குஜராத்தில் உள்ள சோமநாத்துக்கு 2026, ஜனவரி 10-11 தேதிகளில் செல்லும் பிரதமர் திரு நரேந்திர மோடி சோமநாதர் சுயமரியாதை விழாவில் பங்கேற்பார். ஜனவரி 10 அன்று இரவு சுமார் 8 மணியளவில், பிரதமர் ஓம்கார் மந்திரம் பாராயணம் நிகழ்வில் பங்கேற்பார். பின்னர் சோமநாதர் ஆலயத்தில் ட்ரோன் நிகழ்ச்சியைப் பார்வையிடுவார்.
சோமநாதர் ஆலயத்தைப் பாதுகாத்து உயிர்த் தியாகம் செய்த எண்ணற்ற வீரர்களை கௌரவிக்கும் வகையில் ஜனவரி 11 அன்று காலை சுமார் 9:45 மணியளவில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரம்பரிய வீர யாத்திரையில் பிரதமர் பங்கேற்பார். இந்த யாத்திரையில் வீரம் மற்றும் தியாகத்தைப் பிரதிபலிக்கும் 108 குதிரைகளின் அடையாள ஊர்வலம் இடம்பெறும். அதன் பின், காலை சுமார் 10:15 மணியளவில் பிரதமர் சோமநாதர் ஆலயத்தில் தரிசனம் மற்றும் பூஜை செய்வார். காலை சுமார் 11 மணியளவில், சோமநாத்தில் நடைபெறும் பொது நிகழ்வில் பங்கேற்று பிரதமர் உரையாற்றுவார்.
கஜினி முகமது 1026-ம் ஆண்டு சோமநாதர் ஆலயத்தின் மீது படையெடுத்து 1,000 ஆண்டுகள் நிறைவடைந்ததை இந்த நிகழ்ச்சி குறிக்கிறது. பல நூற்றாண்டுகளாக அதன் அழிவுக்குப் பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், கூட்டான உறுதிப்பாடு மற்றும் அதன் பழம்பெருமையை மீட்டெடுக்கும் முயற்சிகள் காரணமாக இன்று மீள்தன்மை, நம்பிக்கை மற்றும் தேசப் பெருமிதத்தின் சக்திவாய்ந்த அடையாளமாக சோமநாதர் ஆலயம் நிற்கிறது


