"இந்தியாவின் 75 ஆண்டு கால நாடாளுமன்ற பயணத்தை நினைவுகூர்வதற்கான ஒரு சந்தர்ப்பம் இது"
"நாம் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு மாறலாம். ஆனால் இந்தப் பழைய கட்டடம் இந்திய ஜனநாயகப் பயணத்தின் ஒரு பொன்னான அத்தியாயம் என்பதால் இந்த கட்டடம் வரும் தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும்"
"அமிர்த காலத்தின் புதிய ஒளியில் புதிய நம்பிக்கை, சாதனை மற்றும் திறன்கள் உருவாக்கப்படுகின்றன"
"ஆப்பிரிக்க யூனியனை ஜி 20-ல் சேர்த்ததில் இந்தியா பெருமை அடைகிறது”
"ஜி 20 தலைமைத்துவக் காலத்தில், இந்தியா ஒரு உலக நண்பராக உருவெடுத்தது"
"அனைவரையும் உள்ளடக்கிய அவையைக் கொண்ட மக்களின் எதிர்பார்ப்புகளை முழு அதிகாரத்துடன் வெளிப்படுத்தி வருகிறது"
&"75 ஆண்டுகளில், நாடாளுமன்றத்தின் மீது சாதாரண மக்களின் நம்பிக்கை தொடர்ந்து வளர்ந்து வந்திருப்பது மிகப்பெரிய சாதனையாகும்"
"நாடாளுமன்றம் மீதான பயங்கரவாதத் தாக்குதல் இந்தியாவின் ஆன்மா மீதான தாக்குதல்"
"இந்திய ஜனநாயகத்தின் அனைத்து சூழல்களையும் கண்ட நமது இந்த அவை, பொதுமக்களின் நம்பிக்கையின் மையப்பு

மக்களவையில் இன்று (18.09.2023) நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை சிறப்பு அமர்வு நடைபெறுகிறது.

இதில் அவையில் உரையாற்றிய பிரதமர், புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடத்திற்கு நடவடிக்கைகள் மாற்றப்படுவதற்கு முன்பு, இந்தியாவின் 75 ஆண்டு கால நாடாளுமன்றப் பயணத்தை நினைவுகூர இன்று ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார். பழைய நாடாளுமன்ற கட்டடம் குறித்துப் பேசிய பிரதமர், இந்த கட்டடம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலாக செயல்பட்டதாகவும், சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய நாடாளுமன்றமாக அங்கீகரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்த கட்டடத்தை கட்டுவதற்கான முடிவு வெளிநாட்டு ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்டிருந்தாலும், இந்தியர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பணம் ஆகியவை தான் இந்தக் கட்டடத்தில் பயன்படுத்தப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார். 75 ஆண்டுகால பயணத்தில், அனைவரது மரபுகள் மற்றும் பாரம்பரியங்களில் மிகச் சிறந்தவற்றை இந்த அவை உருவாக்கியுள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறினார். நாம் புதிய கட்டடத்திற்கு மாறினாலும் இந்தப் பழைய கட்டடம் வரும் தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் இது இந்திய ஜனநாயகப் பயணத்தின் பொன்னான அத்தியாயம் என்றும் அவர் கூறினார். 

அமிர்த காலத்தின் புதிய முதல் ஒளியில் ஏற்படுத்தப்படும் புதிய நம்பிக்கை, சாதனை மற்றும் திறன்கள் குறித்தும், இந்தியாவின் சாதனைகளை உலகம் எவ்வாறு விவாதிக்கிறது என்பதையும் பிரதமர் குறிப்பிட்டார். இது நமது 75 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றின் கூட்டு முயற்சியின் விளைவாகும் என்று அவர் கூறினார்.

சந்திரயான் 3-ன் வெற்றியைக் குறிப்பிட்ட திரு. நரேந்திர மோடி, இது இந்தியாவின் திறன்களின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது என்றார். இது நவீனத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நமது விஞ்ஞானிகளின் திறன் மற்றும் 140 கோடி இந்தியர்களின் வலிமையுடன் இணைந்தது என்று அவர் குறிப்பிட்டார். விஞ்ஞானிகளின் சாதனைக்காக அவை மற்றும் தேசத்தின் பாராட்டுகளை பிரதமர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஜி 20 உச்சிமாநாட்டின் போது நாட்டின் முயற்சிகளை அவை எவ்வாறு பாராட்டியது என்பதை நினைவுகூர்ந்த பிரதமர், ஜி 20-ன் வெற்றியை அவைத் தலைவர் அங்கீகரித்ததற்கு நன்றி தெரிவித்தார். ஜி 20 மாநாட்டின் வெற்றி 140 கோடி இந்தியர்களுக்கானது என்றும் எந்தவொரு குறிப்பிட்ட தனிநபர் அல்லது கட்சிக்கான வெற்றி அல்ல என்றும் பிரதமர் கூறினார். இந்தியாவின் பன்முகத்தன்மையின் வெற்றியின் வெளிப்பாடாக இந்தியாவில் 60 க்கும் மேற்பட்ட இடங்களில் 200 க்கும் மேற்பட்ட ஜி 20 நிகழ்வுகள் நடத்தப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார். ஜி-20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை சேர்த்ததில் இந்தியா பெருமை கொள்கிறது என்று கூறிய அவர், அந்த இணைப்பின் உணர்ச்சிகரமான தருணத்தை நினைவு கூர்ந்தார்.

இந்தியாவின் திறன்கள் குறித்து சந்தேகத்தை உருவாக்கும் ஒரு சிலரின் எதிர்மறையான போக்குகளை சுட்டிக்காட்டிய பிரதமர், ஜி 20 பிரகடனம் தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகவும், எதிர்காலத்திற்கான செயல்திட்டம் அங்கு உருவாக்கப்பட்டதாகவும் கூறினார். இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவப் பதவி நவம்பர் இறுதி நாள் வரை நீடிக்கும் என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், நாடு அதை முழுமையாகப் பயன்படுத்த விரும்புகிறது என்று கூறினார். அவைத் தலைவரின் தலைமையில் பி 20 (பார்லிமண்ட் 20- நாடாளுமன்றம் 20) உச்சிமாநாட்டை  நடத்துவதற்கான அவைத் தலைவரின் தீர்மானத்தை ஆதரிப்பதாகக் கூறினார்.

இந்தியா 'விஷ்வ மித்ரா' எனப்படும் உலக நண்பராக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது அனைவருக்கும் பெருமை அளிக்கிறது என்றும் முழு உலகமும் இந்தியாவை ஒரு நண்பராகப் பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார். அதற்குக் காரணம் வேதங்கள் முதல் விவேகானந்தர் வரை நாம் வகுத்த நெறிமுறைகள் ஆகும் என்று அவர் தெரிவித்தார். சப்கா சாத் சப்கா விகாஸ் எனப்படும் அனைவரும் இணைவோம் – அனைவரின் வளர்ச்சி என்ற தாரக மந்திரம் உலகை நம்முடன் ஒன்றிணைக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

புதிய வீட்டிற்கு ஒரு குடும்பம் மாறுவதை ஒப்பிட்டு பேசிய பிரதமர், பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரியாவிடை அளிப்பது மிகவும் உணர்ச்சிகரமான தருணம் என்று கூறினார். இத்தனை ஆண்டுகளில் அவையில் ஏற்பட்ட பல்வேறு சூழல்கள் மற்றும் ஏற்பட்ட பல்வேறு மனநிலைகளை எடுத்துரைத்த அவர், இந்த நினைவுகள் அவையின் அனைத்து உறுப்பினர்களின் பாரம்பரியம் என்று கூறினார். அதன் மகிமையும் நமக்கே சொந்தம் என்று அவர் மேலும் கூறினார். இந்த நாடாளுமன்ற மாளிகையின் 75 ஆண்டுகால வரலாற்றில் புதிய இந்தியாவை உருவாக்குவது தொடர்பான எண்ணற்ற நிகழ்வுகளை தேசம் கண்டுள்ளது என்றும், இன்று இந்தியாவின் சாதாரண குடிமகனுக்கு மரியாதையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது தாம், நாடாளுமன்றத்திற்கு வந்து வணக்கம் செலுத்தியதை பிரதமர் நினைவு கூர்ந்தார். அது ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்றும் அவர் கூறினார், ஆனால் அவர் கூறினார். வாழ்வாதாரத்திற்காக ரயில் நிலையத்தில் தொழில் செய்து வந்த ஒரு ஏழை நாடாளுமன்றத்தை அடைந்திருப்பது இந்திய ஜனநாயகத்தின் சக்தி என்று அவர் தெரிவித்தார். தேசம் தமக்கு இவ்வளவு அன்பு, மரியாதை மற்றும் ஆசீர்வாதங்களை வழங்கும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தின் வாயிலில் பொறிக்கப்பட்ட உபநிடத வாக்கியத்தை மேற்கோள் காட்டிய பிரதமர், முனிவர்கள் மக்களுக்கான கதவுகளைத் திறந்து உரிமைகளை எவ்வாறு பெற வேண்டும் என்பதைப் பார்க்கச் சொன்னார்கள் என்று கூறினார். இந்த கூற்றின் சரியான தன்மைக்கு அவையின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்களே சாட்சி என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

அவையின் அமைப்பு மாறி வருவதையும், சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அவைக்கு வரத் தொடங்கி இருப்பதையும் பிரதமர் எடுத்துரைத்தார். அனைவரையும் உள்ளடக்கிய சூழல், மக்களின் எதிர்பார்ப்புகளை முழு அதிகாரத்துடன் வெளிப்படுத்தி வருகிறது என்று அவர் கூறினார். அவையின் கண்ணியத்தை அதிகரிக்க உதவிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புகளை பிரதமர் குறிப்பிட்டார்.

உத்தேசமாக இதுவரை இரு அவைகளிலும் 7500 க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பணியாற்றியுள்ளனர் என்றும் அவர்களில் சுமார் 600 பேர் பெண் பிரதிநிதிகள் என்றும் பிரதமர் தெரிவித்தார். திரு இந்திரஜித் குப்தா இந்த அவையில் கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்றும், திரு ஷபிகுர் ரஹ்மான் தனது 93 வயது வரை அவை உறுப்பினராகப் பணியாற்றினார் என்றும் பிரதமர் தெரிவித்தார். தமது 25 ஆவது வயதில் அவைக்குத் தெரிவு செய்யப்பட்ட திருமதி சந்திரானி முர்மு பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

விவாதங்கள் மற்றும் கார சாரமான சூழல்களுக்கு மத்தியிலும் அவையில் குடும்ப உணர்வு இருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், கசப்பு ஒருபோதும் நீடிக்காது என்றும் இது அவையின் முக்கிய பண்பு என்றும் கூறினார். கொவிட் தொற்றுநோய்களின் கடினமான நேரம் உட்பட பல்வேறு சூழல்களில் உறுப்பினர்கள் தங்கள் கடமைகளைச் செய்ய அவைக்கு எவ்வாறு வந்தார்கள் என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார். 

சுதந்திரத்தின் ஆரம்ப ஆண்டுகளில் புதிய தேசத்தின் நம்பகத்தன்மை குறித்து இருந்த சந்தேகங்களை நினைவு கூர்ந்த பிரதமர், அனைத்து சந்தேகங்களும் தவறானவை என்று நிரூபிக்கப்பட்டது நாடாளுமன்றத்தின் பலம் என்று கூறினார்.

ஒரே அவையில் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் அரசியல் நிர்ணய சபையின் அமர்வுகள் மற்றும் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு பிரகடனப்படுத்தியதை நினைவு கூர்ந்த பிரதமர், 75 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தின் மீது சாதாரண குடிமக்களின் நம்பிக்கை தொடர்ந்து வளர்ந்து வருவது மிகப்பெரிய சாதனையாகும் என்று கூறினார். டாக்டர் ராஜேந்திர பிரசாத், டாக்டர் அப்துல் கலாம் முதல் திரு ராம்நாத் கோவிந்த், திருமதி திரௌபதி முர்மு வரை பல குடியரசுத் தலைவர்களின் உரைகளால் அவை பயனடைந்துள்ளது என்று அவர் கூறினார்.

பண்டித நேரு மற்றும் லால் பகதூர் சாஸ்திரி காலத்திலிருந்து அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் வரை அவர்கள் தங்கள் தலைமையின் கீழ் தேசத்திற்கு புதிய பாதையை வழங்கியுள்ளதாகவும், அவர்களின் சாதனைகளை முன்னிலைப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் இது என்றும் பிரதமர் கூறினார். அவையில் விவாதங்களை செழுமைப்படுத்தி, சாமானிய மக்களின் குரலுக்கு பலம் அளித்த சர்தார் வல்லபாய் படேல், ராம் மனோகர் லோகியா, சந்திரசேகர், லால் கிருஷ்ண அத்வானி உள்ளிட்டோரையும் அவர் குறிப்பிட்டார். அவையில் பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்களின் உரையை திரு. நரேந்திர மோடி எடுத்துரைத்தார். இது இந்தியா மீதான அவர்களின் மரியாதையை முன்னிலைப்படுத்துகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.

நேரு, லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகிய மூன்று பிரதமர்களை நாடு பதவியில் இருந்தபோது இழந்த வேதனையான தருணங்களையும் அவர் நினைவு கூர்ந்தார்.

பல சவால்களுக்கு மத்தியிலும் அவைத் தலைவர்கள் அவையைத் திறம்பட கையாண்டதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். அவர்கள் தங்கள் முடிவுகளின் மூலம் முக்கிய கருத்துகளை உருவாக்கியதாக அவர் கூறினார். திரு மாவ்லங்கர், திருமதி சுமித்ரா மகாஜன் முதல் திரு ஓம் பிர்லா வரை 2 பெண்கள் உட்பட 17 அவைத் தலைவர்கள் பணியாற்றியுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் தங்கள் வழியில் சிறப்பாகப் பங்களித்ததை அவர் நினைவு கூர்ந்தார். நாடாளுமன்ற ஊழியர்களின் பங்களிப்பையும் பிரதமர் கூறினார்.

நாடாளுமன்றம் மீதான பயங்கரவாத தாக்குதலை நினைவு கூர்ந்த பிரதமர், அது கட்டடத்தின் மீதான தாக்குதல் அல்ல என்றும் ஜனநாயகத் தாயின் மீதான தாக்குதல் என்றும் கூறினார். அது இந்தியாவின் ஆன்மா மீதான தாக்குதல் என்று பிரதமர் குறிப்பிட்டார். பயங்கரவாதிகளுக்கும் அவைக்கும் இடையில் அதன் உறுப்பினர்களைப் பாதுகாக்கப் போராடிய வீரர்களின் பங்களிப்புகளை அங்கீகரித்து, துணிச்சலான இதயங்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகப் பிரதமர் தெரி்வித்தார்.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, நாடாளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக வெளியிடுவதில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த பத்திரிகையாளர்களையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். பழைய நாடாளுமன்றத்திற்கு விடை கொடுப்பது அவர்களுக்கு இன்னும் கடினமான பணியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். ஏனெனில் அவர்கள் உறுப்பினர்களை விட நிறுவனத்துடன் அதிகம் தொடர்புடையவர்கள் என்று அவர் கூறினார்.

ஒரு இடம்  யாத்திரைக்குப் பின் மந்திரங்களை ஒலிப்பதன் காரணமாக அது புனிதமாக மாறும் நாதபிரம்ம சடங்கை சுட்டிக் காட்டிய பிரதமர், இந்த பழைய கட்டடத்தில் 7500 பிரதிநிதிகளின் கருத்துகளின் எதிரொலிகள் மற்றும் விவாதங்கள் நடைபெற்றுள்ளது என்றும் இந்த கட்டடம் இனி பயன்படுத்தப்படாவிட்டாலும் இது ஒரு புனிதத் தன்மையாக மாற்றியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்,

பகத்சிங்கும், பட்டுகேஷ்வர் தத்தும் தங்கள் வீரத்தாலும் தைரியத்தாலும் ஆங்கிலேயர்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய இடம் நாடாளுமன்றம் என்று பிரதமர் குறிப்பிட்டார். பண்டித ஜவஹர்லால் நேருவின் 'ஸ்ட்ரோக் ஆஃப் மிட்நைட்' எதிரொலிகள் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று அவர் கூறினார். அடல் பிஹாரி வாஜ்பாயின் புகழ்பெற்ற உரையை நினைவு கூர்ந்தார். “அரசுகள் வரும்,  - போகும். கட்சிகள் உருவாக்கப்படும் - கலைக்கப்படலாம். ஆனால் இந்த நாடு நிரந்தரமாக இருக்க வேண்டும், அதன் ஜனநாயகம் உயிர்வாழ வேண்டும்" என்று வாஜ்பாய் கூறியதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.

முதலாவது அமைச்சரவையை நினைவு கூர்ந்த திரு. நரேந்திர மோடி, பாபா சாகேப் அம்பேத்கர் உலகெங்கிலும் உள்ள சிறந்த நடைமுறைகளை எவ்வாறு உள்ளடக்கி செயல்பட்டார் என்பதை நினைவு கூர்ந்தார்.  நேரு அமைச்சரவையில் பாபா சாஹேப் உருவாக்கிய அற்புதமான நீர்க் கொள்கையையும் அவர் குறிப்பிட்டார். தலித்துகளுக்கு அதிகாரமளிப்பதற்காக தொழில்மயமாக்கலில் பாபா சாஹேப்பின் முக்கியத்துவத்தையும், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி முதல் தொழில்துறை அமைச்சராக முதல் தொழில் கொள்கையை எவ்வாறு கொண்டு வந்தார் என்பதையும் பிரதமர் குறிப்பிட்டார்.

1965-ம் ஆண்டு போரின்போது லால் பகதூர் சாஸ்திரி இந்திய வீரர்களின் உத்வேகத்தை இந்த அவையில்தான் ஊக்கப்படுத்தினார் என்று பிரதமர் கூறினார். சாஸ்திரி அவர்கள் வகுத்த பசுமைப் புரட்சியின் அடித்தளத்தையும் அவர் எடுத்துரைத்தார். பங்களாதேஷின் சுதந்திரத்திற்கான போரும் திருமதி இந்திரா காந்தியின் தலைமையின் கீழ் இந்த அவையின் விளைவாகும் என்று அவர் எடுத்துரைத்தார். நெருக்கடி நிலைக் காலத்தின் போது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும், நெருக்கடி நிலை நீக்கப்பட்ட பின்னர் மக்களின் அதிகாரம் மீண்டும் எழுந்தது குறித்தும் அவர் பேசினார்.

முன்னாள் பிரதமர் சரண் சிங் தலைமையில் ஊரக வளர்ச்சி அமைச்சகம் அமைக்கப்பட்டதை பிரதமர் குறிப்பிட்டார். வாக்களிக்கும் வயதை 21 லிருந்து 18 ஆகக் குறைத்ததும் இந்த அவையில் நடந்தது, என்று பிரதமர் கூறினார். நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் பி.வி.நரசிம்மராவ் தலைமையில் நாடு புதிய பொருளாதாரக் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டதை அவர் நினைவு கூர்ந்தார். அடல் பிகாரி வாஜ்பாயின் 'சர்வ சிக்ஷா அபியான்', பழங்குடியினர் விவகார அமைச்சக உருவாக்கம் மற்றும் அவரது வழிகாட்டுதலின் கீழ் அணுசக்தி சாதனைகள் குறித்தும் அவர் பேசினார். அவையில் நடந்த 'ஓட்டுக்கு பணம்' தொடர்பான விவாதத்தையும் திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார்.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த சிக்கல்களுக்கு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டதைக் குறிப்பிட்ட பிரதமர், 370-வது பிரிவு நீக்கம், ஜிஎஸ்டி, ஓஆர்ஓபி எனப்படும் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டினார்.

மக்களின் நம்பிக்கைக்கு இந்த அவை சாட்சியாக இருப்பதாகவும், ஜனநாயகத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் அந்த நம்பிக்கையின் மையமாக இருந்து வருவதாகவும் பிரதமர் கூறினார். அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் இந்த அவையில் வீழ்ந்ததை அவர் நினைவு கூர்ந்தார். பல்வேறு பகுதிகளில் இருந்து புதிய கட்சிகள் உருவாவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

அடல் பிஹாரி வாஜ்பாயின் தலைமையின் போது சத்தீஸ்கர், உத்தரகாண்ட் மற்றும் ஜார்கண்ட் ஆகிய புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், தெலங்கானா உருவாக்கத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சிகள் குறித்து வருத்தம் தெரிவித்தார். தெலங்கானாவைப் பொறுத்தவரை பிரிவினை தீய நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதால் இரு மாநிலங்களிலும் கொண்டாட்டங்கள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் நிர்ணய சபை தனது தினசரி செலவை எவ்வாறு குறைத்தது என்பதையும், அதன் உறுப்பினர்களுக்கான உணவக மானியத்தை அவை எவ்வாறு நீக்கியது என்பதையும் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். மேலும், தொற்றுநோய்க் காலத்தின் போது உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியைக் கொண்டு நாட்டிற்கு உதவ முன்வந்தனர் என்றும் 30 சதவீத ஊதியத்தைக் குறைத்துக் கொண்டனர் என்றும் பிரதமர் கூறினார் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்ததன் மூலம் உறுப்பினர்கள் தங்கள் மீதான கட்டுப்பாட்டை எவ்வாறு தாங்களே கடைபிடித்தனர் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

பழைய கட்டடத்திற்கு நாளை பிரியாவிடை அளிப்பதாக குறிப்பிட்ட பிரதமர், கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கும் வாய்ப்பைப் பெறுவதால் அவையின் தற்போதைய உறுப்பினர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று சுட்டிக் காட்டினார். நாடாளுமன்றத்தின் சுவர்களுக்குள் இருந்து உத்வேகம் பெற்ற 7500 பிரதிநிதிகளுக்கு இன்றைய சந்தர்ப்பம் பெருமைக்குரிய தருணம் என்று திரு நரேந்திர மோடி மேலும் கூறினார்.

உறுப்பினர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் புதிய கட்டடத்திற்கு செல்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்ததோடு, அவையின் வரலாற்று தருணங்களை நல்ல முறையில் நினைவுகூர வாய்ப்பளித்ததற்காக அவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்து தமது உரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவு செய்தார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Jan Dhan accounts hold Rs 2.75 lakh crore in banks: Official

Media Coverage

Jan Dhan accounts hold Rs 2.75 lakh crore in banks: Official
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles loss of lives due to a mishap in Nashik, Maharashtra
December 07, 2025

The Prime Minister, Shri Narendra Modi has expressed deep grief over the loss of lives due to a mishap in Nashik, Maharashtra.

Shri Modi also prayed for the speedy recovery of those injured in the mishap.

The Prime Minister’s Office posted on X;

“Deeply saddened by the loss of lives due to a mishap in Nashik, Maharashtra. My thoughts are with those who have lost their loved ones. I pray that the injured recover soon: PM @narendramodi”