இந்தியா முழுவதும் உள்ள 9.7 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடிக்கும் அதிகமான நிதியை பிரதமரின் கிசான் திட்டத்தின் 20-வது தவணையாக பிரதமர் விடுவித்தார்
விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும், விவசாய செலவைக் குறைக்கவும் அரசு முழு பலத்துடன் செயல்படுகிறது, விதை முதல் சந்தை வரை விவசாயிகளுடன் நாங்கள் நிற்கிறோம்: பிரதமர்
இந்தியாவைத் தாக்கும் எவரும் நரகத்தில் கூட பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள்: பிரதமர்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியாவின் உள்நாட்டு ஆயுதங்களின் வலிமையை முழு உலகமும் கண்டது: பிரதமர்
நமது விவசாயிகளின் நலன்கள், நமது சிறு தொழில்கள் எங்களுக்கு மிக முக்கியமானவை, இந்தத் திசையில் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது: பிரதமர்
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறப் போகிறது, அதன் பொருளாதார நலன்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்: பிரதமர்

திரு.நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டினார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, புனிதமான சாவான் மாதத்தில் வாரணாசியைச் சேர்ந்த குடும்பங்களைச் சந்தித்தது குறித்த மன நிறைவை வெளிப்படுத்தினார். வாரணாசி மக்களுடனான தமது ஆழமான உணர்ச்சிபூர்வமான தொடர்பை எடுத்துரைத்த திரு மோடி, நகரத்தின் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் தமது மரியாதைக்குரிய வாழ்த்துகளைத் தெரிவித்தார். புனிதமான சாவான் மாதத்தில் காணொலி மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் இணைவதில் திரு மோடி திருப்தி தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு வாரணாசிக்கு இது தமது முதல் வருகை என்று பிரதமர் கூறினார். ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நினைவு கூர்ந்த அவர், 26 அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டதைக் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உணர்ந்த மிகப்பெரிய வலியை, குறிப்பாக சோகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மகள்களின் துயரத்தை திரு மோடி  எடுத்துரைத்தார். தமது இதயம் துக்கத்தால் வேதனையில்  இருந்ததாகவும், அந்த நேரத்தில், இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் அவர்களின் துன்பத்தைத் தாங்க வலிமை அளிக்க பாபா விஸ்வநாத்திடம் பிரார்த்தனை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மகள்களின் சிந்தூரத்தைப் பறித்தவர்களைப் பழிவாங்குவதாக தாம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதாக பிரதமர் உறுதிப்படுத்தினார். மகாதேவரின் ஆசீர்வாதத்தால் மட்டுமே இது சாத்தியமானது என்பதை அவர் தெரிவித்தார். மேலும் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை மகாதேவரின் பாதங்களில் அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.

 

சமீப நாட்களில், வாரணாசியில் சிவ பக்தர்கள் கங்கா தீர்த்தத்தை ஏந்திச் செல்வதைச் சுட்டிக்காட்டிய அவர், குறிப்பாக சாவான் மாதத்தின் முதல் திங்கட்கிழமை, பக்தர்கள் பாபா விஸ்வநாதரின் புனித ஜலாபிஷேகத்தை நிறைவேற்றப் புறப்பட்டதை நினைவு கூர்ந்தார். யாதவ சகோதரர்கள் கௌரி கேதார்நாத்திலிருந்து கங்கா தீர்த்தத்தைத் தோளில் சுமந்து செல்லும் கண்கவர் காட்சியைப் பற்றி அவர் குறிப்பிட்டார், இது உண்மையிலேயே ஒரு ரம்மியமான காட்சி என்று விவரித்தார். முரசின் சத்தம், பாதைகளில் துடிப்பான ஆற்றல், அவர் சூழ்நிலையை அசாதாரணமானது என்று அழைத்தார். புனித சாவான் மாதத்தில் பாபா விஸ்வநாதர் மற்றும் மார்க்கண்டேய மகாதேவரைப் பார்வையிட வேண்டும் என்ற தமது தனிப்பட்ட விருப்பத்தை திரு மோடி வெளிப்படுத்தினார். இருப்பினும், அவரது இருப்பு மகாதேவின் பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் அல்லது அவர்களின் தரிசனத்தை சீர்குலைக்கக்கூடும் என்றும், எனவே இங்கிருந்து போலேநாத் மற்றும் கங்கை மாதாவுக்கு வணக்கங்களைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்குச் சென்றதை நினைவுகூர்ந்த திரு. மோடி, ஆயிரம் ஆண்டுகள் பழமையான நினைவுச்சின்னமும், இந்தியாவில் சைவ மரபின் ஒரு பழங்கால மையமுமான இந்தக் கோயிலை வட இந்தியாவிலிருந்து கங்கா தீர்த்தத்தைக் கொண்டு வந்த புகழ்பெற்ற மன்னர் ராஜேந்திர சோழன் கட்டியதாகக் குறிப்பிட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சிவபெருமான் மீதான தனது பக்தியாலும், சைவ மரபின் மீதான அர்ப்பணிப்பாலும், ராஜேந்திர சோழன் " lஒரே பாரதம், உன்னத பாரதம்" என்ற தொலைநோக்குப் பார்வையை அறிவித்தார் என்பதை அவர் எடுத்துரைத்தார். இன்று, காசி-தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள் மூலம், அந்த மரபு முன்னோக்கி கொண்டு செல்லப்படுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். கங்கைகொண்ட சோழபுரத்திற்கு சமீபத்தில் சென்றபோது, கங்கை நீரைத் தம்முடன் எடுத்துச் சென்றதாகவும், கங்கை அன்னையின் ஆசியுடன், பூஜை மிகவும் புனிதமான சூழ்நிலையில் நடத்தப்பட்டதாகவும் அவர் பகிர்ந்து கொண்டார். இதுபோன்ற நிகழ்வுகள் நாட்டில் ஒற்றுமையின் உணர்வைத் தூண்டுகின்றன, இது ஆபரேஷன் சிந்தூர் போன்ற பணிகளின் வெற்றிக்கு வழிவகுக்கிறது என்று அவர் கூறினார். 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமை ஆபரேஷன் சிந்தூரின் பலமாக மாறியது என்றும் அவர் கூறினார்.

வாரணாசியில் நடைபெறும் விவசாயிகள் விழாவின் பிரமாண்டமான கொண்டாட்டத்தை சிறப்பித்துக் காட்டிய பிரதமர், பிரதமர்-கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 10 கோடி விவசாய சகோதர சகோதரிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ 21,000 கோடி பரிமாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த நிகழ்வின் போது ரூ 2,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பாபாவின் ஆசீர்வாதத்துடன், வாரணாசியில் தடையற்ற வளர்ச்சிப் பாதை தொடர்கிறது என்று திரு மோடி குறிப்பிட்டார். அங்குள்ள அனைவருக்கும் மற்றும் நாட்டின் விவசாயிகளுக்கும் அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு  சுற்றுலா வழிகாட்டி போட்டியை நடத்தியதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார். இந்த நாட்களில், காசி நாடாளுமன்ற உறுப்பினர் புகைப்படப் போட்டி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலைவாய்ப்பு கண்காட்சி போன்ற நிகழ்வுகளும் நடைபெற உள்ளன, இந்த முயற்சிகள் வெற்றிபெற அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதுபோன்ற முயற்சிகளுக்கு நிர்வாகத்தையும் அவர் பாராட்டினார்.

 

விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதை உறுதிப்படுத்திய திரு. மோடி, முந்தைய அரசுகளுடன் இதை வேறுபடுத்தி, விவசாயிகளின் பெயரில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பு கூட அரிதாகவே நிறைவேற்றப்படுகிறது என்று கூறினார். தங்கள் அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது என்பதைத் தெரிவித்த அவர்,  பிரதமரின் கிசான் சம்மான் நிதியை அரசின் உறுதிப்பாட்டிற்கு சான்றாகக் குறிப்பிட்டார்.

2019-ல் பிரதமரின் கிசான் சம்மான் நிதி தொடங்கப்பட்டபோது, சில முக்கிய எதிர்க்கட்சிகள் பல்வேறு வதந்திகளைப் பரப்பி வந்ததாகவும், சிலர் தேர்தலுக்குப் பிறகு பணம் நிறுத்தப்படும் என்றும், வேறு சிலர் பரிமாற்றப்படும் பணம் திரும்பப் பெறப்படும் என்றும் கூறியதாகவும் திரு. மோடி கூறினார். இது எதிர்க்கட்சியின் உண்மையான தன்மையைப் பிரதிபலிக்கிறது, இது விவசாயிகளையும் நாட்டு மக்களையும் தவறாக வழிநடத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார். ஒரு தவணையாவது நிறுத்தப்பட்டதா என்று கேட்ட பிரதமர், பிரதமரின் கிசான் சம்மான் நிதி, தடையின்றித் தொடர்கிறது என்று கூறினார். இதுவரை, ரூ.3.75 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகளின் கணக்குகளுக்கு பரிமாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். உத்தரப் பிரதேசத்தில் மட்டும், சுமார் 2.5 கோடி விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர், ரூ.90,000 கோடிக்கும் மேல் பெற்றுள்ளனர். வாரணாசியில் உள்ள விவசாயிகள் கிட்டத்தட்ட ரூ.900 கோடியைப் பெற்றுள்ளனர் என்று திரு. மோடி மேலும் கூறினார். இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், நிதி எந்தக் கழிவுகளோ அல்லது கமிஷன்களோ இல்லாமல் விவசாயிகளைச் சென்றடைந்துள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். இது தமது அரசால் நிறுவப்பட்ட நிரந்தர ஏற்பாடு - எந்தக் கசிவும் இருக்காது, ஏழைகளின் உரிமைகள் மறுக்கப்படாது என்றும் அவர் கூறினார்.

"ஒரு பகுதி மிகவும் பின்தங்கியிருந்தால், அதற்கு அதிக முன்னுரிமை கிடைக்கும்" என்ற வளர்ச்சி மந்திரத்தை மீண்டும் வலியுறுத்திய திரு. மோடி, இந்த மாத தொடக்கத்தில், மத்திய அரசு ஒரு பெரிய புதிய முயற்சியை - பிரதமரின் தன் - தானிய வேளாண் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாக அறிவித்தார். இந்தத் திட்டத்திற்கு ரூ. 24,000 கோடி ஒதுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். முந்தைய அரசுகளின் குறைபாடுள்ள கொள்கைகளால் பின்தங்கிய மாவட்டங்கள் - குறைந்த விவசாய உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வருமானம் குறைவாகவே உள்ள பகுதிகள் மீது இந்த முயற்சிக்கு கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் கூறினார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கும் இத்திட்டம்  நேரடியாகப் பயனளிக்கும் என்று அவர் கூறினார்.

 

“விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும், சாகுபடி செலவைக் குறைக்கவும் எங்கள் அரசு முழு பலத்துடன் செயல்பட்டு வருகிறது, விதை முதல் சந்தை வரை விவசாயிகளுடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்” என்று பிரதமர் வலியுறுத்திக் கூறினார். வயல்களுக்கு தண்ணீர் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நீர்ப்பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார்.

அதிக மழை, ஆலங்கட்டி மழை அல்லது உறைபனி என, வானிலை எப்போதும் விவசாயிகளுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்து வருகிறது என்பதை திரு மோடி ஒப்புக்கொண்டார். இதுபோன்ற நிச்சயமற்ற தன்மைகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க, அரசு பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் இதுவரை ரூ.1.75 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகைக்கு உரிமைகோரல் தீர்வுகளைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான விலையைப் பெறுவதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது என்பதை உறுதிப்படுத்திய பிரதமர், அரிசி, கோதுமை போன்ற முக்கிய உணவுப் பொருட்கள் உட்பட பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் சாதனை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். விவசாயிகளின் தானியங்களைப் பாதுகாக்க, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான புதிய கிடங்குகளை அரசு கட்டமைத்து வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

விவசாயப் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதில் அரசு கவனம் செலுத்துவதை சுட்டிக்காட்டிய திரு மோடி, இந்தியா முழுவதும் மூன்று கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும் இலக்கைக் கொண்ட  பிரச்சாரத்தை எடுத்துரைத்தார். 1.5 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் ஏற்கனவே இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசின் "ட்ரோன் சகோதரி " முயற்சி லட்சக்கணக்கான பெண்களின் வருமானத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

நவீன விவசாய ஆராய்ச்சியை நேரடியாக வயல்களுக்குக் கொண்டு வர அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார். ஆய்வகத்திலிருந்து நிலம் வரை என்ற வழிகாட்டுதல் கொள்கையின் கீழ், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இயக்கம் 2025 மே மற்றும் ஜூன் மாதங்களில் நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் 1.25 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் நேரடி ஈடுபாடு ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மத்திய அரசின் திட்டங்களின் பலன்கள் அனைத்து குடிமக்களையும் தடையின்றிச் சென்றடைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பொதுமக்களுடன் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொண்ட திரு. மோடி, “ஜன் தன் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ஏழைகளுக்கு 55 கோடி வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன” என்றார். இந்தத் திட்டம் சமீபத்தில் பத்து ஆண்டுகளை நிறைவு செய்ததாகவும், விதிமுறைகளின்படி, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வங்கிக் கணக்குகளுக்கு புதிய கேஒய்சி சரிபார்ப்பு தேவை என்றும் அவர் தெரிவித்தார். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, ஜூலை 1, 2025 முதல் நாடு தழுவிய பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். வங்கிகள் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தையும் சென்றடைந்து வருவதாகவும், கிட்டத்தட்ட ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் ஏற்கனவே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் கேஒய்சி புதுப்பித்தலை வெற்றிகரமாக முடித்திருக்கும் நிலையில், ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் தங்கள் கேஒய்சி செயல்முறையைத் தாமதமின்றி முடிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

கிராமப் பஞ்சாயத்துகளில் ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு வங்கி முகாம்களின் கூடுதல் நன்மையை சுட்டிக் காட்டிய திரு மோடி, இந்த முகாம்கள் பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் மற்றும் அடல் ஓய்வூதியத் திட்டம்  உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களுக்கான பதிவுகளை எளிதாக்குகின்றன என்று கூறினார். இந்தத் திட்டங்கள் மக்களுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்குகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.  மேலும் இந்த முகாம்களைப் பார்வையிட அனைவரையும் வலியுறுத்தி அவர்,  இந்தத் திட்டங்களில் இன்னும் சேராதவர்கள் தங்கள் ஜன் தன் கணக்குகளுக்கான கேஒய்சி செயல்முறையைப் பதிவு செய்து முடிக்குமாறு  ஊக்குவித்தார். இந்தப் பிரச்சாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வங்கிகள் தங்கள் பரவலான முயற்சிகளில் உதவவும், பொதுமக்களின் அதிகபட்சப் பங்களிப்பை உறுதி செய்யவும் தங்கள் அனைத்து  பிரதிநிதிகளுக்கும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

மகாதேவ் நகரில் இன்று வளர்ச்சிக்கும் பொது நலனுக்குமான ஏராளமான திட்டங்கள்  தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். சிவனின் தன்மையைக் குறிப்பிட்ட அவர், பயங்கரவாதம் மற்றும் அநீதியை எதிர்கொள்ளும்போது சிவன் கடுமையான ருத்ர வடிவத்தையும் எடுப்பதாகத் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூரின் போது, உலகம் இந்தியாவின் இந்த ருத்ர வடிவத்தைக் கண்டதாக திரு நரேந்திர மோடி கூறினார். இந்தியாவைத் தாக்கும் எவரும் பாதாள உலகத்தின் ஆழத்தில் கூட தப்பமாட்டார்கள் என்று அவர் கூறினார். ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்ற போதிலும், நாட்டில் சில தனிநபர்களால் இதனை பொறுக்க முடியவில்லை என்று பிரதமர் வருத்தம் தெரிவித்தார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்களை இந்தியா அழித்ததை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று எதிர்க்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை அவர் குறிப்பாக சுட்டிக்காட்டினார். இந்திய ட்ரோன்கள் எவ்வாறு பயங்கரவாத தலைமையகங்களை துல்லியமாக குறிவைத்து தாக்கின என்பதை திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். பல பாகிஸ்தான் விமான தளங்கள் தாக்கப்பட்டன என்றும் கூறினார். பயங்கரவாதத்தின் சூத்திரதாரிகளானவர்கள் ஒருபுறம் துக்கப்படுகிறார்கள் எனவும் மறுபுறம் இங்கு சில கட்சிகளும் பயங்கரவாதிகளின் நிலையைப் பற்றி துக்கப்படுகிறார்கள் என்றும்  எதிர்க்கட்சித் தலைவர்களை பிரதமர் விமர்சித்தார்.

 

இந்திய ஆயுதப்படைகளின் வீரத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவமதித்ததற்காக கடுமையாக விமர்சித்த திரு நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகள் சிந்தூர் நடவடிக்கையை வேடிக்கை என்று குறிப்பிட்டதாகவும், கண்ணியம் மற்றும் தியாகத்தின் சின்னமான சிந்தூரை ஒரு வேடிக்கையாக கருத முடியுமா என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார். ஆயுதப்படைகளின் துணிச்சலையும், சகோதரிகளின் குங்குமத்தை அழித்ததற்புப் பழிவாங்கும் சபதத்தை நிறைவேற்றுவதையும் இப்படி அற்பமாக்க முடியுமா என்று அவர் கேட்டார்.

வாக்கு வங்கி, திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டதற்காக எதிர்க்கட்சிகளை பிரதமர் கண்டித்தார். பஹல்காமில் பயங்கரவாதிகள் குறித்து கேள்வி எழுப்பி, எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கைகளை அவர் மேற்கோள் காட்டினார். பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன் இந்தியா காத்திருக்க வேண்டுமா என்று திரு நரேந்திர மோடி கேட்டார். உத்தரபிரதேசத்தில் தங்கள் ஆட்சிக் காலத்தில், பயங்கரவாதிகளுக்கு சலுகை வழங்கி, குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்ற அதே நபர்கள் இவர்கள்தான் என்பதை அவர் பொதுமக்களுக்கு நினைவூட்டினார். பயங்கரவாதிகளை ஒழித்ததாலும், சிந்தூர் என்ற பெயரைக் கேட்டு இப்போது இந்தக் கட்சிகள் கவலையில் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். வாரணாசியின் புனித மண்ணிலிருந்து, பிரதமர் இது ஒரு புதிய இந்தியா என்று கூறினார்.  பகவான் போலேநாதரை வணங்கும் பூமி என அவர் தெரிவித்தார். நாட்டின் எதிரிகளை எதிர்கொள்ளும்போது கால பைரவராக எப்படி மாறுவது என்பது தெரியும் என அவர் கூறினார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியாவின் உள்நாட்டு ஆயுதங்களின் சக்தியையும், இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள், உள்நாட்டு ஏவுகணைகள், ட்ரோன்களின் செயல்திறனையும் உலகம் கண்டது எனவும் இது ஒரு தற்சார்பு இந்தியாவின் வலிமையை நிரூபித்தது என்றும் பிரதமர் கூறினார். இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைகளின் தாக்கத்தை அவர் குறிப்பிட்டார். அவற்றின் இருப்பு நாட்டின் ஒவ்வொரு எதிரிக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் குறிப்பிட்டார்.

உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினராக கூறிய திரு நரேந்திர மோடி, பிரம்மோஸ் ஏவுகணைகள் விரைவில் இந்த மாநிலத்தில் தயாரிக்கப்படும் என்று  அறிவித்தார். லக்னோவில் பிரமோஸ் ஏவுகணைகளின் உற்பத்தி தொடங்க இருப்பதாகவும், பல முக்கிய பாதுகாப்பு நிறுவனங்கள் உத்தரபிரதேச பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் ஆலைகளை அமைத்து வருவதாகவும் அவர் கூறினார். வரும் ஆண்டுகளில், உத்தரபிரதேசத்தில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் இந்தியாவின் ராணுவ வலிமையின் முக்கிய பகுதியாக மாறும் என்று அவர் தெரிவித்தார். இந்த சாதனை குறித்து பொதுமக்கள் பெருமைப்படுவார்கள் என்று பிரதமர் கூறினார். பாகிஸ்தான் மற்றொரு தவறு செய்தால், உத்தரபிரதேசத்தில் தயாரிக்கப்படும் ஏவுகணைகள் பயங்கரவாதிகளை அழிக்கும் என்று அவர் கூறினார்.

 

உத்தரபிரதேசம் விரைவான தொழில்துறை வளர்ச்சியை அடைந்து வருவதாகவும், முக்கிய தேசிய, சர்வதேச நிறுவனங்களை மாநிலத்தில் முதலீடு செய்ய ஈர்ப்பதாகவும் திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டியதோடு, இந்த மாற்றத்திற்கு அரசின் வளர்ச்சி சார்ந்த கொள்கைகளே காரணம் என்றும் அவர் பாராட்டினார். குற்றவாளிகள் அச்சமின்றி செயல்பட்ட முந்தைய ஆட்சியுடன் தற்போதைய சூழ்நிலையை அவர் ஒப்பிட்டார். முன்பு முதலீட்டாளர்கள் மாநிலத்திற்குள் நுழைய தயங்கினர் என அவர் கூறினார்.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தலைமையின் கீழ், குற்றவாளிகள் இப்போது அச்சத்தில் உள்ளனர் எனவும் முதலீட்டாளர்கள் உத்தரபிரதேசத்தின் எதிர்காலத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர் என்றும் அவர் கூறினார். வாரணாசியில் வளர்ச்சிக்கான பிரமாண்டமான இயக்கம் தடையின்றி தொடர்கிறது என்பதில் திருப்தி தெரிவித்த பிரதமர், இந்த வளர்ச்சி வேகத்திற்கு உத்தரபிரதேச அரசைப் பாராட்டினார்.

புதிய ரயில் மேம்பாலம், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் முயற்சிகள், வாரணாசியில் பள்ளிகளை சீரமைத்தல், ஹோமியோபதி கல்லூரி கட்டுதல், முன்ஷி பிரேம்சந்தின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் உட்பட இன்று தொடங்கப்பட்ட பல திட்டங்களை சுட்டிக் காட்டிய திரு நரேந்திர மோடி, இந்தத் திட்டங்கள் ஒரு பிரமாண்டமான, தெய்வீகமான, வளமான வாரணாசியை உருவாக்குவதை துரிதப்படுத்தும் என்று கூறினார். சேவாபுரிக்குச் செல்வது ஒரு அதிர்ஷ்டம் என்று அவர் குறிப்பிட்டார். அதை மாதா கல்கா தேவியின் வாசல் என்று அவர் விவரித்தார். அவரது காலடிக்கு வணக்கம் செலுத்திய அவர், அரசு மாதா கல்கா தாம் நகரத்தை அழகுபடுத்தி, அதை மேலும் அற்புதமாக்கி, கோயிலுக்கான அணுகலை மேம்படுத்தியதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். சேவாபுரியின் புரட்சிகர வரலாற்றை பிரதமர் நினைவு கூர்ந்தார். சுதந்திரப் போராட்டத்தில் அதன் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் குறிப்பிட்டார். மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வை உயிர்பெற்ற சேவாபுரி இதுதான் என்றும், ஒவ்வொரு வீட்டிலும் ஆண்கள், பெண்களின் கைகளில் சுழலும் சக்கரங்கள் இருக்கும் என்றும் அவர் எடுத்துரைத்தார். சந்த்பூர்-பதோஹி சாலை போன்ற திட்டங்கள் மூலம், வாரணாசியின் நெசவாளர்கள் இப்போது பதோஹியின் நெசவாளர்களுடன் இணைக்கப்படுகிறார்கள் என்றும் திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். இது, பனாரசி பட்டு கைவினைஞர்களுக்கும் பதோஹியின் கைவினைஞர்களுக்கும் பயனளிக்கும் என்று அவர் கூறினார்.

 

“வாரணாசி அறிவுஜீவிகளின் நகரம்” என்று திரு நரேந்திர மோடி பொருளாதார முன்னேற்றத்தைப் பற்றி விவாதித்தார். தற்போது நிலவும் உலகளாவிய நிலைமைகளின் கவனத்தை அவர் ஈர்த்தார். உலகப் பொருளாதாரம் தற்போது பல நிச்சயமற்ற தன்மைகளையும் நிலையற்ற சூழலையும் எதிர்கொள்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். இதுபோன்ற சூழ்நிலையில், உலகெங்கிலும் உள்ள நாடுகள் தங்கள் சொந்த நலன்களில் கவனம் செலுத்துகின்றன என அவர் தெரிவித்தார். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் இந்தியா இருப்பதாக பிரதமர் கூறினார். எனவே, இந்தியா தனது பொருளாதார நலன்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். விவசாயிகள், சிறு தொழில்களின் நலன் மிக முக்கியமானது என்றும், இந்த திசையில் அரசு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மக்களுக்கும் சில பொறுப்புகள் உள்ளன என்பதை வலியுறுத்திய பிரதமர், உள்நாட்டு மயமாக்கலுக்காக அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு இந்தியரின் வியர்வை மற்றும் முயற்சியால் உருவாக்கப்பட்ட எதையும் அவர் சுதேசி என்று வரையறுத்துக் கூறினார். "உள்ளூர் மக்களுக்கான குரல்" என்ற மந்திரத்தை தேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். "இந்தியாவில் தயாரிப்போம்" திட்ட தயாரிப்புகளை ஊக்குவிக்க மக்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். நம் வீடுகளில் நுழையும் ஒவ்வொரு புதிய பொருளும் சுதேசியாக இருக்க வேண்டும் என்றும், இந்தப் பொறுப்பை ஒவ்வொரு இந்தியரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். சுதேசி பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதாக ஒவ்வொரு வர்த்தகரும் கடைக்காரரும் சபதம் எடுக்க வேண்டும் என்று திரு நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். இது தேசத்திற்கு உண்மையான சேவையாக இருக்கும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் சுதேசி பொருட்களைப் பயன்படுத்துமாறு மக்களை அவர் வலியுறுத்தினார். மேலும் இது மகாத்மா காந்திக்கு ஒரு உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்றும் கூறினார்.

கூட்டு முயற்சியால் மட்டுமே வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற கனவு நிறைவேறும் என்பதை வலியுறுத்தி பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார். இன்று தொடங்கப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு அவர் மீண்டும் ஒருமுறை மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், திட்டம் தொடர்பான சம்பந்தப்பட்ட மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் காணொலிக் காட்சி மூலம் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பின்னணி

வாரணாசியில் முழுமையான நகர்ப்புற மாற்றம், கலாச்சார புத்துணர்ச்சி, மேம்பட்ட இணைப்பு மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை அடைவதை நோக்கமாகக் கொண்ட உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், சுற்றுலா, நகர்ப்புற மேம்பாடு மற்றும் கலாச்சார பாரம்பரியம் உள்ளிட்ட பல துறைகளை இந்த திட்டங்கள் பூர்த்தி செய்கின்றன.

வாரணாசியில் சாலை இணைப்பை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரதமர் பல முக்கிய உள்கட்டமைப்புத்  திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். மோகன் சராய் - அடல்புரா சாலையில் நெரிசலைக் குறைக்க, வாரணாசி - படோஹி சாலை மற்றும் சித்தௌனி - ஷூல் தங்கேஷ்வர் சாலையின்  அகலப்படுத்தல் மற்றும் வலுப்படுத்தல் பணிகள் மற்றும் ஹர்தத்பூரில் ரயில்வே மேம்பாலம் ஆகியவற்றை அவர் திறந்து வைத்தார். தல்மண்டி, லஹர்தரா-கோட்வா, கங்காபூர், பாபத்பூர் உள்ளிட்ட பல கிராமப்புற மற்றும் நகர்ப்புற வழித்தடங்களில் விரிவான சாலை விரிவாக்கம் மற்றும் வலுப்படுத்துதலுக்கும், லெவல் கிராசிங் 22சி மற்றும் காலிஸ்பூர் யார்டில் உள்ள ரயில்வே மேம்பாலங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

 

இந்தப் பகுதியில் மின்சார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், ஸ்மார்ட் விநியோகத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மற்றும் ₹880 கோடிக்கு மேல் மதிப்புள்ள மின்சார உள்கட்டமைப்பை நிலத்தடியில் அமைக்கும் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

சுற்றுலாவுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், 8 ஆற்றங்கரை கச்சா படித்துறைகளின் மறுசீரமைப்பு, காளிகா தாமில் மேம்பாட்டுப் பணிகள், ஷிவ்பூரில் உள்ள ரங்கில்தாஸ் குடியாவில் உள்ள குளம் மற்றும் படித்துறையை அழகுபடுத்துதல் மற்றும் துர்காகுண்டின் மறுசீரமைப்பு மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார். கர்தமேஷ்வர் மகாதேவ் கோயிலில் மறுசீரமைப்பு பணிகள், பல சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிறப்பிடமான கார்க்கியாவோனின் மேம்பாடு, சாரநாத், ரிஷி மந்த்வி மற்றும் ராம்நகர் மண்டலங்களில் நகர வசதி மையங்கள், லமாஹியில் உள்ள முன்ஷி பிரேம்சந்தின் மூதாதையர் வீட்டின் மறுசீரமைப்பு மற்றும் அருங்காட்சியகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். காஞ்சன்பூரில் ஒரு நகர்ப்புற மியாவாகி வனத்தை மேம்படுத்துவதற்கும், ஷாஹீத் உதயன் மற்றும் 21 பிற பூங்காக்களை மறுசீரமைப்பு மற்றும் அழகுபடுத்துவதற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

மேலும், கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகளைப் பாதுகாக்க, ராம்குண்ட், மந்தாகினி, ஷங்குல்தாரா உள்ளிட்ட பல்வேறு குளங்களில் நீர் சுத்திகரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். அத்துடன் நான்கு மிதக்கும் பூஜை மேடைகள் நிறுவப்படுகிறது. கிராமப்புறங்களில் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 47 கிராமப்புற குடிநீர் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

 

அனைவருக்கும் தரமான கல்வி என்ற தனது தொலைநோக்குப் பார்வையை மேலும் மேம்படுத்தும் வகையில், நகராட்சி எல்லைக்குள் 53 பள்ளி கட்டிடங்களின் மேம்பாட்டுப் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார். புதிய மாவட்ட நூலகம் கட்டுதல் மற்றும் லால்பூர், ஜாகினியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளின் புனரமைப்பு உள்ளிட்ட பல கல்வித் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

சுகாதார உள்கட்டமைப்பிற்கு ஒரு பெரிய ஊக்கமாக, மகாமனா பண்டித மதன் மோகன் மாளவியா புற்றுநோய் மையம் மற்றும் ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மற்றும் சிடி ஸ்கேன் வசதிகள் உள்ளிட்ட மேம்பட்ட மருத்துவ உபகரண அமைப்புகளை பிரதமர் திறந்து வைத்தார். ஹோமியோபதி கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். மேலும், அவர் ஒரு விலங்கு கருத்தடை மையத்தையும் அதனுடன் தொடர்புடைய நாய் பராமரிப்பு மையத்தையும் திறந்து வைத்தார்.

வாரணாசியில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்புக்கான தனது தொலைநோக்கை மேலும் விரிவுபடுத்தும் வகையில், பிரதமர், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஹாக்கி புல்தரையைத் திறந்து வைத்தார். சட்ட அமலாக்கப் பணியாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில், ராம்நகரில் உள்ள பிரதேச ஆயுதப்படை காவலர் (PAC) வளாகத்தில் 300 பேர் அமரக்கூடிய பல்நோக்கு மண்டபத்தை பிரதமர் திறந்து வைத்ததுடன் விரைவு நடவடிக்கை குழு (QRT) முகாம்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

விவசாயிகள் நலனுக்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக,பிரதமரின் கிசான் திட்டத்தின் 20வது தவணைத் தொகையை விடுவித்தார். நாடு முழுவதும் உள்ள 9.7 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ₹20,500 கோடிக்கும் அதிகமான தொகை நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டது. இந்த விடுவிப்பின் மூலம், இந்தத் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட மொத்த தொகை ₹ 3.90 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

காசி சன்சத் பிரதியோகிதாவின் கீழ் ஓவியப் போட்டி, புகைப்படப் போட்டி, கேல்-கூட் பிரதியோகிதா, ஞான பிரதியோகிதா மற்றும் வேலைவாய்ப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகளுக்கான பதிவு தளத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். பல்வேறு மாற்றுத் திறனாளிகள், முதியோர் பயனாளிகள் ஆகியோருக்கு 7,400க்கும் மேற்பட்ட உதவி உபகரணங்களையும் பிரதமர் வழங்கினார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Budget 2026 aims to build job-ready, formal talent base, say experts

Media Coverage

Budget 2026 aims to build job-ready, formal talent base, say experts
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 3 பிப்ரவரி 2026
February 03, 2026

Modi Hai Toh Mumkin Hai: India Gains Competitive Boost in US Market, Slamming Doubters