"17 வது மக்களவை பல முக்கிய முடிவுகளுக்கு சாட்சியாக உள்ளது. இந்த ஐந்து ஆண்டுகள், 'சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம்' பற்றியதாக இருந்தது"
"செங்கோல் இந்தியாவின் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதற்கும், சுதந்திரத்தின் முதல் தருணத்தை நினைவுகூர்வதற்குமான சின்னமாகும்"
"இந்த காலகட்டத்தில் ஜி20 தலைமையை இந்தியா ஏற்றது. ஒவ்வொரு மாநிலமும் நாட்டின் வலிமையையும் அதன் அடையாளத்தையும் உலகின் முன் முன்வைத்தன"
"பல தலைமுறைகளாக காத்திருந்த பணிகள் 17-வது மக்களவையில் நிறைவேற்றப்பட்டன என்பதை நாம் திருப்தியுடன் கூற முடியும்"
"இன்று சமூக நீதிக்கான எங்கள் அர்ப்பணிப்பு ஜம்மு-காஷ்மீர் மக்களை சென்றடைகிறது"
"இந்த நாடு 75 ஆண்டுகளாக தண்டனைச் சட்டத்தின் கீழ் வாழ்ந்திருந்தது. ஆனால் இப்போது நாங்கள் நியாயச் சட்டத்தின் கீழ் வாழ்கிறோம் என்று நாங்கள் பெருமையுடன் கூறலாம்”
"நமது ஜனநாயகத்தின் மகிமைக்கு ஏற்ப தேர்தல் இருக்கும் என்று நான் நம்புகிறேன்"
"ஸ்ரீ ராமர் கோயில் பற்றிய இன்றைய உரைகள் 'சிறந்த உணர்வு', 'லட்சியத் த

17-வது மக்களவையின் நிறைவுக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

அவையில் உரையாற்றிய பிரதமர், இன்றைய நிகழ்ச்சி இந்தியாவின் ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார். 17-வது மக்களவையின் அனைத்து உறுப்பினர்களும் முக்கிய முடிவுகளை எடுப்பதிலும், நாட்டிற்கு வழிகாட்டுவதிலும் மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார். சித்தாந்தப் பயணத்தையும், அதன் மேம்பாட்டுக்கான நேரத்தையும் தேசத்திற்கு அர்ப்பணிப்பதற்கான சிறப்பான தருணத்தை இது குறிக்கிறது என்று அவர் கூறினார். "சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்பதே கடந்த 5 ஆண்டுகளாக தாரக மந்திரமாக இருந்து வருகிறது என்று கூறிய அவர், இதை இன்று ஒட்டுமொத்த தேசமும் அனுபவிக்கிறது என்று குறிப்பிட்டார். 17-வது மக்களவையின் முயற்சிகளுக்காக இந்திய மக்கள் தொடர்ந்து ஆசீர்வதிப்பார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். அவையின் அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்பை சுட்டிக் காட்டிய திரு நரேந்திர மோடி, அவர்களுக்கு குறிப்பாக அவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்தார். சபையை எப்போதும் புன்னகையுடனும், சமநிலையுடனும், பாரபட்சமின்றியும் கையாண்டதற்காக அவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அவரைப் பாராட்டினார்.

கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் மனிதகுலத்திற்கு ஏற்பட்ட இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரிடர் குறித்து பிரதமர் குறிப்பிட்டார். பெருந்தொற்று காலத்தில் உறுப்பினர்களின் சம்பளத்தை 30 சதவீதம் குறைத்துக் கொண்டதற்காக அவர் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், உறுப்பினர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சிற்றுண்டிச்சாலை வசதிகளை நீக்கியதற்காக அவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்ற கட்டடம் உருவாக்கப்பட்டது மற்றும் அதன் கட்டுமானத்திற்கு வழிவகுத்தது மற்றும் தற்போதைய அமர்வு இங்கு நடைபெறுவது குறித்து அனைத்து உறுப்பினர்களையும் ஒரே நிலைக்கு கொண்டு வந்ததற்காக அவைத் தலைவரைப் பிரதமர் பாராட்டினார்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் செங்கோல் நிறுவப்பட்டிருப்பது குறித்து பேசிய பிரதமர், இது இந்தியாவின் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதையும், சுதந்திரத்தின் முதல் தருணத்தை நினைவுகூருவதையும் குறிக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார். வருடாந்திர விழாவின் ஒரு பகுதியாக செங்கோலை மாற்றுவதற்கான  முடிவையும் அவர் பாராட்டினார். மேலும் இது இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்துடன் எதிர்கால தலைமுறையினரை இணைக்கும் என்று கூறினார்.

ஜி20 உச்சி மாநாட்டின் தலைமைப் பொறுப்பு உலக அளவில் அங்கீகாரத்தை பெற்றிருப்பதையும், இதற்காக ஒவ்வொரு மாநிலமும் தங்களது தேசிய திறன்களை வெளிப்படுத்தியதையும் பிரதமர் குறிப்பிட்டார். இதேபோல், பி20 உச்சிமாநாடு ஜனநாயகத்தின் தாய் என்ற இந்தியாவின் நற்சான்றிதழ்களை வலுப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் தொடர்பான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்துவதை நாடு தழுவிய நிகழ்வுகளாக விரிவுபடுத்துவதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 2 போட்டியாளர்கள் தில்லிக்கு வந்து பேசுகிறார்கள் என்றும் இது லட்சக்கணக்கான மாணவர்களை நாட்டின் நாடாளுமன்ற பாரம்பரியத்துடன் இணைத்துள்ளது என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். சாதாரண மக்களுக்காக நாடாளுமன்ற நூலகத்தை திறக்கும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி காகிதமில்லா நாடாளுமன்றம் என்ற கருத்து மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவது குறித்தும் பேசினார். இந்த முயற்சிக்கு அவைத் தலைவருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

உறுப்பினர்களின் கூட்டு முயற்சி, மக்களவைத் தலைவரின் திறமை மற்றும் உறுப்பினர்களின் விழிப்புணர்வு ஆகியவை 17-வது மக்களவையின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டை 97 சதவீதமாக உயர்த்தியதற்கு காரணம் என்று பிரதமர் பாராட்டினார். இது குறிப்பிடத்தக்க சதவீதமாக இருந்தாலும், 18-வது மக்களவையின்போது செயல் திறனை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று உறுப்பினர்கள் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் 30 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது ஒரு சாதனை என்று பிரதமர் தெரிவித்தார்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்ட பிரதமர், உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் அமிர்த பெருவிழாவை மக்கள் இயக்கமாக மாற்றியதற்காக பாராட்டினார். அதேபோல, அரசியலமைப்பின் 75-வது ஆண்டு ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளித்தது என்று அவர் தெரிவித்தார்.

பல தலைமுறைகளாக எதிர்பார்த்துக் காத்திருந்த பல விஷயங்கள் 17வது மக்களவையின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை நாம் மிகுந்த மனநிறைவுடன் கூற முடியும் என்று பிரதமர் கூறியுள்ளார். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம், அரசியலமைப்பின் முழு மகிமை வெளிப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விஷயம் என்று அவர் கூறினார். இன்று சமூக நீதிக்கான எங்கள் அர்ப்பணிப்பு ஜம்மு-காஷ்மீர் மக்களை சென்றடைகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி மேலும் கூறினார்.

இந்த அவையில் இயற்றப்பட்ட கடுமையான சட்டங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை வலுப்படுத்தியுள்ளன என்று பிரதமர் கூறினார். இது பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுபவர்களின் நம்பிக்கையை மேம்படுத்தியுள்ளது என்றும் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பது நிச்சயமாக நிறைவேறும் என்றும் அவர் கூறினார்.

இந்த நாடு 75 ஆண்டுகளாக தண்டனைச் சட்டத்தின் கீழ் வாழ்ந்திருந்தாலும் ஆனால் இப்போது நாம் நியாயச் சட்டத்தின் கீழ் வாழ்கிறோம் என்று புதிய குற்றவியல் சட்டங்களைக் குறிப்பிட்டு பிரதமர் கூறினார்.

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றி புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடவடிக்கைகளை தொடங்கியதற்காக அவைத் தலைவருக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார். முதல் கூட்டத்தொடர் மற்ற கூட்டத்தொடர்களை விட குறுகியதாக இருந்தாலும், மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டு சாதனை படைக்கப்பட்டதன் விளைவாக வரும் காலங்களில் இந்த அவை பெண் உறுப்பினர்களால் நிரம்பும் என்று பிரதமர் கூறினார். பெண்களின் உரிமைகளை உறுதி செய்வதற்காக 17-வது மக்களவையில் முத்தலாக் முறை ரத்து செய்யப்பட்டது குறித்தும் அவர் பேசினார்.

தேசத்திற்கு அடுத்த 25 ஆண்டுகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், நாடு தனது கனவுகளை நனவாக்க தீர்மானம் எடுத்துள்ளது என்றார். 1930-ம் ஆண்டு மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட உப்பு சத்தியாகிரகம் பற்றி பேசிய பிரதமர், இந்த நிகழ்வுகள் தொடங்கப்பட்ட போது இந்த நிகழ்வுகள் முக்கியமற்றவையாக இருந்திருக்கலாம் என்றும், ஆனால் அவை 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைவதற்கு வழிவகுத்து, அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை அமைத்தன என்றும் குறிப்பிட்டார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்று ஒவ்வொருவரும் உறுதிபூண்டுள்ள நிலையில், இதே போன்ற உணர்வை நாட்டில் காண முடியும் என்று அவர் கூறினார்.

இளைஞர்களுக்கான முன்முயற்சி மற்றும் சட்டங்களை சுட்டிக்காட்டிய பிரதமர், வினாத்தாள் கசிவு பிரச்சினைக்கு எதிரான வலுவான சட்டம் இருப்பதைக் குறிப்பிட்டார். ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை சட்டத்தின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்தார். ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான உலக மையமாக இந்தியாவை மாற்ற இந்த சட்டம் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

21 ஆம் நூற்றாண்டில் உலகின் அடிப்படைத் தேவைகள் மாறியுள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர், தரவுகளின் மதிப்பு குறித்தும் குறிப்பிட்டார். டிஜிட்டல் தனித் தரவு பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது தற்போதைய தலைமுறையினரின் தரவைப் பாதுகாத்துள்ளது என்றும், உலகம் முழுவதிலுமிருந்து ஆர்வத்தை ஈர்த்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்தியாவில் அதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய பிரதமர், நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் நாட்டில் அது உருவாக்கிய பன்முகப்படுத்தப்பட்ட விளைவுகளை எடுத்துரைத்தார்.

பாதுகாப்பின் புதிய பரிமாணங்கள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், கடல், விண்வெளி மற்றும் இணையதள பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். இந்தத் துறைகளில் நாம் நேர்மறையான திறன்களை உருவாக்க வேண்டும் என்றும் எதிர்மறை சக்திகளை சமாளிப்பதற்கான வழிவகைகளை உருவாக்க வேண்டும் என்றும் கூறிய பிரதமர், விண்வெளி சீர்திருத்தங்கள் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் முன்னோக்கிய பார்வை கொண்டவை என்று கூறினார்.

17வது மக்களவையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக ஆயிரக்கணக்கான சிக்கலான நடைமுறைகள் நீக்கப்பட்டதாகத் தெரிவித்தார். குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்பதன் மீதான நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், மக்களின் வாழ்க்கையில் குறைந்தபட்ச அரசு தலையீட்டை உறுதி செய்வதன் மூலம் எந்தவொரு ஜனநாயகத் திறன்களையும் அதிகபட்சமாக்க முடியும் என்று கூறினார்.

காலாவதியான 60-க்கும் மேற்பட்ட சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். எளிதாக வர்த்தகம் செய்வதை மேம்படுத்த இது தேவைப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். மக்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர்  திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார். தேவையற்ற வழக்கு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க மத்தியஸ்த சட்டம் உதவியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

திருநங்கைகளின் அவல நிலை குறித்து குறிப்பிட்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, அந்த சமூகத்திற்காக இந்த சட்டத்தை கொண்டு வந்ததற்காக உறுப்பினர்களைப் பாராட்டினார். பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான முக்கியமான ஏற்பாடுகள் உலக அளவில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்று அவர் கூறினார். அரசுத் திட்டங்களின் பலன்களைப் பெறுவதன் மூலம் திருநங்கைகள் ஒரு அடையாளத்தைப் பெற்று தொழில்முனைவோராக மாறி வருவதாக அவர் கூறினார். பத்ம விருது பெறுவோர் பட்டியலிலும் திருநங்கைகளின் பெயர் இடம்பெறுகிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

ஏறக்குறைய 2 ஆண்டுகளாக சபையின் நடவடிக்கைகளை பாதித்த கொவிட் தொற்றுநோயால் உயிர் இழந்த உறுப்பினர்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

இந்தியாவின் ஜனநாயகப் பயணம் நிலையானது என்றும், முழு மனிதகுலத்திற்கும் சேவை செய்வதே தேசத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவின் வாழ்க்கை முறையை உலகம் ஏற்றுக்கொள்வதைக் குறிப்பிட்டு, இந்த பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு உறுப்பினர்களை வலியுறுத்தினார்.

வரவிருக்கும் தேர்தல்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், தேர்தல்கள் ஜனநாயகத்தின் இயற்கையான மற்றும் அத்தியாவசியமான பரிமாணமாகும் என்றார். நமது ஜனநாயகத்தின் பெருமைக்கு ஏற்ப தேர்தல் இருக்கும் என்று நம்புவதாகப் பிரதமர் கூறினார்.

17-வது மக்களவையின் செயல்பாட்டிற்கு பங்களிப்பு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார். ராமர் கோயில் பிராணப் பிரதிஷ்டை தொடர்பாக இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்துக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் எதிர்கால சந்ததியினர், பாரம்பரியத்தில் பெருமை கொள்வதற்கான அதிகாரத்தை இது வழங்கும் என்று கூறினார். இந்த தீர்மானத்தில் 'சிறந்த உணர்வு', 'லட்சியத் தீர்மானம்' ஆகியவற்றுடன் அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்' என்ற மந்திரமும் அடங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

உறுப்பினர்கள், எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்லவும், எதிர்கால தலைமுறையினரின் கனவுகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகப் பணியாற்றவும் நாடாளுமன்றம் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

 

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
‘All set for BRICS 2026!': PM Modi shares video of preparations at venue ahead of mega Summit

Media Coverage

‘All set for BRICS 2026!': PM Modi shares video of preparations at venue ahead of mega Summit
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister expresses grief over loss of lives in mishap in Nanded
September 11, 2026
Prime Minister announces ex-gratia from PMNRF

The Prime Minister, Shri Narendra Modi has expressed grief over the loss of lives due to a mishap in Nanded, Maharashtra.

The Prime Minister conveyed his thoughts to the bereaved families in this hour of grief and prayed for the speedy recovery of the injured.

Shri Modi announced that an ex-gratia of Rs. 2 lakh from the Prime Minister’s National Relief Fund (PMNRF) would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000.

In a post on X, the Prime Minister’s Office said;

“Saddened by the loss of lives due to a mishap in Nanded, Maharashtra. My thoughts are with the bereaved families in this hour of grief. Praying for the speedy recovery of the injured.

An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000: PM @narendramodi”