வணக்கம்!

பிரபுத்த பாரதா-வின் 125-ஆம் ஆண்டு விழாவை கொண்டாடுவதில் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இது ஒரு சாதாரண சஞ்சிகை அல்ல. இது சுவாமி விவேகானந்தரால் கடந்த 1896-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதுவும் 33 வயதான அவரது இளமைப்பருவத்தில் தொடங்கப்பட்டது.. நெடுங்காலமாக நாட்டில் வெளிவரும் ஆங்கில சஞ்சிகைகளுள் இதுவும் ஒன்று.

பிரபுத்த பாரதா, இந்த பெயருக்கு பின்னணியில் ஓர் ஆற்றல்மிக்க சிந்தனை உள்ளது. நமது நாட்டின் மனவுறுதியை வெளிப்படுத்தும் வகையில் இந்த சஞ்சிகைக்கு பிரபுத்த பாரதா என்று சுவாமி விவேகானந்தர் பெயர் சூட்டினார்.‌ ‘விழித்தெழுந்த இந்தியாவை' அவர் உருவாக்க விரும்பினார். பாரதத்தைப் பற்றி புரிந்து கொண்டவர்கள், அது அரசியலுக்கும், பிராந்திய எல்லைகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை அறிந்துள்ளனர். சுவாமி விவேகானந்தர் இதனை மிக துணிவுடனும் பெருமையுடனும் வெளிப்படுத்தியிருக்கிறார். பல நூற்றாண்டுகளாக கலாச்சார உணர்வுகளுடன் இந்தியா வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர் கண்டிருந்தார். எதிர்மறையான கணிப்புகளையும் பொருட்படுத்தாது ஒவ்வொரு சவாலையும் எதிர்க்கொள்ளும் போது இந்தியா மேலும் வலுவடைகிறது.அதுப்போன்று இந்தியா விழித்தெழ வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் விரும்பினார். ஒரு நாடாக நாம் மேன்மைக்காக ஆசைப்படலாம் என்ற சுய நம்பிக்கை தூண்டப்பட வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.

நண்பர்களே,

சுவாமி விவேகானந்தர் ஏழைகளிடையே மிகுந்த இரக்கம் கொண்டிருந்தார். ஒவ்வொரு பிரச்சனைக்கும் வறுமையே வேராக இருப்பதாக அவர் நம்பினார். எனவே நாட்டிலிருந்து வறுமை ஒழிக்கப்பட வேண்டும்.‌ ஏழைகளுக்கு சேவை புரிவது இறைவனின் சேவைக்கு இணையானது என்ற கருத்திற்கு அவர் முக்கியத்துவம் வழங்கினார்.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவிலிருந்து ஏராளமான கடிதங்களை எழுதினார். மைசூர் மகாராஜாவிற்கும் சுவாமி ராமகிருஷ்ணானந்தா அவர்களுக்கும் அவர் எழுதிய கடிதங்களை நான் குறிப்பிட விரும்புகிறேன். ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் சுவாமி அவர்களின் அணுகுமுறை குறித்து இரண்டு தெளிவான சிந்தனைகள் இந்த கடிதங்களின் வாயிலாகத் தெரிய வருகின்றன. முதலாவதாக, ஏழைகள் அவர்களாகவே சுலபமாக அதிகாரத்தை அடைய முடியாதெனில், அவர்களுக்கு அதிகாரம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்று விரும்பினார்.

இரண்டாவதாக இந்தியாவின் ஏழைகள் குறித்து அவர் கூறுகையில், “அவர்களுக்கு எண்ணங்களை ஏற்படுத்த வேண்டும். அவர்களை சுற்றிய உலக நிகழ்வுகள் குறித்து அவர்களது பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்; அதன் பிறகு அவர்களது நல்வாழ்விற்கான பணிகளை அவர்களே மேற்கொள்வார்கள்” என்று குறிப்பிட்டார்.

இந்த அணுகுமுறையுடன் தான் இந்தியா தற்போது முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஏழைகளால் வங்கிகளுக்குச் செல்ல முடியவில்லையெனில், வங்கிகள் ஏழைகளின் இருப்பிடத்திற்குச் செல்ல வேண்டும். இதைத்தான் ஜன்தன் திட்டம் செயல்படுத்தியது. ஏழைகளால் காப்பீடு பெற முடியாத பட்சத்தில், காப்பீடு ஏழைகளிடம் செல்ல வேண்டும். இதைத்தான் ஜன் சுரக்ஷா திட்டங்கள் செயல்படுத்துகின்றன. ஏழைகளால் சுகாதாரத்தை பெற முடியாவிட்டால், சுகாதாரத்தை நாம் ஏழைகளிடம் கொண்டுச் செல்ல வேண்டும். இந்தப் பணியைத்தான் ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்துகிறது. சாலைகள், கல்வி, மின்சாரம் மற்றும் இணைய இணைப்புகள் ஆகியவை நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் குறிப்பாக ஏழைகளிடம் கொண்டு சேர்க்கப்படுகின்றன. இது ஏழைகளிடையே ஆசையைத் தூண்டுகின்றது. இந்த ஆசைகள் தான் நாட்டு வளர்ச்சியின் உந்து சக்தியாக விளங்குகிறது.

நண்பர்களே,

“பலவீனத்துக்கான தீர்வு வேண்டி அதைப்பற்றியே சிந்தித்து கொண்டிருப்பது அல்ல. மாறாக அதன் வலிமையைப் பற்றி சிந்திப்பது ஆகும்”, என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். தடைகளைப் பற்றி நாம் சிந்திக்கும் பொழுது நாம் அதில் புதைந்துவிடுகிறோம். ஆனால் வாய்ப்புகளை குறித்து நாம் சிந்திக்கும்போது முன்னேறுவதற்கான பாதை தெரியவருகிறது. கொவிட்-19 பெருந்தொற்றை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்தியா என்ன செய்தது? பிரச்சினைகளை மட்டுமே கண்டு கொண்டு செயல்படாமல் இருக்கவில்லை. தீர்வுகள் குறித்து இந்தியா கவனம் செலுத்தியது. பாதுகாப்பு கவச உடைகளை தயாரிப்பதிலிருந்து, உலகிற்கே மருந்துகளை வழங்கும் வகையில் நம் நாடு கூடுதல் வலிமை அடைந்திருக்கிறது. நெருக்கடி தருணத்தில் உலகிற்கு ஆதரவாகவும் அது செயலாற்றி உள்ளது. கொவிட்-19 தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் உலகின் மிகப்பெரிய தடுப்புமருந்துத் திட்டத்தை இந்தியா அறிமுகப்படுத்தியது. பிற நாடுகளுக்கு உதவும் வகையிலும் நமது திறனை பயன்படுத்துகிறோம்.

நண்பர்களே,

உலகம் சந்திக்கும் மற்றொரு தடை, பருவநிலை மாற்றம். ஆனால், இப்பிரச்னை குறித்து நாம் புகார் மட்டும் தெரிவிக்கவில்லை. மாறாக சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியை உருவாக்கி நாம் தீர்வு கொண்டுவந்தோம். புதுப்பிக்கத்தக்க வளங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் நாம் கூறிவருகிறோம். சுவாமி விவேகானந்தர் உருவாக்கிய பிரபுத்த பாரதா இதுதான். உலகப் பிரச்னைகளுக்கு தீர்வு கூறும் இந்தியா இதுதான்.

நண்பர்களே,

இந்தியா பற்றி, சுவாமி விவேகானந்தர் மிகப் பெரிய கனவுக்கண்டார். இந்திய இளைஞர்கள் மீது அவர் அளவில்லா நம்பிக்கை வைத்திருந்தார். இந்திய இளைஞர்களை திறன் மிக்கவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும் அவர் பார்த்தார். ‘‘சக்தி வாய்ந்த இளைஞர்கள் 100 பேரை என்னிடம் தாருங்கள், நான் இந்தியாவை மாற்றுவேன்’’ என சுவாமி விவேகானந்தர் கூறினார். இன்று இந்த உணர்வை இந்திய வர்த்தக தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பலரிடம் காண முடிகிறது. சாத்தியம் இல்லாததையும், அவர்கள் சாதித்து காட்டுகிறார்கள்.

இந்த உணர்வை நமது இளைஞர்களிடம் மேலும் எப்படி ஊக்குவிப்பது? நடைமுறை வேதாந்தங்கள் பற்றிய சொற்பொழிவில், சில ஆழமான கருத்துக்களை சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். பின்னடைவுகளை சமாளிப்பது, அதை கற்றலின் திருப்பு முனையின் ஒரு பகுதியாக பார்ப்பது பற்றி அவர் பேசுகிறார்.

மக்களிடம் புகுத்த வேண்டிய இரண்டாவது விஷயம், அச்சமின்மை மற்றும் தன்னம்பிக்கை. சுவாமி விவேகானந்தரின் சொந்த வாழ்வில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடம் அச்சமின்றி இருப்பது. அவர் என்ன செய்தாலும், தன்னம்பிக்கையுடன் செய்தார். அவர் மீது அவருக்கு முழு நம்பிக்கை இருந்தது. பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த நெறிமுறைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதில் அவர் நம்பிக்கையுடன் இருந்தார்.

நண்பர்களே,

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் நிலையானது. உலகுக்கு பயனுள்ள ஒன்றை உருவாக்கி சாதிப்பதுதான் உண்மையான நிலைத்தன்மை என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதுதான் நம்மை வாழ வைக்கும். மதிப்பு மிக்க சில விஷயங்களை நமது புராணக்கதைகள் கற்பிக்கின்றன. மரணமற்ற வாழ்க்கையை தேடிச் சென்றவர்களுக்கெல்லாம் அது ஒரு போதும் கிடைக்கவில்லை என்பதை புராண கதைகள் நமக்கு கற்பிக்கின்றன. மற்றவர்களுக்கு சேவை செய்யும் இலக்குடன் வாழ்ந்தவர்கள்தான், எப்போதும் நிலைத்து வாழ்கின்றனர். ‘‘மற்றவர்களுக்காக வாழ்கிறவர்கள் மட்டும் தான் வாழ்கிறார்கள்’’ என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். இதை அவரின் வாழ்க்கையிலும் காணலாம். அவருக்காக அவர் எதையும் செய்ததில்லை. அவரது எண்ணம் நாட்டின் ஏழை மக்களை பற்றித்தான் இருந்தது. அவரது எண்ணம், அடிமைபட்டு கிடந்த தாய்நாட்டை பற்றித்தான் இருந்தது.

நண்பர்களே,

ஆன்மீகம், பொருளாதார முன்னேற்றத்தை சுவாமி விவேகானந்தர் தனித்தனியாக பார்க்கவில்லை. மிக முக்கியமாக, மக்களை ஏழ்மையாக்கும் அணுகுமுறைக்கு அவர் எதிராக இருந்தார். நடைமுறை வேதாந்தங்கள் சொற்பொழிவில், ‘‘மதத்துக்கும், உலக வாழ்க்கைக்கும் இடையேயான கற்பனையான வேறுபாடு மறைய வேண்டும், ஒற்றுமையைத்தான் வேதாந்தம் கற்பிக்கிறது’’ என்றார்.

சுவாமி விவேகானந்தர் ஒரு ஆன்மீக குரு. மிக உயர்ந்த ஆன்மா. ஆனாலும், ஏழைகளுக்கான பொருளாதார முன்னேற்றம் குறித்த கருத்தை அவர் கைவிடவில்லை. சுவாமி விவேகானந்தர் ஒரு சந்நியாசி. அவர் அவருக்காக ஒரு பைசா கூட சம்பாதிக்க வில்லை. ஆனால பல நிறுவனங்கள் கட்ட நிதி திரட்ட உதவினார். இந்த நிறுவனங்கள் ஏழ்மைக்கு எதிராக போராடின. புதுமை கண்டுபிடிப்பை ஊக்குவித்தன.

நண்பர்களே,

நமக்கு வழிக்காட்டும், சுவாமி விவேகானந்தரின் பொக்கிஷங்கள் பல உள்ளன. 125 ஆண்டுகளாக வெளி வந்து கொண்டிருக்கும் பிரபுத்த பாரதா, சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளை பரப்பி வருகிறது. இளைஞர்களுக்கு கற்பித்து, நாட்டை எழுச்சி பெற வைக்க வேண்டும் என்ற சுவாமி விவேகானந்தரின் தொலைநோக்கை அவர்கள் உருவாக்கி வருகின்றனர். சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை, அழியாமல் இருக்கச் செய்வதில், பிரபுத்த பாரதா முக்கிய பங்காற்றியுள்ளது. எதிர்கால முயற்சிகளிலும், பிரபுத்த பாரதா சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

நன்றி.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Spirituality remains key driver for travel in Asia, India ranks top: Report

Media Coverage

Spirituality remains key driver for travel in Asia, India ranks top: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 26, 2026
March 26, 2026

India’s Economy, Innovative Spirit and Global Standing Continue to Thrive with the Modi Government