தெலங்கானா மாநிலம் அதிலாபாத்தில் ரூ. 56,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
அதிலாபாத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள் மூலம் மின்சாரத் துறைக்கு மிகப்பெரிய ஊக்கம் கிடைக்கும்
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டியில் ரூ. 6,800 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, பல திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
சங்காரெட்டியில் சாலை, ரயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற பல முக்கிய துறைகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
ஹைதராபாத்தில் சிவில் விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை மையப்பகுதியில் கோர் லோடிங் தொடக்கப் (initiation of core loading) பணியைப் பிரதமர் பார்வையிடுவார்
இது இந்தியாவின் அணுமின் திட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லாக அமையும்
ஒடிசா மாநிலம் சண்டிகோலில் ரூ.19,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
கொல்கத்தாவில் ரூ. 15,400 கோடி மதிப்பிலான பல்வேறு இணைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்
பெட்டியாவில் சுமார் ரூ. 12, 800 கோடி மதிப்பிலான பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, திறந்து வைக்கிறார்
முஸாஃபர்பூர் – மோதிஹரி சமையல் எரிவாயு குழாய் திட்டத்தைத் தொடங்கி வைத்து, மோதிஹரியில் இந்தியன் ஆயிலின் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை மற்றும் சேமிப்பு முனையத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 மார்ச் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தெலங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 மார்ச் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தெலங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

மார்ச் 4 அன்று காலை 10.30 மணியளவில், தெலங்கானா மாநிலம் அதிலாபாத்தில் ரூ.56,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பிறகு பிற்பகல் 3.30 மணியளவில் பிரதமர் தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள பாவினி செல்கிறார்.

மார்ச் 5 அன்று காலை 10 மணியளவில் ஹைதராபாத்தில் சிவில் விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்பின் (CARO) மையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். காலை 11 மணியளவில், தெலங்கானா மாநிலம் சங்காரெட்டியில் ரூ. 6,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 3.30 மணியளவில், ஒடிசா மாநிலம் ஜஜ்பூரில் உள்ள சண்டிகோலில் ரூ.19,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மார்ச் 6 அன்று காலை 10.15 மணியளவில், கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான பல்வேறு போக்குவரத்து இணைப்புத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். அதன்பிறகு, பிற்பகல் 3.30 மணியளவில், பீகார் மாநிலம் பெட்டியாவில் ரூ.12, 800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அதிலாபாத்தில் பிரதமர்

தெலங்கானா மாநிலம் அதிலாபாத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், மின்சாரம், ரயில்வே மற்றும் சாலைத் துறை தொடர்பான ரூ.56,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டங்களில் மின் துறை முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது.

நாடு முழுவதும் மின்சாரத் துறை தொடர்பான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, பல புதிய திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி வருகிறார். அந்த வகையில் தெலங்கானா மாநிலம் பெத்தபள்ளியில் என்டிபிசி-யின் 800 மெகாவாட் (அலகு-2) தெலுங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். அல்ட்ரா-சூப்பர் கிரிட்டிகல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், இந்த திட்டம் தெலுங்கானாவுக்கு 85% மின்சாரத்தை வழங்கும். மேலும் இந்தியாவில் உள்ள என்டிபிசியின் அனைத்து மின் நிலையங்களிலும் இது சுமார் 42% மிக உயர்ந்த மின் உற்பத்தி திறனைக் கொண்டிருக்கும்.

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ராவில் வடக்கு கரண்புரா சூப்பர் அனல் மின் திட்டத்தின் 660 மெகாவாட் (அலகு-2) திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இது வழக்கமான நீர் குளிரூட்டப்பட்ட மின்தேக்கிகளுடன் ஒப்பிடுகையில் நீர் பயன்பாட்டை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும். இவ்வளவு பெரிய அளவிலான காற்று குளிரூட்டப்பட்ட மின்தேக்கி (ஏ.சி.சி) மூலம் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் திட்டம் இதுவாகும்.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள சிபாட் என்ற இடத்தில் எரிசாம்பல் அடிப்படையிலான ஆலையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்;

உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் சிங்க்ரௌலி சூப்பர் அனல் மின் திட்டம் நிலை-3-க்கு (2x800 மெகாவாட்) அடிக்கல் நாட்டுகிறார்; சத்தீஸ்கரின் ராய்கரில் உள்ள லாராவில் ஃப்ளூ கேஸ் சிஓ2 முதல் 4ஜி எத்தனால் ஆலை; ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்ஹாத்ரியில்  முதல் கடல் பசுமை ஹைட்ரஜன் ஆலை; மற்றும் சத்தீஸ்கரில் உள்ள கோர்பாவில் சாம்பல் அடிப்படையிலான ஆலை.

ஏழு திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் ஒரு திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டங்கள் தேசிய மின்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் தேசிய நீர்மின் கழகத்தின் 380 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 792 மில்லியன் யூனிட் பசுமை மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜலாவுனில் பண்டேல்கண்ட் சவூர் உர்ஜா லிமிடெட் நிறுவனத்தின் 1200 மெகாவாட் ஜலாவுன் அதி மெகா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் பூங்காவிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த பூங்கா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2400 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.

உத்தரப்பிரதேசத்தில் ஜலாவுன் மற்றும் கான்பூர் தேஹாத் ஆகிய இடங்களில் சட்லஜ் ஜல் வித்யுத் நிகாமின் (எஸ்.ஜே.வி.என்) மூன்று சூரிய மின்சக்தி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைப்பார். இந்த திட்டங்களின் மொத்த திறன் 200 மெகாவாட் ஆகும். உத்தராகண்ட் மாநிலம் உத்தராகண்டில் நைத்வார் மோரி நீர்மின் நிலையத்தையும் அதனுடன் தொடர்புடைய மின் பகிர்மான பாதையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மற்றும் அசாமின் துப்ரி ஆகிய இடங்களில் எஸ்.ஜே.வி.என்-இன் இரண்டு சூரியசக்தி திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இமாச்சலப் பிரதேசத்தில் 382 மெகாவாட் சன்னி அணை நீர் மின் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார்

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் டஸ்கோவின் 600 மெகாவாட் லலித்பூர் சூரிய மின்சக்தி திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 1200 மில்லியன் யூனிட் பசுமை மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து 2,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கொப்பல்-நரேந்திர மின் பகிர்மானத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். இந்த மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்றத் திட்டம் கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தாமோதர் வேலி கார்ப்பரேஷன் மற்றும் இண்டி கிரிட் ஆகியவற்றின் மின்துறை தொடர்பான பிற திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைப்பார்.

இந்த பயணத்தில் மின்சாரத் துறை மட்டுமின்றி, சாலை மற்றும் ரயில் துறை சார்ந்த திட்டங்களும் மேற்கொள்ளப்படும். புதிதாக மின்மயமாக்கப்பட்ட அம்பரி – அதிலாபாத் – பிம்பால்குதி ரயில் பாதையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். தேசிய நெடுஞ்சாலை எண் 353பி மற்றும் தேசிய நெடுஞ்சாலை 163 மூலம் தெலுங்கானாவை மகாராஷ்டிராவுடனும், தெலங்கானாவை சத்தீஸ்கருடனும் இணைக்கும் இரண்டு பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

 

சங்காரெட்டியில் பிரதமர்

6,800 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டங்கள் சாலை, ரயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற பல்வேறு முக்கிய துறைகளை உள்ளடக்கியது.

மூன்று தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தேசிய நெடுஞ்சாலை எண் 161-ல் கண்டி முதல் ராம்சன்பள்ளி வரையிலான 40 கிலோ மீட்டர் தூரத்தை நான்கு வழிப்பாதையாக மாற்றுவது உட்பட இரண்டு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்தூர் – ஹைதராபாத் பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியான இந்தத் திட்டம், தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் இடையே தடையற்ற பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு வழிவகுக்கும். இந்த பிரிவு ஹைதராபாத் மற்றும் நாந்டேட் இடையேயான பயண நேரத்தை சுமார் 3 மணி நேரமாகக் குறைக்கும். தேசிய நெடுஞ்சாலை எண் 167-ல் 47 கிலோமீட்டர் நீளமுள்ள மிர்யாலகுடா முதல் கோடாடு வரையிலான பிரிவை நடைபாதைகளுடன் கூடிய இருவழிச் சாலையாக மேம்படுத்தும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். மேம்படுத்தப்பட்ட இணைப்பு, இந்தப் பிராந்தியத்தில் சுற்றுலா, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் தொழில்களுக்கு ஊக்கமளிக்கும்.

மேலும், தேசிய நெடுஞ்சாலை 65-ல் 29 கிலோமீட்டர் நீளமுள்ள புனே-ஹைதராபாத் பிரிவை ஆறு வழிப்பாதையாக மாற்றும் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த திட்டம் தெலுங்கானாவில் உள்ள முக்கிய தொழில்துறை மையங்களான பதஞ்செருவுக்கு அருகிலுள்ள பாஷமைலாராம் தொழில்துறை பகுதி போன்றவற்றுக்கு மேம்பட்ட இணைப்பை வழங்கும்.

இந்த நிகழ்ச்சியின் போது, சனத்நகர் – மௌலா அலி ரயில் பாதை மற்றும் ஆறு புதிய ரயில் நிலைய கட்டிடங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் 22 கிலோமீட்டர் தூர வழித்தடப் பணிகள் தானியங்கி சமிக்ஞை மூலம் இயக்கி வைக்கப்பட்டு, எம்எம்டிஎஸ் (பல்வகை போக்குவரத்து சேவை) இரண்டாம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக முடிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஃபெரோஸ்குடா, சுசித்ரா மையம், பூதேவி நகர், அம்முகுடா, நெரெட்மெட் மற்றும் மௌலா அலி வீட்டுவசதி வாரிய நிலையங்களில் ஆறு புதிய நிலைய கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரட்டை வழிப்பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகள் இந்த பிரிவில் முதல் முறையாக பயணிகள் ரயில்களை அறிமுகப்படுத்த வழி வகுக்கிறது. அதிக செறிவூட்டப்பட்ட பிற பிரிவுகளின் சுமையை குறைப்பதன் மூலம் பிராந்தியத்தில் ரயில்களின் நேரம் தவறாமை மற்றும் ஒட்டுமொத்த வேகத்தை மேம்படுத்த உதவும்.

 

காட்கேசர் – லிங்கம்பள்ளி – மௌலா அலி – சனத்நகர் வழியிலான எம்.எம்.டி.எஸ் ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் சேவை ஹைதராபாத் - செகந்திராபாத் இரட்டை நகர பிராந்தியங்களில் பிரபலமான புறநகர் ரயில் சேவையை முதல் முறையாக புதிய பகுதிகளுக்கு விரிவுபடுத்துகிறது. இது நகரின் கிழக்குப் பகுதியான செர்லபள்ளி, மௌலா அலி போன்ற புதிய பகுதிகளை இரட்டை நகரப் பகுதியின் மேற்குப் பகுதியுடன் இணைக்கிறது. இரட்டை நகர பிராந்தியத்தின் கிழக்குப் பகுதியையும் மேற்குப் பகுதியையும் இணைக்கும் பாதுகாப்பான, வேகமான மற்றும் செலவு குறைந்த இந்த போக்குவரத்து முறை பயணிகளுக்கு மிகவும் பயனளிக்கும்.

மேலும், இந்தியன் ஆயில் பாரதீப்-ஹைதராபாத் குழாய் வழித் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். 4.5 எம்எம்டிபிஏ திறன் கொண்ட 1212 கிமீ குழாய் ஒடிசா (329 கிமீ), ஆந்திரா (723 கிமீ) மற்றும் தெலுங்கானா (160 கிமீ) மாநிலங்கள் வழியாக செல்கிறது. பாரதீப் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து விசாகப்பட்டினம், அச்சுதபுரம், விஜயவாடா (ஆந்திரப் பிரதேசம்), ஹைதராபாத் அருகே உள்ள மல்காபூர் (தெலங்கானாவில்) ஆகிய இடங்களில் உள்ள விநியோக நிலையங்களுக்கு பெட்ரோலியப் பொருட்களை பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும் கொண்டு செல்வதை இந்தக் குழாய் உறுதி செய்யும்.

 ஹைதராபாத்தில் பிரதமர்

ஹைதராபாத்தில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்பின் (CARO) மையத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார். சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் இந்திய விமான நிலைய ஆணையத்தால் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் விமான நிலையத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் புதுமையான தீர்வுகளை வழங்குவதற்காக கூட்டு ஆராய்ச்சி மூலம் விமானப் போக்குவரத்து துறையினருக்கு உலகளாவிய ஆராய்ச்சி தளத்தை வழங்க இது அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 350 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட இந்த அதிநவீன வசதி, 5-நட்சத்திர-கிரிஹா மதிப்பீடு மற்றும் எரிசக்தி சேமிப்பு கட்டட குறியீடு (ECBC) விதிமுறைகளுக்குட்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

எதிர்கால ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிக்க விரிவான ஆய்வக திறன்களின் தொகுப்பை சிஏஆர்ஓ பயன்படுத்தும். செயல்பாட்டு பகுப்பாய்வு மற்றும் செயல்திறன் அளவீடு ஆகியவற்றிற்கான தரவு பகுப்பாய்வு திறன்களையும் இது பயன்படுத்தும். காரோவில் முதன்மை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள்: வான்வெளி மற்றும் விமான நிலையம் தொடர்பான பாதுகாப்பு, திறன் மற்றும் செயல்திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், முக்கிய வான்வெளி சவால்களை எதிர்கொள்வது, முக்கிய விமான நிலைய உள்கட்டமைப்பு சவால்களை எதிர்கொள்வது, எதிர்கால வான்வெளி மற்றும் விமான நிலைய தேவைகளுக்கு அடையாளம் காணப்பட்ட துறைகளில் தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்குவது போன்றவை அடங்கும்.


கல்பாக்கத்தில் பிரதமர்

இந்தியாவின் அணுமின் திட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட இந்தியாவின் உள்நாட்டு முன்மாதிரி வேக ஈனுலையில் (PFBR) கோர் லோடிங்  பணியை பிரதமர் பார்வையிடுவார். இந்த பிஎஃப்பிஆர்- ஐ பாவினி (Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited) நிறுவனம் உருவாக்கியுள்ளது.

அணுக்கரு உலை மையமானது கட்டுப்பாட்டு துணை அசெம்பிளிகள், பிளாங்கட் துணை அசெம்பிளிகள் மற்றும் எரிபொருள் துணை அசெம்பிளிகளைக் கொண்டுள்ளது. கோர் லோடிங் செயல்பாடு அணு உலை கட்டுப்பாட்டு துணை அசெம்பிளிகளை லோடிங் செய்வதைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து பிளாங்கெட் துணை அசெம்பிளிகள் மற்றும் எரிபொருள் துணை அசெம்பிளிகள் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.

மூடிய எரிபொருள் சுழற்சியுடன் மூன்று கட்ட அணுசக்தி திட்டத்தை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. அணுசக்தி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைக் குறிக்கும் பிஎஃப்பிஆர்-ல், முதல் கட்டத்திலிருந்து பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மீண்டும் பதப்படுத்தப்பட்டு எஃப்பிஆர்-ல் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த சோடியத்தால் குளிரூட்டப்பட்ட பிஎஃப்பிஆர்-ன் ஒரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், இது நுகர்வதை விட அதிக எரிபொருளை உற்பத்தி செய்ய முடியும். இதனால் எதிர்கால வேக உலைகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் தன்னம்பிக்கையை எட்ட உதவுகிறது.

அணு உலையிலிருந்து உருவாகும் அணுக்கழிவுகளைக் குறைத்தல் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன், எஃப்பிஆர் -கள் பாதுகாப்பான, திறமையான மற்றும் தூய்மையான ஆற்றல் மூலத்தை வழங்குவதோடு நிகர பூஜ்ஜிய இலக்குக்கு பங்களிக்கும். அணுசக்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் தோரியம் பயன்பாட்டை நோக்கமாகக் கொண்ட இந்தியாவுக்கு இது ஒரு முக்கியமான படியாகும். இந்த அணு உலை செயல்பாட்டிற்கு வந்தால், ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக வணிக ரீதியில் இயங்கும் அதிவேக அணு உலையை கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா இருக்கும்.

 

சண்டிகோலில் பிரதமர்

ரூ.19,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார். எண்ணெய் மற்றும் எரிவாயு, ரயில்வே, சாலை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் அணுசக்தி உள்ளிட்ட துறைகளுடன் இந்த திட்டங்கள் தொடர்புடையவை.

பாரதீப் சுத்திகரிப்பு ஆலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மோனோ எத்திலீன் கிளைகால் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது இந்தியாவின் இறக்குமதி சார்பை மேலும் குறைக்க உதவும். ஒடிசாவின் பாரதீப் முதல் மேற்கு வங்கத்தில் உள்ள ஹால்டியா வரை 344 கிலோமீட்டர் நீளமுள்ள குழாய் பாதையையும் அவர் தொடங்கி வைக்கிறார். இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், பாரதீப்பில் ஆண்டுக்கு 0.6 மில்லியன் மெட்ரிக் டன் சமையல் எரிவாயு வசதியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

இந்தப் பிராந்தியத்தில் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், சிங்காரா முதல் பிஞ்சபஹால் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 49-ல் நான்கு வழிப்பாதையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்; தேசிய நெடுஞ்சாலை 49-ல் பிஞ்சாபாஹல் முதல் திலைபானி வரையிலான பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல்; தேசிய நெடுஞ்சாலை எண் 18-ல் பாலசோர்-ஜார்போகாரியா பிரிவை நான்கு வழிப்பாதையாகவும், தேசிய நெடுஞ்சாலை எண்-16ல் டாங்கி-புவனேஸ்வர் பிரிவை நான்கு வழிப்பாதையாகவும் மாற்றுதல்; சண்டிகோலில் சண்டிஹோல் – பாரதீப் பிரிவில் எட்டு வழிப்பாதை அமைக்கும் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

ரயில் இணைப்பை நவீனமயமாக்குதல் மற்றும் விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம் ரயில்வே கட்டமைப்பின் விரிவாக்கமும் நடைபெறும். பன்சபானி – தைதாரி – டோம்கா – ஜக்காபுரா இடையிலான 162 கிலோமீட்டர் நீளமுள்ள ரயில் பாதையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இது தற்போதுள்ள போக்குவரத்து வசதியின் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கியோஞ்சர் மாவட்டத்திலிருந்து இரும்பு மற்றும் மாங்கனீசு தாதுவை அருகிலுள்ள துறைமுகங்கள் மற்றும் எஃகு ஆலைகளுக்கு திறம்பட கொண்டு செல்ல உதவுகிறது. இது பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் கலிங்கா நகரில் கான்கார் கொள்கலன் கிடங்கு திறப்பு விழா நடைபெறும். நர்லாவில் மின்சார லோகோ காலமுறை ஓவர்ஹாலிங் பணிமனை, கண்டபஞ்சியில் வேகன் காலமுறை ஓவர்ஹாலிங் பணிமனை மற்றும் பாகுவாபாலில் பராமரிப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்படும். புதிய ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைப்பது உள்ளிட்ட பிற ரயில்வே திட்டங்களும் இந்த பயணத்தின் போது மேற்கொள்ளப்படும்.

ஐ.ஆர்.இ.எல் (ஐ) லிமிடெட் நிறுவனத்தின் ஒடிசா மணல் வளாகத்தில் நாளொன்றுக்கு 5 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். பாபா அணு ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட  கடல்நீரைக் குடிநீராக்கும் உள்நாட்டு தொழில்நுட்பங்களின் களப் பயன்பாடுகளின் ஒரு பகுதியாக இந்த திட்டம் கட்டப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் பிரதமர்

நகர்ப்புற போக்குவரத்தை எளிதாக்குவதற்கான வழிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில், கொல்கத்தா மெட்ரோவின் ஹவுரா மைதானம் – எஸ்பிளனேட் மெட்ரோ பிரிவு, கவி சுபாஷ் – ஹேமந்தா முகோபாத்யாய் மெட்ரோ பிரிவு, தரடாலா – மஜெர்ஹாட் மெட்ரோ பிரிவு (ஜோகா – எஸ்பிளனேட் பாதையின் ஒரு பகுதி) ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைக்கிறார். ரூபி ஹால் கிளினிக் முதல் ராம்வாடி நீட்டிப்பு வரை புனே மெட்ரோ; கொச்சி மெட்ரோ ரயில் கட்டம் I நீட்டிப்பு திட்டம், எஸ்என் சந்திப்பு மெட்ரோ நிலையத்திலிருந்து திரிபுனிதுரா மெட்ரோ நிலையம் வரை; ஆக்ரா மெட்ரோவின் தாஜ் கிழக்கு வாயில் முதல் மன்கமேஷ்வர் வரை நீட்டிப்பு; மற்றும் டெல்லி-மீரட் ஆர்ஆர்டிஎஸ் வழித்தடத்தின் துஹாய்-மோடிநகர் (வடக்கு) பிரிவு. இந்த பிரிவுகளில் ரயில் சேவைகளை அவர் கொடியசைத்து தொடங்கி வைப்பார். பிம்ப்ரி சின்ச்வாட் மெட்ரோ – நிக்டி இடையே புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட விரிவாக்கப் பணிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்தப் பிரிவுகள் சாலைப் போக்குவரத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதுடன், தடையற்ற, எளிதான மற்றும் வசதியான போகுவரத்து இணைப்பை வழங்க உதவும். கொல்கத்தா மெட்ரோவின் ஹவுரா மைதானம் - எஸ்பிளனேட் மெட்ரோ பிரிவில் இந்தியாவில் எந்தவொரு பெரிய ஆற்றின் கீழும் இல்லாத வகையில் முதல் போக்குவரத்து சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. ஹவுரா மெட்ரோ நிலையம் இந்தியாவின் ஆழமான மெட்ரோ நிலையமாகும். மேலும், மஜெர்ஹாட் மெட்ரோ நிலையம் (தரடாலா - மஜெர்ஹாட் மெட்ரோ பிரிவில் திறக்கப்படுகிறது) ரயில் பாதைகள், தளங்கள் மற்றும் கால்வாய் முழுவதும் ஒரு தனித்துவமான உயர்த்தப்பட்ட மெட்ரோ நிலையமாகும். ஆக்ரா மெட்ரோவின் பிரிவு தொடங்கப்படுவது, வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும். ஆர்.ஆர்.டி.எஸ் பிரிவு தேசிய தலைநகரப் பகுதியில் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கும்.

பெட்டியாவில் பிரதமர்

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பெட்டியாவில் சுமார் ரூ. 12, 800 கோடி மதிப்பிலான ரயில், சாலை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான பல்வேறு உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, தொடங்கி வைக்கிறார்.

109 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தியன் ஆயிலின் முஸாபர்பூர் – மோதிஹரி சமையல் எரிவாயு குழாய் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது பீகார் மாநிலம் மற்றும் அண்டை நாடான நேபாளத்தில் தூய்மையான சமையல் எரிபொருளுக்கான அணுகலை வழங்கும். மோதிஹரியில் இந்தியன் ஆயிலின் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை மற்றும் சேமிப்பு முனையத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். புதிய குழாய் முனையம் நேபாளத்திற்கு பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான விநியோக முனையமாகவும் செயல்படும். இது வடக்கு பீகாரின் கிழக்கு சம்பரன், மேற்கு சம்பரன், கோபால்கஞ்ச், சிவான், முசாபர்பூர், ஷியோஹர், சீதாமர்ஹி மற்றும் மதுபானி ஆகிய 8 மாவட்டங்களுக்கு சேவை செய்யும். மோதிஹரியில் அமைக்கப்பட்டுள்ள புதிய எரிவாயு நிரப்பும் ஆலை, மோதிஹரி ஆலையுடன் இணைக்கப்பட்டுள்ள உணவு சந்தைகளில் விநியோகச் சங்கிலியை மேம்படுத்த உதவும்.


கிழக்கு சம்பரண், மேற்கு சம்பரண், கோபால்கஞ்ச், சிவான் மற்றும் தியோரியா ஆகிய இடங்களில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்கும், ஹெச்பிஎல்-லின் சுகாலி அண்ட் லாரியா நிறுவனத்தில் தானிய அடிப்படையிலான எத்தனால் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

தேசிய நெடுஞ்சாலை – 28ஏ-வில் பிப்ரகொதி – மோதிஹரி – ரக்சால் பிரிவை இருவழிப்பாதையாக மாற்றுவது உள்ளிட்ட சாலைத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். தேசிய நெடுஞ்சாலை 104-ல் ஷியோஹர்-சீதாமர்ஹி பிரிவை இருவழிப்பாதையாக மாற்றுதல், கங்கை ஆற்றின் குறுக்கே பாட்னாவில் உள்ள திகா – சோன்பூர் ரயில் மற்றும் சாலைப் பாலத்திற்கு இணையாக கங்கை ஆற்றின் குறுக்கே ஆறு வழி கேபிள் பாலம் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். தேசிய நெடுஞ்சாலை 19 புறவழிச்சாலையின் பகர்பூர் ஹட்-மாணிக்பூர் பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.

பல்வேறு ரயில்வே திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பாபுதம் மோத்திஹரி – பிப்ரஹான் இடையேயான 62 கிலோ மீட்டர் தூர இரட்டைப் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர், நர்கட்டியாகஞ்ச் – கவுனாஹா பாதை மாற்றப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார். கோரக்பூர் கண்டோன்மென்ட் – வால்மீகி நகர் இடையிலான 96 கிலோமீட்டர் தூர இரட்டை ரயில்பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகள், பெத்தியா ரயில் நிலையத்தின் மறுவடிவமைப்பு ஆகியவற்றிற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். நர்கட்டியாகஞ்ச் – கவுனாஹா மற்றும் ரக்சவுல்-ஜோக்பானி இடையேயான இரண்டு புதிய ரயில் சேவைகளையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi inaugurates Micron’s ₹22,516-crore ATMP facility in Gujarat; calls chips ‘Regulator of 21st century’

Media Coverage

PM Modi inaugurates Micron’s ₹22,516-crore ATMP facility in Gujarat; calls chips ‘Regulator of 21st century’
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates Jammu and Kashmir team on their first-ever Ranji Trophy victory
February 28, 2026

The Prime Minister has congratulated the Jammu and Kashmir team for their first-ever Ranji Trophy win.

The Prime Minister stated that this historic triumph reflects the remarkable grit, discipline, and passion of the team. Highlighting that it is a proud moment for the people of Jammu and Kashmir, he noted that the victory underscores the growing sporting passion and talent in the region.

The Prime Minister expressed hope that this feat will inspire many young athletes to dream big and play more.

The Prime Minister shared on X post;

"Congratulations to the Jammu and Kashmir team for their first ever Ranji Trophy win! This historic triumph reflects remarkable grit, discipline and passion of the team. It is a proud moment for the people of Jammu and Kashmir and it highlights the growing sporting passion and talent there. May this feat inspire many young athletes to dream big and play more."