வடகிழக்கு பிராந்தியத்திற்கான பிரதமரின் மேம்பாட்டு முன்முயற்சி (PM-DevINE) திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
அசாம் முழுவதும் பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சுமார் 5.5 லட்சம் வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைத்தார்
அசாமில் ரூ.1300 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான முக்கிய ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
"வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு வடகிழக்கின் வளர்ச்சி அவசியம்"
"காசிரங்கா தேசிய பூங்கா தனித்துவமானது- அனைவரும் அதைப் பார்வையிட வேண்டும்"
"வீர் லச்சித் போர்புகன் அசாமின் வீரம் மற்றும் உறுதியின் அடையாளம்"
"வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்பது நமது இரட்டை என்ஜின் அரசின் தாரக மந்திரமாக இருந்து வருகிறது"
“ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன”

எனதருமை சகோதர, சகோதரிகளே!

எங்களை ஆசீர்வதிப்பதற்காக நீங்கள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இங்கு வந்துள்ளீர்கள். இதற்கு தலை தாழ்ந்து என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  அசாம் மக்களின் இந்த அன்பும், பிணைப்பும் எனது மிகப்பெரிய சொத்து. இன்று, அசாம் மக்களுக்காக 17,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் நான் இங்கு வந்துள்ளேன். இந்தத் திட்டங்கள் சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் பெட்ரோலியம் தொடர்பானவை. இந்தத் திட்டங்கள் அசாமின் வளர்ச்சியை விரைவுபடுத்தும். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக அசாம் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இங்கு வருவதற்கு முன்பு, காசிரங்கா தேசிய பூங்காவின் பிரம்மாண்டத்தையும் இயற்கை அழகையும் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. காசிரங்கா ஒரு தனித்துவமான தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயமாகும். அதன் பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு அனைவரையும் ஈர்க்கிறது. காசிரங்கா யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக விளங்குகிறது. உலகில் உள்ள 70 சதவீத ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் காசிரங்காவில்தான் உள்ளன. புலிகள், யானைகள், சதுப்பு நில மான்கள், காட்டு எருமைகள் மற்றும் பல்வேறு வன விலங்குகளை இந்த இயற்கை சூழலில் பார்க்கும் அனுபவம் உண்மையிலேயே வித்தியாசமானது. மேலும், பறவை ஆர்வலர்களுக்கு காசிரங்கா சொர்க்கம் போன்றது. துரதிர்ஷ்டவசமாக, முந்தைய அரசுகளின் அலட்சியம் மற்றும் சிலரது வேட்டையாடுதல் காரணமாக, அசாமின் அடையாளமாக இருக்கும் காண்டாமிருகங்களும் ஆபத்தில் இருந்தன. 2013-ம் ஆண்டில் மட்டும் 27 காண்டாமிருகங்கள் இங்கு வேட்டையாடப்பட்டுள்ளன. ஆனால் எங்கள் அரசு மற்றும் இங்குள்ள மக்களின் முயற்சிகள் காரணமாக, இந்த எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் பூஜ்ஜியமாக மாறியது. காசிரங்கா தேசியப் பூங்கா 2024-ம் ஆண்டில் அதன் பொன்விழா ஆண்டைக் கொண்டாடப் போகிறது. இதற்காக அசாம் மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

இன்று, வீர் லச்சித் போர்புகனின் பிரமாண்டமான சிலையை திறந்து வைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. லச்சித் போர்புகன் அசாமின் தைரியம் மற்றும் வீரத்தின் அடையாளம். 2022-ம் ஆண்டில் லச்சித் போர்புகனின் 400-வது பிறந்த நாளை, தில்லியில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினோம். நான் மீண்டும் ஒருமுறை துணிச்சலான போர்வீரர் லச்சித் போர்புகனுக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன்.

நண்பர்களே,

பாரம்பரியம் மற்றும் வளர்ச்சி ஆகிய இரண்டும் எங்கள் இரட்டை இன்ஜின் அரசின் மந்திரமாக இருந்து வருகின்றன. பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, அசாமின் இரட்டை இன்ஜின் அரசு இப்பகுதியின் வளர்ச்சிக்காக விரைவாக செயல்பட்டு வருகிறது. உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் அசாம் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானம் இங்குள்ள மக்களுக்கு பெரும் வசதியை அளித்துள்ளது. இன்று, தின்சுகியா மருத்துவக் கல்லூரியின் தொடக்க விழாவும் நடைபெற்றது. இது சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை உறுதி செய்யும். முந்தைய முறை அசாம் வந்தபோது, குவஹாத்தி மற்றும் கரீம்கஞ்சில் இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். இன்று, சிவசாகர் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கூடுதலாக, ஜோர்ஹாட்டில் ஒரு புற்றுநோய் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம், ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களுக்கும் சுகாதார சேவைகளுக்கான மையமாக அசாம் மாறும்.

நண்பர்களே,

இன்று, பிரதமரின் உர்ஜா கங்கா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பரவுனி – குவஹாத்தி குழாய் எரிவாயுப் பாதை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயுக் குழாய் வடகிழக்கு மின்கட்டமைப்பை தேசிய எரிவாயு தொகுப்புடன் இணைக்கும்.  பீகார், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் இந்த குழாய் வழி எரிவாயுத் திட்டத்தின் மூலம் பயனடையும்.

 

நண்பர்களே,

இன்று, டிக்பாய் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குவஹாத்தி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் விரிவாக்கமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக, அசாமின் சுத்திகரிப்பு நிலையங்களின் திறனை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அசாம் மக்களிடமிருந்து வந்தது. அதற்காக இங்கு போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. ஆனால் முந்தைய அரசுகள் இங்குள்ள மக்களின் உணர்வுகள் மீது ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை. இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில் அசாமில் உள்ள நான்கு சுத்திகரிப்பு நிலையங்களின் திறனை அதிகரிக்க இந்த அரசு தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளது.

நண்பர்களே,

இன்று, அசாமில் 5.5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடு என்ற கனவு நனவாகியுள்ளது. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒரு மாநிலத்தில் தங்களுக்குச் சொந்தமான, விருப்பமான, சொந்த வீடுகளில் குடியேறுகின்றன. உங்களுக்கு சேவை செய்ய என்னால் முடிகிறது என்பது வாழ்க்கையின் மிகப்பெரிய அதிர்ஷ்டம்.

சகோதர சகோதரிகளே,

இந்த வீடுகள் வெறும் நான்கு சுவர்கள் அல்ல; இந்த வீடுகளுடன், கழிப்பறைகள், எரிவாயு இணைப்புகள், மின்சாரம் மற்றும் குழாய் நீர் போன்ற வசதிகளும் வழங்கப்படுகின்றன. இதுவரை, அசாமில் 18 லட்சம் குடும்பங்களுக்கு உறுதியான வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பெரும்பாலான வீடுகள் பெண்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது, எனது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் இந்த வீடுகளின் உரிமையாளர்களாகிவிட்டனர். அதாவது, இந்த இல்லங்கள் லட்சக்கணக்கான பெண்களை தங்கள் சொந்த வீட்டின் உரிமையாளர்களாக மாற்றியுள்ளன.

நண்பர்களே,

அசாமில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையையும் எளிதாக்கி, அவர்களின் சேமிப்புகளை அதிகரித்து, நிதி ரீதியாக நிலையானவர்களாக மாற்றுவதே எங்கள் முயற்சியாகும். நேற்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எங்களது அரசு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை 100 ரூபாய் குறைத்தது. ஆயுஷ்மான் அட்டை மூலம் இலவச மருத்துவ சிகிச்சையை எங்கள் அரசு வழங்குகிறது. அதன் குறிப்பிடத்தக்க பயனாளிகள் நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் பெண்கள். ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் அசாமில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 

 

நண்பர்களே,

2014-ம் ஆண்டு முதல், அசாமில் பல வரலாற்று மாற்றங்களுக்கு அடித்தளம் இடப்பட்டுள்ளது. இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட நிலமற்ற குடியிருப்பாளர்களுக்கு நில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. சுதந்திரத்தின் பின்னர் எழுபது ஆண்டுகளாக, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வங்கி அமைப்புடன் ஒருங்கிணைக்கப்படவில்லை. எங்கள் அரசு தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்களை வங்கி அமைப்புடன் இணைக்கத் தொடங்கியது. வங்கி அமைப்புடன் ஒருங்கிணைத்ததன் மூலம் இந்தத் தொழிலாளர்கள் அரசுத் திட்டங்களிலிருந்து பலன்களைப் பெறத் தொடங்கினர்.

நண்பர்களே,

வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற தீர்மானத்தை நிறைவேற்ற, வடகிழக்குப் பகுதியின் வளர்ச்சி அவசியம்.

மோடி ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களையும் தமது குடும்பமாகக் கருதுகிறார். எனவே, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த திட்டங்களை, செயல்படுத்தி முடிப்பதில் கவனம் செலுத்தினோம்.  2014-ம் ஆண்டுக்குப் பிறகு வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டன.  2014-ம் ஆண்டு வரை, அசாமில் ஒரே ஒரு தேசிய நீர்வழி மட்டுமே இருந்தது; இன்று வடகிழக்கில் 18 தேசிய நீர்வழிகள் உள்ளன. இந்த உள்கட்டமைப்பு மேம்பாடு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 

நண்பர்களே,

என்னுடைய இந்த முயற்சிகளுக்கு மத்தியில், நமது எதிரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? நாட்டை தவறாக வழிநடத்துபவர்கள் என்ன செய்கிறார்கள்? மோடியை தொடர்ந்து திட்டி வரும் எதிர்க் கட்சிகள், மோடிக்கு குடும்பம் இல்லை என்று சமீபகாலமாக சொல்லத் தொடங்கியுள்ளன. அவர்களின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில், ஒட்டுமொத்த தேசமும் எழுந்து நின்றது. 'நான் மோடியின் குடும்பம்', 'நான் மோடியின் குடும்பம்', 'நான் மோடியின் குடும்பம்', 'நான் மோடியின் குடும்பம்', 'நான் மோடியின் குடும்பம்', 'நான் மோடியின் குடும்பம்', 'நான் மோடியின் குடும்பம்' என்று ஒட்டுமொத்த நாடும் சொல்லிக் கொண்டிருக்கிறது. இதுதான் அன்பு, இதுதான் ஆசீர்வாதம். 140 கோடி நாட்டு மக்களை தமது குடும்பமாக கருதுவது மட்டுமின்றி, அவர்களுக்கு இரவு பகலாக சேவை செய்வதால் இந்த நாட்டின் அன்பு மோடிக்கு கிடைத்துள்ளது. இன்றைய நிகழ்ச்சி அதன் பிரதிபலிப்பாகும். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. 

 

பாரத் மாதா கி - ஜெ!

பாரத் மாதா கி - ஜெ!

பாரத் மாதா கி - ஜெ!

பாரத் மாதா கி - ஜெ!

பாரத் மாதா கி - ஜெ!

பாரத் மாதா கி - ஜெ!

மிக்க நன்றி.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM-KISAN crosses ₹4.27 lakh crore disbursal, over 9.35 crore farmers benefit

Media Coverage

PM-KISAN crosses ₹4.27 lakh crore disbursal, over 9.35 crore farmers benefit
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 25, 2026
March 25, 2026

PM Modi’s Blueprint for a Stronger India: Empowerment, Infrastructure & Economic Resilience in Action