மனதின் குரல், 75ஆவது பகுதி

Published By : Admin | March 28, 2021 | 11:30 IST
75 episodes of Mann Ki Baat: PM Modi thanks people for making the programme a success
Last year around this time, people made Janata Curfew a success: PM Modi Through efforts like clapping, beating thalis and lighting lamps, people encouraged the Corona Warriors: PM Modi
It is a matter of pride that the world's largest vaccination drive is being carried out in India: PM Modi
From education to entrepreneurship, Armed Forces to Science & Technology, the daughters of our country are leading in every sphere: PM Modi
71 Light Houses have been identified in India to promote tourism: PM Modi
Modernisation in India's agriculture sector is need of the hour: PM Modi
Urge farmers to practice bee-farming: PM Modi

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்காக வரும் கடிதங்கள், கருத்துக்கள், பலவகையான உள்ளீடுகளின் மீது இந்த முறை பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்த போது, ஒரு மகத்துவம் வாய்ந்த விஷயம் பற்றி பலர் எனக்கு நினைவு படுத்தியிருந்தார்கள். MyGov தளத்திலே ஆர்யன் ஸ்ரீ, பெங்களூருவிலிருந்து அனூப் ராவ், நோய்டாவைச் சேர்ந்த தேவேஷ், டாணேவின் சுஜித் ஆகிய இவர்கள் அனைவரும், மனதின் குரலின் 75ஆவது பகுதிக்காக மோதிஜி, உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இத்தனை நுணுக்கமாக மனதின் குரலைப் பின்பற்றி வருகிறீர்கள், இதோடு இணைந்து வந்திருக்கிறீர்கள் என்பதை அறிந்து உங்களுக்கெல்லாம் நான் மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு மிகுந்த பெருமிதமும் சந்தோஷமும் அளிக்கும் விஷயம். மனதின் குரல் நேயர்கள் அனைவருக்கும் நான் என் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்; ஏனென்றால் நீங்கள் என்னுடன் பயணிக்கவில்லையென்றால் இது சாத்தியப்பட்டிருக்காது. இந்தக் கருத்துப் பயணத்தை நாமனைவரும் ஏதோ நேற்றுத்தான் தொடங்கியது போல இருக்கிறது. அக்டோபர் மாதம் 3ஆம் தேதி 2014ஆம் ஆண்டிலே விஜயதசமி நன்னாளன்று நாம் இதைத் தொடங்கினோம்; ஆனால் பாருங்கள் இன்று ஹோலிகா தகனம். ஒரு தீபத்திலிருந்து மற்றது ஏற்றப்படட்டும், நமது தேசம் ஒளி பெறட்டும் என்ற உணர்வை மனதிலே தாங்கியே நாம் நமது பாதையைத் தீர்மானித்தோம். நாம் தேசத்தின் பல்வேறு மூலைகளில் இருக்கும் மக்களோடு பேசினோம், அவர்களின் அசாதாரணமான செயல்களைப் பற்றித் தெரிந்து கொண்டோம். நமது தேசத்தின் தொலைதூர மூலைகளிலும் கூட, எத்தனை அசாதாரணமான திறமைகள் மறைந்து உறைகின்றன என்பதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். பாரத அன்னையின் மடியில் எப்படிப்பட்ட ரத்தினங்கள் ஒளிவீசி வருகின்றன. ஒரு சமூகத்தைப் பார்க்கவும், தெரிந்து கொள்ளவும், சமூகத்தின் திறமைகளை அடையாளம் காணவும் மனதின் குரல் எனக்கு ஒரு அற்புதமான அனுபவமாக அமைந்தது. இந்த 75 பகுதிகள் வாயிலாக எத்தனையோ விஷயங்களை நாம் கடந்து வந்தோம். சில வேளைகளில் நதிகளைப் பற்றி, சில சமயங்களில் இமயத்தின் சிகரங்களைப் பற்றி, சில வேளைகளில் பாலைவனங்களைப் பற்றி என்றால், சில சமயங்களில் இயற்கைச் சீற்றங்கள் பற்றி, சில வேளைகளில் மனித சேவையின் எண்ணில்லாக் கதைகளை அனுபவித்தோம், சில சமயங்களில் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், சில வேளைகளில் யாருமறியா ஒரு மூலையில், ஏதோ ஒன்றை சாதிக்கத் துடிப்பவருடைய அனுபவப் பாடம். சரி இப்போது தூய்மை பற்றிப் பேசினோம் என்றால், அது நமது பாரம்பரியத்தைப் பாதுகாப்பது பற்றியாகட்டும், விளையாட்டு பொம்மைகள் தயாரிப்பது ஆகட்டும்….. எது தான் இல்லை சொல்லுங்கள்!! ஒருவேளை நாம் கடந்து வந்த பாதையின் சம்பவங்கள் பற்றி பட்டியலிடத் தொடங்கினோம் என்றால் அவை எண்ணிக்கையில் அடங்காமலும் போகலாம். இந்தப் பயணத்தின் போது நாம் அவ்வப்போது பாரத நாட்டின் உருவாக்கத்திற்கு ஈடு இணையற்ற பங்களிப்பு நல்கிய, மகத்தான மாமனிதர்களுக்கு நமது சிரத்தாஞ்சலிகளைச் செலுத்தினோம், அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டோம். நாம் உலகம் தழுவிய பல விஷயங்கள் குறித்தும் பேசினோம், அவற்றிலிருந்து கருத்தூக்கம் அடைய முயன்றோம். பல விஷயங்களை நீங்கள் என்னோடு பகிர்ந்து கொண்டீர்கள், பல கருத்துக்களை எனக்கு அளித்திருக்கின்றீர்கள். ஒரு வகையில், இந்தக் கருத்துக்களின் பயணத்தில், நீங்களும் என்னோடு பயணித்தீர்கள், என்னோடு இணைந்து வந்தீர்கள், புதியதாக ஏதாவது ஒன்றை இணைத்துக் கொண்டே இருந்தீர்கள். மனதின் குரலை வெற்றி அடையச் செய்தமைக்கும், நிறைவடையச் செய்தமைக்கும், இதோடு இணைந்திருந்தமைக்கும், இன்றைய இந்த 75ஆவது பகுதியில் ஒவ்வொரு நேயருக்கும் நான் எனது மனப்பூர்வமான நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றேன்.

என் இனிய நாட்டுமக்களே, இன்று நாம் 75ஆவது மனதின் குரலை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் வேளையில், இதே மாதத்தில் நாடு விடுதலை அடைந்த தனது 75ஆவது ஆண்டினை அம்ருத் மஹோத்சவம் என்ற பெயரில் தொடங்கியிருக்கிறது. அம்ருத் மஹோத்சவம், தண்டி யாத்திரை மேற்கொள்ளப்பட்ட தினத்தன்று தொடங்கப்பட்டது, இது 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை நடக்கும். அம்ருத் மஹோத்சவத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் நாடெங்கிலும் தொடர்ந்து நடந்து வருகின்றன, பல்வேறு இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் குறித்த படங்கள், தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. நமோ செயலியில் இப்படிப்பட்ட படங்களோடு கூடவே ஜார்க்கண்டின் நவீன் எனக்கு ஒரு செய்தியையும் அனுப்பியிருக்கிறார். அம்ருத் மஹோத்சவ நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு விடுதலைப் போராட்டத்தோடு தொடர்புடைய குறைந்தபட்சம் பத்து இடங்களுக்கேனும் தான் செல்ல முடிவு செய்திருப்பதாக இவர் தெரிவித்திருக்கிறார். அவருடைய பட்டியலில் முதல் பெயர், பகவான் பிர்ஸா முண்டா பிறந்த இடம். ஜார்க்கண்டின் பழங்குடியினத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் கதைகளை, நாட்டின் வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் தான் கொண்டு சேர்ப்பேன் என்றும் நவீன் அவர்கள் எழுதியிருக்கிறார். சகோதரர் நவீன் அவர்களே, உங்களின் நல்லெண்ணத்திற்கு நான் உங்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.

நண்பர்களே, எந்த ஒரு சுதந்திரப் போராட்டவீரர் பற்றிய சரிதமாகட்டும், எந்த ஒரு இடத்தின் வரலாறாகட்டும், தேசத்தின் எந்த ஒரு கலாச்சாரக் கதையாகட்டும், அம்ருத் மஹோத்சவ வேளையில், நீங்கள் அவற்றை தேசத்தின் முன்னிலைக்குக் கொண்டு வரலாம், நாட்டுமக்களை அதோடு இணைக்கும் ஊடகமாக ஆகலாம். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அம்ருத் மஹோத்சவம் எத்தனை உத்வேகம் அளிக்கும் அமிர்தச் சொட்டுக்களால் நிரம்பி, அமிர்தம் பெருக்கெடுத்து ஓடும், நாடு சுதந்திரம் அடைந்து தனது 100 ஆண்டுகளை எட்டும்வரை நமக்கு இது உத்வேகம் அளித்துக் கொண்டே இருக்கும். தேசத்தைப் புதிய சிகரங்களுக்கு இட்டுச் செல்லும், ஏதோ ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற தாகத்தை ஏற்படுத்தும். சுதந்திரப் போராட்டத்தின் போது நமது தேசபக்தர்கள் ஏன் இத்தனை கஷ்டங்களை சகித்துக் கொண்டார்கள் என்றால், தேசத்தின் பொருட்டு தியாகமும், உயிரளிப்பும் புரிவதைத் தங்களுடைய கடமையாக அவர்கள் கருதியதால் தான். அவர்களுடைய தியாகமும் உயிரளிப்பும் பற்றிய அமரக்கதைகள், எக்காலத்தும் கடமைப்பாதையிலிருந்து நாம் விலகாதிருக்க இப்பொழுது நமக்கெல்லாம் உத்வேகம் அளிக்கட்டும். பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே கூட –

नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मण:

நியதம் குரு கர்மத்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:

என்று கூறியிருக்கிறார். இதே உணர்வுடன் நாம் நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை முழு ஈடுபட்டோடு பின்பற்றி ஒழுக வேண்டும். நாம் புதிய உறுதிப்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என்பதே சுதந்திர வைரவிழாவின் - அம்ருத மஹோத்சவத்தின் மெய்ப்பொருள். இந்த உறுதிப்பாட்டினை மெய்யாக்க, நாம் நமது உடல் பொருள் ஆவியனைத்தையும் ஈடுபடுத்த வேண்டும். நமது உறுதிப்பாடு என்னவாக இருக்க வேண்டுமென்றால், அது சமூகநலனை ஒட்டியே, தேசத்தின் நலனைச் சார்ந்தே, பாரதத்தை ஒளிமயமான எதிர்காலத்திற்கானதாகவே இருக்க வேண்டும். மேலும் இதில், நான், நானே என் முயல்வாக ஆற்றக்கூடிய பொறுப்பு-கடமை, இந்த உறுதிப்பாட்டில் இருக்க வேண்டும். கீதையை வாழ்ந்து காட்டும் ஒரு பொன்னான வாய்ப்பு நம்மிடத்திலே இருக்கிறது என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.

என் மனம் நிறை நாட்டுமக்களே, கடந்த ஆண்டு மார்ச் மாதம், தேசத்தில் முதன்முறையாக மக்கள் ஊரடங்கு என்ற சொல்லாட்சியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த மகத்தான தேசத்தின் மகத்தான மக்களின் மகாசக்தியின் அனுபவத்தைப் பாருங்கள். மக்கள் ஊரடங்கு உலகனைத்தையும் ஓர் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒழுங்குமுறையின் அபூர்வமான எடுத்துக்காட்டாக அது இருந்தது; இனிவரும் தலைமுறையினருக்கு, இந்த ஒரு விஷயமே கூட பெருமிதத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். இதைப் போலவே நமது கொரோனா முன்னணி வீரர்களுக்கு மரியாதை, கௌரவம், தட்டுக்களைத் தட்டுதல், தீபமேற்றுதல் போன்றவையும். கொரோனாவுக்கு எதிரான போரின் முன்னணி வீரர்கள் இதயங்களை இது எந்த அளவுக்குத் தொட்டிருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இவற்றின் காரணமாகத் தான் ஆண்டு முழுவதும் அவர்கள் களைக்காமல், சளைக்காமல், தடைப்படாமல், விடாமுயற்சியோடு போராடி வந்தார்கள். தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுடைய உயிரைக் காக்க, முழுமூச்சோடு போராடினார்கள். கடந்த ஆண்டு இதே வேளையில் வினா என்னவாக இருந்தது – கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி எப்போது வரும் என்பதே அது. நண்பர்களே, இன்று பாரதம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டத்தை களத்தில் செயல்படுத்தி வருகிறது என்பது அனைவருக்கும் பெருமிதம் அளிக்கும் விஷயம். தடுப்பூசித் திட்டம் தொடர்பான படங்கள் குறித்து புபனேஷ்வரைச் சேர்ந்த புஷ்பா ஷுக்லா அவர்கள் எனக்கு எழுதியிருக்கிறார். வீட்டில் இருக்கும் மூத்த குடிமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள எத்தனை ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது குறித்து நான் மனதின் குரலில் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நண்பர்களே, தேசத்தின் மூலைமுடுக்கெங்கிலிருந்தும் நாம் கேள்விப்படும் செய்திகள், காணும் படங்கள் எல்லாம் நம் இதயத்தைத் தொடும் வகையில் இருக்கின்றன. உத்தர பிரதேசத்தின் ஜௌன்புரைச் சேந்த 109 வயது நிரம்பிய முதிய தாயான ராம் துலையா அவர்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். இவரைப் போலவே, தில்லியைச் சார்ந்த 107 வயது நிரம்பிய கேவல் கிருஷ்ணா அவர்களும் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். ஹைதராபாதைச் சேர்ந்த 100 வயதான ஜெய் சௌத்ரி அவர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டதோடு மட்டுமல்லாமல், அனைவரும் தடுப்பூசியைக் கண்டிப்பாகப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று மற்றவர்களிடம் கோரிக்கையையும் விடுத்திருக்கிறார். தங்கள் வீடுகளில் இருக்கும் மூத்தோருக்குத் தடுப்பூசி போட்ட பிறகு, அவர்களின் புகைப்படங்களை எப்படி ட்விட்டர், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் மக்கள் தரவேற்றம் செய்கிறார்கள் என்பதை என்னால் காண முடிகிறது. கேரளத்தைச் சேர்ந்த இளைஞரான ஆனந்தன் நாயர் இதற்கு, vaccine seva, தடுப்பூசி சேவை என்ற ஒரு புதிய சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். இதே போன்ற செய்தியை, தில்லியைச் சேர்ந்த ஷிவானி, ஹிமாச்சலைச் சேர்ந்த ஹிமான்ஷு ஆகிய மேலும் பல இளைஞர்களும் அனுப்பியிருக்கிறார்கள். இந்தக் கருத்துக்களுக்காக நான் நேயர்களான உங்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவையனைத்திற்கும் இடையே, மருந்தும் தேவை எச்சரிக்கையும் தேவை, என்ற கொரோனாவுக்கு எதிரான போரின் மந்திரத்தை மறந்து விடாதீர்கள். நான் சொல்ல மட்டும் வேண்டும் என்பதல்ல. நாம் வாழவும் வேண்டும், பேசவும் வேண்டும், கூறவும் வேண்டும், மருந்தும் தேவை எச்சரிக்கையும் தேவை என்ற மந்திரத்தை மக்கள் மத்தியில் பரவச் செய்ய வேண்டும்.

என் நேசம் நிறை நாட்டுமக்களே, இந்தோரில் வசிக்கும் சௌம்யா அவர்களுக்கு நான் இன்று என் நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். அவர் ஒரு விஷயம் குறித்து என் கவனத்தை ஈர்த்திருக்கிறார், இதைப் பற்றி மனதின் குரலில் நான் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். பாரதத்தின் கிரிக்கெட் வீராங்கனையான மித்தாலி ராஜ் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் புதிய பதிவைப் பற்றி நான் பேச வேண்டும் என்பதே அது. மித்தாலி அவர்கள் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களைக் குவித்திருக்கும் முதல் இந்தியப் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். அவருடைய இந்த சாதனைக்காக பலப்பல பாராட்டுக்கள். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஏழாயிரம் ஓட்டங்களைப் பெற்றிருக்கும் ஒரே சர்வதேச பெண் கிரிக்கெட் வீராங்கனை இவர் தான். பெண்கள் கிரிக்கெட் துறையில் இவருடைய பங்களிப்பு மிகவும் அபாரமானது. இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமான இவருடைய விளையாட்டுத் துறைப் பங்களிப்பில், மித்தாலி ராஜ் அவர்கள் ஆயிரக்கணக்கான-இலட்சக்கணக்கானோரின் உத்வேகத்திற்குக் காரணமாக இருந்திருக்கிறார். இவருடைய கடினமான உழைப்பு மற்றும் வெற்றி பற்றிய கதை, பெண் கிரிக்கெட் வீராங்கனைகனைகளுக்கு மட்டுமல்ல, ஆண் கிரிக்கெட் வீரர்களுக்குமே கூட கருத்தூக்கம் அளிக்கும் ஒன்று.

நண்பர்களே, இதே மார்ச் மாதம், நாம் மகளிர் தினத்தைக் கொண்டாடிய போது, பல பெண் விளையாட்டு வீராங்கனைகள், பதக்கங்களுக்கும், பதிவுகளுக்கும் சொந்தக்காரர்களாகி இருக்கிறார்கள் என்பது சுவாரசியமான விஷயம். தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ISSF உலகக் கோப்பைக்கான துப்பாக்கிச் சுடும் போட்டியில், பாரதம் முதலிடத்தை வகித்தது. தங்கப் பதக்கங்களை ஈட்டுவதிலும் பாரதம் முன்னணி வகித்தது. இவையனைத்தும் பாரதத்தின் பெண் மற்றும் ஆண் துப்பாக்கி சுடும் வீரர்களின் அருமையான செயல்பாட்டினால் மட்டுமே சாத்தியமானது. இதற்கிடையில் பி.வி. சிந்து அவர்களும் BWF Swiss Open Super 300 பந்தயத்திலும், வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறார். கல்வி தொடங்கி தொழில்முனைவு வரை, போர்ப்படைகள் தொடங்கி அறிவியல் தொழில்நுட்பம் வரை, அனைத்துத் துறைகளிலும் நாட்டின் பெண் – மணிகள், தங்களுக்கென தனியொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். விளையாட்டுக்களில் தங்களுக்கென ஒரு புதிய இடத்தை இவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். Professional Choice, தொழிலார்ந்த தேர்வு என்ற வகையில், விளையாட்டுக்கள் ஒரு விருப்பமாக மாறி வருகிறது.

எனதருமை நாட்டுமக்களே, சிலகாலம் முன்பாக நடந்த Maritime India Summit, கடல்சார் இந்தியா உச்சிமாநாடு உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த உச்சிமாநாட்டில் நான் என்ன கூறினேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஏகப்பட்ட நிகழ்ச்சிகள், ஏராளமான விஷயங்களுக்கு இடையே ஒவ்வொரு விஷயமும் நினைவில் இல்லாமல் போகலாம், அத்தனை கவனம் இல்லாது போக நேரலாம், இவை இயல்பானது தான். ஆனால், என்னுடைய வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து, குரு பிரசாத் அவர்கள் மிகவும் சுவாரசியமான முறையிலே இதை முன்னெடுத்துப் போயிருக்கிறார். கலங்கரை விளக்கு வளாகங்களுக்கு அருகிலே சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவது குறித்து நான் உரையாற்றியிருந்தேன். குரு பிரசாத் அவர்கள் தமிழ்நாட்டின் இரண்டு கலங்கரை விளக்கங்களை – சென்னை கலங்கரை விளக்கம் மற்றும் மஹாபலிபுரம் கலங்கரை விளக்கம் குறித்த தனது 2019ஆம் ஆண்டு பயண அனுபவங்களைத் தெரிவித்திருக்கிறார். அவர் மிகவும் சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார், இது மனதின் குரலைக் கேட்போரை ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைக்கும். சென்னையில் இருக்கும் கலங்கரை விளக்கம், உலகிலேயே elevator, மின்தூக்கி இருக்கும் வெகுசில கலங்கரை விளக்கங்களில் ஒன்று. இதுமட்டுமல்ல, நகர எல்லைக்குள்ளே அமைந்திருக்கும் இந்தியாவின் ஒரே கலங்கரை விளக்கம் இது மட்டுமே. இதிலே விளக்கிற்காக சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. குரு பிரசாத் அவர்கள் கலங்கரை விளக்கத்தின் பாரம்பரிய அருங்காட்சியகம் பற்றியும் தெரிவித்திருக்கிறார், இது கடல்சார் திசையறிதல் வரலாற்றினை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அருங்காட்சியகத்தில் எண்ணையால் எரியும் பெரிய பெரிய திரிகள், சீமெண்ணெய் விளக்குகள், பெட்ரோலியம் ஆவி மற்றும் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மின் விளக்குகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. பாரதநாட்டின் மிகப் பழமையான மஹாபலிபுரம் கலங்கரை விளக்கம் குறித்தும் குரு பிரசாத் அவர்கள் விரிவாக எழுதியிருக்கிறார். இந்த கலங்கரை விளக்கத்தின் அருகிலே, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பாக, பல்லவ அரசனான முதலாம் மகேந்திரவர்மன் கட்டிய உலகனீஸ்வரர் ஆலயம் உள்ளது.

நண்பர்களே, மனதின் குரலின் போது, சுற்றுலாவின் பன்முகத்தினைப் பற்றி அநேக முறைகள் கூறியிருக்கிறேன்; ஆனால் இந்தக் கலங்கரை விளக்கம், சுற்றுலா என்பதையும் தாண்டி தனித்தன்மை வாய்ந்தது. அவற்றின் பிரும்மாண்டமான கட்டுமானம் காரணமாக கலங்கரை விளக்கங்கள் எப்போதுமே மக்களின் கவனத்தை ஈர்க்கும் மையங்களாக இருந்து வந்துள்ளன. சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்க, பாரதமும் 72 கலங்கரை விளக்கங்களை அடையாளம் கண்டுள்ளது. இந்தக் கலங்கரை விளக்கங்கள் அனைத்திலும், அவற்றின் சாத்தியக்கூறுகளுக்கு ஏற்ப, அருங்காட்சியகம், amphi theatreகள், திறந்தவெளித் திரையரங்குகள், சிற்றுண்டியகம், சிறுவர் பூங்கா, சூழலுக்கு நேசமான குடில்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தைப் பசுமையால் அழகுபடுத்தல் போன்றவை ஏற்படுத்தப்படும். கலங்கரை விளக்கங்கள் பற்றிப் பேசும் வேளையில், நானும் ஒன்றைப் பற்றித் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தக் கலங்கரை விளக்கம் குஜராத்தின் சுரேந்திர நகர் மாவட்டத்தின் ஜிஞ்ஜுவாடா என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. இந்தக் கலங்கரை விளக்கம் ஏன் சிறப்பானது தெரியுமா? ஏன் சிறப்பானது என்றால், இந்தக் கலங்கரை விளக்கம் எங்கே இருக்கிறதோ, அங்கிருந்து 100 கி.மீட்டருக்கும் மேற்பட்ட தொலைவில் கடற்கரை இப்போது இருப்பது தான். ஒரு காலத்தில் இங்கே மிகவும் சுறுசுசுறுப்பாக இயங்கிவந்த துறைமுகம் ஒன்று இருந்திருக்கிறது என்பதைத் தெரிவிக்கும் கற்களும் இங்கே காணக் கிடைக்கின்றன. அதாவது, இதன் பொருள் என்னவென்றால், முன்னதாக கரையோரம் ஜிஞ்ஜுவாடா வரை இருந்திருக்கிறது. கடல் வற்றிப் போதல், கடல் பெருக்கு, பின்வாங்குதல், இத்தனை தொலைவு விலகிப் போதல், இதுவும் அதன் ஒரு இயல்பு தான். இதே மாதத்தில் தான் ஜப்பானை பத்தாண்டுகளுக்கு முன்பாக பயங்கரமான சுனாமி தாக்கியது. இந்த சுனாமியில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தார்கள். இதே போன்றதொரு சுனாமி பாரதத்தில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்டது. சுனாமியின் போது நமது கலங்கரை விளக்கங்களில் பணியாற்றிய 14 பணியாளர்களை இழந்தோம், அந்தமான் நிகோபாரிலும், தமிழ்நாட்டிலும் உள்ள கலங்கரை விளக்கங்களில் அவர்கள் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். கடுமையாக உழைக்கும் நமது இந்த light keeperகள் – கலங்கரை விளக்கப் பணியாளர்களுக்கு நாம் மரியாதை கலந்த நினைவாஞ்சலிகளை அளிப்பதோடு, இந்த light keeperகளின் பணிக்கு நிறைவான பாராட்டுதல்களையும் தெரிவிப்போம்.

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும், புதுமை, நவீனம் ஆகியவை மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது; இல்லையென்றால் வாழ்க்கையே நமக்கு ஒரு சுமையாகி விடக்கூடும். பாரதத்தின் விவசாயத் துறையில், நவீனமயமாக்கல் என்பது காலத்தின் தேவை. மிகத் தாமதமாகி விட்டது. நாம் பல காலத்தை விரயம் செய்து விட்டோம். விவசாயத் துறையில் வேலைவாய்ப்புக்களுக்கான புதிய சந்தர்ப்பங்களை உருவாக்கவும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும், பாரம்பரியமான விவசாயத்தோடு கூடவே, புதிய சாத்தியக்கூறுகளையும், புதிய கண்டுபிடிப்புக்களையும் ஏற்பது மிகவும் அவசியமான ஒன்று. வெண்மைப் புரட்சியின் போது, தேசம் இதை அனுபவரீதியாக உணர்ந்தது. இப்போது தேனீ வளர்ப்பும் கூட, இதே போன்றதொரு சாத்தியக்கூறை நமக்கு அளிக்கிறது. தேனீ வளர்ப்பு இப்போது தேசத்தின் தேன் புரட்சி அல்லது sweet revolutionக்கான ஆதாரமாக ஆகி வருகிறது. அதிகமான எண்ணிக்கையில் விவசாயிகள் இதோடு தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள், புதுமைகள் புகுத்தி வருகிறார்கள். எடுத்துக்காட்டாக மேற்கு வங்கத்தில், டார்ஜீலிங்கில் இருக்கும் ஒரு கிராமம் குர்தும். உயரமான மலைகளுக்கு இடையே, புவியியல் ரீதியான சங்கடங்கள் இருந்தாலும், இங்கே மக்கள் தேனீ வளர்ப்பைத் தொடங்கியிருக்கிறார்கள்; இன்று இந்த இடத்திலிருந்து பெறப்படும் தேனுக்கென சிறப்புத் தேவை இருக்கிறது. இதனால் விவசாயிகளின் வருவாயும் அதிகரித்து வருகிறது. மேற்கு வங்கத்தின் சுந்தர்பன் பகுதிகளில் இயற்கையான தேன், உலகெங்கிலும் விரும்பி ஏற்கப்படுகிறது. இதைப் போலவே குஜராத்திலே எனக்கு ஒரு தனிப்பட்ட அனுபவமும் உண்டு. குஜராத்திலே பனாஸ்காண்டாவில் 2016ஆம் ஆண்டிலே ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசும் போது, இங்கே இத்தனை சாத்தியக்கூறுகள் இருக்கும் போது, ஏன் பனாஸ்காண்டாவின் விவசாயிகள் இனிப்புப் புரட்சிக்கென ஒரு புதிய அத்தியாயத்தைப் படைக்கக்கூடாது என்று வினவினேன். மிகக் குறைந்த காலத்தில், பனாஸ்காண்டா பகுதி, தேன் உற்பத்திக்கான முக்கியமான மையமாக மாறி விட்டது என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ந்து போவீர்கள். இன்று பனாஸ்காண்டாவின் விவசாயிகள் தேன் வாயிலாக இலட்சக்கணக்கான ரூபாய்களை ஆண்டுதோறும் ஈட்டி வருகின்றார்கள். இதே போன்ற ஒரு எடுத்துக்காட்டு ஹரியாணாவின் யமுனா நகரிலும் உண்டு. யமுனா நகரிலே, விவசாயிகள் தேனீ வளர்ப்பின் வாயிலாக, ஆண்டுதோறும் பல நூறு டன்கள் தேனை உற்பத்தி செய்து வருகிறார்கள், தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொண்டும் வருகிறார்கள். விவசாயிகளின் இந்த உழைப்பின் விளைவாலேயே, தேசத்தில் தேன் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது, ஆண்டுதோறும் சுமார் இரண்டேகால் இலட்சம் டன் அளவினை இது எட்டியிருக்கிறது; இதிலே பெருமளவு தேன் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது.

நண்பர்களே, தேனீ வளர்ப்பிலே, தேன் வாயிலாக மட்டுமே வருமானம் கிடைப்பதில்லை; மாறாக தேன் மெழுகும் கூட வருவாயை அதிகப்படுத்துவதற்கான ஒரு பெரிய வழியாக இருக்கிறது. மருந்தியல் தொழில், உணவுத் தொழில், நெசவு மற்றும் அழகுப் பொருள் தொழில்துறை என அனைத்து இடங்களிலும் தேன் மெழுகிற்குத் தேவை இருக்கிறது. நமது தேசம் தற்போது தேன்மெழுகினை இறக்குமதி செய்து வருகிறது; ஆனால், நமது விவசாயிகள், இந்த நிலையினை விரைவாக மாற்றி வருகிறார்கள். அதாவது ஒருவகையில், தற்சார்பு பாரத இயக்கத்திற்கு வலுகூட்டி வருகிறார்கள். இன்று உலகமனைத்தும் ஆயுர்வேதம் மற்றும் இயற்கை ஆரோக்கியப் பொருட்களை ஆர்வத்தோடு கவனிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் தேனுக்கான தேவையும் விரைவாக அதிகரித்து வருகிறது. தேசத்தில் அதிக அளவு விவசாயிகள், தங்கள் விவசாயத்தோடு கூடவே, தங்கள் வயலில் தேனீ வளர்ப்பிலும் ஈடுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதோடு, அவர்களின் வாழ்க்கையில் இனிப்புச் சுவையையும் சேர்க்கும்.

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, இப்போது சில நாட்கள் முன்பாக உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டது. கோரையா, சக்லீ, சிம்னீ, கான் சிரிகா என ஒவ்வொரு இடத்திலும் இதனை ஒவ்வொரு விதமாக அழைக்கிறார்கள். முன்பெல்லாம் நமது வீடுகளின் முற்றங்களில், அக்கம்பக்கத்தில் இருக்கும் மரங்களில் குருவிகள் கீச்சிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் இப்போதெல்லாம், பல ஆண்டுகள் முன்பாக குருவிகளின் கீச்சொலிகளை நாங்கள் கேட்டிருக்கிறோம் என்றே நினைவு கூர்கிறார்கள். இந்த நிலையில், நாம் இன்று இவற்றைக் காக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். எனது வாராணசியைச் சேர்ந்த எனது நண்பரான இந்திரபால் சிங் பத்ரா அவர்கள் ஆற்றியிருக்கும் ஒரு பணியை நான் மனதின் குரல் நேயர்களோடு கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தனது வீட்டிலே குருவிகளுக்கென கூடு கட்டிக் கொடுத்திருக்கிறார் பத்ரா அவர்கள். தனது வீட்டிலே, மரத்தாலான ஒரு கூட்டினை உருவாக்கி, இவற்றில் குருவிகள் எளிதாக நுழையும் வகையில் அமைத்திருக்கிறார். இன்று பனாரசின் பல வீடுகள் இந்த இயக்கத்தோடு தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றன. இதன் காரணமாக வீடுகளில் ஒரு அற்புதமான இயற்கைச் சூழலும் ஏற்பட்டு வருகிறது. எந்த அளவுக்கு இயலுமோ, அந்த அளவுக்கு நாம் இயற்கை, சுற்றுச்சூழல், உயிரினங்கள் ஆகியவற்றுக்கு நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்றே நான் விழைகிறேன். எடுத்துக்காட்டாக இன்னொரு நண்பர் விஜய்குமார் காபீ அவர்கள். விஜய் அவர்கள் ஒடிஷாவின் கேந்திரபாடாவில் வசிப்பவர், இது கடற்கரையில் இருக்கும் பகுதி. ஆகையால் இந்த மாவட்டத்தின் பல கிராமங்கள், கடலின் உயரமான அலைகள் மற்றும் சூறாவளியின் ஆபத்தால் நிறைந்திருக்கின்றன. இதனால் பலத்த சேதமும் ஏற்படுகிறது. இந்த அழிவைத் தடுக்கும் ஆற்றல் யாருக்காவது உண்டென்றால் அது இயற்கைக்கு மட்டுமே உண்டு என்று விஜய் அவர்கள் உணர்ந்தார். பிறகென்ன? விஜய் அவர்கள் படாகோட் கிராமத்திலிருந்து தனது இயக்கத்தைத் தொடங்கினார். 12 ஆண்டுகள், நண்பர்களே 12 ஆண்டுகள் அவர் கடினமாக உழைத்து, கிராமங்களுக்கு வெளியே, கடற்கரையிலே 25 ஏக்கர் பரப்பளவுக்கு சதுப்புநிலக் காடுகளை உருவாக்கினார். இன்று இந்தக் காடுகள் கிராமங்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கி வருகின்றன. இதே போன்றதொரு பணியை, ஒடிஷாவின் பாராதீப் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பொறியாளரான அமரேஷ் சாமந்த் அவர்களும் செய்திருக்கிறார். அமரேஷ் அவர்கள் சின்னச்சின்னக் காடுகளை உருவாக்கினார்; இவை பல கிராமங்களுக்குப் பாதுகாப்பளித்து வருகின்றன. நண்பர்களே, இவை போன்ற பணிகளில் நாம், சமுதாயத்தினரையும் இணைத்துக் கொண்டு பயணித்தால், பெரிய பலன்கள் கிட்டும். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டின் கோயமுத்தூரைச் சேர்ந்த பேருந்து நடத்துநரான மாரிமுத்து யோகநாதன் அவர்கள், தனது பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்குப் பயணச்சீட்டு வழங்கும் வேளையில், அவர்களுக்கு ஒரு மரக்கன்றையும் இலவசமாக அளிக்கிறார். இந்த வகையில் யோகநாதன் அவர்கள், ஏராளமான மரங்கள் நடுதலுக்குக் காரணமாக இருந்திருக்கிறார். யோகநாதன் அவர்கள், தனது வருவாயின் கணிசமான பகுதியை இந்தப் பணிக்காகவே செலவு செய்து வருகிறார். இப்போது இதைக் கேள்விப்பட்ட பிறகு, மாரிமுத்து யோகநாதன் அவர்களின் பணியை, எந்தக் குடிமகனாலாவது பாராட்டாமல் இருக்க முடியுமா சொல்லுங்கள்!! அவரது இந்த முயற்சிகளுக்காகவும், அவரது இந்த உத்வேகம் அளிக்கும் செயல்களுக்காகவும் நான் அவருக்கு என் இதயபூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனதருமை நாட்டுமக்களே, கழிவிலிருந்து செல்வம் ஈட்டுவது பற்றி நாம் பார்த்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம், நாம் மற்றவர்களுக்கும் கூறியும் வருகிறோம். இதனையொட்டி, கழிவுப் பொருட்களை மதிப்பானவைகளாக ஆக்கும் பணியும் நடந்தேறி வருகிறது. இதற்கான ஒரு எடுத்துக்காட்டு கேரளத்தின் கொச்சியைச் சேர்ந்த புனித தெரெஸா கல்லூரி புரிந்திருக்கும் பணி. எனக்கு நினைவிருக்கிறது, 2017ஆம் ஆண்டில், நான் இந்தக் கல்லூரி வளாகத்தில், புத்தகம் படித்தலை ஆதாரமாகக் கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்தக் கல்லூரியின் மாணவர்கள், மீள்பயன்பாட்டு பொம்மைகளைத் தயார் செய்து வருகிறார்கள், அதுவும் மிகவும் படைப்பாற்றல் மிக்க வகையிலே. இந்த மாணவர்கள் பழைய துணிகளையும், எறியப்பட்ட மரத்துண்டுகள், பைகள், பெட்டிகள் ஆகியவற்றையும் பயன்படுத்தி பொம்மைகள் செய்து வருகிறார்கள். சில மாணவர்கள் புதிர்களை உருவாக்குகிறார்கள், சிலர் கார்களையும், ரயில்களையும் உருவாக்குகிறார்கள். இந்த பொம்மைகள் பாதுகாப்பானவையாக இருப்பதோடு, குழந்தைகளுக்கு நேசமானவையாகவும் இருக்க வேண்டும் என்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இந்த முயற்சி முழுவதிலும் இருக்கும் மேலும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்தப் பொம்மைகள், அங்கன்வாடிப் பிள்ளைகளுக்கு விளையாட அளிக்கப்படுவது தான். இன்று பாரதம் விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பில் கணிசமான முன்னேற்றம் அடைந்து வரும் வேளையில், கழிவிலிருந்து மதிப்பூட்டுப் பொருட்கள் தயாரிக்கும் இந்த இயக்கம், புதுமையான பரிசோதனை என்ற வகையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது.

ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவில் இருக்கும் பேராசிரியர் ஸ்ரீநிவாஸ் பதகாண்டலா அவர்கள் மிகவும் சுவாரசியமான ஒரு செயலைச் செய்து வருகிறார். இவர் வாகன உலோக ஓட்டை உடைசல்களிலிருந்து சிற்பங்களை உருவாக்கியிருக்கிறார். இவரால் உருவாக்கம் பெற்ற இந்த பெரிய சிலைகள், மக்கள் பூங்காக்களில் வைக்கப்பட்டிருக்கின்றன, மக்கள் இவற்றை மிகுந்த உற்சாகத்தோடு பார்த்துச் செல்கிறார்கள். மின்னணு மற்றும் வாகன ஓட்டை உடைசல்களை மறுசுழற்சி செய்ய, இது ஒரு நூதனமான முயற்சி. நான் மீண்டுமொரு முறை கொச்சி மற்றும் விஜயவாடாவின் இந்த முயல்வுகளைப் பாராட்டுகிறேன், மேலும் மக்கள் இப்படிப்பட்ட முயல்வுகளில் ஈடுபடுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

எனதருமை நாட்டுமக்களே, பாரதநாட்டு மக்கள் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், நாங்கள் இந்தியர்கள் என்று பெருமிதம் பொங்கச் சொல்லுவார்கள். நமது யோகக்கலை, ஆயுர்வேதம், தத்துவங்கள் என நாம் பெருமைப்பட என்ன இல்லை நம்மிடத்திலே. அதே வேளையில் நமது வட்டார மொழி, வழக்கு, அடையாளம், உடை, உணவுப் பழக்கம் இவை குறித்தும் பெருமிதம் கொள்கிறோம். புதியனவற்றை நாம் அடைய வேண்டும் தான், இது தான் வாழ்க்கை என்றாலும் கூட, நமது பண்டைய சீர்களை நாம் இழந்துவிடக் கூடாது. நாம் கடினமாக முயற்சிகள் மேற்கொண்டு நம்மருகே இருக்கும், விலைமதிப்பற்ற கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் வேண்டும், வருங்கால சந்ததியினருக்கு அவற்றைக் கொண்டு சேர்க்கவும் வேண்டும். இந்தப் பணியை, இன்று அஸாமில் வசிக்கும் சிகாரீ டிஸ்ஸௌ அவர்கள், மிகுந்த ஈடுபாட்டோடு செய்து வருகிறார். கார்பி அங்க்லோங் மாவட்டத்தின் சிகாரீ சிஸ்ஸௌ அவர்கள் கடந்த இரு தசாப்தங்களாக, கார்பி மொழியை ஆவணப்படுத்தி வருகிறார். ஒரு காலத்தில், ஏதோ ஒரு யுகத்தில், கார்பி பழங்குடியின சகோதர சகோதரிகளின் மொழியான கார்பி, இன்று பிரதான ஓட்டத்திலிருந்து வழக்கொழிந்து வருகிறது. தனது இந்த அடையாளத்தை, தான் பாதுகாப்பேன் என்று திருவாளர் சிகாரீ டிஸ்ஸௌ அவர்கள் தீர்மானம் மேற்கொண்டு, இன்று, இவரது முயற்சிகள் காரணமாக பல இடங்களில் பாராட்டுக்களும் இவருக்குக் கிடைத்து வருகின்றன, விருதுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. மனதின் குரல் வாயிலாக, திருவாளர் சிகாரீ டிஸ்ஸௌ அவர்களுக்கு நான் பாராட்டுக்களை அளிக்கும் அதே வேளையில், தேசத்தின் பல மூலைமுடுக்குகளில், இந்த மாதிரியான ஒருமுனைப்போடு பணியாற்றுவோர், ஒரு பணியை முன்னிட்டுத் தங்களையே அர்ப்பணம் செய்தவர்களாக இருப்பார்கள், அவர்கள் அனைவருக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மனம்நிறை நாட்டுமக்களே, எந்த ஒரு புதிய தொடக்கமும் எப்போதும் மிகவும் விசேஷமானதாகவே இருக்கும். புதிய தொடக்கம் என்பதன் பொருள் புதிய முயற்சிகள். புதிய முயற்சிகள் என்றால் புதிய சக்தி, புதிய உற்சாகம். இதன் காரணமாகவே, பல்வேறு மாநிலங்களிலும், பகுதிகளும், பன்முகத்தன்மை நிறைந்த நமது கலாச்சாரத்தில் எந்த ஒரு தொடக்கத்தையும் கொண்டாட்டமாகவே கடைப்பிடிக்கும் பாரம்பரியம் இருக்கிறது. இந்த வேளை புதிய தொடக்கம் மற்றும் புதிய கொண்டாட்டங்களின் வருகை. ஹோலிப் பண்டிகையும் கூட, வசந்தகால வருகையைக் கொண்டாட்டமாக மகிழும் ஒரு பாரம்பரியம். எந்தக் காலத்தில் நாம் வண்ணங்களோடு ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுகிறோமோ, அந்தக் காலம் வசந்த காலம், நமது நாலாபுறங்களிலும் புதிய வண்ணங்கள் இரைந்து கிடக்கும். இந்த வேளையில் மலர்கள் மலரத் தொடங்குகின்றன, இயற்கை மீண்டும் உயிர்ப்படைகிறது. தேசத்தின் பல்வேறு பாகங்களில், புத்தாண்டு விரைவிலேயே கொண்டாடப்பட உள்ளது. அது உகாதியாகட்டும், புத்தாண்டாகட்டும், குடீ பட்வா ஆகட்டும், பிஹூவாகட்டும், நவ்ரேஹ் ஆகட்டும், போய்லாவாகட்டும், போய்ஷாக்காகட்டும், அல்லது பைசாகீயாகட்டும். நாடு முழுவதும் உற்சாகம், உல்லாசம், புதிய நம்பிக்கைகளின் வண்ணங்களில் நனைந்திருக்கிறது. இதே காலத்தில் தான் கேரள புத்திரர்களும், அழகு கொஞ்சும் பண்டிகையான விஷுவைக் கொண்டாடுகிறார்கள். இதன் பிறகு விரைவிலேயே சைத்ர நவராத்திரி புனிதக்காலம் வந்து விடும். சைத்ர மாதத்தின் ஒன்பதாவது நாளன்று இராமநவமித் திருநாள் வரும். பகவான் இராமனின் பிறந்த நாளாக இதைக் கொண்டாடும் அதே நேரத்தில், நீதி மற்றும் பராக்கிரமத்தின் ஒரு புதிய யுகத்தின் தொடக்கம் என்ற வடிவிலும் கொண்டாடப்படுகிறது. இந்த வேளையில் நாலாபுறத்திலும், வெகு விமரிசையும், பக்திப்பெருக்கும் நிறைந்த சூழல் நிலவுகிறது; இது மக்களை மேலும் அணுக்கமாக்குகிறது, அவர்களின் குடும்பங்களை சமூகத்தோடு இணைக்கிறது, பரஸ்பர உறவுகளை மேலும் பலப்படுத்துகிறது. இந்தப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, இந்தக் காலத்தில் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி ஈஸ்டரும் கொண்டாடப்படும். ஏசு கிறிஸ்து மரித்தெழுந்த நாள் என்ற வகையிலே ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை அடையாளப்படுத்திச் சொன்னால், ஈஸ்டர் என்பது வாழ்க்கையின் புதிய தொடக்கத்தோடு இணைந்தது எனலாம். ஈஸ்டர் எதிர்பார்ப்புக்களுக்கான, மறுவாழ்வுக்கான அடையாளம். இந்தப் புனிதமான, மங்கலமான தருணத்தை முன்னிட்டு, நான் இந்தியாவில் இருக்கும் கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கு மட்டுமல்லாது, உலக கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

எனதருமை நாட்டுமக்களே, இன்றைய மனதின் குரலில் அமிர்த மகோத்சம் மற்றும் தேசத்திற்காக நாம் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றி நாம் பேசினோம். நாம் திருநாட்கள் மற்றும் பண்டிகைகள் பற்றியும் பேசினோம். இதற்கிடையில் மேலும் ஒரு திருநாள் வரவிருக்கிறது, இது நமது அரசியல் சாசன உரிமைகள் மற்றும் கடமைகளை நமக்கு நினைவூட்டக் கூடியது. அது தான் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி – டாக்டர் பாபா சாஹேப் அம்பேட்கர் அவர்களின் பிறந்த நாள். இந்த முறை அம்ருத் மகோத்சவத்தின் போது, இது மேலும் சிறப்பு உடையதாக ஆகின்றது. பாபா சாஹேபுடைய இந்தப் பிறந்த நாளை நாம் மேலும் நினைவில் கொள்ளத்தக்கதாக ஆக்குவோம், நமது கடமைகள் குறித்த உறுதிப்பாட்டை மேற்கொண்டு நாம் அவருக்கு நினைவாஞ்சலிகளை அளிப்போம் என்று நான் உறுதிபட நம்புகிறேன். இந்த நம்பிக்கையோடு, உங்களனைவருக்கும், பண்டிகைகளுக்காக மீண்டும் ஒரு முறை நல்வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் சந்தோஷமாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், மகிழ்ச்சியோடு பண்டிகைகளைக் கொண்டாடுங்கள். இந்த விருப்பங்களோடு, மீண்டும் ஒரு முறை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் - மருந்தும் தேவை எச்சரிக்கையும் தேவை. பலப்பல நன்றிகள்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Parliament on verge of history, says PM Modi, as it readies to take up women's bills

Media Coverage

Parliament on verge of history, says PM Modi, as it readies to take up women's bills
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM to visit Karnataka on 15th April
April 14, 2026
PM to inaugurate Sri Guru Bhairavaikya Mandira at Sri Kshetra Adichunchanagiri in Mandya
Sri Guru Bhairavaikya Mandira is a memorial dedicated to Sri Sri Sri Dr. Balagangadharanatha Mahaswamiji, the 71st Pontiff of Sri Adichunchanagiri Mahasamsthana Math
PM to also jointly release the book titled “Saundarya Lahari and Shiva Mahimna Stotram” along with former Prime Minister Shri H. D. Deve Gowda ji

Prime Minister, Shri Narendra Modi will visit Karnataka on 15th April 2026. At around 11 AM, Prime Minister will inaugurate the Sri Guru Bhairavaikya Mandira at Sri Kshetra Adichunchanagiri in Mandya district. He will also address the gathering on the occasion.

During the visit, Prime Minister will also jointly release the book titled “Saundarya Lahari and Shiva Mahimna Stotram” along with former Prime Minister Shri H. D. Deve Gowda ji.

Sri Guru Bhairavaikya Mandira is a memorial dedicated to the revered seer, Sri Sri Sri Dr. Balagangadharanatha Mahaswamiji, the 71st Pontiff of Sri Adichunchanagiri Mahasamsthana Math. Constructed in the traditional Dravidian architectural style, the Mandira stands as a tribute to the life and legacy of the late seer. The Mandira is envisioned not only as a place of reverence but also as a source of inspiration for future generations.

Sri Sri Sri Dr. Balagangadharanatha Mahaswamiji was widely respected for his lifelong commitment to social service, having established numerous educational institutions and healthcare facilities. He firmly believed that service to society is the highest form of worship, and his teachings transcended barriers of caste, creed, and region, inspiring millions.