மாண்புமிகு செஷல்ஸ் நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் அவர்களே, அரசின் அலுவல் தலைவர் அவர்களே, மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களே, என் அன்புச் சகோதர சகோதரிகளே,

வணக்கம்!

இந்த சபையில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமராக உங்கள் முன்னிலையில் நிற்பது ஒரு சிறப்புமிக்க கௌரவமாகும். அவைத் தலைவர் அவர்களே, தங்களது அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.

இன்று முன்னதாக எனக்கு விருதை வழங்கி கௌரவித்ததற்காக, அதிபருக்கும் செஷல்ஸ் மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகத் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வரும் அனைவரையும் ஊக்குவிக்கும். இந்தியாவின் 140 கோடி மக்களின் அன்பான வாழ்த்துகளையும் நல்வாழ்த்துக்களையும் கொண்டு வந்துள்ளேன்.

பிரதமராக நான் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முதன்முதலில் பயணம் செய்த நாடு, 2015-ல் செஷல்ஸ் ஆகும். பிரதமராக ஆப்பிரிக்காவிற்கு நான் மேற்கொண்ட முதல் பயணமும் அதுவே. இந்தியப் பெருங்கடல் குறித்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் செஷல்ஸ் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது என்று நான் நம்பியதாலேயே இங்கு வந்தேன். இன்று, ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நான் இங்கு வரும்போது, அந்த நம்பிக்கை முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது.

 

உங்கள் சுதந்திரத்தின் 50 ஆண்டுகளைக் கொண்டாடும் இந்த வேளையில் உங்களுடன் இணைவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தச் சிறப்புமிக்க தருணத்தில் உங்களுக்கும் செஷல்ஸ் மக்களுக்கும் என் வாழ்த்துகள்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

 

இந்த பேரவையில் உரையாற்றுவது ஒரு அரிய பாக்கியமாகும். இந்தச் சிறப்புமிக்க கௌரவத்திற்கு நன்றி. இந்த எட்டாவது  பேரவையின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். மேலும், இந்த மாண்புமிகு அவையின் முதல் பெண் அவைத் தலைவராக ஆகியுள்ள சபாநாயகர் அவர்களே, உங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நமது தூதரக உறவுகள் நிறுவப்பட்டபோது நமது நட்பு தொடங்கவில்லை. அது அதற்கும் முன்பே தொடங்கியது. 1770-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தெலமாக் என்ற கப்பலில் செயிண்ட் ஆன் தீவிற்கு வந்தடைந்தவர்களில் ஐந்து பேர் இந்தியப் பழங்குடியினர் ஆவர். அந்தப் பயணம், பின்தொடர்ந்து வந்த பலருக்கும் வழிகாட்டியது. காலப்போக்கில், அவர்களின் கதைகள் நவீன செஷல்ஸின் கதையின் ஒரு பகுதியாக மாறின.

நமக்கிடையேயான பந்தங்கள் அரசுகளால் உருவாக்கப்படவில்லை என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. அவை மக்களால் கட்டமைக்கப்பட்டு, குடும்பங்களால் பேணி வளர்க்கப்பட்டு, தலைமுறைகளால் நிலைநிறுத்தப்பட்டன. இந்தியப் பெருங்கடல் இதைச் சாத்தியமாக்கியது. இந்தியப் பெருங்கடல் இந்தியாவையும் செஷல்ஸையும் பிரிப்பதில்லை. அது நம்மை இணைக்கிறது. அதனால்தான் நாம் அந்நியர்களாகச் சந்திப்பதில்லை. நாம் பழைய நண்பர்களைப் போலச் சந்திக்கிறோம்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

செஷல்ஸின் மிகப்பெரிய பலம் அதன் மக்களே. தலைமுறை தலைமுறையாக, உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வந்தனர். அவர்கள் தங்களோடு வெவ்வேறு மொழிகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், மரபுகளைக் கொண்டு வந்தனர். மேலும், அவர்கள் ஒன்றிணைந்து, பெருமையுடன் செஷல்ஸ் நாட்டிற்கே உரிய ஒரு பொதுவான அடையாளத்தை உருவாக்கினர்.

 

இந்த பேரவையின் குறிக்கோள் கூறுவது வேற்றுமையில் ஒற்றுமை. இதை கிரியோல் இசையின் மெல்லிசையில் கேட்கலாம். இதை மௌத்யா நடனத்தின் தாளத்தில் காணலாம். கிரியோல் திருவிழாவின் போது இதை அனுபவிக்கலாம்.

ஒரு தேசம் தனது பாரம்பரியத்தின் செழுமையைக் கொண்டாடும்போது, நமது கலாச்சாரங்களுக்கு இடையேயான பிணைப்புகள் அன்றாட வாழ்விலும் தென்படுகின்றன. கரி கோகோ, சமோசா, சட்னியின் சுவைகளில் அவற்றை உணரலாம். தீபாவளி, தைப்பொங்கல் கொண்டாட்டங்களிலும், நவராத்திரியின் போது ஆடப்படும் கர்பா நடனத்திலும் அவற்றைக் காணலாம். நமது நட்பின் எதிர்காலத்தின் மீது பெரும் நம்பிக்கையைத் தரும் கிரியோல் மனப்பான்மை இதுவே.

மாண்புமிகு உறுப்பினர்களே,

கடல்சார் அண்டை நாடுகளாக, ஒன்றின் பாதுகாப்பு மற்றொன்றின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கிறது என்பதை நாம் உணர்கிறோம். ஒன்றின் செழிப்பு மற்றொன்றின் செழிப்பிற்குப் பங்களிக்கிறது. மேலும், இப்பிராந்தியத்தின் நிலைத்தன்மை நம் அனைவருக்கும் நன்மை அளிக்கிறது.

இந்த ஆண்டு நமது ஒத்துழைப்பின் ஆழத்தை வலிமையாக நினைவூட்டுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, உங்கள் சுதந்திரப் பெருவிழாவின் போது, நட்பு, ஒற்றுமையின் அடையாளமாக, ஐஎன்எஸ் நீலகிரி என்ற இந்தியக் கடற்படைக் கப்பல் போர்ட் விக்டோரியாவில் இருந்தது. இன்றோ, உங்களுடன் பொன்விழாவைக் கொண்டாட ஐஎன்எஸ் தர்காஷ், ஐஎன்எஸ் இக்ஷக் கப்பல்கள் போர்ட் விக்டோரியாவில் நிறுத்தப்பட்டுள்ளன.

50 ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் அது ஒருவருக்கொருவர் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மாற்றவில்லை. பல ஆண்டுகளாக, நமது பாதுகாப்புப் படைகள், கடலோரக் காவல்படைகள், கடல்சார் முகமைகள் ஒன்றிணைந்து பயிற்சி பெற்று, நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றன. செஷல்ஸ் பாதுகாப்புப் படைகள், செஷல்ஸ் கடலோரக் காவல்படை ஆகியவற்றின் தொழில்முறைத் திறனையும் அர்ப்பணிப்பையும் இந்தியா ஆழமாக மதிக்கிறது. உங்களின் பரந்த கடல்சார் மண்டலத்தையும், அத்துடன் விரிவான இந்தியப் பெருங்கடல் பகுதியையும் பாதுகாப்பதில் அவர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர். கடல்சார் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, நீரியல் வரைவியல், கடல்சார் மண்டல விழிப்புணர்வு ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பு, பாதுகாப்பான, உறுதியான ஒரு பிராந்தியத்தை உருவாக்குவதற்கான நமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

இன்று காலை நான் செஷல்ஸ் அதிபர் அவர்களைச் சந்தித்து, நமது ஒத்துழைப்பில் எட்டப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஆய்வு செய்தேன். எதிர்காலம் குறித்த நமது பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை குறித்தும் நாங்கள் விவாதித்தோம். நமது தொலைநோக்குப் பார்வையானது, 'மகாசாகர்' - அதாவது, பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்குமான பரஸ்பர, முழுமையான முன்னேற்றம் என்ற கருத்தில் அடங்கியுள்ளது.

 

நமது எதிர்காலங்கள் ஒன்றோடொன்று இணைந்தவை, ஒன்றையொன்று சார்ந்தவை என்பதை இந்த தொலைநோக்குப் பார்வை அங்கீகரிக்கிறது. மேலும், பாதுகாப்பான, உறுதியான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்காக நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

மக்கள் ஒரு வரைபடத்தைப் பார்க்கும்போது, செஷல்ஸை இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவுக் கூட்டமாகப் பார்க்கலாம். ஆனால் நாங்கள் அதைவிட மிகப் பெரிய ஒன்றைக் காண்கிறோம். அதன் எல்லைகளுக்கு அப்பால் வெகுதூரம் பரந்து விரிந்த அடிவானங்களைக் கொண்ட ஒரு தேசத்தை நாங்கள் காண்கிறோம். உங்கள் கடல்சார் ஆளுகைப் பகுதி ஏறக்குறைய 14 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் பரவியுள்ளது.

இது செஷல்ஸை ஒரு சிறிய தீவு நாடாக அல்லாமல், ஒரு பெரும் பெருங்கடல் நாடாக ஆக்குகிறது. நீலப் பொருளாதாரம் உலகளாவிய விவாதங்களின் ஒரு பகுதியாக மாறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, செஷல்ஸ் இதில் முன்னோடியாகத் திகழ்ந்தது. கடல்சார் சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதிலோ அல்லது நீலப் பத்திரங்கள் போன்ற புதுமைகளை முன்னெடுத்துச் செல்வதிலோ, உங்கள் நாடு முக்கியமான உலகளாவிய உரையாடல்களை வடிவமைக்க உதவியுள்ளது. நாம் ஒன்றிணைந்து, மீன்வளம், கடல்சார் அறிவியல், கடலோர மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நிலையான சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுவாக உருவாக்க முடியும்.

நேற்று, புகழ்பெற்ற கோகோ டி மெர் மரத்தின் ஒரு கன்றை நடும் பெருமை எனக்குக் கிடைத்தது. செஷல்ஸ் தீவைப் போலவே, இதுவும் தனித்துவமானது, விலைமதிப்பற்றது. உலகில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. இந்த இயற்கை அதிசயத்தைப் பாதுகாக்கவும் பேணவும் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், மனிதகுலம் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்ற ஒரு பரந்த தத்துவத்தைப் பிரதிபலிக்கின்றன.     

 

இந்த உணர்வு இந்தியாவிலும் ஆழமாக எதிரொலிக்கிறது. நாம் இன்று அனுபவிக்கும் கடல்களை விட ஆரோக்கியமான, பாதுகாப்பான, வளமான கடல்களை வருங்கால சந்ததியினர் பெறுவதை உறுதிசெய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.          

மாண்புமிகு உறுப்பினர்களே,

உலகத் தென்பகுதியும், குறிப்பாகத் தீவு நாடுகளும், பருவநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. அதன் விளைவுகள் நமது கடற்கரைகளிலும், கடல்சார் சூழல் அமைப்புகளிலும், வானிலை முறைகளிலும், நமது சமூகங்களிலும் ஏற்கெனவே தென்படுகின்றன.

பருவநிலை மாற்றத்தில் குறைந்த பாதிப்புகளை ஏற்படுத்திய நாடுகள், பின் விளைவுகளின் சுமையை அதிக அளவில் சுமக்க கூடாது.  பருவநிலை தொடர்பான நடவடிக்கையானது நேர்மை, பொறுப்பு, சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும். இதுவே பருவநிலை நீதியின் சாராம்சம்.

இந்தியா முன்மாதிரியாகத் திகழ முயன்றுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கங்களில் ஒன்றை நாம் மேற்கொண்டுள்ளோம். 'மிஷன் லைஃப் - சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கைமுறை' இயக்கத்தின் மூலம் நிலையான வாழ்க்கைமுறைகளை நாம் முன்னிறுத்தியுள்ளோம். சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு, பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டமைப்பு, தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் இயக்கம் போன்ற நமது முன்முயற்சிகள் மூலம், பசுமை மாற்றத்தை மேம்படுத்துவதற்காக நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளோம்.

மேலும், சிறிய தீவு வளரும் நாடுகளின் கவலைகளுக்கு உரிய கவனம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, செஷல்ஸுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவதில் இந்தியா உறுதியாக உள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

செஷல்ஸும் இந்தியாவும், வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கும் ஓர் உலகத்தை விரும்புகின்றன. சர்வதேச நிறுவனங்கள் சமகால யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் ஓர் உலகத்தை நாங்கள் இருவரும் விரும்புகிறோம். நமது பகிரப்பட்ட எதிர்காலம் கூட்டாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், நியாயமான முறையிலும் வடிவமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த நம்பிக்கைதான் எங்களின் ஜி20 தலைமைத்துவத்தின் போது இந்தியாவின் முயற்சிகளுக்கு வழிகாட்டியது. இந்த உணர்வில்தான், உலகத் தெற்கு நாடுகளின் முன்னுரிமைகளை சர்வதேச விவாதங்களின் மையத்தில் வைக்க நாங்கள் பணியாற்றினோம். மேலும் இந்த உணர்வில்தான், ஆப்பிரிக்க யூனியனை ஜி20-ன் நிரந்தர உறுப்பினராக நாங்கள் வரவேற்றோம். இதுவே உலகத் தெற்கு நாடுகளை ஒன்றிணைக்கும் உணர்வு. மேலும் இதுவே இந்தியாவும் செஷல்ஸும் இணைந்து தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வையாகும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

கடந்த 50 ஆண்டுகளின் சாதனைகளைக் கொண்டாடும் அதே வேளையில், நாம் எதிர்காலத்தையும் நோக்க வேண்டும். செஷல்ஸின் எதிர்காலம் அதன் இளைஞர்களால் வடிவமைக்கப்படும். செஷல்ஸின் மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் பல ஆண்டுகளாக இந்தியாவில் பயிற்சி பெற்றுப் படித்து வருவது குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

உண்மையில், செஷல்ஸில் உள்ள ஒவ்வொரு 50 பேரில் ஒருவர் இந்தியாவில் ஏதேனும் ஒரு பயிற்சியைப் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. அவர்கள் திறன்கள், நட்புகள், அனுபவங்களுடன் தாயகம் திரும்பியுள்ளனர். அவை இன்றும் நமது ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றன.

இளைஞர்களுக்குப் பயிற்சி வாய்ப்புகளை வழங்கும் உங்கள் இக்னைட் (IGNITE) முன்முயற்சியைப் பற்றி அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இது ஒரு சிறந்த கட்டமைப்பு, மேலும் இந்தத் துறையில் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை நாம் ஆராயலாம்.

இத்தகைய ஒத்துழைப்பிற்கான ஒரு முக்கியக் கவனப் பகுதியாக டிஜிட்டல் புத்தாக்கம் அமையலாம். இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, தொழில்நுட்பத்தால் எவ்வாறு வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், ஆளுகையை மேம்படுத்தவும், நிதி உள்ளடக்கத்தை அதிகரிக்கவும், மேலும் கோடிக்கணக்கான மக்களுக்குச் சேவைகளை வழங்கவும் முடியும் என்பதை நிரூபித்துள்ளது.

நீங்கள் உங்களின் டிஜிட்டல் மாற்றத்தை மேற்கொள்ளும்போது, எங்கள் அனுபவங்களையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்துகொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சுதந்திரத்தின் முதல் ஐம்பது ஆண்டுகளை வழிநடத்திய அதே உறுதியுடன் செஷல்ஸின் இளைஞர்கள் இந்த வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.        

மாண்புமிகு உறுப்பினர்களே,

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பொன்விழா ஆண்டில், இன்று உங்கள் முன் நான் நிற்கும்போது, இரண்டரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் ஓர் நட்பை நம் மக்கள் கொண்டாடுகிறார்கள்.

நாம் முன்னோக்கிப் பார்க்கும்போது, இந்த அடித்தளங்களைத் தொடர்ந்து கட்டியெழுப்புவோம். இந்தியா உங்கள் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாகத் தொடரும். உங்கள் சாதனைகளைக் கொண்டாடுவோம். உங்கள் லட்சியங்களுக்கு ஆதரவளிப்போம். மேலும், நண்பர்களாக உங்களுக்குத் துணை நிற்போம்.

கடந்த ஐம்பது ஆண்டுகள் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன. ஆனால், செஷல்ஸ் வரலாற்றின் மிகச் சிறந்த அத்தியாயங்கள் இன்னும் எழுதப்பட வேண்டியுள்ளன என்றும், நமது நட்பின் சிறந்த தருணங்கள் இன்னும் வரவிருக்கின்றன என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.

நன்றி!

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
‘Shortcuts will cut you short’: PM Modi’s message for youngsters at former President Kovind’s autobiography launch

Media Coverage

‘Shortcuts will cut you short’: PM Modi’s message for youngsters at former President Kovind’s autobiography launch
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 13, 2026
August 13, 2026

Aatmanirbhar in Motion: Solar Homes, Made-in-India Containers, Record Exports & a Rising Global Footprint Under the Leadership of PM Modi