"பிரதமர்-ஜன்மன் மகா அபியான் திட்டத்தின் குறிக்கோள் பழங்குடியின சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் அரசுத் திட்டங்களிலிருந்து பயனடைவதாகும்"
"ஏழைகளைப் பற்றி முதலில் சிந்திக்கும் ஒரு அரசு இன்று நாட்டில் உள்ளது"
"மாதா சபரி இல்லாமல் ஸ்ரீ ராமரின் கதை சாத்தியமில்லை"
"ஒருபோதும் கவனிக்கப்படாதவர்களை மோடி அணுகியுள்ளார்"
"மத்திய அரசால் நடத்தப்படும் லட்சிய மாவட்ட திட்டத்தின் மிகப்பெரிய பயனாளிகள் எனது பழங்குடி சகோதர சகோதரிகள்"
"பழங்குடி கலாச்சாரம் மற்றும் அவர்களின் கண்ணியத்திற்காக எங்கள் அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை இன்று பழங்குடி சமூகம் பார்க்கிறது; புரிந்துகொள்கிறது"

பிரதமரின்  ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (பி.எம்-ஜன்மன்) திட்டத்தின் கீழ், பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் முதல் தவணையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி  மூலம் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்-ஜன்மனின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

தனது கணவருடன் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ள சத்தீஸ்கரின் ஜஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி மங்குன்வாரி பாய், சுய உதவிக் குழுக்களுடன் இணைந்து டோனா பட்டல் தயாரிப்பதற்கான பயிற்சியைப் பெறுவதாகவும், வீடு வீடாக பிரச்சாரங்களை நடத்துவதன் மூலம் பிரதமர்-ஜன்மன் தொடர்பான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் பிரதமரிடம் தெரிவித்தார். 12 உறுப்பினர்களைக் கொண்ட தீப் சமுஹ் என்ற சுய உதவிக் குழுவில் அவர் ஒரு பகுதியாக உள்ளார். சுய உதவிக் குழுக்களில் உருவாக்கப்படும் பொருட்களை 'வன் தன்' மையங்களில் விற்பனை செய்வதற்கான தனது திட்டங்கள் குறித்தும் திருமதி மங்குன்வாரி பிரதமரிடம் தெரிவித்தார். வீடு, குடிநீர், எரிவாயு மற்றும் மின்சார இணைப்பு பற்றியும் குறிப்பிட்ட அவர், ஆயுஷ்மான் அட்டை மூலம்  தனது கணவருக்குக் காது நோய்க்கு இலவச சிகிச்சையும், தனது மகளுக்கு ரூ.30,000 மதிப்புள்ள சிகிச்சையும் பெற்றதாகவும் கூறினார். வன உரிமைச் சட்டம் (எஃப்.ஆர்.ஏ), வேளாண் கடன் அட்டை மற்றும் பிரதமரின்  விவசாயிகள் கெளரவிப்பு  நிதி தொடர்பான நன்மைகளைப் பெறுவதையும் அவர் குறிப்பிட்டார். அசுத்தமான தண்ணீரை உட்கொள்வதில் இருந்து குழாய் நீர் இணைப்பு தன்னைப் பாதுகாக்கிறது என்றும், அதன் மூலம் தன்னையும் தனது குடும்பத்தையும் நீரினால் பரவும் நோய்களிலிருந்து காப்பாற்றுவதாகவும், எரிவாயு இணைப்பு நேரத்தை மிச்சப்படுத்தவும், விறகுகளில் இருந்து வெளியேறும் புகையை அகற்றவும் உதவுகிறது என்று திருமதி மங்குன்வாரி கூறினார். பிரதமருக்கு நன்றி தெரிவித்த அவர், "கடந்த 75 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படாத பணிகள் இப்போது 25 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளன" என்றார்.

விளையாட்டு ஆர்வம் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி,  இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் விளையாட்டுகளில் ஈடுபடுவதை வலியுறுத்தினார்.  சமீப காலங்களில் பெரும்பாலான விளையாட்டு விருதுகள் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களால் பெறப்படுகின்றன என்றார் அவர் . திருமதி மங்குன்வாரி பல திட்டங்களின் கீழ் நன்மைகளைப் பெறுவதற்கும், அவை அவரது வாழ்க்கையை எளிதாக்கியிருப்பதற்கும்  பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். "நீங்கள் நன்மைகளைப் பெற்றது மட்டுமின்றி, சமூகத்தில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளீர்கள்" என்று கூறிய பிரதமர், மக்களின் பங்கேற்பைக் காணும் போது அரசுத் திட்டங்களின் தாக்கம் பன்மடங்கு அதிகரிக்கிறது என்றார். ஒவ்வொரு பயனாளியையும் சேர்க்கவும், யாரையும் விட்டுவிடாமல் இருக்கவும் அரசின் முயற்சியை மீண்டும் வலியுறுத்தி அவர் தனது உரையாடலை முடித்தார்.

 

மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரியைச் சேர்ந்த சஹாரியா ஜன்ஜாதியைச் சேர்ந்த திருமதி லலிதா ஆதிவாசி, ஆயுஷ்மான் அட்டை, ரேஷன் அட்டை, பிரதமர் கிசான் நிதி ஆகியவற்றின் பயனாளி ஆவார். இவரது மகள் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.லாட்லி லட்சுமி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. 2-ம் வகுப்பு படிக்கும் அவரது மகனுக்கும் கல்வி உதவித்தொகை மற்றும் இதர வசதிகள் கிடைக்கின்றன. அவரது இளைய மகன் அங்கன்வாடி பள்ளிக்குச் செல்கிறார். இவர் ஷீத்லா மையா சுயம் சகாயதா சமு என்ற சுய உதவிக் குழுவுடன் தொடர்புடையவர். அவர் ஒரு தனிப்பயன் பணியமர்த்தல் மையத்தால் ஆதரிக்கப்படுகிறார். முதல் தவணை வீடு பெறுவதற்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். பழங்குடி மக்களின் பிரச்சனைகள் குறித்து மிகவும் உணர்வுப்பூர்வமாக சிந்தித்ததற்காக திருமதி லலிதா பிரதமருக்கு நன்றி தெரிவித்ததோடு, இப்போது பழங்குடி மக்கள் கிடைக்கக்கூடிய திட்டங்களின் அனைத்து நன்மைகளையும் பெற முடியும் என்பதால் ஜன்மன் அபியான் ஏற்படுத்திய மாற்றம் குறித்து அவரிடம் தெரிவித்தார். தனது சுய உதவிக் குழுக் கூட்டங்களில் ஜன்மன் அபியான் மற்றும் பிற திட்டங்கள் குறித்து தனக்குத் தெரியப்படுத்தப்பட்டதாகவும், வீடு ஒதுக்கீடு போன்ற நன்மைகளைப் பெறத் தொடங்கியதாகவும், தனது மாமனார் கிசான் கடன் அட்டையின் நன்மைகளைப் பெற்றதாகவும் அவர் பிரதமரிடம் கூறினார். அவரது கிராமம் முழுமையாக உஜ்வாலா திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது, மேலும் புதிய வீடுகளும் இந்த பிரச்சாரத்தின் கீழ் சேர்க்கப்பட்டன. பழங்குடி மற்றும் கிராமப்புறப் பெண்களின் தலைமைப் பண்புகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். உள்ளூர் பஞ்சாயத்து உறுப்பினர் வித்யா ஆதிவாசி கிராமத்தின் வரைபடம் மற்றும் வளர்ச்சித் திட்டத்தை கிராமத்தின் மாதிரியுடன் பிரதமருக்கு விளக்கினார். பிரதமர்-ஜன்மனின் தாக்கம் குறித்து திருப்தி தெரிவித்த பிரதமர், தகுதியான ஒவ்வொரு பயனாளியையும் உள்ளடக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த பாரதி நாராயண் ரான், பிம்ப்ரியில் உள்ள ஏகலவ்யா மாதிரி உறைவிடப்  பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தனது பள்ளியில் உள்ள வசதிகள் குறித்து பிரதமரிடம் கூறினார். ஒரு பெரிய விளையாட்டு மைதானம், குடியிருப்பு விடுதி மற்றும் சுகாதாரமான உணவு ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற தனது ஆசையை பகிர்ந்து கொண்ட உமா பாரதி, ஆஷ்ரம் பள்ளியில் பள்ளி ஆசிரியராக இருக்கும் தனது மூத்த சகோதரரிடமிருந்து தனக்கு உத்வேகம் கிடைத்ததாகவும் கூறினார். பாரதியின் சகோதரர் பாண்டுரங்கன், சி.பி.எஸ்.இ வாரியத்தின் கீழ் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஏகலவ்யா மாதிரி பள்ளியில் படித்ததாகவும், நாசிக்கில் பட்டம் பெற்றதாகவும் பிரதமரிடம் தெரிவித்தார். ஏகலவ்யா மாதிரி பள்ளியில் படிக்க மற்ற குழந்தைகளை ஊக்குவிப்பது குறித்தும், குறிப்பாக பெரிய நகரங்களுக்கு இடம்பெயர விரும்புபவர்கள் குறித்தும் அவர் தெரிவித்தார்.

இதுவரை பெறப்பட்ட நன்மைகள் குறித்து பேசிய திரு பாண்டுரங்கன், பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பக்கா வீடு, கழிப்பறைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு, உஜ்வாலா எரிவாயு இணைப்பு, மின்சார இணைப்பு, குடிநீர் விநியோகம், ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை மற்றும் ஆயுஷ்மான் அட்டை ஆகியவற்றைக் குறிப்பிட்டார். பிரதமர்-ஜன்மனின் கீழ் முதல் தவணையான ரூ .90,000 இன்று மாற்றப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கற்பிக்க வேண்டும், அப்போதுதான் அவர்கள் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று நாட்டுக்கு சேவை செய்ய முடியும் என்று பிரதமர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். அனைத்து கோயில்களிலும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மாணவர்கள் தங்கள் பகுதியில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இரு மாணவர்களுக்கும் பிரதமர் மோடி தனது ஆசீர்வாதங்களைத் தெரிவித்ததோடு, குழந்தைகளின் கல்விக்கான அவர்களின் அர்ப்பணிப்புக்காக அவர்களின் பெற்றோருக்கும் தலைவணங்கினார். பாரதி தனது கனவை நிறைவேற்றுவார் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், நாட்டில் ஏகலவ்யா பள்ளிகளின் எண்ணிக்கையை மேலும் விரிவுபடுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் ஏகலவ்யா பள்ளிகளின்  ஒரு பகுதியாக மாற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

ஆந்திர மாநிலம், ஆலுரிசித்திரம் ராஜு மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி ஸ்வாவி கங்கா இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இவருக்கு ஜன்மன் திட்டத்தின் கீழ் வீடு, எரிவாயு இணைப்பு, மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது பகுதியான அரக்கு பள்ளத்தாக்கு காபிக்கு பிரபலமானது, மேலும் அவர் காபி தோட்டங்களிலும் சாகுபடியில் ஈடுபட்டுள்ளார். அரசாங்கத் திட்டங்கள் காரணமாக, தனது விளைபொருட்களுக்கு நல்ல விலையைப் பெற முடிகிறது என்றும், பிரதமர் கிசான் சம்மான் நிதி நன்மைகளுடன் விவசாயம், பதப்படுத்துதல், பேக்கேஜிங் மற்றும் சந்தைப்படுத்தலுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் நன்மைகளையும் அவர் பெறுகிறார் என்றும் அவர் பிரதமரிடம் தெரிவித்தார். 'வன் தன்' திட்டம் தனது வருமானத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், இடைத்தரகர்களிடமிருந்தும் காப்பாற்றியதாக அவர் தெரிவித்தார். லட்சாதிபதி பெண்மணியாக  மாறியதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, நாட்டில் 2 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவதற்கான தனது முயற்சிகள் குறித்து அவரிடம் தெரிவித்தார். திருமதி ஸ்வாவி தனது கிராமத்திற்கு வந்துள்ள புதிய சாலைகள், தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தனது பள்ளத்தாக்கின் கடுமையான குளிர் காலநிலையில், ஒரு பக்கா வீடு தனது வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்று அவர் கூறினார். அவருடன் பேசிய பிரதமர், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம்  என்ற திட்டம் நிச்சயம் நிறைவேறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி சசி கிரண் பிர்ஜியா தனது குடும்பத்தில் 7 பேரைக் கொண்டுள்ளார், சுய உதவிக் குழுவுடன் ஈடுபடுவது, புகைப்பட நகல் மற்றும் தையல் இயந்திரம் வாங்குவது மற்றும் விவசாயப் பணிகளில் ஈடுபடுவது குறித்து பிரதமரிடம் தெரிவித்தார். பெறப்பட்ட நன்மைகள் குறித்து பிரதமரிடம் தெரிவித்த அவர், குடிநீர் இணைப்பு, மின்சாரம், பிரதமர் கிசான் சம்மான் நிதி மற்றும் அவரது தாயார் பிரதமர்-ஜன்மனின் கீழ் பி.எம்.ஏ.ஒய் (ஜி) இன் கீழ் பக்கா வீட்டிற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், கிசான் கடன் அட்டையைப் பெறுவதாகவும், வன் தன் கேந்திராவுடன் இணைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். சுய உதவிக் குழு மூலம் கடன் பெறுவது குறித்து பிரதமரின் கேள்விக்கு, திருமதி சசி சமீபத்தில் தனது கிராமத்தில் அரிதாகவே கிடைக்கக்கூடிய ஒரு  புகைப்பட நகல் இயந்திரத்தை வாங்கியதாகத் தெரிவித்தார். 12 உறுப்பினர்களைக் கொண்ட ஏக்தா அஜீவிகா சகி மண்டல் என்று அழைக்கப்படும் தனது சுய உதவிக் குழு மூலம், பிரதமர் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் டோனா பட்டல் மற்றும் பல்வேறு வகையான ஊறுகாய்களை உருவாக்குவதற்கான பயிற்சியைப் பெறுவதாகவும், அதை வன் தன் மையங்கள்  மூலம் விற்பனை செய்வதாகவும் அவர் மேலும் கூறினார். திறன் மேம்பாடு, அடிப்படை வசதிகள் அல்லது கால்நடை வளர்ப்பு என அரசுத் திட்டங்களின் தாக்கம் அடிமட்டத்தில் பயனாளிகளைச் சென்றடைவதைக் காண முடியும் என்று பிரதமர் திருப்தி தெரிவித்தார். பிரதமர் ஜன்மனை செயல்படுத்துவதன் மூலம் அதன் வேகம் மற்றும் அளவு பன்மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். "கடந்த 10 ஆண்டுகளாக, எங்கள் அரசு  அனைத்து அரசுத் திட்டங்களையும் அனைத்துப்  பயனாளிகளுக்கும் எளிதாகவும் காலவரையறையுடனும் கொண்டு செல்ல உறுதிபூண்டுள்ளது", என்று அவர் மேலும் கூறினார், "அரசுத்  திட்டங்கள் அனைத்துப்  பயனாளிகளையும் சென்றடையும். இது மோடியின் உத்தரவாதம். பிரதமர்-ஜன்மன் மற்றும் பிற அரசுத் திட்டங்களை செயல்படுத்தியதற்காக கும்லா மாவட்ட மக்கள் அனைவரின் சார்பாகவும் திருமதி சசி பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், உத்தராயண், மகர சங்கராந்தி, பொங்கல் மற்றும் பிஹு கொண்டாட்டங்களைக் குறிப்பிட்டு நாடு முழுவதும் பண்டிகை மனநிலை மீது கவனத்தை ஈர்த்தார். இன்றைய சந்தர்ப்பம் பண்டிகை காலம் பற்றி  மேலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும், பயனாளிகளுடனான கலந்துரையாடல்கள் அவரை மகிழ்ச்சியான மனநிலைக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் கூறினார். "ஒருபுறம், அயோத்தியில் தீபாவளி கொண்டாடப்படுகிறது, அதே நேரத்தில் மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 1 லட்சம் மக்களும் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்", என்று கூறிய பிரதமர், பக்கா வீடுகள் கட்டுவதற்காக அவர்களின் வங்கிக் கணக்குகளில் நிதி மாற்றப்பட்டதைக் குறிப்பிட்டு, இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த ஆண்டு தீபாவளியைப் பயனாளிகள் தங்கள் வீடுகளிலேயே கொண்டாடுவார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு நடக்கும் மங்களகரமான நிகழ்வைக் குறிப்பிட்ட பிரதமர், இதுபோன்ற வரலாற்று நிகழ்வின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்தார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கெளரவிக்கும் வகையில் தாம் மேற்கொள்ளும்  11 நாள் உண்ணாவிரத சடங்கின் போது மாதா சபரியை நினைவுகூரவது இயல்பானது என்று பிரதமர் மோடி கூறினார்.

"மாதா சபரி இல்லாமல் ஸ்ரீ ராமரின் கதை சாத்தியமில்லை" என்று கூறிய பிரதமர், இளவரசர் ராமரை மரியாதா புருஷோத்தம் ராமராக மாற்றியதில் மாதா சபரியின் பெரும் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார். "தசரதனின் மகன் ராமன் பழங்குடி மாதா சபரியின் பழங்களைச் சாப்பிட்டால் மட்டுமே தீனபந்து ராமராக மாற முடியும்", என்று அவர் கூறினார். ராம்சரித் மானஸை மேற்கோள் காட்டிய பிரதமர், பகவான் ஸ்ரீ ராமருடன் பக்தியின் உறவு சிறந்தது என்று கூறப்படுகிறது என்று விளக்கினார். "திரேதாவில் உள்ள ராஜாராமின் கதையாக இருந்தாலும் சரி அல்லது தற்போதைய நிலைமையாக இருந்தாலும் சரி, ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் இல்லாமல் நல்வாழ்வு சாத்தியமில்லை" என்று திரு மோடி கூறினார், கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4 கோடி நிரந்தர வீடுகள் கட்டப்பட்டிருப்பதை அவர் குறிப்பிட்டார். "ஒருபோதும் கவனிக்கப்படாதவர்களை மோடி அணுகியுள்ளார்", என்று அவர் மேலும் கூறினார்.

பழங்குடி சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் அரசுத் திட்டங்கள் மூலம் பயனடைவதே பிரதமர்-ஜன்மன் மகா அபியான் திட்டத்தின் குறிக்கோள் என்று பிரதமர் கூறினார். இரண்டு மாதங்களுக்குள், பிரதமர்-ஜன்மன் மகா இயக்கம் மற்றவர்கள் மட்டுமே கனவு காணக்கூடிய முடிவுகளை அடைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். பகவான் பிர்சா  முண்டாவின் பிறந்த நாளில் பிரதமர்-ஜன்மன் தொடக்க விழாவின் போது ஏற்பட்ட சவால்களை நினைவு கூர்ந்த பிரதமர், பழங்குடி சமூகங்கள் வசிக்கும் நாட்டின் தொலைதூர, எல்லைப் பகுதிகளுக்கு நன்மைகளைக் கொண்டு செல்வதில் உள்ள சிரமங்களைக் குறிப்பிட்டார். அசுத்தமான நீர், மின்சாரம், எரிவாயு இணைப்புகள் இல்லாமை, அத்தகைய பகுதிகளுக்கான சாலைகள் மற்றும் இணைப்பு இல்லாமை போன்ற சவால்களை எடுத்துரைத்தது தற்போதைய அரசு என்பதை  அவர் சுட்டிக்காட்டினார்.. இந்த திட்டம் ஏன் ஜன்மன் என்று அழைக்கப்பட்டது என்பதை விளக்கிய பிரதமர், "ஜன்' என்றால் மக்கள், 'மன் கி பாத்' என்றால் மனதின் குரல் என்று பொருள். பிரதமர்-ஜன்மன் மெகா பிரச்சாரத்திற்காக ரூ .23,000 கோடிக்கு மேல் செலவிட அரசு  திட்டமிட்டுள்ளதால் பழங்குடி சமூகங்களின் அனைத்து விருப்பங்களும் இப்போது நிறைவேற்றப்படும் என்று அவர் மீண்டும் உறுதிபட தெரிவித்தார்.

சமுதாயத்தில் யாரும் பின்தங்கிவிடாமல், அரசுத் திட்டங்களின் பயன்கள் அனைவரையும் சென்றடையும் போது மட்டுமே நாடு வளர்ச்சி அடைய முடியும் என்று பிரதமர் கூறினார். நாட்டின் சுமார் 190 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூகத்தினர் வாழ்கின்றனர் என்று தெரிவித்த பிரதமர், இரண்டு மாதங்களுக்குள் 80,000 க்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் அட்டைகளை விநியோகிப்பதற்கான அரசின் அணுகுமுறையை எடுத்துரைத்தார். இதேபோல், மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த சுமார் 30,000 விவசாயிகளை பிரதமரின் விவசாயிகள் கெளரவிப்பு நிதியுடன் அரசு இணைத்துள்ளதாகவும், அத்தகைய 40,000 பயனாளிகளுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். 30,000 க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு கிசான் கடன்  அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், சுமார் 11,000 பேருக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் நிலக் குத்தகை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இது ஒரு சில வாரங்களின் முன்னேற்றம் என்றும், எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அரசின் ஒவ்வொரு திட்டமும் நமது மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி சமூகங்களை விரைவில் சென்றடைவதை உறுதி செய்வதில் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், இது மோடியின் உத்தரவாதம். மோடியின் உத்தரவாதம் என்பது நிறைவேற்றத்திற்கான உத்தரவாதத்தைக் குறிக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்" என்று அவர் கூறினார்.

குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களுக்கு பக்கா வீடுகளை வழங்குவது குறித்து பேசிய பிரதமர், பழங்குடி பயனாளிகளின் கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் மாற்றப்பட்டுள்ளது என்றார். இவர்களுக்கு, 2.5 லட்சம் ரூபாய் மதிப்பில், மின்சாரம், சமையல் எரிவாயு  இணைப்பு, குடிநீர், கழிப்பறை வசதியுடன் கூடிய வீடு கட்டப்படும். இந்த ஒரு லட்சம் பயனாளிகள் ஒரு தொடக்கம் மட்டுமே என்றும், தகுதியான ஒவ்வொரு நபரையும்  அரசு சென்றடையும் என்றும் அவர் கூறினார். இந்தச் சலுகைகளுக்காக யாருக்கும் லஞ்சம் கொடுப்பதை கண்டிப்பாக தவிர்க்குமாறு பயனாளிகளைப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

பழங்குடி சமூகங்களுடனான தனது நீண்டகால உறவை நினைவு கூர்ந்த பிரதமர், பிரதமர்-ஜன்மன் மகா அபியான் திட்டத்தில் தனது தனிப்பட்ட அனுபவத்தை நம்புவதாகக் கூறினார். மேலும், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் வழிகாட்டுதலை அவர் பாராட்டினார்.

"திட்டங்கள் தொடர்ந்து காகிதத்தில் இயங்கினால், உண்மையான பயனாளி அத்தகைய திட்டம் இருப்பதைப் பற்றி ஒருபோதும் அறிந்திருக்க மாட்டார்", என்ற பிரதமர், அவற்றைப் பெறுவதில் உள்ள சவால்களைச் சுட்டிக்காட்டினார். பிரதமர்-ஜன்மன் மகா அபியான் திட்டத்தின் கீழ், தடையை உருவாக்கிய அனைத்து விதிகளையும் அரசு மாற்றியுள்ளது என்றும், பிற்படுத்தப்பட்ட பழங்குடிகளின் கிராமங்களுக்கு சாலைகளை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றிய பிரதமர் கிராமச் சாலைகள் திட்டம், நடமாடும் மருத்துவ அலகுகள் தொடர்பான விதிகளில் மாற்றம், ஒவ்வொரு பழங்குடி வீட்டிற்கும் மின்சாரம் சென்றடைவதை உறுதி செய்வதற்காக சூரிய மின் இணைப்புகளை வழங்குதல் ஆகியவற்றை எடுத்துக்காட்டாகக் கொடுத்துள்ளது என்றும் அவர் கூறினார். நூற்றுக்கணக்கான புதிய மொபைல் கோபுரங்களை அமைப்பதன் மூலம் விரைவான இணைய இணைப்பை உறுதி செய்கிறது.

உணவுப் பாதுகாப்பிற்காக, இலவச ரேஷன் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களுக்கு தடுப்பூசி, பயிற்சி மற்றும் அங்கன்வாடி போன்ற அனைத்து வசதிகளும் ஒரே கூரையின் கீழ் வழங்கப்படும் 1000 மையங்களை உருவாக்கும் திட்டம் குறித்தும் அவர் தெரிவித்தார். பழங்குடி இளைஞர்களுக்கான விடுதிகள் உருவாக்கப்படுவதையும் அவர் குறிப்பிட்டார். புதிய வன் தன் மையங்களும் வரவுள்ளன என்றார் அவர்.

'மோடியின் உத்தரவாதம்’ வாகனங்களுடன் வளர்ச்சியடைந்த பாரதம்  லட்சியப் பயணம்  நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைவதாகக் குறிப்பிட்ட பிரதமர், பல்வேறு அரசுத் திட்டங்களுடன் மக்களை இணைக்க மட்டுமே இந்த வாகனம் இயக்கப்படுகிறது என்றார். லட்சிய மாவட்டத் திட்டம் குறித்துப் பேசிய அவர், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மிகப்பெரிய பயனடைந்துள்ளனர் என்றார். மின் இணைப்பு, ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை, ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.

அரிவாள் செல் ரத்த சோகையின் அபாயங்களையும் பிரதமர் தொட்டுக்காட்டினார், மேலும் பழங்குடி சமூகத்தின் பல தலைமுறைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதைக் கவனித்த அரசு,  ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்குப் பரவும் இந்த நோயை ஒழிக்க  முயற்சித்து வருவதாக அவர் கூறினார். " வளர்ச்சியடைந்த பாரதம்  லட்சியப் பயணத்தின் போது அரிவாள் செல் நோய்க்கான பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த 2 மாதங்களில் 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு அரிவாள் செல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

பழங்குடியினர் தொடர்பான திட்டங்களின்  பட்ஜெட்டை அரசு 5 மடங்கு உயர்த்தியுள்ளது என்று திரு. மோடி தெரிவித்தார். பழங்குடி குழந்தைகளின் கல்விக்காக முன்பு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையின் மொத்த பட்ஜெட் இப்போது இரண்டரை மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, நாட்டில் பழங்குடி குழந்தைகளுக்காக 90 ஏகலவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகள் மட்டுமே கட்டப்பட்டதைப்  பிரதமர் சுட்டிக்காட்டினார், அதே நேரத்தில் தற்போதைய அரசு கடந்த 10 ஆண்டுகளில் 500 க்கும் அதிகமான  புதிய ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளை உருவாக்குவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பயில்வதிலும், பெரிய நிறுவனங்களில் பணிபுரிவதிலும் நம்பிக்கை தெரிவித்தார். "இதற்காக, பழங்குடி பகுதிகளில் வகுப்புகள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன; உயர் கல்வி மையங்கள் அதிகரிக்கப்படுகின்றன", என்று அவர் மேலும் கூறினார்.

2014 ஆம் ஆண்டுக்கு முன்னர்,  சுமார் 10 வன விளைபொருட்களுக்கு மட்டுமே எம்.எஸ்.பி நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் தற்போதைய அரசு சுமார் 90 வன விளைபொருட்களை எம்.எஸ்.பி வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளது என்பதைப் பிரதமர் எடுத்துரைத்தார். "வன விளைபொருட்களுக்கு அதிக விலை கிடைக்க, நாங்கள் வன் தன் திட்டத்தை உருவாக்கினோம்" என்று கூறிய திரு. மோடி, லட்சக்கணக்கான பயனாளிகளில் அதிக எண்ணிக்கையிலான பெண்களை முன்னிலைப்படுத்தினார். கடந்த 10 ஆண்டுகளில் 23 லட்சம் பழங்குடியின குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. பழங்குடி சமூகத்தின் ஹாட் பஜாரையும் நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். எங்கள் பழங்குடி சகோதரர்கள் சந்தையில் விற்கும் அதே பொருட்களை நாட்டின் பிற சந்தைகளிலும் விற்க பல பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன", என்று அவர் கூறினார்.

"எனது பழங்குடி சகோதர சகோதரிகள் தொலைதூர பகுதிகளில் வசிக்கலாம், ஆனால் அற்புதமான தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள். பழங்குடி கலாச்சாரம் மற்றும் அவர்களின் மரியாதைக்காக எங்கள் அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை இன்று பழங்குடி சமூகம் காண்கிறது; புரிந்துகொள்கிறது. பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளை பழங்குடியினர் கெளரவ தினம் என்று கொண்டாடுவதற்கான அரசின் அறிவிப்பையும், நாடு முழுவதும் பழங்குடி சுதந்திர போராட்ட வீரர்களின் 10 பெரிய அருங்காட்சியகங்களை மேம்படுத்துவதையும் அவர் குறிப்பிட்டார். பழங்குடி சமூகத்தின் மரியாதை மற்றும் ஆறுதலுக்காக தொடர்ந்து பணியாற்றுவதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்.

 

பின்னணி

கடைக்கோடியில்  உள்ள கடைசி நபருக்கு அதிகாரமளிக்கும் அந்த்யோதயாவின் தொலைநோக்குப்  பார்வையை நோக்கிய பிரதமரின் முயற்சிகளுக்கு இணங்க, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் (பி.வி.டி.ஜி) சமூக-பொருளாதார நலனுக்காக 15 நவம்பர் 2023 அன்று பழங்குடியினர் கெளரவ தினத்தை முன்னிட்டு பி.எம்-ஜன்மன் தொடங்கப்பட்டது.

சுமார் ரூ.24,000 கோடி பட்ஜெட்டில், 9 அமைச்சகங்கள் மூலம் 11 முக்கியமான தலையீடுகளில் கவனம் செலுத்தும் பிரதமர்-ஜன்மன், பாதுகாப்பான வீட்டுவசதி, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, மின்சாரம், சாலை மற்றும் தொலைத்தொடர்பு இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளுடன் பி.வி.டி.ஜி வீடுகள் மற்றும் குடியிருப்புகளை நிறைவு செய்வதன் மூலம் பி.வி.டி.ஜிகளின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

 

 

 

 

 

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi inaugurates Micron’s ₹22,516-crore ATMP facility in Gujarat; calls chips ‘Regulator of 21st century’

Media Coverage

PM Modi inaugurates Micron’s ₹22,516-crore ATMP facility in Gujarat; calls chips ‘Regulator of 21st century’
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister expresses grief over loss of lives in factory explosion in Nagpur, Maharashtra
March 01, 2026
Prime Minister announces ex-gratia from PMNRF

The Prime Minister has expressed deep distress over the explosion at a factory in Nagpur, Maharashtra.

Extending his condolences to the families of the deceased, the Prime Minister also prayed for the speedy recovery of the injured. The Prime Minister further affirmed that the local administration is assisting those affected.

The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh from the Prime Minister’s National Relief Fund (PMNRF) for the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000.

The Prime Minister Shared on X;

"The explosion at a factory in Nagpur, Maharashtra, is deeply distressing. My condolences to the families of the deceased. I pray for the speedy recovery of the injured. The local administration is assisting those affected.

An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000"