"இன்றைய இந்த வேலைவாய்ப்பு முகாம் அசாம் மாநில இளைஞர்களின் எதிர்காலம் குறித்த அக்கறையின் பிரதிபலிப்பாகும்"
"விடுதலையின் அமிர்த காலத்தில் நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்துள்ளோம்"
"தற்போதைய காலத்திற்கு ஏற்ப அரசு அமைப்புகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்"
"ஒவ்வொரு புதிய உள்கட்டமைப்பு திட்டங்களாலும் ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் மற்றும் சுயவேலைவாய்ப்புகள் அதிகரிக்கின்றன"
"இன்று, இளைஞர்கள் பல துறைகளில் முன்னேறி வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலை இல்லை"
"புதிய இந்தியாவைக் கட்டியெழுப்பும் நோக்கில் விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்"

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் அசாம் வேலைவாய்ப்பு முகாமில் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அசாம் மாநிலத்தில் அம்மாநில அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தார். கடந்த மாதம் பிஹு தினத்தன்று தாம் இந்த மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டதை நினைவு கூர்ந்த அவர், அசாமிய கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதற்கான அடையாளமாக இருந்த அந்த மாபெரும் நிகழ்ச்சியின் நினைவுகள் இன்னும் தமது மனதில் பசுமையாக இருப்பதாகக் கூறினார். இன்றைய வேலைவாய்ப்பு முகாம், அசாமில் இளைஞர்களின் எதிர்காலம் குறித்த தீவிர அக்கறையின் பிரதிபலிப்பாகும் என்று அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்பும், அசாமில் வேலைவாய்ப்பு முகாம் மூலம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். இன்று சுமார் 45 ஆயிரம் இளைஞர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கப்படுவதாக தெரிவித்த அவர், இந்த இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்து தெரிவித்தார்.

அசாம் மாநிலம் அமைதி மற்றும் வளர்ச்சியில் புதிய சாதனையை எட்டி வருகிறது என்று அவர் தெரிவித்தார். இந்த வளர்ச்சியின் வேகம் அசாமில் நேர்மறையான தாக்கத்தையும் சிறந்த உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் கூறினார். அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்புகளை மிகவும் வெளிப்படையானதாக மாற்ற அசாம் அரசு செயல்முறைகளை தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.  பல்வேறு துறைகளில் ஆட்சேர்ப்பு செயல்முறையை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட ‘அசாம் மாநில நேரடி ஆட்சேர்ப்பு ஆணையம்’ குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். ஒவ்வொரு துறைக்கும் வெவ்வேறு விதிமுறைகள் இருந்ததாலும், தேர்வு எழுதுபவர்கள் வெவ்வேறு துறைகளுக்கு வெவ்வேறு தேர்வுகளுக்குத் தயாராக வேண்டியிருந்ததாலும் முந்தைய செயல்முறை சிக்கல் நிறைந்ததாக இருந்தது என அவர் குறிப்பிட்டார். இதனால் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை சரியான நேரத்தில் முடிக்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார். இந்த செயல்முறைகள் அனைத்தும் இப்போது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். இந்த சாதனைக்காக அசாம் அரசுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

விடுதலையின் அமிர்த காலத்தில் நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்துள்ளோம் என பிரதமர் கூறினார். அடுத்த 25 ஆண்டுகால அமிர்த காலம் மிக முக்கியமானது என்று அவர் தெரிவித்தார். பணிகளில் நியமனம் பெற்றவர்கள் நல்ல நடைமுறைகள், சிறந்த சிந்தனை, பொதுமக்களின் மீதான அக்கறை ஆகியவற்றை முக்கியமாக கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.   புதிதாக பணி நியமனம் பெற்றவர்கள் ஒவ்வொரு சாதாரண மக்களுக்கும்  அசாம் அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். சமூகம் விரைவாக மாறி வருவதாகவும், எந்தவொரு நபரும் வளர்ச்சிக்காக காத்திருக்க விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 20 ஓவர்  கிரிக்கெட் விளையாட்டு போன்ற விரைவான  இந்த சகாப்தத்தில், நாட்டு மக்கள் விரைவான முடிவுகளை விரும்புவதாக அவர் தெரிவித்தார். அதற்கேற்ப அரசு அமைப்புகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.  நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் அரசு ஊழியர்களுக்கு உள்ள பொறுப்புகளை அவர் சுட்டிக் காட்டினார். பணி நியமனம் பெற்றவர்கள் இதே அர்ப்பணிப்புடன் முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். புதிய விசயங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் சமூகத்தையும் நிர்வாக அமைப்பையும் மேம்படுத்துவதற்கு பங்காற்ற முடியும் என்று அவர்  தெரிவித்தார்.

இந்தியாவின் உள்கட்டமைப்பை அதிவேகமாக நவீனமயமாக்குவதற்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படுகிறது என்று அவர் கூறினார். புதிய நெடுஞ்சாலைகள், விரைவுச்சாலைகள், ரயில் பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் நீர்வழிப் பாதைகள் அமைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.  ஒவ்வொரு புதிய உள்கட்டமைப்பு திட்டத்தாலும்,  ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் மற்றும் சுயவேலை வாய்ப்புகள் அதிகரிப்பதாக அவர் குறிப்பிட்டார். பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கணக்கியல் ஊழியர்கள், தொழிலாளர்கள் போன்றோரும்  பல்வேறு வகையான உபகரணங்கள், எஃகு, சிமெண்ட் போன்றவையும், விமான நிலையங்களின் வளர்ச்சிக்கு தேவை என்பதை அவர் உதாரணமாக குறிப்பிட்டார். ரயில் பாதைகள் விரிவாக்கம் மற்றும் மின்மயமாக்கல் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரித்து  வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வாழ்க்கையை எளிமையாக்குவதற்கு முக்கியத்துவம் அளித்து, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல், சுமார் 4 கோடி பாதுகாப்பான  வீடுகளை அரசு கட்டி , கழிப்பறை வசதிகள், எரிவாயு இணைப்பு, குழாய் மூலம் குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு போன்ற வசதிகளுடன் அந்த வீடுகளை ஏழைகளுக்கு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  இந்த வீடுகளை கட்டுவதற்கும், இந்த வசதிகளை ஏற்படுத்துவதற்கும் உற்பத்தித் துறையினர், சரக்குப்போக்குவரத்துத் துறையினர், திறன் வாய்ந்த தொழிலாளர்கள் போன்றோர் சிறந்த  பங்களிப்புகளை வழங்குவதாக அவர் பாராட்டுத் தெரிவித்தார். வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆற்றிய பங்கை எடுத்துரைத்த பிரதமர், நாட்டில் பல புதிய மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். சில வாரங்களுக்கு முன்பு குவாஹத்தி எய்ம்ஸ் மற்றும் 3 மருத்துவக் கல்லூரிகளை தாம் நாட்டுக்கு அர்ப்பணித்ததையும் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். கடந்த சில ஆண்டுகளில் அசாமில் பல் மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதன் காரணமாக மருத்துவத் துறையுடன் தொடர்புடைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைப்பதாகவும் பல துறைகளில் முன்னேறி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.  பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற நிலை இல்லை என்று பிரதமர் தெரிவித்தார்.  நாட்டில் லட்சக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்க புத்தொழில் நிறுவன சூழல் அமைப்பு உதவியிருப்பதாக பிரதமர் கூறினார். விவசாயம், சமூக நிகழ்ச்சிகள், கணக்கெடுப்பு, ஆய்வுப்பணிகள்,  பாதுகாப்புத் துறை செயல்பாடுகள் போன்றவற்றில் ஆளில்லா விமானங்களான ட்ரோன்களுக்கான தேவை அதிகரித்து வருவதைக் குறிப்பிட்ட அவர், இது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்தார். இந்தியாவில் கோடிக்கணக்கான கைப்பேசிகளை உற்பத்தி செய்வது, இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்றும் சுயசார்பு இந்தியா இயக்கத்தை வலுப்படுத்தும் என்றும் பிரதமர் கூறினார். ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடையும் வகையில், அகண்ட அலைவரிசை இணைப்பு விரிவுபடுத்தப்படுவதைக் குறிப்பிட்ட பிரதமர், இது பெரிய அளவில் வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பை ஊக்குவித்துள்ளது என்றார். ஒரு திட்டம் அல்லது ஒரு சிறந்த முடிவு மட்டுமே மக்களின் வாழ்க்கையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் தெரிவித்தார்.

 

தற்போதைய அரசின் கொள்கைகளை விளக்கியப் பிரதமர், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட மைய  நீரோட்டத்திற்கு வந்துள்ளனர் என்று கூறினார். வேலைவாய்ப்புகள் மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதன் மூலம் இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது என அவர் தெரிவித்தார். புதிய இந்தியாவைக் கட்டியெழுப்பும் நோக்கில் விரைவான நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது என்று  கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka

Media Coverage

Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 5, 2025
December 05, 2025

Unbreakable Bonds, Unstoppable Growth: PM Modi's Diplomacy Delivers Jobs, Rails, and Russian Billions