"இந்தியா முழுவதிலும், காசி இந்தியாவின் கலாச்சார தலைநகரமாக உள்ளது, அதே நேரம் தமிழ்நாடு மற்றும் தமிழ் கலாச்சாரம் இந்தியாவின் தொன்மை மற்றும் புகழின் மையமாக உள்ளது"
"காசியும் தமிழகமும் காலத்தால் அழியாத நமது கலாச்சாரம் மற்றும் நாகரிகங்களின் மையங்கள்"
"அமிர்த காலத்தில் நமது தீர்மானங்களை நாட்டின் முழுமையான ஒற்றுமையால் நிறைவேற்றுவோம்"
"தமிழின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வளப்படுத்துவது 130 கோடி இந்தியர்களின் பொறுப்பு"

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ் சங்கமம்’ என்னும் ஒரு மாத கால நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் மிகப் பழமையான, கல்வி முக்கியத்துவம் வாய்ந்த தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள பழங்காலத் தொடர்பைக் கொண்டாடுவதும், அந்தப் பெருமையை மீட்டெடுத்து  உறுதிப்படுத்துவதும், இந்த திட்டத்தின் நோக்கமாகும். தமிழகத்தில் இருந்து 2500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் காசிக்கு வருகை தரவுள்ளனர். இந்த தொடக்க நிகழ்ச்சியின் போது, 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ‘திருக்குறள்’ புத்தகத்தையும் பிரதமர் வெளியிட்டார். ஆரத்தியைத் தொடர்ந்து நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், உலகின் மிகப் பழமையான உயிர்ப்புடன் உள்ள நகரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.  நாட்டில் சங்கமங்கள் நடைபெறுவதின் முக்கியத்துவம் குறித்து பேசிய பிரதமர், நதிகள், சித்தாந்தம், அறிவியல் அல்லது அறிவின் சங்கமம் என எதுவாக இருந்தாலும், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் ஒவ்வொரு சங்கமமும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு போற்றப்படுகிறது என்று கூறினார். உண்மையில், காசி-தமிழ் சங்கமம் இந்தியாவின் வலிமை மற்றும் குணாதிசயங்களின் கொண்டாட்டமாகும், இதனால் இது தனித்துவம் பெறுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கிய பிரதமர், ஒருபுறம் காசி இந்தியாவின் கலாச்சார தலைநகரம் என்றும், அதேசமயம் தமிழ்நாடு மற்றும் தமிழ் கலாச்சாரம் இந்தியாவின் தொன்மை மற்றும் பெருமையின் மையம் என்றும் கூறினார். கங்கை மற்றும் யமுனை நதிகள் சங்கமிக்கும் இடத்தை ஒப்பிட்ட பிரதமர், காசி-தமிழ் சங்கமம் அதே அளவு புனிதமானது, அது முடிவில்லாத வாய்ப்புகளையும் வலிமையையும் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது என்றார். இந்த முக்கியமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கல்வி அமைச்சகம், உத்தரபிரதேச அரசு ஆகியவற்றை பிரதமர் பாராட்டினார். இதற்கு ஆதரவை வழங்கியதற்காக சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் போன்ற மத்திய பல்கலைக்கழகங்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். குறிப்பாக காசி மற்றும் தமிழ்நாட்டின் மாணவர்கள் மற்றும் அறிஞர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

காசியும் தமிழகமும் காலத்தால் அழியாத நமது கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மையங்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டும் மிகவும் பழமையான, இன்றும் உயிர்ப்புடன் திகழும் மொழிகளாகும்  என்று அவர் கூறினார். காசியில் பாபா விஸ்வநாதர் இருக்கிறார், தமிழகத்தில் ராமேஸ்வரத்தின் அருள் உள்ளது. காசி, தமிழகம் இரண்டுமே சிவனின் அருளைப் பெற்றுள்ளன.  இசையோ, இலக்கியமோ, கலையோ எதுவாக இருந்தாலும், காசியும், தமிழகமும் எப்போதும் அவற்றின் ஆதாரமாக விளங்குகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை விளக்கிய பிரதமர், இந்த இரண்டு இடங்களும் இந்தியாவின் தலைசிறந்த ஆச்சார்யர்களின் பிறப்பிடமாகவும் பணிபுரியும் இடமாகவும் திகழ்ந்துள்ளன என்றார். காசியிலும் தமிழகத்திலும் ஒரே மாதிரி சக்தியை  அனுபவிக்க முடியும் என்று அவர் கூறினார். இன்றும் தமிழர்களின் பாரம்பரிய திருமண ஊர்வலத்தின் போது காசி யாத்திரை இடம் பெறுவதை சுட்டிக்காட்டிய அவர்,  தமிழ்நாட்டின் காசி மீதான தீராத காதல், நமது முன்னோர்களின் வாழ்க்கை முறையான ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்னும் உணர்வைக் குறிக்கிறது என்று கூறினார்.

காசியின் வளர்ச்சிக்கு தமிழகத்தின் பங்களிப்பை சுட்டிக்காட்டிய பிரதமர், தமிழ்நாட்டில் பிறந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்ததை நினைவு கூர்ந்தார். தமிழ்நாட்டில் வேரூன்றியிருந்தாலும் காசியில் வாழ்ந்த வேத பண்டிதர் ராஜேஷ்வர் சாஸ்திரியையும், காசியில் உள்ள அனுமான் படித்துறையில் வாழ்ந்த பட்டாபிராம சாஸ்திரிகளையும் அவர் நினைவு கூர்ந்தார்.

அரிச்சந்திரா படித்துறை கரையில் உள்ள தமிழர் கோவிலான காசி காசி காமகோடீஸ்வரர் திருக்கோயில் மற்றும் கேதார் படித்துறை கரையில் உள்ள இருநூறு ஆண்டுகள் பழமையான குமாரசாமி மடம் மற்றும் மார்கண்டேய ஆசிரமம் ஆகியவற்றையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். கேதார் படித்துறை  மற்றும் அனுமான் படித்துறை கரையோரங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் வசித்து வருவதாகவும், பல தலைமுறைகளாக காசிக்கு மகத்தான பங்களிப்பைச் செய்துவருவதாகவும் அவர் கூறினார்.  பல ஆண்டுகளாக காசியில் வாழ்ந்த மாபெரும் கவிஞரும் புரட்சியாளருமான தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு  சுப்பிரமணிய பாரதியையும் பிரதமர் குறிப்பிட்டார். சுப்ரமணிய பாரதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இருக்கையை நிறுவி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்  பெருமை சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழா  காலத்தில்  காசி தமிழ் சங்கமம் நடைபெறுவதாக கூறிய  பிரதமர், அமிர்த காலத்தில் நமது  தீர்மானங்கள் நாட்டின் முழு ஒற்றுமையால் நிறைவேற்றப்படும் என்றார். பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையான கலாச்சார ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நாடு இந்தியா என்று கூறிய பிரதமர், காலையில் எழுந்தவுடன் 12 ஜோதிர்லிங்கங்களை நினைவு கூரும் பாரம்பரியத்தை சுட்டிக்காட்டினார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் இந்த பாரம்பரியத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் இல்லாதது குறித்து திரு மோடி வருத்தம் தெரிவித்தார். காசிதமிழ்ச் சங்கமம் இன்று இந்தத் தீர்மானத்திற்கான களமாக மாறும் அதே வேளையில் நமது கடமைகளை நாம் உணர்ந்துகொள்ளவும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் ஆற்றலாகவும் திகழும் என்றும் அவர் கூறினார்.

சுவாமி குமரகுருபரர், மொழி மற்றும் அறிவு தடையை உடைத்து,  காசியைத் தம் கர்ம பூமியாக ஆக்கிக் கொண்டதுடன், காசியில் கேதாரேஷ்வர் கோயிலைக் கட்டினார் என்று பிரதமர் கூறினார். பின்னர், அவரது சீடர்கள் தஞ்சாவூரில் காவேரி நதிக்கரையில் காசி விஸ்வநாதர் கோயிலைக் கட்டினார்கள். காசிக்கும், தமிழ் அறிசர்களுக்கும் இடையிலான தொடர்பைச் சுட்டிக்காட்டிய பிரதமர், தமிழ் வாழ்த்துப் பாடலை எழுதிய  மனோன்மணியம் சுந்தரனார் போன்றவர்களுக்கு காசியுடன் உள்ள தொடர்பை குறிப்பிட்டார். வடக்கையும் தெற்கையும் இணைப்பதில் ராஜாஜி எழுதிய ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் பங்கையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். “தென்னிந்தியாவில் இருந்து ராமானுஜ ஆச்சாரியார், சங்கராச்சாரியார், ராஜாஜி முதல் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வரையிலான அறிஞர்களைப் புரிந்து கொள்ளாமல், இந்தியத் தத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பது எனது அனுபவம்" என்று திரு மோடி கூறினார்.

‘ஐந்து உறுதிப்பாடுகள்’ பற்றி குறிப்பிட்ட பிரதமர், செழுமையான பாரம்பரியம் கொண்ட நாடு அதன் மரபு குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும் என்றார். உலகில் இப்போதும் வாழும் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாக,  தமிழ் இருந்தபோதிலும், அதை முழுமையாகக் கௌரவிப்பதில் நாம் தவறி விட்டோம் என்று அவர் கூறினார்.

“தமிழின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வளப்படுத்துவது 130 கோடி இந்தியர்களின் பொறுப்பு. நாம் தமிழைப் புறக்கணித்தால் நாட்டுக்கு பெரும் கேடு விளைவித்தவர்களாவோம். தமிழைக் கட்டுப்பாடுகளுக்குள் அடைத்து வைப்பது, அதற்குப் பெரும் தீமை விளைவிப்பதாகும். மொழி வேறுபாடுகளை நீக்கி, உணர்வுபூர்வமான ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்று பிரதமர் கூறினார்.

சங்கமம் என்பது வெறும் வார்த்தை அல்ல, அது ஒரு அனுபவம் என்று கூறிய பிரதமர், காசி மக்கள் மறக்கமுடியாத விருந்தோம்பலை வழங்குவதில் எந்தக் குறையும் வைக்காது என்றார். தமிழகம் மற்றும் பிற தென்மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்றும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து இளைஞர்கள் வருகை தந்து அங்குள்ள கலாச்சாரத்தை உள்வாங்க வேண்டும் என்றும் பிரதமர் விருப்பம் தெரிவித்தார். இந்த சங்கமத்தின் பயன்களை  ஆராய்ச்சி மூலம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும், இந்த விதை ஒரு மாபெரும் மரமாக மாற வேண்டும் என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், மத்திய அமைச்சர்கள் டாக்டர் எல் முருகன், திரு தர்மேந்திர பிரதான், நாடாளுமன்ற உறுப்பினர் திரு இளையராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னணி

‘‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற சிந்தனையை மேம்படுத்துவது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படும் அரசு முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாகும். இந்த நோக்கத்தை பிரதிபலிக்கும் மற்றொரு முயற்சியாக, காசியில் (வாரணாசி) ஒரு மாத கால நிகழ்ச்சியான ‘காசி தமிழ் சங்கமம்’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்  பழமையான, கல்வி முக்கியத்துவம் வாய்ந்த தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள பழங்காலத் தொடர்பைக் கொண்டாடுவதும், அந்தப் பெருமையை மீட்டெடுத்து  உறுதிப்படுத்துவதும், இந்த திட்டத்தின் நோக்கமாகும். இரு பிராந்தியங்களில் இருந்தும் அறிஞர்கள், மாணவர்கள், தத்துவ ஞானிகள், வணிகர்கள், கைவினைஞர்கள், கலைஞர்கள் போன்ற அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து, அவர்களின் அறிவு, கலாச்சாரம், அனுபவங்கள் மற்றும்  சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பளிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.  தமிழகத்தில் இருந்து 2500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் காசிக்கு வருகை தரவுள்ளனர். அவர்கள் ஒரே மாதிரியான வர்த்தகம், தொழில் மற்றும் ஆர்வமுள்ள உள்ளூர் மக்களுடன் தொடர்புகொள்வதற்காக கருத்தரங்குகள், தள வருகைகள் போன்றவற்றில் பங்கேற்பார்கள். கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஒரு மாவட்டம்-ஒரு பொருள், புத்தகங்கள், ஆவணப்படங்கள், உணவு வகைகள், கலை வடிவங்கள், வரலாறு, சுற்றுலாத் தலங்கள் போன்ற இரு பகுதிகளின் ஒரு மாதக் கண்காட்சியும் காசியில் நடைபெறும்.

தேசிய கல்விக் கொள்கை 2020, இந்திய அறிவு அமைப்புகளின் வளத்தை நவீன அறிவு அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கும் முன்முயற்சியை வலியுறுத்துகிறது. சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் இத்திட்டத்தை செயல்படுத்தும் முகமைகளாகும்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's airport passenger handling capacity crosses 580 million: Govt

Media Coverage

India's airport passenger handling capacity crosses 580 million: Govt
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam applauding the effort and dedication of India's Youth
August 04, 2026

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam applauding the effort and dedication of India's Youth:

"न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते ।

तत्स्वयं योगसंसिद्ध: कालेनात्मनि विन्दति ॥"

Shri Modi said that through continuous effort and dedication, our talents are honed and refined, and our youth is imbibing these very qualities and bringing glory to India.

The Prime Minister posted on X:

निरंतर प्रयास और साधना से हमारी प्रतिभा और निखरती है। आज हमारे युवा इन्हीं गुणों को आत्मसात कर दुनियाभर में देश का नाम रोशन कर रहे हैं।

न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते ।

तत्स्वयं योगसंसिद्ध: कालेनात्मनि विन्दति ॥