காண்கிறோம். மறுபக்கம், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்திற்கு நம்மை ஊக்குவிக்கும் சாத்தியக்கூறுகள் ஏதேனும் உள்ளதா என்பதை நாம் பார்க்க வேண்டும். பெரும் எண்ணிக்கையிலான இளம் தலைமுறையைக் கொண்ட ஒரு நாட்டில், அவர்களது திறமையை உலகில் யாரும் சந்தேகிக்க மாட்டார்கள். இதன் மூலம் தேவைக்கேற்ப திறமையான மனிதவளத்தை உருவாக்க முடியும். மேலும்,    ஜனநாயக விழுமியங்கள் இன்று உலகின் அவசரத் தேவையாகவும், நம்பிக்கை சார்ந்ததாகவும் இருப்பதை உணர முடிகிறது. அனைத்தையும் உள்ளடக்கியதாக உள்ளது. நாம் பெரிய அளவில் கனவு காணக்கூடிய பல்வேறு  விஷயங்கள் உள்ளன. இதனுடன், நாம் இயற்கை செல்வமான ஆழ்ந்த அறிவாற்றல் நிறைந்தவர்கள். அதனை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்காக முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

 

நண்பர்களே,

 

இன்று உலகமே இந்தியாவை ஒரு உற்பத்தி சக்தியாக பார்க்கிறது. நமது நாட்டின் உற்பத்தித் துறை நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% பங்கு வகிக்கிறது, ஆனால், 'மேக் இன் இந்தியா' திட்டம் ஏராளமான  சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஒரு வலுவான உற்பத்தித் தளத்தை கட்டமைக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டும். மத்திய அரசு, மாநில அரசுகள், தனியார் கூட்டாண்மை, கார்ப்பரேட் நிறுவனங்கள்; நாட்டிற்காக நாம் எவ்வாறு அனைவரும் இணைந்து பணியாற்ற முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டில் இன்று அதிகரித்து வரும் தேவைகளைக் கருத்தில் கொண்டு அத்தகைய பொருட்களுக்கு ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும். இப்போது இரண்டு சிக்கல்கள் உள்ளன - ஒன்று ஏற்றுமதியை மனதில் வைத்து செயல்பட வேண்டும். இரண்டாவது, உள்நாட்டுத்  தேவைகளைப் பூர்த்தி செய்வது. நாம் உலகளவில் போட்டியிட முடியாது என்று   வைத்துக்கொள்வோம், ஆனால், நாட்டின்  தேவைகளுக்கு ஏற்ப தரமான பொருட்களை வழங்க முடியும். இதனால் இந்தியா வெளிநாடுகளைப் எதிர்பார்க்க   வேண்டியதில்லை. நாம் இதை செய்ய முடியும். ஒருமுறை செங்கோட்டையில் எனது உரையின் போது ‘பூஜ்ய குறைபாடு, பூஜ்ய விளைவு’ என்று குறிப்பிட்டேன். போட்டி நிறைந்த உலகில் தரம் முக்கியமானது என்பதால் எங்கள் தயாரிப்புகள் குறைபாடுடையதாக இருக்கக்கூடாது. இன்று உலகம் சுற்றுச்சூழலில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, சுற்றுச்சூழலில் பூஜ்ய விளைவு மற்றும் பூஜ்ய குறைபாடு ஆகிய   இரண்டு மந்திரங்கள் தரம் மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவற்றின் சவால்களை எதிர்கொள்ள நாம் தகவமைத்துக் கொள்ள  முடியும். அதேபோல், தொழில்நுட்ப மாற்றங்களால் தகவல் தொடர்பு உலகில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, குறைக்கடத்திகள் (செமிகண்டக்டர்) துறையில் தன்னிறைவு பெறுவதைத் தவிர வேறு வழியில்லை. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு இத் துறையில் புதிய வாய்ப்புகள் இருப்பதாக நான் நம்புகிறேன். நாம் தொலைநோக்கு பார்வையுடன் இருக்க வேண்டும். அது நமது தேவையும் கூட. நாட்டின் பாதுகாப்பு என்ற புள்ளியில் இருந்தும் நாம் இதில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது. தற்போது சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு மக்கள் மின்சார வாகனங்களுக்கு ஈர்க்கப்படுகிறார்கள், மேலும் அதன் தேவையும் அதிகரித்து வருகிறது. இத்துறையில் இந்தியாவால் புதுமைகளை உருவாக்க முடியாதா? இந்த மின்சார வாகனங்களை இந்தியாவால் தயாரிக்க முடியாதா? இதில் இந்திய உற்பத்தியாளர்கள் முக்கிய பங்கு வகிக்க முடியாதா? ‘மேக் இன் இந்தியா’ என்ற உணர்வோடு நாம் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியாவும் சில வகையான எஃகுக்கான இறக்குமதியை நம்பியிருக்கிறது. நாம் முதலில் நமது இரும்புத் தாதுவை ஏற்றுமதி செய்துவிட்டு அந்த நாடுகளில் இருந்து தரமான எஃகு இறக்குமதி செய்வது எப்படிப்பட்ட நிலை? நாட்டுக்குத் தேவையான இரும்புத் தாதுவில் இருந்து எஃகு தயாரிக்க முடியாதா? இது நமது கடமை என்றும் நினைக்கிறேன். இரும்பு தாதுவை மற்ற நாடுகளுக்கு விற்று நாட்டுக்கு என்ன நன்மை செய்கிறோம்? எனவே, இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள தொழில் துறையினர் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இந்திய உற்பத்தியாளர்கள் வெளிநாடுகளைச் சார்ந்து இருப்பது குறைக்கப்பட வேண்டும். எனவே, ‘மேக் இன் இந்தியா’ என்பது காலத்தின் தேவை. மருத்துவ உபகரணங்கள் மற்றொரு துறை. அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வெளியில் இருந்து வாங்குகிறோம். மருத்துவ உபகரணங்களை உருவாக்க முடியாதா? இது அவ்வளவு கடினமான பணி என்று நான் நினைக்கவில்லை. நமது மக்களிடம் அதைச் செய்வதற்கான ஆற்றல்   உள்ளது. அதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாமா? நமது தேவைக்கேற்ப அனைத்து பொருட்களும் சந்தையில் கிடைக்கின்றன என்று நாம் திருப்தி அடைந்துவிடக் கூடாது. சந்தையில் கிடைக்கும் பல பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகள் கிடைக்கும்போது, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விட இந்த தயாரிப்புகள் சிறந்தவை என்ற உணர்வு மக்களிடையே இருக்க வேண்டும், அவற்றை நாம் வாங்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும், இந்த வேறுபாடு புலப்பட வேண்டும். இங்கு எத்தனையோ பண்டிகைகள் உள்ளன. ஹோலி, விநாயக சதுர்த்தி, தீபாவளி போன்ற பண்டிகைகளும் உள்ளன. சிறு வியாபாரிகளுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் இந்த பண்டிகைகளின் போது பல பொருட்களுக்கு பெரும் சந்தை உள்ளது. ஆனால் இன்று வெளிநாட்டு பொருட்கள் அங்கேயும் கோலோச்சி வருகின்றன. முன்னதாக, எங்கள் உள்ளூர் உற்பத்தியாளர்கள் இந்த தயாரிப்புகளுக்கான தேவையை மிகவும் சிறந்த முறையில் பூர்த்தி செய்தனர். இப்போது மாறிவரும் காலத்துக்கு ஏற்ப விஷயங்கள் மாற வேண்டும். அதே பழைய நிலையிலேயே நாம் வாழ முடியாது. நீங்கள் தலைமை ஏற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ‘உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்’ என்பதை நான் மீண்டும் வலியுறுத்தும்போது, ‘உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்’ என்றால், தீபாவளியின் போது மட்டும் மண் விளக்குகள் வாங்குவது என்று சிலர் தவறான எண்ணத்தில் உள்ளனர். நான் விளக்குகளை மட்டும் குறிப்பிடவில்லை. உங்களைச் சுற்றி ஏராளமான விஷயங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் கவனிக்க வேண்டும். இன்று கருத்தரங்கில் இருப்பவர்கள் ஒன்று செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து, உங்கள் வீட்டில் காலை முதல் மாலை வரை தேவைப்படும் பொருட்களைக் கண்டறிந்து, அவற்றில் வெளிநாட்டு தயாரிப்புகள் மற்றும் நீங்கள் பயன்படுத்தாத இந்திய தயாரிப்புகள் ஆகியவற்றின் பட்டியலை உருவாக்குங்கள். நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எனவே, உள்நாட்டு தயாரிப்புகளை அதிகரிக்க செய்யும் வகையில் உற்பத்தியாளர்களை இதில் பங்கேற்கச் செய்ய விரும்புகிறேன்.

 

நண்பர்களே,

மற்றொரு சிக்கல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட   பொருட்களுக்கான அடையாள முத்திரை (பிராண்டிங்) ஆகும். இப்போது நான் பார்க்கிறேன், எங்கள் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துகின்றன, ஆனால் ஒருபோதும் ‘மேக் இன் இந்தியா’ என்று குறிப்பிடவில்லை. உங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும்போது இதை ஏன் வலியுறுத்தக்கூடாது? உங்கள் தயாரிப்புகள் எப்படியும் விற்கப்படும்,  நாட்டுடன் ஒரு சிறப்புப் பிணைப்பைக் கொண்ட ஒரு பெரிய சமூகம் உள்ளது. அவர்களை ஊக்குவிப்பதற்கான வணிக உத்தியாக இதை எண்ணிப் பாருங்கள். உங்கள் நிறுவனம் தயாரிக்கும் தயாரிப்புகளில் பெருமிதம் கொள்ளுவதுடன், மேலும் மக்கள் அவற்றைப் பற்றி பெருமிதம் கொள்ள ஊக்குவிக்க வேண்டும். உங்கள் கடின உழைப்பு வீண் போகவில்லை, உங்களிடம் பல நல்ல தயாரிப்புகள் உள்ளன. ஆனால் துணிச்சலுடன் முன் வாருங்கள், இந்த தயாரிப்புகள் நாட்டின் மண்ணிலிருந்து வந்தவை என்பதையும், நம் மக்களின் வியர்வையின் மணம் கொண்டவை என்பதையும் நம் நாட்டு மக்களுக்குச் சொல்லுங்கள். அவர்களுடன் உணர்வு பூர்வமாக இணைந்திருங்கள். இது சம்பந்தமாக பொதுவான முத்திரையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அரசு மற்றும்  தனியார் நிறுவனங்களும் இணைந்து அத்தகைய நல்ல விஷயத்தை உருவாக்க முடியும்.

நண்பர்களே,

எங்கள் தனியார் துறையும் தங்கள் தயாரிப்புகளுக்கான இலக்குகளைக் கண்டறிய வேண்டும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் மேலும் தயாரிப்பு பிரிவுகளை   (போர்ட்ஃபோலியோவை) பன்முகப்படுத்தி  மேம்படுத்துவதை வலியுறுத்த வேண்டும். இப்போது 2023 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டாக கொண்டாடப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள். சிறு தானியங்கள்  மீது மக்கள் ஈர்ப்பு ஏற்படுவது இயல்பு. நாட்டின் சிறுதானிய வகைகள்  உலகின் உணவுப் பொருளாக இடம் பெற  வேண்டும் என்பது இந்தியர்களின் கனவாக இருக்க வேண்டாமா? இதற்கு நமது சிறு விவசாயிகள் நம்மை ஆசீர்வதிப்பார்கள். சிறுதானிய பயிர்களுக்கான பரிசோதனைகள், அவற்றின்  சரியான பேக்கேஜிங் மற்றும் ஏற்றுமதி ஆகியவை இருக்க வேண்டும். நாம் இதை செய்ய முடியும் என்பதால் நான் அதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதில் நிச்சயம் வெற்றி பெறலாம். உலகில் அதன் சந்தையைப் பற்றி அறிந்து கொள்வதன்  மூலம் எங்கள் ஆலைகளை முன்கூட்டியே நவீன முறையில் மேம்படுத்துவது, அதிகபட்ச உற்பத்திப் பணிகள் மற்றும் அதன் பேக்கேஜிங் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும். சுரங்கம், நிலக்கரி, பாதுகாப்பு போன்ற துறைகள் திறக்கப்பட்டதன் மூலம் நிறைய புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்தத் துறைகளில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கு ஏதேனும் உத்தியை வகுக்க முடியுமா? நீங்கள் உலகளாவிய தரத்தை பராமரிக்க வேண்டும் மற்றும் உலக அளவில் போட்டியிட வேண்டும்.

நண்பர்களே,

கடன் வசதி மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை வலுப்படுத்த இந்த ஆண்டு பட்ஜெட்டில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 6,000 கோடி ரூபாய்  திட்டத்தையும் அரசு  அறிவித்துள்ளது. விவசாயிகள், பெரிய அளவிலான தொழில்கள் மற்றும் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புதிய ரயில்வே தளவாடங்களை உருவாக்குவது குறித்தும் பட்ஜெட் கவனம் செலுத்தியுள்ளது. தபால் மற்றும் இரயில்வே துறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் சிறு தொழில்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள இணைப்புகளில் உள்ள சிக்கல்களைக் களைய உதவிடும். இத்துறையில் புதுமையான தயாரிப்புகளை நாம் உருவாக்க வேண்டும், மேலும் இது சம்பந்தமாக உங்கள் செயல்பாடுகளின்  பங்களிப்பு அவசியம். பிரதமரின் வடகிழக்கு மாநிலங்களுக்கான திட்டம், குறிப்பாக வடக்கு-கிழக்கு மாநிலங்களில் பிராந்திய உற்பத்தி சூழலை மேம்படுத்துவதற்கான பட்ஜெட்டின் ஒரு பகுதியாகும்,    ஆனால் இதற்கான மாதிரிகளை  நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நாம் வெவ்வேறு வழிகளில்  உருவாக்க முடியும். சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தம் நமது ஏற்றுமதிக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும், இதன்மூலம் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மேலும் வலுப்பெறும். ஏற்றுமதியை அதிகரிக்க தற்போதுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் செயல்பாடுகளில் என்ன மாற்றங்களைச் மேற்கொள்வது  என்பது குறித்த உங்கள் பரிந்துரைகள் மதிப்புமிக்கதாக இருக்கும்.

 

நண்பர்களே,

 

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும்   சீர்திருத்தங்களின் தாக்கமும் தெரிகிறது. உதாரணமாக, பெரிய அளவிலான மின்னணு சாதனங்களின்  தயாரிப்பில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம்.  டிசம்பர் 2021-ம் ஆண்டிற்கும் இதற்கான இலக்கில்   ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியைக் கடந்து விட்டோம். எங்களின் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத்  திட்டங்கள் பல  தற்போது செயல்பாட்டின்  மிகவும் முக்கியமான கட்டத்தில் உள்ளன. உங்கள் பரிந்துரைகள் அவற்றை விரைவாக செயல்படுத்த உதவிடும்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi Lauds PV Sindhu For Japan Open, Women's Cricket Team On Lord's Win

Media Coverage

PM Modi Lauds PV Sindhu For Japan Open, Women's Cricket Team On Lord's Win
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares a Sanskrit Subhashitam, highlights noble character as the foundation of respect, trust, and effective leadership
July 27, 2026

Prime Minister Shri Narendra Modi shared a Sanskrit Subhashitam today, highlighting how a person of noble character earns respect in society and is regarded as worthy of every responsibility.

The Prime Minister wrote on X;

"शीलवान् पूजितो लोके शीलवान् साधुसम्मतः।

शीलवान् सर्वकर्मार्हः शीलवान् प्रियदर्शनः॥"

A person of noble character earns respect in society and the esteem of the virtuous. Through integrity, humility and disciplined conduct, such an individual is regarded as worthy of every responsibility. Their personality is admirable, inspiring and worthy of emulation. In truth, noble character is the true foundation of lasting success, effective leadership, and enduring trust.