"இந்தியாவும் இலங்கையும் ராஜீய மற்றும் பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகின்றன"
"படகு சேவை, அனைத்து வரலாற்று மற்றும் கலாச்சார தொடர்புகளையும் உயிர்ப்பித்துக் கொண்டுவருகிறது"
“இணைப்பு என்பது இரண்டு நகரங்களை நெருக்கமாகக் கொண்டுவருவது மட்டுமல்ல. இது நமது நாடுகளை, நமது மக்களை, நமது இதயங்களை நெருக்கமாகக் கொண்டுவருகிறது"
"முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான கூட்டு என்பது இந்தியா - இலங்கை இருதரப்பு உறவின் வலுவான தூண்களில் ஒன்றாகும்"
"இலங்கையில், இந்தியாவின் உதவியுடன் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மக்களின் வாழ்க்கையை உணர்வுபூர்வமாகத் தொட்டுள்ளது"

இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவையை இன்று காணொலிக் காட்சி  மூலம் தொடங்கி வைத்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவும் இலங்கையும் ராஜீய மற்றும் பொருளாதார உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது என்றும், நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே படகு சேவையைத் தொடங்குவது உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் நாகரீகத்தின் பகிரப்பட்ட வரலாற்றை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், நாகப்பட்டினமும் அருகிலுள்ள நகரங்களும் இலங்கை உள்பட பல நாடுகளுடன் கடல் வணிகத்திற்குப் பெயர் பெற்றவை என்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பூம்புகார் துறைமுகம் ஒரு மையமாகப் பண்டைய தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் சங்க இலக்கியங்களான பட்டினப்பாலை, மணிமேகலை போன்றவை  இரு நாடுகளுக்கும் இடையே படகுகள் மற்றும் கப்பல்கள் போக்குவரத்தை விவரிக்கின்றன என்றும் கூறினார். இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் பாலத்தைக் குறிப்பிடும் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் ‘சிந்து நதியின் மிசை’ பாடலையும் அவர் குறிப்பிட்டார். படகு சேவையானது அந்த வரலாற்று மற்றும் கலாச்சாரத் தொடர்புகளை உயிர்ப்பிப்பதாக அவர் மேலும் கூறினார்.

 

அதிபர் விக்கிரமசிங்கவின் அண்மைப்  பயணத்தின் போது, போக்குவரத்துத் தொடர்பு  என்ற மையப்பொருளுடன் பொருளாதாரக் கூட்டாண்மைக்கான தொலைநோக்கு ஆவணம் ஒன்று கூட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகப் பிரதமர் தெரிவித்தார். “இணைப்பு என்பது இரண்டு நகரங்களை நெருக்கமாகக் கொண்டுவருவது மட்டுமல்ல. இது நமது நாடுகளை, நமது மக்களை, நமது இதயங்களை நெருக்கமாகக்  கொண்டு வருகிறது” என்று திரு மோடி கூறினார். இரு நாட்டு இளைஞர்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில், வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்களிடையேயான உறவுகளை இணைப்பு மேம்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

2015ம் ஆண்டு தில்லிக்கும் கொழும்புக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டபோது, தாம் இலங்கைக்குப்  பயணம் செய்ததைப் பிரதமர் நினைவுகூர்ந்தார். இலங்கையிலிருந்து புனித யாத்திரை நகரமான குஷிநகரில் முதல் சர்வதேச விமானம் தரையிறங்கியது கொண்டாடப்பட்டது என்று .அவர் மேலும் கூறினார்.  சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே நேரடி விமான சேவை 2019ல் தொடங்கியது என்றும், இந்த திசையில் இப்போது, நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையேயான படகு சேவை மற்றொரு முக்கியமான செயலாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவும் இலங்கையும் ஃபின்-டெக், எரிசக்தி போன்ற பரந்த அளவிலான துறைகளில் நெருக்கமாக ஒத்துழைப்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர் "இணைப்புக்கான எங்கள் பார்வை போக்குவரத்துத் துறைக்கு அப்பாற்பட்டது" என்பதை வலியுறுத்தினார். இந்தியாவில் யுபிஐ காரணமாக டிஜிட்டல் பணப்  பரிவர்த்தனை ஒரு வெகுஜன இயக்கமாகவும் வாழ்க்கை முறையாகவும் மாறியுள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, யுபிஐ மற்றும் லங்கா-பே  இணைப்பின்  மூலம் இரு அரசுகளும் ஃபின்-டெக் துறை இணைப்புக்குப் பணியாற்றுவதாகத் தெரிவித்தார். இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளின் வளர்ச்சிப் பயணத்திற்கு எரிசக்திப் பாதுகாப்பு முக்கியமானது என்பதால், எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த இரு நாடுகளுக்கு இடையேயான எரிசக்தி கட்டமைப்புகள் இணைப்பையும் அவர் எடுத்துரைத்தார்.

இந்தியா - இலங்கை இருதரப்பு உறவின் வலுவான தூண்களில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான கூட்டாண்மையும் ஒன்று எனப் பிரதமர் மோடி கூறினார். யாரையும் விட்டுவிடாமல், அனைவரிடமும் வளர்ச்சியை எடுத்துச் செல்வதே எங்களின் நோக்கமாகும், என்றார். இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் மக்களின் வாழ்க்கையை உணர்வுபூர்வமாகத் தொட்டதாகப் பிரதமர் குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்தில் வீடுகள், குடிநீர், சுகாதாரம் மற்றும் வாழ்வாதார உதவி தொடர்பான பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு ஆதரவளிப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார். “வடக்கையும் தெற்கையும் இணைக்கும் ரயில் பாதைகளை மறுசீரமைத்தல்; யாழ் கலாச்சார நிலையத்தை நிர்மாணித்தல்; இலங்கை முழுவதும் அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை நடைமுறைப்படுத்துதல்; அல்லது டிக் ஓயாவில் உள்ள பன்னோக்கு உயர்சிகிச்சை மருத்துவமனையைத் தொடங்குதல் என்பதில்  அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி ஆகியவற்றின் பார்வையுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று திரு மோடி மேலும் கூறினார்.

 

அண்மையில்  இந்தியா நடத்திய ஜி 20 உச்சி மாநாடு குறித்துப் பேசிய பிரதமர், சர்வதேச சமூகத்தால் வரவேற்கப்பட்ட வசுதைவ குடும்பம் பற்றிய இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்தார். இந்தத் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதி, அண்டை நாடுகளுடன் முன்னேற்றம் மற்றும் வளத்தைப்  பகிர்ந்து கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஜி 20 மாநாட்டின் போது இந்தியா-மத்தியக் கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் தொடங்கியதையும் குறிப்பிட்ட அவர், இது ஒரு முக்கியமான இணைப்பு வழித்தடமாகும் என்றும் இது முழு பிராந்தியத்திலும் மிகப்பெரும் பொருளாதார தாக்கத்தை உருவாக்கும் என்றும் கூறினார். இரு நாடுகளுக்கிடையேயான பலதரப்பட்ட தொடர்புகள் வலுவடைந்து வருவதால் இலங்கை மக்களும் இதன் மூலம் பயனடைவார்கள் என்று பிரதமர் தெரிவித்தார். படகு சேவையை இன்று வெற்றிகரமாகத் தொடங்கியமைக்காக இலங்கை அதிபர், அரசு மற்றும் மக்களுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார். ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே படகு சேவையை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் குறித்தும் அவர் பேசினார். "நமது மக்களின் பரஸ்பர நலனுக்காக  இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது" என்று கூறிப் பிரதமர் தனது உரையை நிறைவுசெய்தார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India accelerates ‘semiconductor drive’ with Rs 1.64 lakh crore investment plan

Media Coverage

India accelerates ‘semiconductor drive’ with Rs 1.64 lakh crore investment plan
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 29, 2026
June 29, 2026

PM Modi Advancing National Strength Through Unity, Innovation and Janbhagidari