தமிழ்நாட்டில் ரூ. 20,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்துப் புதிய திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
தமிழ்நாட்டில் ரயில், சாலை, கப்பல், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகள் தொடர்பான பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டடத்தைப் பிரதமர் திறந்து வைக்கிறார்
கல்பாக்கம் ஐ.ஜி.சி.ஏ.ஆர்-ல், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையை (டி.எஃப்.ஆர்.பி) பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்
லட்சத்தீவில் ரூ. 1150 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
தொலைத்தொடர்பு, குடிநீர், சூரிய சக்தி மற்றும் சுகாதாரத் துறைகள் தொடர்பான புதிய வளர்ச்சித் திட்டங்களால் லட்சத்தீவுகள் அதிகம் பயனடையும்
சுதந்திரத்திற்குப் பின் முதல் முறையாக, கடலுக்கடியில் கண்ணாடி இழைக் கேபிள் மூலம் லட்சத்தீவு இணைக்கப்படுகிறது

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2024 ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

                       

2024 ஜனவரி 2-ம் தேதி காலை 10.30 மணிக்கு பிரதமர் திருச்சி வருகிறார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்கிறார். நண்பகல் 12 மணியளவில், திருச்சியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். விமானப் போக்குவரத்து, ரயில், சாலை, கப்பல், உயர் கல்வி, எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகள் தொடர்பான ரூ. 19,850 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, இத்துறைகளில் புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 3.15 மணியளவில் லட்சத்தீவின் அகத்தி செல்லும் பிரதமர் அங்கு ஒரு பொது நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். ஜனவரி 3, 2024 அன்று நண்பகல் 12 மணியளவில், லட்சத்தீவின் கவரட்டிக்குச் செல்லும் பிரதமர், அங்கு லட்சத்தீவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொலைத்தொடர்பு, குடிநீர், சூரிய சக்தி, சுகாதாரம் போன்ற துறைகள் தொடர்பான பல வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

 

தமிழ்நாட்டில் பிரதமர்

 

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவர்களுக்குப் பிரதமர் விருதுகள் வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார்.

 

திருச்சிராப்பள்ளியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தைப் பிரதமர் திறந்து வைக்கிறார். ரூ. 1100 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்ட இந்த இரண்டு நிலை புதிய சர்வதேச முனையக் கட்டடம் ஆண்டுதோறும் 44 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளைக் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகம் உள்ள நேரங்களில் சுமார் 3500 பயணிகளைக் கையாளும் திறனை இது கொண்டுள்ளது. புதிய முனையத்தில் பயணிகள் வசதிக்காக அதிநவீன வசதிகள் மற்றும் அம்சங்கள் உள்ளன.

 

இந்த நிகழ்ச்சியின்போது பல ரயில்வே திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சேலம் - மேக்னசைட் சந்திப்பு - ஓமலூர் - மேட்டூர் அணைப் பிரிவில், 41.4 கிலோ மீட்டரை இரட்டை ரயில்பாதைத் திட்டம். மதுரை - தூத்துக்குடி இடையே 160 கிலோ மீட்டர் துாரத்திற்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டம், திருச்சிராப்பள்ளி - மானாமதுரை - விருதுநகர் ரயில் பாதை மின்மயமாக்கல், விருதுநகர் - தென்காசி சந்திப்பு மின்மயமாக்கல், செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில்பாதை மின்மயமாக்கல் ஆகிய மூன்று திட்டங்களும் இதில் அடங்கும். சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துத் திறனை மேம்படுத்தவும், தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த ரயில் திட்டங்கள் உதவும்.

 

இந்த நிகழ்ச்சியின்போது ஐந்து சாலைத் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தேசிய நெடுஞ்சாலை 81-ன் திருச்சி - கல்லகம் பிரிவில் 39 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 81-ன் கல்லகம் - மீன்சுருட்டி பிரிவின் 60 கிலோ மீட்டர் நீளத்திற்கு 4/2 வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 785-ன் செட்டிகுளம் - நத்தம் பிரிவின் 29 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 536-ன் காரைக்குடி - ராமநாதபுரம் பிரிவில் 80 கிலோ மீட்டர் இருவழிச் சாலை, தேசிய நெடுஞ்சாலை 179ஏ சேலம் - திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையின் 44 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச்சாலை ஆகியவை இதில் அடங்கும். மக்களின் பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்திற்கும், திருச்சி, ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, உத்திரகோசமங்கை, தேவிப்பட்டினம், ஏர்வாடி, மதுரை போன்ற தொழில் மற்றும் வணிக மையங்களின் இணைப்பை மேம்படுத்துவதற்கும் இந்த சாலைத் திட்டங்கள் உதவும்.

 

இந்நிகழ்ச்சியின் போது, முக்கியமான சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். தேசிய நெடுஞ்சாலை 332ஏ-வில் முகையூர் முதல் மரக்காணம் வரை 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச்சாலை அமைப்பது இதில் அடங்கும். இந்த சாலை தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள துறைமுகங்களை இணைக்கும். உலகப் பாரம்பரிய தளமான மாமல்லபுரத்திற்கு இத்திட்டம் சாலை இணைப்பை மேம்படுத்தும். அத்துடன் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு சிறந்த போக்குவரத்து இணைப்பை இது வழங்கும்.

 

காமராஜர் துறைமுகத்தின் பொது சரக்குக் கப்பல் தங்குமிடம்-2-ஐ (ஆட்டோமொபைல் ஏற்றுமதி/ இறக்குமதி முனையம்-2 மற்றும் துறைமுகம் அமைக்கத் தூர்வாரும் கட்டம்-5) பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.  சரக்குக் கப்பல் தங்குமிடம்-2 திறப்பது நாட்டின் வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகும், இது பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்க உதவும்.

 

இந்த நிகழ்ச்சியின் போது, ரூ.9000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுl திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன், முக்கியமான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐ.ஓ.சி.எல்) ஐபி 101 (செங்கல்பட்டு) முதல் எண்ணூர் - திருவள்ளூர் - பெங்களூரு - புதுச்சேரி - நாகப்பட்டினம் - மதுரை - தூத்துக்குடி வரை 488 கிலோ மீட்டர் நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (எச்பிசிஎல்) 697 கிலோ மீட்டர் நீளமுள்ள விஜயவாடா-தருமபுரி மல்டிபிராக்ட் (பிஓஎல்) பெட்ரோலிய குழாய் (வி.டி.பி.எல்) திட்டம் ஆகியவை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் இரண்டு திட்டங்களில் அடங்கும்.

 

மேலும், இந்திய எரிவாயு ஆணையத்தால் (கெயில்) கொச்சி-கூத்தநாடு-பெங்களூர்-மங்களூர் எரிவாயுக் குழாய் 2 (கே.கே.பி.எம்.பி.எல் 2) திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி முதல் கோயம்புத்தூர் வரை 323 கிலோ மீட்டர் இயற்கை எரிவாயுக் குழாய் அமைக்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.  அத்துடன் சென்னை வல்லூரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தரைவழி முனையத்திற்கான பொது வழித்தடத்தில் மல்டிபிராக்ட் குழாய்கள் அமைத்தல் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் இந்தத் திட்டங்கள் இந்தப் பிராந்தியத்தில் எரிசக்தி தொழில்துறையில் வீட்டு மற்றும் வணிக தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாகும். இவை இப்பகுதியில் வேலைவாய்ப்பை அதிக அளவில் உருவாக்கவும் வழிவகுக்கும்.

 

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் (ஐ.ஜி.சி.ஏ.ஆர்) விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையையும் (டி.எஃப்.ஆர்.பி) பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ரூ. 400 கோடி செலவில் உருவாக்கப்பட்ட டி.எஃப்.ஆர்.பி ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது உலகிலேயே ஒரே வகையான மற்றும் வேகமான உலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கார்பைடு மற்றும் ஆக்சைடு எரிபொருட்களை  மறுசுழற்சி செய்யும் திறன் கொண்டது. இது முற்றிலும் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெரிய வணிக அளவிலான விரைவான அணு உலை எரிபொருள் மறுசுழற்சி ஆலைகளை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக இது அமையும்.

 

திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) 500 படுக்கைகள் கொண்ட மாணவர் விடுதியையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

 

லட்சத்தீவில் பிரதமர்

 

லட்சத்தீவுகளுக்குச் செல்லும் பிரதமர், ரூ.1150 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

 

ஒரு மாற்றம் நிறைந்த சிறந்த நடவடிக்கையாக, கொச்சி-லட்சத்தீவுகள் இடையே கடலுக்கடியில்  கண்ணாடி இழை கேபிள் இணைப்பு (கே.எல்.ஐ - எஸ்.ஓ.எஃப்.சி) திட்டம் தொடங்கப்படுவதன் மூலம் லட்சத்தீவில் மெதுவான இணையப் பிரச்சனை சரி செய்யப்படும்.  ஆகஸ்ட் 2020- ல் செங்கோட்டையில் சுதந்திர தின உரையின்போது இது குறித்த அறிவிப்பைப் பிரதமர் வெளியிட்டார். இந்தத் திட்டம் தற்போது நிறைவடைந்து அதைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது இணைய வேகத்தை 100 மடங்குக்கு மேல் அதிகரிக்க வழிவகுக்கும் (1.7 ஜி.பி.பி.எஸ் முதல் 200 ஜி.பி.பி.எஸ் வரை). சுதந்திரத்திற்குப் பின் முதல் முறையாக, கடலுக்கடியில் கண்ணாடி இழைக் கேபிள் மூலம் லட்சத்தீவு இணைக்கப்படுகிறது. லட்சத்தீவுகளில் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை இந்த திட்டம் உறுதி செய்யும், விரைவான மற்றும் நம்பகமான இணைய சேவைகள், தொலை மருத்துவம், மின் ஆளுமை, கல்வி முன்முயற்சிகள், டிஜிட்டல் வங்கி சேவை, டிஜிட்டல் பணப் பயன்பாடு, டிஜிட்டல் கல்வியறிவு போன்றவற்றுக்கு இது பெரிய பயன் அளிக்கும்.

 

கட்மாட் பகுதியில் குறைந்த வெப்பநிலை கடல்நீரை குடிநீராக்கும் (எல்.டி.டி.டி) ஆலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதன் மூலம் தினமும் 1.5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீர் உற்பத்தி செய்யப்படும். அகத்தி மற்றும் மினிக்காய் தீவுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் குடிநீர்க் குழாய் இணைப்புகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். லட்சத்தீவு, பவளத் தீவு என்பதால், நிலத்தடிநீர் கிடைப்பது எப்போதுமே சவாலாக இருந்தது. இந்தத் திட்டங்கள் அதனை சரி செய்து, லட்சத் தீவுகளின் சுற்றுலாத் திறனை வலுப்படுத்தவும், உள்ளூர் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவும்.

 

 பேட்டரி அடிப்படையில் இயங்கும்  சூரிய மின்சக்தி திட்டமான லட்சத்தீவின் கவரட்டியில் உள்ள முதல் சூரிய மின் உற்பத்தி நிலையமும் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் திட்டங்களில் அடங்கும். இது டீசல் அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையத்தை சார்ந்திருப்பதைக் குறைக்க உதவும். கவரட்டியில் உள்ள இந்திய ரிசர்வ் பட்டாலியன் (ஐ.ஆர்.பி.என்) வளாகத்தில் புதிய நிர்வாக அலுவலகம் மற்றும் 80 ஆண்கள் பாசறையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

 

கல்பேனியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைப்பதற்கும், ஆண்ட்ரோத், சேத்லட், கட்மத், அகத்தி, மினிக்காய் ஆகிய ஐந்து தீவுகளில் ஐந்து மாதிரி அங்கன்வாடி மையங்களை அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Apple exports record $2 billion worth of iPhones from India in November

Media Coverage

Apple exports record $2 billion worth of iPhones from India in November
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 17, 2025
December 17, 2025

From Rural Livelihoods to International Laurels: India's Rise Under PM Modi