உலகத்தரம் வாய்ந்த விமான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், இணைப்பை மேம்படுத்துவதற்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜூன் 2 ஆம் தேதி மாலை 5 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெறும் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (ஐஏடிஏ) 81வது வருடாந்திர பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவார்.
சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் 81வது வருடாந்திர பொதுக் குழு கூட்டம் மற்றும் உலக விமானப் போக்குவரத்து உச்சிமாநாடு ஜூன் 1 முதல் 3 வரை நடைபெறும். இந்தியாவில் 42 ஆண்டுகளுக்கு முன்பு, 1983 இல் பொதுக் குழு கூட்டம் கடைசியாக நடைபெற்றது. இது உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையின் உயர்மட்டத் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் சர்வதேச ஊடக பிரதிநிதிகள் உட்பட 1,600 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கிறது.
விமானத் துறையின் பொருளாதாரம், விமான இணைப்பு, எரிசக்தி பாதுகாப்பு, நிலையான விமான எரிபொருள் உற்பத்தி, கார்பன் குறைப்பிற்கு நிதி உதவி, புத்தாக்கம் உள்ளிட்ட விமானத் துறை எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளில் உலக விமானப் போக்குவரத்து உச்சிமாநாடு கவனம் செலுத்தும். உலகெங்கிலும் உள்ள விமானப் போக்குவரத்துத் தலைவர்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள், இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தையும், நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பையும் காண வாய்ப்பு கிடைக்கும்


