நண்பர்களே,
இன்று உங்கள் அனைவரிடமும் உரையாடியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய அமைச்சரவை சக தோழர் திரு. மன்சுக் மாண்டவியா அவர்களும், அமைச்சர் திருமதி. ரக்ஷா கட்சே அவர்களும், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இணைந்துள்ள இளைஞர் தோழர்களும் நம்முடன் இருக்கிறார்கள்.
இந்தத் திட்டம் உண்மையிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தியாவின் ஏறத்தாழ 250 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இத்திட்டத்தின் மூலம் இணைந்துள்ளனர்; உங்கள் அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன்.
நண்பர்களே,
சில ஆண்டுகளுக்கு முன்பு, நாம் 'மை பாரத்' தளத்தை உருவாக்கினோம். இன்று நாடு முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் அதில் இணைந்து, பாராட்டுக்குரிய பணிகளைச் செய்து வருகிறார்கள். 'வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான கலந்துரையாடல்' முதல் 'துடிப்பான கிராமங்கள் திட்டம்' வரை, உங்களுடைய திறமையையும் ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

நண்பர்களே,
'இளம் தலைவர்கள் உரையாடலின்' போது நான் ஒரு யோசனையைப் பகிர்ந்துகொண்டேன்: இணைய வழியில் மட்டும் இணைந்திருப்பதற்குப் பதிலாக, ஏன் நேரடியாகக் களத்தில் இறங்கி, இந்தியாவின் அனுபவங்களை பெற்று, இந்தியாவைப் புரிந்துகொள்ளக் கூடாது? கிராமப்புறங்களில் உள்ள வளர்ச்சியடைவதற்கான ஆசைகளை, அந்த கிராமங்களுக்கு நேரில் சென்று பார்த்தால் மட்டுமே உணர முடியும். நமது எல்லைக் கிராமங்களில், முன்னேற்றத்திற்கான விருப்பத்தோடு தீவிர தேசபக்தியும் நிறைந்துள்ளது. அவர்களுக்குத் தேசம்தான் முதன்மை, தனிப்பட்ட வசதிகள் பின்னரே என்பது அங்குச் சென்றால் உணர்கிறது.
அதனால்தான், நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் லடாக் பகுதியிலுள்ள கிராமங்களுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தோம். அங்குள்ள மக்கள் எப்படி வாழ்கிறார்கள், என்ன சாப்பிடுகிறார்கள், எப்படிப் பணியாற்றுகிறார்கள், அவர்களின் கலாச்சாரம், அவர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னவென்பதை நீங்கள் நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இது நடத்தப்பட்டது. நாட்டின் முதல் கிராமங்களில் வாழும் மக்கள் தேசத்தின் பாதுகாப்பிற்காக எப்படி விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதையும், நாட்டின் பிற பகுதிகளுடன் அவர்களின் பிணைப்பு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்பதையும் நீங்கள் நேரில் பார்க்க வேண்டும். இந்த அனுபவம் நமது இளைஞர்களுக்காகவே திட்டமிடப்பட்டது.
இதற்காகக் காட்டப்பட்ட ஆர்வம் மிகவும் அசாதாரணமானது. ஏறத்தாழ 3,00,000 இளைஞர்கள் இந்தப்போட்டியில் பங்கேற்றனர், அதில் 400-க்கும் மேற்பட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உங்களுக்கு முன்பின் தெரியாத - தொலைதூர கிராமங்களில் நீங்கள் ஒரு வாரம் தங்கி இருந்தீர்கள். அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க முயற்சி செய்தீர்கள், அவர்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்தீர்கள், உங்கள் சொந்தப் பாரம்பரியத்தை அவர்களுடன் பிணைத்தீர்கள். 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' (Ek Bharat Shreshtha Bharat) தத்துவத்திற்கு இதுவே மிகச்சிறந்த சான்றாகும்.
நண்பர்களே,
இத்தீவிரமான அனுபவங்கள் தனிப்பட்ட முறையில் எனக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. நான் அரசு மற்றும் அரசியலில் இருந்து விலகி இருந்த காலத்தில், இதுபோன்ற எல்லைக் கிராமங்களுக்கு அடிக்கடிச் செல்வது உண்டு. அங்குள்ள பலரோடு இன்றளவும் நீடிக்கும் ஆழமான பிணைப்புகளை நான் ஏற்படுத்திக்கொண்டேன். அரசில் பொறுப்பேற்ற பின்னரும்கூட, எல்லைக் கிராமங்களுக்குச் செல்லும் வாய்ப்பை நான் ஒருபோதும் தவறவிடுவதில்லை. கடந்த 25 ஆண்டுகளாக, எனது தீபாவளிப் பண்டிகையை எல்லைப்புறங்களில் உள்ள நமது வீரம் செறிந்த வீரர்களுடன்தான் கொண்டாடி வருகிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
நீங்கள் சென்று வந்த கிராமங்களில் சில கிராமங்களுக்கு நானே நேரடியாகச் சென்று வந்திருக்கிறேன். நீங்கள் உங்கள் அனுபவங்களை விவரித்தபோது, அந்தப் பழைய நினைவுகள் என் கண்முன்னே தெளிவாக வந்து சென்றன. உங்களுடைய அனுபவங்களும் அதே அளவிற்கு ஊக்கமளிப்பதாக இருந்தன — சிலர் உயரமான மலைத்தொடர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் அழகைப் பற்றிப் பேசினீர்கள், சிலர் எல்லைக் கிராம மக்களின் அன்பு மற்றும் உபசரிப்பைப் பற்றிப் பேசினீர்கள், சிலர் குழந்தைகளின் கனவுகளைப் பற்றியும், சிலர் நமது ராணுவத்தின் துணிச்சல் மற்றும் கட்டுப்பாட்டை நேரில் கண்டதையும் பகிர்ந்துகொண்டீர்கள். உண்மையிலேயே, 'துடிப்பான கிராமங்கள்' வழங்கிய அனுபவம் அற்புதமானது.
தற்செயலாக, இன்று 'கார்கில் வெற்றி தினமாகும். மிகக் கடினமான சூழ்நிலையிலும் நமது வீரம் செறிந்த வீரர்கள் வெற்றி வாகை சூடிய கார்கில் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களுக்கு உங்களில் பலர் சென்று வந்துள்ளீர்கள். அதை நீங்கள் உங்கள் சொந்தக் கண்களால் பார்த்தீர்கள். இத்திட்டத்தின் ஒரு அங்கமாக இருந்து, இத்தகைய வளமான அனுபவங்களைப் பெற்ற உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,
ஒரு வளர்ச்சியடைந்த கிராமமே, வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளமாகும். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான பயணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது; இந்தப் பயணத்தில் இளைஞர்களின் பங்கு அளப்பரியது. இளைஞர்கள் கள நிலவரத்தோடு இணையும்போது, வளர்ச்சியடைந்த இந்தியா பற்றிய அவர்களின் பார்வை விரிவடைகிறது. அது தேசத்திற்காக வாழவும், நாட்டின் வளர்ச்சிக்குத் பங்களிக்கவும் அவர்களின் உறுதியை மேலும் வலுப்படுத்துகிறது.
நண்பர்களே,
இந்த இயக்கத்தின் போது, எல்லைக் கிராமங்களில் வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பதை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள். இருப்பினும், அனைத்துச் சிரமங்களுக்கு மத்தியிலும், அங்குள்ள மக்கள் ஒவ்வொரு கணமும் தேசபக்தியை தங்களது வாழ்கையில் வெளிபடுத்தி வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, எல்லைக் கிராமங்கள் "கடைசி கிராமங்கள்" என்று அழைக்கப்பட்டு, அவர்களின் விதி வழிக்கே கைவிடப்பட்டிருந்தன. சாலைகள், மின்சாரம், குடிநீர், பள்ளிகள், மருத்துவமனைகள் என அனைத்து அடிப்படை வசதிகளும் அங்கு இல்லாமல் இருந்தன. அங்கிருந்த மக்களிடம் இருந்து இதுபோன்ற பல கதைகளை நீங்கள் கேட்டிருக்கலாம். முந்தைய காலகட்டத்தின் நிலையைப் பற்றி அவர்கள் உங்களிடம் கூறியிருப்பார்கள். அத்தகைய சூழ்நிலையிலும் கூட, அவர்களின் தேசபக்தி எள்ளளவும் குறையவில்லை என்பதைக் கண்டு நாம் பெருமைப்பட வேண்டும்.
அதனால்தான், நண்பர்களே,
நமது அரசு இந்த எல்லைக் கிராமங்களை நாட்டின் முதல் கிராமங்களாகக் கருதியுள்ளது. காலைச் சூரியன் இந்தியாவை முதலில் வாழ்த்தும் மற்றும் சூரியனின் இறுதி கதிர்கள் இரவு வணக்கம் சொல்லும் கிராமங்கள் இவை. முவர்ணக் கொடி முதன்முதலில் காற்றோடு உரையாடும் இடம். உலகம் இந்தியாவை முதன்முறையாகப் பார்க்கும் இடம். இந்தச் சிந்தனை மாற்றம் நமது எல்லைப் பகுதிகளை உருமாற்றியுள்ளது. பல கிராமங்களில் சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரம் சென்று சேர்ந்துள்ளது, முதன்முறையாக சாலைகள் சென்றுள்ளன, வீடுகளுக்கு முதன்முறையாக குழாய் மூலம் குடிநீர் வந்துள்ளது, சமையலறைகளுக்கு முதன்முறையாக எரிவாயு இணைப்புகள் சென்று சேர்ந்துள்ளன. நகரங்களில் இவை சாதாரண விஷயங்களாகத் தோன்றலாம், ஆனால் அந்த மக்களுக்கு இவை வாழ்க்கையையே மாற்றியமைப்பவை. விவசாயிகள் மற்றும் பழத்தோட்ட உரிமையாளர்கள் இப்போது பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பெரிய சந்தைகளுக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடிகிறது. மேம்பட்ட இணைப்பு வசதி என்றால் வாழ்க்கை இனி நிற்பதில்லை - அது இடைவிடாமல் இயங்குகிறது என்று அர்த்தம். மேலும், இந்த தொலைதூர கிராமங்களிலும்கூட, சிறந்த இணைய இணைப்பு வசதி இப்போது கிடைப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதை நீங்கள் அவ்வளவு மகிழ்ச்சியுடன் விவரித்தீர்கள்.
நண்பர்களே,
ஒவ்வொரு வசதியும் மற்றொரு நன்மையையும் தருகிறது — இப்பகுதிகளில் சுற்றுலாத் துறை சிறந்து விளங்கி வருகிறது. ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிப் போயிருந்த கிராமங்கள் இப்போது மீண்டும் புத்துயிர் பெற்றுத் திகழ்கின்றன. பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்கிறார்கள். கல்விக்கும் வருவாய்க்கும் ஏற்ற நல்லதொரு சூழல் உருவாகி வருகிறது. 'துடிப்பான கிராமங்கள் திட்டம்' இந்த வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தி வருகிறது.

நண்பர்களே,
வளர்ச்சியடைந்த துடிப்பான கிராமங்களின் இந்தப் பயணம், எல்லோரையும் ஒன்றிணைக்கும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாகும். இப்போது உங்களுடைய பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளது. உங்களது பயணம் என்பது பங்களிப்பின் மூலம் ஏற்படும் ஒற்றுமையின் பயணம். இந்தியாவின் எல்லைக் கிராமங்களை நாட்டின் இளைஞர்கள் எந்தளவுக்கு அறிந்துகொள்கிறார்களோ, அந்தளவுக்கு அவர்கள் இந்தியாவைப் பற்றியும் எளிதாகப் புரிந்துகொள்வார்கள்; இந்தியாவின் ஒவ்வொரு பகுதியுடனும் தங்களை இணைத்துக்கொண்டு, தேசத்தை மேலும் வலுப்படுத்துவார்கள்.
நினைவில் கொள்ளுங்கள், அந்தக் கிராமங்களில் தங்குவதற்கு உங்களுக்கு விருந்தினர் இல்லங்களோ அல்லது விடுதிகளோ இருக்கவில்லை. கிராமம் முழுவதுமே உங்கள் உபசரிப்பாளராக மாறியது. மேலும் உங்களது தங்குதல் என்பது வெறும் தங்குமிடம் பற்றியது மட்டுமல்ல — அது ஒரு கலாச்சார வகுப்பறையாகவே மாறியது. வசதிகளை விட அதிக திருப்தியையும் மரியாதையையும் நீங்கள் பெற்றீர்கள். நீங்கள் அனுபவித்தவற்றை எந்தவொரு வகுப்பறையிலும் கற்றுக்கொள்ள முடியாது. இந்த அனுபவங்களைப் பிற இளைஞர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். எல்லைக் கிராமங்களுக்குச் சென்று வருமாறு அவர்களை ஊக்குவியுங்கள். அதிகமான இளைஞர்கள் அங்குச் சென்று தங்கத் தங்க, அவர்கள் தேசத்தை மேலும் அதிகமாகப் அறிந்து கொள்வார்கள், புரிந்துகொள்வார்கள். மக்கள் செல்லத் தொடங்கும்போது, அந்தத் தொலைதூரக் கிராமங்களுக்குத் தேவையான வசதிகள் இன்னும் வேகமான விகிதத்தில் சென்றடையும்.
நண்பர்களே,
நமது அரசு எல்லைக் கிராமங்களில் சுற்றுலாவை ஊக்குவித்து வருகிறது. நீங்கள் இந்த முயற்சிகளை மேலும் விரிவுபடுத்தலாம். உங்களில் ஒவ்வொருவரும் உங்களுடைய அனுபவங்களை குறைந்தபட்சம் 100 பிற இளைஞர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் சென்று வந்த அந்தப் பகுதி மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருங்கள். அங்கு நீங்கள் புகைப்படங்களோ அல்லது காணொளிகளோ எடுத்திருந்தால், அவற்றை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிருங்கள். அங்குள்ள இயற்கை மற்றும் கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்த உள்ளூர் படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள். நீங்கள் அங்கிருந்த உள்ளூர் தயாரிப்புகளைப் பார்த்திருந்தால், அவற்றை உங்கள் பகுதியில் எவ்வாறு விளம்பரப்படுத்துவது என்பது குறித்துச் சிந்தியுங்கள். இணையத்தில் ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன, ஆனால் உங்களால் மட்டுமே அந்தக் கிராமங்களைப் பற்றிய உண்மையான, நம்பகமான அறிவைப் பகிர்ந்து கொள்ள முடியும். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மீண்டும் அந்தக் கிராமங்களுக்குச் சென்று வாருங்கள். எல்லைக் கிராமங்களுக்குக் கல்விச் சுற்றுலாக்களை ஒருங்கிணைக்குமாறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர்களே,
உங்களைப் போன்ற இந்தியாவின் இளைஞர்கள்தான் 21ம் நூற்றாண்டின் உலகத்தை வடிவமைப்பார்கள் என்பதில் நான் எப்போதும் தீவிர நம்பிக்கை கொண்டவன். இதுவே இந்தியாவின் இளைஞர்களுக்கான உண்மையான இலக்கு. இன்றைய இளைஞர்கள் வளர்ந்த இந்தியாவின் ஆற்றலாகவும், அதன் மிகப்பெரிய பலனைப் பெறுபவர்களாகவும் திகழ்கிறார்கள். நாட்டின் சவால்கள் மற்றும் தீர்வுகளோடு இளைஞர்களின் சக்தி நேரடியாக இணையும் போது, நமது எதிர்காலம் நிச்சயமாக பிரகாசமாக அமையும். இந்த உணர்வோடு, உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி!


