இன்று, 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன, இதுபோன்ற வேலைவாய்ப்பு திருவிழாக்கள் மூலம், லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏற்கனவே அரசு துறைகளில் நிரந்தர வேலைகளைப் பெற்றுள்ளனர், இப்போது இந்த இளைஞர்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றனர்: பிரதமர்
இந்தியா இரண்டு எல்லையற்ற சக்திகளைக் கொண்டுள்ளது என்பதை உலகம் இன்று ஒப்புக்கொள்கிறது, ஒன்று மக்கள்தொகை, மற்றொன்று ஜனநாயகம், வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மிகப்பெரிய இளைஞர் மக்கள் தொகை மற்றும் மிகப்பெரிய ஜனநாயகம்: பிரதமர்
இன்று நாட்டில் கட்டமைக்கப்படும் புத்தொழில் நிறுவனங்கள், புதுமை மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் சூழல் அமைப்பு நாட்டின் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துகிறது: பிரதமர்
சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட புதிய திட்டமான வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் தனியார் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது: பிரதமர்
இன்று, இந்தியாவின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று நமது உற்பத்தித் துறை, உற்பத்தியில் அதிக எண்ணிக்கையிலான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன: பிரதமர்
உற்பத்தித் துறையை ஊக்குவிக்க இந்த ஆண்டு பட்ஜெட்டில் மிஷன் மானுவ்ஃபெக்சரிங் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது: பிரதமர்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று  வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார். மத்திய அரசின் பல்வேறு  துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கு இன்று காணொலி மூலம் 51,000க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்த இளைஞர்களுக்கு புதிய பொறுப்புகள் இன்று தொடங்குகின்றன என்று கூறினார். பல்வேறு துறைகளில் தங்கள் சேவையைத் தொடங்கிய இளைஞர்களை அவர் வாழ்த்தினார். இளைஞர்களுக்கு வெவ்வேறு பொறுப்புகள்  இருந்தபோதிலும், அவர்களின் பொதுவான குறிக்கோள் "முதலில் குடிமகன்" என்ற கொள்கையால் வழிநடத்தப்படும் தேசிய சேவை என்பதை அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவின் மக்கள்தொகை மற்றும் ஜனநாயக அடித்தளங்களின் ஒப்பிடமுடியாத பலங்களை பிரதமர் விளக்கினார். உலகின் மிகப்பெரிய இளைஞர் மக்கள்தொகை மற்றும் மிகப்பெரிய ஜனநாயகத்தைக் கொண்ட இந்தியா, உள்நாட்டிலும் உலக அரங்கிலும் எதிர்காலத்தை வடிவமைக்கும் தனித்துவமான ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். இந்த மகத்தான இளைஞர் சக்தி இந்தியாவின் மிகப்பெரிய மூலதனம் என்றும், இந்த மூலதனத்தை நீண்டகால செழிப்புக்கான ஊக்கியாக மாற்றுவதற்கான முயற்சிகளில் அரசு உறுதியாக உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

“இரண்டு நாட்களுக்கு முன்பு, ஐந்து நாடுகளுக்குச் சென்று திரும்பினேன். நான் பார்வையிட்ட ஒவ்வொரு நாட்டிலும், இந்திய இளைஞர்களின் வலிமை வலுவாக எதிரொலித்தது. இந்தச் சுற்றுப்பயணத்தின் போது கையெழுத்தான ஒப்பந்தங்கள் நாட்டிலும் வெளிநாட்டிலும் இந்திய இளைஞர்களுக்கு பயனளிக்கும்” என்று திரு மோடி கூறினார். பாதுகாப்பு, மருந்துகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் அரிய தாதுக்கள் போன்ற முக்கியமான துறைகளில் இந்த சுற்றுப்பயணத்தின் போது கையெழுத்தான பல்வேறு ஒப்பந்தங்கள் நீண்டகால நன்மைகளை உருவாக்கும் என்று அவர் மேலும் கூறினார். “இந்த முயற்சிகள் இந்தியாவின் உலகளாவிய பொருளாதார நிலையை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உற்பத்தி மற்றும் சேவைகள் இரண்டிலும் இளம் இந்தியர்களுக்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளையும் உருவாக்கும்” என்று திரு மோடி  கூறினார்.

வேலைவாய்ப்புகளின் வளர்ந்து வரும் நிலை பற்றி உரையாற்றிய பிரதமர், 21 ஆம் நூற்றாண்டில் வேலைகளின் தன்மை விரைவான மாற்றத்திற்கு உள்ளாகி வருவதாக எடுத்துரைத்தார். புதுமை, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இளைஞர்கள் பெரிய கனவுகளைக் காண அதிகாரம் அளிக்கும் இந்தியாவில் வளர்ந்து வரும் சூழல் அமைப்பைப் பற்றி அவர் பேசினார். புதிய தலைமுறையினர் மீது தனக்குள்ள தனிப்பட்ட பெருமையையும் நம்பிக்கையையும் பகிர்ந்து கொண்ட அவர், இளைஞர்கள் லட்சியம், தொலைநோக்கு பார்வை மற்றும் புதிய ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற வலுவான விருப்பத்துடன் முன்னேறுவதைக் கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 

தனியார் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக திரு மோடி கூறினார். சமீபத்தில், வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு அங்கீகரித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தனியார் துறையில் முதல் வேலை பெறும் இளைஞர்களுக்கு அரசு ரூ 15,000 வழங்கும். "வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களின் முதல் வேலையின் முதல் சம்பளத்திற்கு அரசு பங்களிக்கும். இதற்காக, அரசு சுமார் ரூ 1 லட்சம் கோடி பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டம் சுமார் 3.5 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று திரு  மோடி மேலும் கூறினார்.

 

தேசிய வளர்ச்சியை ஊக்குவித்தல், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்தை விரைவுபடுத்துவதில் இந்தியாவின் உற்பத்தித் துறையின் உருமாற்ற சக்தியை பிரதமர் விளக்கினார். சமீபத்திய ஆண்டுகளில் மேக் இன் இந்தியா முயற்சி கணிசமாக வலுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். (உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்குவிப்புத்  திட்டத்தின் மூலம் மட்டும், நாடு முழுவதும் 1.1 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மொபைல் போன் மற்றும் மின்னணு துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது. “இன்று, இந்தியாவில் மின்னணு உற்பத்தி கிட்டத்தட்ட ரூ 11 லட்சம் கோடி மதிப்புடையது. இது கடந்த 11 ஆண்டுகளில் ஐந்து மடங்குக்கும் அதிகமாகும்.  முன்னதாக, நாட்டில் மொபைல் போன்களை உற்பத்தி செய்யும் அலகுகள் 2 முதல் 4 வரை மட்டுமே இருந்தன. இன்று, இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தி தொடர்பான கிட்டத்தட்ட 300 அலகுகள்  உள்ளன, லட்சக்கணக்கான இளைஞர்கள் இங்கு வேலை செய்கிறார்கள்”, என்று திரு மோடி தெரிவித்தார்.

 

பாதுகாப்பு உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியாவின் எழுச்சி குறித்தும் பிரதமர் பேசினார், இதன் உற்பத்தி ரூ 1.25 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய ரயில் என்ஜின் உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்திருப்பதையும், ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள் மற்றும் மெட்ரோ பெட்டிகளில் நாட்டின் வலுவான ஏற்றுமதி செயல்திறனையும் அவர் பாராட்டினார். ஆட்டோமொபைல் துறை, ஐந்து ஆண்டுகளில் 40 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது, இதன் விளைவாக புதிய தொழிற்சாலைகள், புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் சாதனை அளவில் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது என்றும் அவர்  கூறினார்.

 

கடந்த பத்தாண்டுகளில் 90 கோடிக்கும் அதிகமான இந்திய மக்கள் அரசின் நலத்திட்டங்களின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்தும் சமீபத்திய சர்வதேச தொழிலாளர் அமைப்பின்  அறிக்கையை மேற்கோள் காட்டி, இந்தியாவின் நலத்திட்டங்களின் தொலைநோக்கு தாக்கத்தை பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்தத் திட்டங்கள், நலத்திட்ட சலுகைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால் பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்குவதில், குறிப்பாக கிராமப்புற இந்தியாவில், முக்கிய பங்கு வகித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

 

பிரதமர் வீட்டு வசதி திட்டம் போன்ற முதன்மைத் திட்டங்களைப் பற்றி பிரதமர் விரிவாகக் கூறினார், இதன் கீழ் 4 கோடி நிரந்தர வீடுகள் கட்டப்பட்டுள்ளன, மேலும் 3 கோடி வீடுகள் கட்டுமானத்தில் உள்ளன. தூய்மை இந்தியா  திட்டத்தின் கீழ் 12 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டதன் மூலம்  கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின்  கீழ் 10 கோடிக்கும் மேற்பட்ட எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான விநியோக மையங்களும் லட்சக்கணக்கான புதிய வேலைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

 

“மேற்கூரை சூரிய சக்தி நிறுவல்களுக்கு ஒரு வீட்டிற்கு ரூ 75,000 க்கும் அதிகமான சலுகைகளை வழங்கும் பிரதமர் சூரியக்கூரை மின்திட்டம், வீட்டு மின்சாரக் கட்டணங்களைக் குறைத்து, தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள் மற்றும்   சூரியசக்தி தகடுகள்  உற்பத்தியாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. "நமோ ட்ரோன் சகோதரி, கிராமப்புற பெண்களுக்கு ட்ரோன் விமானிகளாக பயிற்சி அளித்து அதிகாரம் அளித்துள்ளது" என்று திரு மோடி  கூறினார்.

 

3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும் நோக்கத்துடன் நாடு முன்னேறி வருவதாகவும், 1.5 கோடி பெண்கள் ஏற்கனவே இந்த மைல்கல்லை எட்டியுள்ளதாகவும் திரு  மோடி குறிப்பிட்டார். வங்கி சகி, பீமா சகி, கிருஷி சகி மற்றும் பசு சகி போன்ற பல்வேறு திட்டங்கள் பெண்கள் நிலையான வேலைவாய்ப்பைக் கண்டறிய உதவியுள்ளன. பிரதமர் ஸ்வநிதி திட்டம் சாலையோர வியாபாரிகள் மற்றும் வணிகர்களுக்கு முறையான உதவியை வழங்கியுள்ளது, கோடிக்கணக்கானவர்களை பிரதான பொருளாதார நடவடிக்கைகளில் கொண்டு வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் பாரம்பரிய கைவினைஞர்கள்,  சேவை வழங்குநர்களை பயிற்சி, கருவிகள் மற்றும் கடன் மூலம் புத்துயிர் பெறச் செய்கிறது.

 

இதுபோன்ற  திட்டங்களின் தாக்கத்தால்தான் கடந்த பத்து ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்று பிரதமர் குறிப்பிட்டார்.  "வேலைவாய்ப்புகள் இல்லாமல், அத்தகைய மாற்றம் சாத்தியமில்லை. அதனால்தான் இன்று, உலக வங்கி போன்ற முக்கிய உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவைப் பாராட்டுகின்றன. இந்தியா தற்போது உலகின் மிக உயர்ந்த சமத்துவ நிலைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது”, என்று திரு மோடி கூறினார்.

 

தற்போதைய கட்டத்தை வளர்ச்சிக்கான மகா யாகம் என்றும், வறுமை ஒழிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தேசிய நோக்கம் என்றும் பிரதமர் விவரித்தார், மேலும் நாட்டின் இளைஞர்கள் மற்றும் புதிய அரசுப் பணி நியமனங்கள் பெறுபவர்கள் புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்புடன் இந்தப் பணியை முன்னோக்கி எடுத்துச் செல்லுமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

 

ஒவ்வொரு குடிமகனையும் தெய்வீகமாக நடத்தும் "நாக்ரிக் தேவோ பவ" என்ற வழிகாட்டும் நெறிமுறைகளைப் பயன்படுத்தி, பொது சேவையில் பிரகாசமான மற்றும் அர்த்தமுள்ள எதிர்காலத்திற்காக புதிய நியமனங்கள் பெறுபவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து, பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

 

பின்னணி

 

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, நாடு முழுவதும் 47 இடங்களில் 16-வது வேலைவாய்ப்பு விழா நடைபெறுகிறது.  இளைஞர்களுக்கு  அதிகாரமளித்து, தேசக் கட்டுமானத்தில் பங்கேற்பதற்கும் அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்குவதில் வேலைவாய்ப்பு மேளா குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு மேளாக்கள் மூலம் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பணி நியமன  ஆணைகள்  வழங்கப்பட்டுள்ளன.

புதிதாக பணி நியமன ஆணைகளைப் பெற்ற இளைஞர்கள், நாடு முழுவதும், ரயில்வே அமைச்சகம், உள்துறை அமைச்சகம், அஞ்சல் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதி சேவைகள் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உள்ளிட்ட பிற துறைகள் மற்றும் அமைச்சகங்களுடன் இணைவார்கள்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

 

 

 

 

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Exports may hit $1 Tn in FY27 on new trade deals, tariff cuts

Media Coverage

Exports may hit $1 Tn in FY27 on new trade deals, tariff cuts
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 10 பிப்ரவரி 2026
February 10, 2026

Stable Banks, Soaring Growth, Sectoral Wins: Celebrating India's Unstoppable Rise in 2026 Under PM Modi