நாட்டின் 79-வது சுதந்திர தினமான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்தியாவின் தன்னம்பிக்கை, மாற்றத்திற்கான பயணம் ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார். கடந்த பத்து ஆண்டுகளாக, இந்தியா சீர்திருத்தம், செயல்திறன் ஆகியவற்றால் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என அவர் தெரிவித்தார். ஆனால் இப்போது இன்னும் அதிக வலிமையுடன் முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் கூறினார். சட்டங்கள், ஒழுங்குமுறைகள், செயல்முறைகள் ஆகியவை எளிமைப்படுத்தப்பட்டு, தொழில்முனைவு ஊக்குவிக்கப்பட்டு் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார்.
சட்டங்களையும் இணக்கச் சுமைகளையும் எளிதாக்குதல்:
பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையில், கடந்த சில ஆண்டுகளில், அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும், 40,000-க்கும் மேற்பட்ட தேவையற்ற இணக்கச் சுமைகளை ஒழித்துள்ளதாகவும், 1,500க்கும் மேற்பட்ட காலாவதியான சட்டங்களை ரத்து செய்துள்ளதாகவும் கூறினார்.
சில முக்கிய சாதனைகளைச் சுட்டிக் காட்டினார்:
- வருமான வரி சீர்திருத்தம் மற்றும் இணையவழி செயலாக்கம் போன்றவை நடைமுறைகளை வெளிப்படையாகவும் திறமையாகவும் மாற்றுகிறது என அவர் தெரிவித்தார்.
- ₹12 லட்சம் வரை ஆண்டு வருமானத்திற்கு வரி இல்லை எனவும் இதை சில ஆண்டுகளுக்கு முன்பு கூட பலர் நினைத்துப் பார்த்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
- காலாவதியான காலனி ஆதிக்க குற்றவியல் சட்டங்களை இந்திய நீதிச் சட்டத்தால் மாற்றுதல், நீதி மற்றும் சட்ட நடைமுறைகளை எளிதாக்குதல் ஆகியவற்றை பிரதமர் குறிப்பிட்டார்.


